Saturday, May 18, 2019

திருக்குறள் - எல்லாம் உடையார்

திருக்குறள் - எல்லாம் உடையார் 


பாடல்

‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்’’

பொருள்

‘அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள்

எல்லாம் உடையார் = எல்லாம் உடையவர்கள்

அறிவிலார் = அறிவு இல்லாதவர்கள்

என்னுடைய ரேனும்  = எவ்வளவுதான் இருந்தாலும்

இலர் = ஒன்றும் இல்லதாவர்களே

இது பொதுவாக சொல்லும் பொருள்.

திருக்குறளை ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கும் சொல்லலாம். முதுகலை படித்து முடித்து, முனைவர் (doctorate ) படிப்பு படிப்பவர்களுக்கும் சொல்லலாம். எளிமைக்கு எளிமை. ஆழத்துக்கு ஆழம்.

சரி, இதில் என்ன ஆழம் இருக்கிறது.

"அறிவுடையார்" ... கல்வி உடையார், கற்றவர் என்று சொல்லவில்லை. அறிவு உடையார்  என்று சொல்கிறார். கல்வி வேறு, அறிவு வேறு.  அறிவுடைமைக்கும் கல்விக்கும்  இரு வேறு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

அறிவு என்பது நமக்குள் இருப்பது. அதை வெளியே கொண்டு வருவது கல்வி.

அது என்ன உள்ளே இருப்பது, வெளியே வருவது ?

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் வள்ளுவர்.

ஆற்றில் நீர் வற்றிய காலங்களில் மக்கள் ஆற்றுப் படுகையை தோண்டுவார்கள். அதில் நீர் ஊற்றெடுத்து வரும்.  அதற்கு மணற்கேணி என்று பெயர். நீர் உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால்  நீர் வரும்.

அது போல, அறிவு உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால் அது வெளியே வரும்.

‘‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’

எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு நீர் வரும் மணற்கேணியில் இருந்து. அது போல எவ்வளவு கற்கின்றோமோ அவ்வளவு அறிவு வளரும்.

சிலருக்கு லேசாக தோண்டினாலே நீர் வந்து விடும். சிலருக்கு பல அடி ஆழம் தோண்ட வேண்டும்.

சரி, அறிவு புரிகிறது.

அறிவு இருந்தால் எல்லாம் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ அறிவாளிகள்  ஏழையாக இல்லையா? படிக்காத தற்குறிகள் செல்வத்தில்  திளைக்கவில்லையா ?

நாம் ஏழ்மை என்று சொல்லுவது பொன் , பொருள்  இல்லாமல் இருப்பதை. ஒருவனிடம்  நிறைய காசு இருந்தால்  அவனிடம் எல்லாம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.

செல்வம் நிலையாதது.

ஒரு அளவுக்கு மேல் செல்வம் இருந்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. அது மட்டும் அல்ல , அதனால் சிக்கல்களே அதிகம்.

மேலும், இந்த பொருளும், பொன்னும் நாம் இறந்த பின் நம் கூட வருமா ?

வராது.

அறிவு மட்டும் வருமா ?

வரும் என்கிறார் வள்ளுவர்.


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி, ஏழேழ் பிறவிக்கும் வரும் என்கிறார்.

அப்படி என்றால், நம் வாழ்நாளை இதில் செலவிட வேண்டும் ?

பொன்னும் பொருளும் சேகரிப்பதிலா? அல்லது அறிவை சேகரிப்பதிலா ?

"என்னுடையரேனும் இலர்"

என்ன இருந்தாலும், ஒன்றும் இல்லாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள் அறிவு இல்லாதவர்கள் என்கிறார்.

அறிவில்லாதவனிடம் நிறைய செல்வம் இருந்தாலும், அவனுக்கு அதை அனுபவிக்கத் தெரியாது.

பிற்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைப்பான். பிற்காலம் வரும் முன்னே  இறந்தும் போவான். அந்த செல்வம் அவனிடம் இருந்து என்ன பலன்.  செல்வம் இல்லாதவன் எப்படி ஒன்றையும் அனுபவிக்காமல் இறப்பானோ , அதே போல  இவனும் இருக்கிற பணத்தை எல்லாம் shares, stocks, gold, mutual fund, real estate  என்று வாங்கிப் போட்டுவிட்டு, ஒன்றையும் அனுபவிக்காமல் இறந்து போவான்.

