Thursday, July 31, 2025

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக் குழந்தை

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக்  குழந்தை 

https://interestingtamilpoems.blogspot.com/2025/07/blog-post_31.html



சில வீடுகளில் ஆண் பிள்ளைகள் மிகுந்த பசியோடு இருக்கும். எதை வைத்தாலும் சில நிமிடங்களில் காலி பண்ணி விடுவார்கள். அம்மாக்களுக்கு பிள்ளை நன்றாக சாப்பிடுகிறானே என்று ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், "ஒண்ணு செஞ்சா ஒரு நாலு நாளைக்கு வைக்க விட மாட்டான்...அது காலி ஆகிற வரையில் அவனுக்கு தூக்கம் வராது" என்றும் அலுத்துக் கொள்வார்கள். 


தோசை செய்து போட்டால் நாலு, அஞ்சு, ஆறு என்று போய்க் கொண்டே இருக்கும். வளரும் பிள்ளைகள். ஓடி ஆடி வந்திருப்பான். என்ன போட்டாலும் பசி எளிதில் அடங்காது. 


இந்த உள்ளூரில் இந்த ஆட்டம் பாட்டத்துக்கே இவ்வளவு பசிக்கும் என்றால், உலகையே  படைத்து, காத்து அருளும் பெருமாளுக்கு எவ்வளவு பசிக்கும் என்று நினைக்கிறார் பேயாழ்வார். 


"மண்ணை உண்டு, அரக்கியின் முலைப் பால் உண்டு, அதுவும் போதாது என்று ஆயர் பாடியில் உள்ள வீடுகள் எல்லாம் சென்று வெண்ணையை திருடி உண்டான். இப்படி தன் பிள்ளை திருடித் தின்கிறானே என்று போபம் கொண்டு அவனை சின்ன கையிற்றால் யசோதை கட்டிப் போட்டாள்"


என்கிறார். 


பாடல் 


மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,


வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்


கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,


வயிற்றினோ டாற்றா மகன்.


பொருள் 



மண்ணுண்டும் = மண்ணைச் சாப்பிட்டு. இந்த உலகையே உண்டு. 


பேய்ச்சி முலையுண்டு = பூதனை என்ற அரக்கியின் முலைப் பாலைக் குடித்து  


மாற்றாதாய் = பசி அடங்காமல் 


வெண்ணெய் விழுங்க = ஆயர்பாடியில் உள்ள வீடுகளில் வெண்ணையை திருடி உண்டதால் 


வெகுண்டு = கோபம் கொண்டு 


ஆய்ச்சி = யசோதை 


கண்ணிக் கயிற்றினால் = சிறு சிறு கயிறுகள் கொண்டு முடி போட்ட கையிற்றால் 


கட்ட = கட்டிப் போட 


தான் = அவனே 


கட்டுண் டிருந்தான் = கட்டுக்குள் இருந்தான் 


வயிற்றினோ டாற்றா மகன் = வயிறு ஒரு போதும் திருப்தி அடையாத மகனான கண்ணபிரான். 


அது என்ன "கண்ணிக் கயிற்றினால்" ?  


கயிறு இருந்தால் தானே கட்டிப் போடுவார்கள் என்று ஊரில் உள்ள கயிறை எல்லாம் துண்டு துண்டாய் வெட்டிப் போட்டு விடுவானாம் கண்ணன். 


அவனைக் கட்டிப் போட கயிறு எங்கே என்று தேடி, எதுவும் கிடைக்காமல், இருக்கிற துண்டு துண்டு கயிறுகளை எல்லாம் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு நீண்ட கயிறை உருவாக்கினாள் யசோதை. எனவே "கண்ணிக் கயிறு" க். கண்ணி என்றால் சிறு துண்டு. 


உலகையே உண்ட அவனுக்கு இந்த முடிச்சுப் போட்ட கயிறு எம்மாத்திரம். 


இருந்தாலும் கட்டுண்டு கிடந்தான். 


