Wednesday, May 20, 2026

திருக்குறள் - செய்து விடல்

திருக்குறள் - செய்து விடல் 


நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கு பதிலுக்கு கெடுதல் செய்யாமல் அவர்கள் நாணும்படி அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிறது அடுத்த குறள் 


 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


நாம் அறிந்த குறள்தான். 


மேலோட்டமாகப் பாத்தால் அவ்வளவுதான் தோன்றும். 


சில சமயம், இது என்ன கூத்தாக இருக்கிறது. கெடுதல் செய்தவனுக்கு நல்லது செய்வதாவது...நம்மை அவன் கிறுக்கன் என்று நினைக்க மாட்டானா? 


சற்று ஆழமாக சிந்திப்போம்.


குழந்தை நம்மை எட்டி உதைக்கிறது. இரவில் தூங்க விடாமல் அழது பாடாய் படுத்துகிறது. பதிலுக்கு நாம் அதற்கு துன்பம் செய்வோமா? ஐயோ, பாவம் அதுக்கு என்ன வலியோ? பசிக்குதோ ? வயித்து வலி இருக்குமோ என்று அதன் துன்பத்தைத் குறைக்க நாம் முயல்வோம். அல்லாமல், நான் தூங்கும் போது என்னை தூங்க விடாமால் பண்ணினாய் அல்லவா, நீ தூங்கும் போது நாம் எப்படி உன்னை தூங்க விடாமல் பண்ணுகிறேன் என்று நாம் நினைப்பது இல்லை. 


கணவனோ மனைவியோ கோபத்தில் ஏதாவது சொல்லி விட்டாலும், பதிலுக்கு சண்டை போடுவது இல்லை. (பொதுவாக). மாறாக, மீண்டும் அவர்களிடம் சென்று சமாதனப் படுத்த முயல்வோம். ப்ச்ச் ...நான் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று அவர்கள் உள்ளுக்குள் வருந்துவார்கள். 


அதெல்லாம் சரி. வீட்டுக்குள் பெற்றோர், பிள்ளை, கணவன்/மனைவி யும் வெளி ஆட்களும் ஒன்றா? 


இல்லறத்தில் இருப்பவன் தன்னைச் சார்ந்தவர்களிடம் காட்டுவது அன்பு. 


அதே அன்பு உலகில் உள்ள அனைத்து உயிர்கள் மேலும் சென்றால் அது கருணை. துறவி எல்லா உயிரையும் ஒன்றாக நினைப்பவன். தனக்கு கெடுதல் செய்தவன் மேலும் கருணை பொழிவதுதான் துறவிக்கு அடையாளம். இந்த அதிகாரம் இருப்பது துறவறத்தில். 


எனவே இது துறவிக்குச் சொன்னது. 


இருந்தாலும், முடிந்தவரை இல்லறத்தில் உள்ளவனும் இதைக் கடைப் பிடிக்கலாம். 


கணவன்/மனைவி, பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம் என்று முடிந்தவரை இதை விரிவுபடுத்திப் பார்கலாம். 


"செய்து விடல்" என்று ஏன் கூறினார் என்று பரிமேலழகர் விளக்குகிறார். 


தீமை செய்தவனுக்கும் நன்மை செய்து, அப்படி நன்மை செய்ததையும், அவன் நமக்கு தீமை செய்ததையும் மறந்து விடல் என்கிறார். 


பிறர் நமக்குச் செய்த தீமைகளை  மறக்கலாம். நாம் அவர்களுக்குச் செய்த நன்மைகளை ஏன் மறக்க வேண்டும்? 


வள்ளுவர் சொல்கிறார், செய்த நல்லதை மனதில் வைத்துக் கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பின் மூலம் ஒரு பற்று இருக்கும். 


எனவே, மற்றவர் செய்த கெடுதலையும் மறந்து விட வேண்டும், அவர்களுக்கு நாம் செய்த நன்மையையும் மறந்து விட வேண்டும். 


மேலும், ஏதோ தீமை செய்தவர்களை மன்னித்து விடுவது அல்ல. 'ஒறுத்தல்' என்றால் தண்டித்தல் என்று பொருள். அவர்கள் வெட்கப்படும் படி அவர்களுக்கு நன்மை செய்வதே அவர்களுக்கு நாம் தரும் பெரிய தண்டனை என்கிறார். 


கெடுதல் செய்தவனுக்கு மறுபடியும் ஒரு கெடுதல் நாம் செய்தால், அவன் அதை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு கொடுமையை நமக்குச் செய்வான். நாம் பதிலுக்கு இன்னொரு தீமை செய்வோம். செய்து கொண்டே இருக்கலாம். 


அதுவா வாழ்வின் குறிக்கோள் ?  இப்படி ஒவ்வொருவர் செய்த தீமைக்கும் பதில் தீமை செய்து கொண்டிருந்தால் என்று இது முடிவது?  


வாழ்வின் நோக்கம், வீடு பேறு அடைவது.  


காரில் நீண்ட தூர பயணம் சென்று கொண்டிருப்போம். வழியில் சில நாய்கள் குரைக்கலாம். அதற்காக, வண்டியை விட்டு இறங்கிச் சென்று அதைப் பார்த்து குரைத்து  விட்டு வர வேண்டுமா என்ன?  


அதன் வேலை குரைப்பது. நம் வேலை நம் இலக்கை அடைவது. 


 



No comments:

Post a Comment