நிறைய பணம் இருக்கும், கண்டதையும் சாப்பிடுவது, சர்க்கரை வியாதி வந்து விடும்.  அரசி சோற்றை நினைத்துக் கூட பார்க்க கூடாது என்று சொல்லிவிடுவார்  வைத்தியர். பணம் இருந்து என்ன பலன்? ஒரு பிச்சைக்காரனுக்கு  கிடைக்கும் இன்பம் கூட இவனுக்கு கிடைக்காது.

செல்வம் நிறைய இருக்கிறதே என்று மது, புகை பிடிப்பது என்று கெட்ட வழக்கங்களை  மேற்கொள்ளுவான். இதய நோய் , காச நோய் , கான்சர் என்று   அவதிப் படுவான்.

என்ன இருந்து என்ன செய்ய ?

அறிவு இல்லை என்றால், மனைவி மக்களோடு பிரச்சனை வரும். குடும்ப உறவுகள் சிக்கலாகும். அது ஒரு சுகமா ?

தீயவர் சகவாசம் வரும். அது மேலும் பல தீமையில் கொண்டு போய் விடும்.

அறிவில்லாதவன் பல செல்வங்களை சேர்த்தாலும், நம்மை விட அவன் அதிகம் சேர்த்து விட்டானே என்று மற்றவர்களைப் பார்த்து  பொறாமை படுவான். அந்த பொறாமை, அவனை, அவனது செல்வங்களை நிம்மதியாக அனுபவிக்க விடாது.


அறிவு இல்லை என்றால், மற்றவை எல்லாம் இருந்தும் ஒன்றுக்கும் பயன் படாது.

கேக்க நல்லாத்தான் இருக்கு.

சரி, இந்த அறிவை எப்படி பெறுவது?

அதற்கு ஏதாவது வழி சொல்லி இருக்கிறார்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_60.html

கம்ப இராமாயணம் - கற்பின் கனலி

கம்ப இராமாயணம் - கற்பின் கனலி



இராமயணத்தில் சில சொற் தொடர்கள் மிக அருமையாக அமைந்து மீண்டும் மீண்டும் நினைத்து இன்புறத் தக்கதாக இருக்கும். "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" போன்ற சொற் தொடர்கள்.

தன்னை மணந்து கொள்ளும்படி இராமனை எத்தனையோ வழிகளில் வாதம் செய்து அவனை ஒத்துக் கொள்ளும்படி செய்ய முயற்சி செய்தாள் சூர்ப்பனகை. இராமன் மசியவில்லை. சூர்பனகையைப் பார்த்து ஏளனம் செய்கிறான். முதலில் "உன் அண்ணன் வந்து தந்தால் ஏற்றுக் கொள்வேன்" என்று சொல்லிவிட்டு பின் அவளைப் பார்த்து ஏளனம் செய்கிறான்.

அந்த சமயத்தில் சீதை பரணசாலையில் இருந்து வெளியே வருகிறாள்.

என்ன வெளியே சத்தம், யாரிடம் இராமன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்க்க வந்திருக்கலாம்.

சீதையின் அழகைக் கண்ட சூற்பனைகை வியக்கிறாள்.

சூர்ப்பனகையின் கூற்றுக்கு முன், கம்பன் முந்திக் கொண்டு அவன் பங்குக்கு சீதையின் வருகையை அறிவிக்கிறான்.

"காமத் தீ உடலில் உள்ள தசை எல்லாம் சுட, பெரிய வாயை உடைய, உணர்வு இல்லாத சூர்ப்பனகை கண்டாள். எதைக் கண்டாள் ? வானத்தில் உள்ள சுடர் வெள்ளம் போல் வந்ததைக் கண்டாள். அரக்கர் குலத்தை அழிக்க வந்த கற்பின் கனலியை கண்டாள் "

என்கிறான் கம்பன்.


பாடல்

ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு
     இலி, உருவில் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து
     இடை வயங்க, நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும்
     விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக்
     கண்ணின் கண்டாள்.


