Monday, March 11, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார் 



இளம் பருவத்தில், புலால் உணவே சாப்பிடாமல் வளர்ந்த சிலர் பிற்காலத்தில் மாமிச உணவை விரும்பிச் சுவைப்பதை நாம் கண்டு இருக்கிறோம். 


எப்படி இப்படி மாறினீர்கள் என்று கேட்டால் , "பள்ளியில், கல்லூரியில் மாமிச உணவு என்று சொல்லாமல், நண்பர்கள் ஏமாற்றி உண்ண வைத்து விட்டார்கள். அந்த சுவை பிடித்துப் போய் விட்டது. அப்படியே பழகிப் போய் விட்டது. விட முடியவில்லை" என்பார்கள். 


ஒருமுறை புலால் உணவை சுவைத்து விட்டால் பின் அதை விட முடியாது. மனம் மீண்டும் மீண்டும் அந்தச் சுவையை நாடும். 


உயிர்களை கொன்று தின்பது என்று ஆரம்பித்து விட்டால், மனம் அருளின் பக்கம் போகாது. 


அது எப்படி என்று ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர். 


வீட்டில் சின்ன பையன்கள் கையில் ஒரு சின்ன குச்சியைக் கொடுத்தால் அதை வைத்து எதையாவது தட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். எதைப் பார்த்தாலும், அதை தட்டி ஒலி உண்டாக்குவார்கள். 


அது போல, கையில் கத்தி, துப்பாக்கி போன்ற கொலைக் கருவிகளை வைத்து இருப்பவர்கள் மனம் யாரைப் போட்டுத் தள்ளலாம் என்றுதான் நினைக்கும். கருவியின் பின்னே மனம் போகும். கையில் செல் போன் இருந்தால், நொடிக்கு நூறுதரம் அதைப் பார்க்கச் சொல்லும். 


அது போல, மாமிச உணவின் சுவை கண்டு விட்டால், மனம் அதன் பின்னே மீண்டும் மீண்டும் போகும். 


பாடல் 


படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி

னுடல்சுவை யுண்டார் மனம்.


சீர் பிரித்த பின் 


படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன்

உடல் சுவை உண்டார் மனம்.


பொருள் 


படைகொண்டார் = கத்தி போன்ற படைக் கருவிகளை கொண்டவர்கள் 


நெஞ்சம் போல் = மனம் போல் 


நன்று ஊக்காது = நல்லதை நினைக்காது 


ஒன்றன் = ஒரு உயிரின் 


உடல் சுவை = உடலின் சுவையைக் 


உண்டார் மனம் = உண்டவர்களின் மனம் 



"நன்று ஊக்காது" அதாவது நல்லதை நினைக்காது என்ற சொல் தொடரை இரண்டு பக்கமும் சேர்த்துக் கொள்ளலாம். 


படை கொண்டவர் நெஞ்சமும் நல்லதை நினைக்காது. 


மாமிசம் உண்டவரின் மனமும் நல்லதை நினைக்காது. 


இரண்டும் கொலையை நாடும். 


மாமிசம் உண்பது சரி தவறு அல்ல என்பதல்ல விவாதம். 


சாப்பிட்டால் மனதில் அருள் வருவது கடினம். அவ்வளவுதான். 


அருள் வராவிட்டால் போகட்டும் என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை. 


அன்பு விரிய அருள் பிறக்கும். 


அருள் மனதில் சுரக்கவில்லை என்றால், அன்பின் வட்டம் சுருங்கும். 


அன்பின் வட்டம் சுருங்க சுருங்க சுயநலம் மேலோங்கும். மற்ற உயிர்களின் மேல் அருளும் அன்பும் குறையும். 


சிந்திக்க வேண்டிய விடயம். 



1 comment:

  1. மாமிச உணவு உண்டு அதை விட்டவர்கள் பலர் . நல்லதை நினைக்காமல் மாமிசம் உண்பது ஆரம்பமாகவில்லை. தவிர்க்க முடியாமல் இருக்கலாம்.

    ReplyDelete