Wednesday, March 6, 2024

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 


நிறைய பேர் படிப்பார்கள். தாங்கள் படித்து அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.. காரணம், எங்கே அவனுக்கும் தெரிந்து விட்டால், நம் மதிப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது, மற்றவன் முன்னேறக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாக இருக்கலாம். 


அருணகிரியார் கூறுகிறார் 


"மறைத்து வைக்கும் கல்வியை கொண்டவர்களின் வாசலில் சென்று அவர்களிடம் உதவி கேட்கும் படி வைக்காமல் உயர்ந்த மெய்ப் பொருளை நீ எனக்கு அருள வேண்டும். தலைவா, இளையவனே, வஜ்ராயுதம் என்ற படையைக் கொண்டவனே, சிவ யோகத்தை பக்தர்களுக்குத் தருபவனே "


என்று. 


பாடல் 



கரவாகிய கல்வியுளார் கடை சென்று 

இரவா வகை மெய்ப் பொருளீகுவையோ 

குரவா குமரா குலிசாயுதகுஞ் 

சரவா சிவ யோக தயாபரனே 


பொருள் 


கரவாகிய = கரத்தல் என்றால் மறைத்தல். மறைத்து வைக்கும் 


 கல்வியுளார் = கல்வியை உடையவர்கள் 


கடை சென்று = வாசலில் சென்று 

 

இரவா வகை  = பிச்சை எடுக்காமல் இருக்கும்  படி 


மெய்ப் பொருளீகுவையோ  = மெய்யான பொருளை எனக்குத் தந்து அருள் புரிவாயா 

 

குரவா = குரவன் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்றாலும், தலைவன் என்ற அர்த்தம் இங்கு பொருந்தும். 


குமரா = இளையவனே 

 

குலிசாயுத = குலி + ஆயுதம் = வஜ்ரப் படையை உடையவனே 

 

 

குஞ்சரவா = குஞ்சரம் என்றால் யானை. தெய்வயானைக்கு தலைவனே 


சிவ யோக தயாபரனே = சிவ யோகத்தை பக்தர்களுக்கு தருபவனே 


சாதாரண மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு மற்றவர்களுக்கு தர வேண்டும் என்று மறைத்து வைத்துக் கொள்வார்கள். முருகன், சிவ யோக பலன்களையே பக்தர்களுக்குத் தருபவன். அவனிடமே நேரே சென்று கேட்டு பெற்றுக் கொள்ளலாம். 


"இரவா வகை மெய் பொருள் ஈகுவையோ" என்று கொண்டு, கரத்தல் தொழிலை செய்பவர்கள் மெய் பொருளை கற்றுத் தராமல் மற்றவற்றை கற்றுத் தருவார்கள், அந்த மாதிரி ஆட்களிடம் போய் நிற்காமல், நீயே எனக்கு மெய்ப் பொருளைத் தா என்கிறார். 


"கரவா வகை கல்வி"..நாம் படிக்கும் அனைத்தும் நமக்கு மெய் பொருளை உணர்த்துவதில்லை. அதை மறைத்து, வேறு எதையெதையோ நமக்குத் தரும். அந்த மாதிரி மெய்ப் பொருளை மறைக்கும் கல்வியை விட்டு விட்டு மெய்ப் பொருளை அறியும் கல்வியை எனக்குத் தா என்று வேண்டுகிறார் என்றும் கொள்ளலாம். 


வள்ளுவர் கூறுவார், 


கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழார் எனின் 


கல்வி, மெய் பொருளைத் தர வேண்டும். 


 


1 comment:

  1. நீங்கள் எங்களுக்கு கரவா வகை கல்வியைத் தருவதில்லை. மிக்க நன்றி

    ReplyDelete