பொருள்

ஊன் சுட = சதைகள் சுட. காமத்தால் உடல் சுடுகிறது.

உணங்கு = திறந்த

பேழ் = பெரிய

வாய் = வாயை உடைய

உணர்வு இலி = உணர்வு இல்லாதவள்

உருவில் = உருவத்தில்

நாறும் = மணம் வீசும். அந்தக் காலத்தில் நாறும் என்றால் மணம் வீசும் என்று பொருள். நாளடைவில் அது மாறிவிட்டது.

வான் = வானத்தில் உள்ள

சுடர்ச் = சுடர் விடும்

சோதி  = சோதி

வெள்ளம் வந்து = வெள்ளம் போல் வந்து

இடை வயங்க = ஒளி வீசும்

நோக்கி = நோக்கி

மீன் = விண்மீன்கள்

சுடர் = சந்திரன்

விண்ணும் மண்ணும் = வானும் மண்ணும்

விரிந்த = விரிந்த

போர் அரக்கர் = போர் செய்யும் அரக்கர்கள்

என்னும் = என்ற

கான் = கானகம்

சுட முளைத்த = எரிக்க பிறந்த

கற்பின் கனலியைக் = கற்பின் கனலியை

கண்ணின் கண்டாள். = கண்ணின் கண்டாள்

அரக்கர் குலத்தை எரிக்க பிறந்த கற்பின் கனலி என்கிறான் கம்பன்.


சூர்பனகையை குறிப்பிடும்போது "உணர்விலி " என்கிறான்.

இந்த வார்த்தையை பற்றி நிறைய நேரம் சிந்தித்தேன்.

உணர்வு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இராமன் மேல் அவ்வளவு காதல் என்ற உணர்வு இருந்ததே?  காம உணர்வு உடல் எல்லாம் சுட்டது என்றானே கம்பன். பின் எப்படி உணர்விலி ?


உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருப்பதைத்தான் கம்பன் உணர்விலி என்கிறான்.

இராமனை மணக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு முறை இருக்கிறது அல்லவா? பார்த்த முதல் நாளே, "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா" என்று  ஆரம்பிக்கிறாள்.

ஒரு வரைமுறை  இல்லாமல் அவள் உணர்ச்சிகள் தறி கெட்டு ஓடுகின்றன.

எனவே, அவளை உணர்விலி என்கிறான் கம்பன்.

சிந்திப்போம். நம் உணர்வுகளை நாம் சரியாக வெளிப்படுத்துகிறோமா?

மென்மையாக, இனிமையாக, பிறர் மனம் புண்படாமல், நேரம் காலம் அறிந்து வெளிப்படுத்துகிறோமா ?

அல்லது, சூர்ப்பனகை மாதிரி மனதில் தோன்றிய உணர்ச்சிகளை வந்த நேரத்தில் அப்படியே போட்டு  உடைக்கிறோமா?


சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_18.html

Thursday, May 16, 2019

கம்ப இராமாயணம் வாள் எயிறு இலங்க நக்கான்

கம்ப இராமாயணம்  வாள் எயிறு இலங்க நக்கான் 



உன்னுடைய சகோதரர்கள் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் என்று இராமன் சூர்பனகையிடம் சொன்னான் என்று நேற்று பார்த்தோம்.

அதற்கு சூர்ப்பனகை சொல்கிறாள் "நாம் காதர்வ முறைப் படி திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த பின் என் சகோதரர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல, நீ சொன்ன படி கேட்டு நடப்பார்கள் " என்று மேலும் பலவும் கூறுகிறாள்.

அதைக் கேட்டு இராமன் ஒரு ஏளன சிரிப்பு சிரிக்கிறான்

"அரக்கர் அருளையும் பெற்றேன். உன்னால் பெரும் செல்வத்தையும் பெற்றேன். உன்னை அடைந்ததால் வரும் இன்பங்களையும் பெற்றேன். இதனால் நான் பெற்ற இன்பங்கள் ஒன்றா இரண்டா? அயோத்தி விட்டு வந்த பின், நான் செய்த தவத்தால் இவை எல்லாம் எனக்குக்  கிடைத்தன " என்று சொல்லி விட்டு, பற்கள் தெரியும் படி சிரித்தான்

பாடல்


''நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் 
     நலம் பெற்றேன்; நின்னோடு 
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் 
     பெற்றேன்; ஒன்றோ, 
திரு நகர் தீர்ந்த பின்னர், செய் 
     தவம் பயந்தது?' என்னா, 
வரி சிலை வடித்த தோளான் வாள் 
     எயிறு இலங்க நக்கான்.