காரணம், 


இறைவனை நமது பலத்தால் பற்ற முடியாது. அது உடல் பலம் என்றாலும் சரி, மூளைப் பலம் என்றாலும் சரி. படித்து, ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடித்து விடுகிறேன் என்றால் முடியாது. ஆனால், அன்புக்கு அவன் கட்டுப் படுவான். அன்பால் அவனை எளிதாக கட்டி விடலாம். அதுவும், துண்டு துண்டு கயிற்றுக்கு அவன் கட்டுண்டு நிற்பான். 


இரண்டாவது,  வினை, இறைவனையும் விடாது. வெண்ணையை திருடி உண்டது குற்றம் தானே. அதற்கு தண்டனை கையிற்றால் கட்டப்பட்டு இருப்பது. ஒரு குறியீடு. ஒரு அடையாளம். வினை  யாரையும் விடாது. விளையாட்டாகச் செய்தேன், தெரியாமல் செய்தேன், அதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லையா என்றெல்லாம் வாதம் பண்ணி பலன் இல்லை. 


சிறு பிள்ளையாக இருந்த போது, விளையாட்டாக கூனி முதுகில் களி மண் உருண்டையை அம்பில் சொருகி அவள் முதுகில் அடித்ததன் பலன் நமக்குத் தெரியும். 


எல்லாவற்றையும் விட்டு விடுவோம். பாசுரத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரியும். பொருள் தெரிந்து படிக்கும் போது அதன் இனிமை மேலும் கூடும். 



Thursday, July 10, 2025

திருக்குறள் - நிச்சயமான கேடு

 திருக்குறள் - நிச்சயமான கேடு 


சிலர், அவர்களின் கெட்ட குணங்களை, ஏதோ பெரிய சாதனை, பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள். 


உதாரணமாக, "எனக்கு பழியா கோபம் வரும், முணுக்கென்றால் எனக்கு மூக்கு மேலே கோபம் வரும். கோபம் வந்தால் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாது.."என்றெல்லாம் பெருமையாக பேசிக் கொள்வார்கள். 


சில தொழில் அதிபர்கள், நிறுவன மேலாளர்கள் தங்கள் கோபத்தால் அங்கே வேலை செய்யும் ஆட்களை மிரட்டி வேலை வாங்குவார்கள். வேலை நடக்கும். எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை பெரிய திறமை என்று நினைத்துக் கொள்வார்கள். 


வீட்டில் கூட சில பெண்மணிகள், வீட்டில் வேலை பார்க்கும் பெண்களை அதட்டி, உருட்டி, எதற்கு எடுத்தாலும் கோபித்து, திட்டி, வேலை வாங்குவார்கள். "ஏதோ நான் இருக்கிறேனோ, வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதோ....நான் இல்லேனா தெரியும்" என்று அவர்களின் நிர்வாகத் திறமை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், 


"சினத்தை ஏதோ பெரிய திறமை, சிறப்பு என்று நினைத்து செயல்படுபவன், அந்தச் சிறப்பு வெகு நிச்சயமாக இழப்பான் என்பது உறுதி"


என்கிறார். 


பாடல் 


சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று


பொருள் 


சினத்தைப் = கோபத்தை 


பொருள்என்று = சிறந்த ஒரு குணம் என்று 


கொண்டவன் = அதைக் கைக் கொண்டவனின்  


கேடு = அந்த சிறந்த குணம் அழிவது என்பது 



நிலத்து = தரையை 


அறைந்தான் = அறைந்தவன் 


கை = கை 


பிழையாது அற்று = எப்படி பிழை இல்லாமல் அடிக்குமோ அந்த அளவு உறுதியானது. 


கோபம் கொண்டவன் தன் சிறப்பை இழப்பான் என்று சொல்ல வேண்டும். 


உண்மையாவா, நிச்சயமாகவா? எல்லா காலத்திலும் அது நடக்குமா என்று கேட்டால், ஆம் அது சர்வ நிச்சயம் என்று சொல்ல வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார் வள்ளுவர். 


ஒருவன் தரையை ஓங்கி அடித்தால், அவன் குறி தப்புமா? எப்படி அடித்தாலும் கடைசியில் அந்த அடி தரையில் எங்கோ ஒரு இடத்தில் விழத்தானே செய்யும். 