பொருள்


''நிருதர்தம் = அரக்கர்களின்

அருளும் பெற்றேன் = அருளைப் பெற்றேன்

நின் = உன்

நலம் பெற்றேன் = நலம் பெற்றேன்

நின்னோடு = உன்னோடு

ஒருவ = நீங்காத

அருஞ் செல்வத்து = அரிய செல்வத்தை

யாண்டும் = எப்போதும்

உறையவும் பெற்றேன் = என்னுடன் இருக்கவும் பெற்றேன்

ஒன்றோ,  = இது மட்டுமா

திரு நகர் = அயோத்தி

 தீர்ந்த பின்னர் = விட்டு வந்த பின்

செய் தவம் பயந்தது?' என்னா, = நான் செய்த தவங்கள் என்ன

வரி சிலை வடித்த தோளான் = வில்லை பிடித்த வடிவான தோள்களை உடைய இராமன்

வாள் எயிறு இலங்க நக்கான். = ஒளி பொருதிய பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தான்


கிண்டலின் உச்சம்.

சூர்பனகையை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லி இருக்கலாம்.

அவளை பார்த்து கிண்டல் செய்வது சரியா ?

அந்த நேரத்தில் பர்ண சாலையில் இருந்து சீதை வெளியே வருகிறாள்.

என்ன நடந்திருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_16.html

Wednesday, May 15, 2019

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன்

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன் 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள்.

இராமன் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். அவன் மறுத்துச் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் சூர்ப்பனகை சரியான பதில் தருகிறாள்.

இறுதியில் இராமன் சொல்கிறான்

"உனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். ஒருவனோ உலகாளும் இராவணன். இன்னொருவனோ செல்வத்திற்கு அதிபதி குபேரன். இந்த இரண்டு பேரில் ஒருவர் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் வேறு இடம் பார்"

என்கிறான்.

இது இராம பக்தர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இராமன் எப்படி இப்படிச் சொல்லலாம்? ஒருவேளை இராவணன் வந்து , "இந்தா என் தங்கையை ஏற்றுக் கொள்" என்று சொன்னால், இராமன் ஏற்றுக் கொள்வானா? அவன் சொன்ன சொல் தவறாதவனாயிற்றே ? இராவணனோ, குபேரனோ ஏன் சூர்பனகையை இராமனுக்கு கட்டி வைக்க மாட்டார்கள். சக்கரவர்த்தி திருமகன். நல்லவன்.

பாடல்

ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு 
     தலைவன், ஊங்கில் 
ஒருவனோ குபேரன், நின்னோடு 
     உடன்பிறந்தவர்கள்; அன்னார் 
தருவரேல், கொள்வென்; அன்றேல், 
     தமியை வேறு இடத்துச் சார; 
வெருவுவென்;-நங்கை!' என்றான்;மீட்டு 
     அவள் இனைய சொன்னாள்:

பொருள்


ஒருவனோ = உன் அண்ணன்களில் ஒருவனோ

உலகம் மூன்றிற்கு = மூன்று உலகிற்கும்

ஓங்கு ஒரு தலைவன், = சிறந்த ஒரு தலைவன்

ஊங்கில் = உன்னிப்பாக கவனித்தால்

ஒருவனோ  = மற்றொருவனோ

குபேரன் = குபேரன்

நின்னோடு = உன்னோடு

உடன்பிறந்தவர்கள் = உடன் பிறந்தவர்கள்

அன்னார்  = அவர்கள்

தருவரேல் = உன்னை எனக்குத் தந்தால்

கொள்வென் = ஏற்றுக் கொள்வேன்

அன்றேல்,  = இல்லை என்றால்

தமியை = பெண்ணே

வேறு இடத்துச் = வேறு இடத்தில்

சார;  = சேர

வெருவுவென் = நான் அஞ்சுவேன்

நங்கை!' = நல்ல பெண்ணே

என்றான்; = என்றான்

மீட்டு = மீண்டும்

அவள் = சூர்ப்பனகை

இனைய சொன்னாள்:= இதைச் சொன்னாள்


"நீயாக தனியா வந்து என்னை கல்யாணம் பண்ணிக் கொள் என்றால் என்னால் அது முடியாது. உன் அண்ணன்கள் வந்து உன்னை தாரை வார்த்துக் கொடுத்தால்  ஏற்றுக் கொள்வேன் "

என்று வெளிப்படையாக சொல்கிறான். 

அப்படி சொன்னது சரியா ?

இராமனுக்கு அபப்டி ஒரு எண்ணம் இருந்ததா ?

இருந்தால் தவறு ஒன்றும் இல்லை. முறைப்படி பெண் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன்  என்கிறான். அவள், அரக்கி என்று தெரிந்த பின்னும். 

"இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தியாலும் தொடேன் என்ற செவ்வரம்" கொஞ்சம் பழுது படும். இருந்தாலும், தவறு ஒன்றும் இல்லை. இராமனின் தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவிகளை கொண்டவன். இராமன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் பெரிய தவறு ஒன்றும் இல்லை. 

அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால், இராமன் அப்படி சொல்லி இருக்கலாமா?

கேள்வியை இராம பக்தர்களிடம் விட்டு விடுகிறேன்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_15.html


Tuesday, May 14, 2019

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள். இராமனோ, "நீயோ அரக்க கணம். நான் மானிட கணம். நம்முள் கணப் பொருத்தம் இல்லையே "  என்றான்.

அதற்கு சூர்ப்பனகை, சொல்லுகிறாள் ,

"செய்த பக்தியின் பலனை நான் அறியவில்லை. என் பேதைமை. இராவணன் தங்கை என்று நான் சொன்னது பிழை. பாம்பணையில் துயிலும் குற்றம் அற்றவனைப் போல உள்ளவனே, தேவர்களை தொழுது என் பழி கொண்ட அந்தப் பிறவியை நான் நீக்கி விட்டேன்"


பாடல்

'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் 
     பயத்தை ஓராது, 
"இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் 
     பாலது' என்னா, 
'அரா-அணை அமலன் அன்னாய்! 
     அறிவித்தேன் முன்னம்; தேவர்ப் 
பராவினின் நீங்கினேன், அப் 
     பழிபடு பிறவி' என்றாள்.

பொருள்



'பராவ  = பரவுதல், சொல்லுதல், இங்கு துதித்தல் என்ற பொருளில் வந்தது

அருஞ் = அரிய

சிரத்தை = சிரத்தையோடு

ஆரும் பத்தியின் = செய்யும் பக்தியின்


பயத்தை ஓராது,  = பலனை நினைக்காமல்

"இராவணன் தங்கை" என்றது = "இராவணனின் தங்கை" என்று நான் கூறியது

ஏழைமைப் பாலது' என்னா,  = என்னுடைய அறியாமையே ஆகும்

'அரா-அணை  = பாம்பு அணையில்

அமலன் = குற்றம் இல்லாதவனே (மலம் = குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்)

துயிலும் =துயிலும்

அன்னாய்!  = போன்றவனே (திருமால் போன்றவனே)

அறிவித்தேன் முன்னம்; = முன்னாடியே சொன்னேனே

தேவர்ப் = தேவர்களை

பராவினின் = வணங்கி, துதித்து

நீங்கினேன் = நீக்கினேன்

அப் பழிபடு பிறவி' என்றாள். = பழிக்கத்தக்க பிறவி என்றாள்

இராமாயணத்தில், எதிர் பார்க்காத இடத்தில், எதிர் பார்க்காத பாத்திரங்கள் சில சமயம்  மிக உயர்ந்த கருத்துக்களை சொல்வதை நாம் காணலாம்.

கூனி சில அறங்களை சொல்லி இருக்கிறாள்.

இங்கே சூர்ப்பனகை சொல்கிறாள்.