தரையை, கையால் அடித்தேன், கொஞ்சம் குறி தப்பி விட்டது என்று சொல்லவே முடியாது. குறி தப்பி எங்கு போகும்? எங்கு போனாலும், அந்த அடி த தரை மேல் தான் விழும். அந்த அளவு அது நிச்சயம். தப்பவே தப்பாது. 


இன்னொரு பொருள், இது பரிமேலழகர் சொல்லாதது. 


கோபம் கொண்டு மற்றவர்கள் மேல் சுடு சொற்களையோ அல்லது செயலையோ காட்டி விட்டால், அது அவர்களை பாதிக்கும், என்று கோபம் கொண்டவர் நினைக்கலாம். 


அது தவறு என்கிறார் வள்ளுவர். 


தரையை ஓங்கி அடித்தால் தரைக்கு வலிக்கலாம் அல்லது வலிக்காமல் போகலாம். ஆனால் அடித்தவன் கட்டாயம் வலிக்கும் அல்லவா?  


அது போல 


மற்றவர் மேல் கோபத்தை செலுத்தினால் அது உன்னையும் பாதிக்கும் என்கிறார். 


கோபம் ஏற ஏற இரத்தக் கொதிப்பு ஏறும், மன அழுத்தம் வரும், எரிச்சல் வந்து மகிழ்ச்சியை குறைக்கும், உறவும், நட்பும் சுருங்கும். "அவன் கிட்ட யார் பேசுவா, சரியான கோவக் காரன் . எதுக்கு எடுத்தாலும் வள்ளு வள்ளுன்னு நாய் மாதிரி குரைப்பான்" என்று மற்றவர்கள் அவனை விட்டு விலகிப் போவார்கள். தனித்து விடப்படுவான். அவனுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் அவனை விட்டுப் போய் விடுவார்கள். நாளடைவில் அவனால் சிறப்பாக செயல்பட முடியாது. 


இப்படி, கோபம், அதைக் கொண்டவனையே அழிக்கும். தரையை அடித்தால் நம் கையே வலிப்பது போல.


ஒருவன் தரையை அடிக்கிறான் என்றால் அது பார்க்க எப்படி இருக்கும்? "சரியான பைத்தியகாரன் போல, தரையை போட்டு அடித்துக் கொண்டிருக்கிறான்" என்று நினைப்போம் அல்லவா. 


கோபம் கொண்டு, மற்றவர்கள் எரிந்து விழுந்தாலும் அப்படித்தான் இருக்கும். 




பொருள் 



Saturday, July 5, 2025

திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?

திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?



அவளோ பேரழகி. அவனுக்கோ வெளியில் ஆயிரம் வேலை. அவளை எப்படி தனியே விட்டு விட்டுச் செல்வது என்று ஒரே குழப்பம். மேலும், அவள் தன்னுடனேயே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கிறான். 


அவ்வப்போது அவளை, அவள் புன்னகையை பார்த்துக் கொள்ளலாம். 


அது எப்படி முடியும்?


யோசித்தான், எதுக்கு அவளை தனியே கூட்டிச் செல்ல வேண்டும்? தன் உடலிலேயே ஒரு பாதியை கொடுத்து, அதில் அவளை வைத்து விட்டால் என்ன என்று யோசித்து அப்படியே செய்தான் என்கிறார் திரு ஞான சம்பந்தர். 


பாடல்  


காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்

தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்

ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே

வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே


கொஞ்சம் சீர் பிரிப்போம்  



கார் உலாவும் கடல் சிப்பியின் கண் முத்து கரை பெய்யும் 

தேர் உலாவும் நெடு வீதியதார்  தெளிச் சேரியீர்

ஏர் உலாவும் பலிக்கு ஏகிட வைப்பு இடம் இன்றியே 

வார் உலாவும் முலையாளை ஓர் பாகத்து வைத்ததே


பொருள் 


கார் = கருமையான (மேகங்கள்) 


உலாவும் = உலவும், திரியும் 


கடல் = கடலில் உள்ள 


சிப்பியின் கண் = சிப்பியில் உள்ள  


முத்து = முத்துக்கள்


கரை பெய்யும் = கடற்கரையில் மழை போல் தெறித்து விழும் 

  

தேர் உலாவும் = தேர்கள் ஓடிக் கொண்டிருக்கும் 


நெடு = நீண்ட 


வீதியதார் = வீதிகளை உடைய 


தெளிச் சேரியீர் = திருத் தெளிசேரி என்ற தலத்தில் இருப்பவரே 


ஏர் = எழுச்சி, அழகு, பெருமை 


உலாவும் = நிறைந்த 


பலிக்கு ஏகிட = பிச்சை வாங்கிடப் போகும் போது 


வைப்பு இடம் இன்றியே  = வைக்க இடம் இன்றி 


வார் = மார்புக் கச்சை 


உலாவும் = அணிந்த 


முலையாளை = மார்பகங்களை உடைய உமை அம்மையை 


 ஓர் பாகத்து வைத்ததே = உன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ 


மனைவியை யாராவது தூக்கிக் கொண்டு போய் விட்டால் என்ன ஆவது என்று பயந்து மனைவியை தன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ என்று நகைச்சுவையாக கேட்கிறார் திரு ஞான சம்பந்தர். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சிவன் ஏன் பிச்சை எடுக்கப் போகிறார்?


ஒரு முறை பிரமனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அந்தத் தோஷம், அந்த மண்டையோடு அவர் கையிலியே ஒட்டிக் கொண்டது. அது அவர் கையை விட்டுப் போக வேண்டுமானால், அந்த மண்டை ஓட்டிலே பிச்சை எடுத்து உண்ண வேண்டும். அப்படி செய்து வந்தால், அந்த மண்டை ஓடு அவர் கையை விட்டுப் போகும். 


இது என்ன அபத்தமான கதையாக இருக்கிறதே என்று தோன்றலாம். கதை அபத்தம் தான். அதன் பொருள் என்ன?


ஒரு வினை செய்தால், அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். அது சிவனாகவே இருந்தாலும், செய்த வினை போகாது. 


பலர் நினைக்கிறார்கள், ஏதாவது பாவம் செய்தால், அதற்கு பதிலாக ஒரு நல்லது செய்தால் பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று. 


முடியாது. 


பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். பின் நல்லது செய்தால், அதன் பலனையும் அனுபவிக்க வேண்டும். 


"அறம் பாவம் எனும் அருங் கையிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். 


இரண்டுமே நம்மை பிறவி என்ற பந்தத்தில் கட்டிப் போடும். இரண்டுமே செய்யக் கூடாது. 


ஒன்றுக்கு ஒன்று சரியாகி விடாது. இரண்டும் தனித் தனி கணக்கு. 


கோவிலுக்குப் போவது, உண்டியலில் காணிக்கை போடுவது, மொட்டை போட்டுக் கொள்வது, விரதம் இருப்பது, அன்ன தானம் செய்வது போன்ற காரியங்களால் செய்த தீவினைகளில் இருந்து தப்பி விடலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. அப்படி என்றால் பணம் உள்ளவர்கள் எவ்வளவு தீமை வேண்டுமானாலும் செய்யலாம். பின் நிறைய தான தர்மங்கள் செய்து தப்பித்துக் கொள்ளலாம். 


முடியாது. 


சிவனே ஆனாலும், செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். 


சிவனுக்கே அந்தக் கதி என்றால், நம் கதி என்ன?


தீவினை செய்யாமல் இருக்க வேண்டும். 


மனதால், வாக்கால், செயலால் தீவினை செய்யக் கூடாது. 


என்ன ஒரு அருமையான பாடல் 


மேகங்கள் உலவுகின்றதாம்..ஏதோ வாக்கிங் போவது மாதிரி. 


தேர்கள் ஓடவில்லை, உலவுகின்றன. சும்மா ஜாலியா அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கின்றன. 


சிவன் பிச்சை எடுக்கப் போவது கூட ஏதோ பெருமையாக, அழகாகப் போனாராம். 


அம்மை சேலை அணிந்து இருக்கிறாள். காற்றில் அது அங்கும் இங்கும் அலைகிறது. அவள் மார்பின் மேல் அந்த சேலை உலாவுகிரதாம்.


இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். அவ்வளவு இனிமை.