நிறைய பேர் பக்தி செய்வார்கள். அதனால் என்ன பலன்,பயன் என்று அவர்களுக்குத் தெரியாது.  ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், என்று இருப்பார்கள். அதனால் என்ன பலன் என்று கேட்டால் ஒன்றும்  தெரியாது.

பலன் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யலாமா ? அப்படி யார் செய்வார்கள்?

அப்படி செய்பவர்கள் அரக்கர்கள். செய்த பக்தியின் பலன் அறியாதவர்கள்.

சூர்ப்பனகை சொல்கிறாள்,

"சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது"

சாவி கொடுத்த பொம்மை மாதிரி செய்யாமல், செய்யும் காரியத்தின் பலா பலன்களை அறிந்து செய்ய வேண்டும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீ அந்தணர் குலம் , நான் அரச குலம் என்றதற்கு பதில் சொல்லி விட்டாள்

நீ அரக்க குலம் நான் மனித குலம் என்பதற்கும் பதில் சொல்லி விட்டாள்.

அடுத்து இராமன் என்ன செய்யப் போகிறான் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_14.html

Sunday, May 12, 2019

குறுந்தொகை - நாணும் சிறிதே

குறுந்தொகை - நாணும் சிறிதே 


பெண்ணுக்கு நாணம் வரும். எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆணுக்கு நாணம் வருமா? வந்தால் எப்படி இருக்கும்? வெட்கப்படும் ஆண் மகனை பார்த்து இருக்கிறீர்களா?

குறுந்தொகை அப்படி ஒரு ஆண் மகனை, அவன் வாயிலாகவே காட்டுகிறது.

அவனுக்கு அவள் மேல் காதல். அவள் வீட்டில் அந்த காதலுக்கு தடை விதிக்கிறார்கள்.  அவனுக்கோ அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது.

என்ன செய்வது ?

அந்தக் காலத்தில் மடல் ஏறுதல் என்று ஒன்று உண்டு.

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஆண் மகன், ஒரு துணியில் அந்தப் பெண்ணின் படத்தையும், தன் படத்தையும் வரைந்து, கொடி போல் பிடித்துக் கொண்டு, பனை மரக் கட்டையில் செய்த ஒரு குதிரை போன்ற ஒரு உருவத்தின் மேல் அமர்ந்து கொண்டு, ஊரில் உள்ள சின்ன பையன்களை அந்த குதிரையை இழுத்துக் கொண்டு செல்லச் சொல்லி, அந்த பெண்ணின் வீட்டின் முன்னால் அமர்ந்து கொள்வான். அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள், பெண் வீட்டாரிடம் பேசி, திருமணம் முடித்து வைத்து வைப்பார்கள்.

இதற்கு மடல் ஏறுதல் என்று பெயர்.

அந்தப் பையன் சொல்கிறான். இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் பண்ணி அவளை திருமணம் செய்து கொள்வேன்.  அவள் மிக நல்லவள். எனக்குத் தெரியும்.

திருமணத்திற்கு பின், நாங்கள் இனிமையாக வாழ்வோம். எனக்கும் வயதாகிவிடும். அப்பா ஆகி, தாத்தா ஆகி விடுவேன்.  அப்போது நான் ஊருக்குள் போதும் போது, என் காது பட சொல்லுவார்கள் "இந்தா போறாரே பெரிய மனுஷன்...அவர் அந்தக் காலத்தில், அவருடைய காதலியை மணக்க என்னவெல்லாம் பண்ணார் தெரியுமா " என்று. அதை கேட்கும் போது எனக்கே கொஞ்சம் நாணம் வரும் என்கிறான்.



பாடல்

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த 
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் 
பெறுகதில் லம்ம யானே பெற்றாங் 
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில் 
நல்லோள் கணவ னிவனெனப் 
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.்  

பொருள்

அமிழ்துபொதி = அமுதத்தை பொதிந்து வைத்த

செந்நா = சிவந்த நாக்கு

அஞ்ச = = அஞ்சும்படி

வந்த = முளைத்த

வார்ந்திலங்கு = வார்த்து எடுத்தது போல நேராக விளங்குகின்ற

வையெயிற்றுச் = கூர்மையான பற்களையும்

சின்மொழி = சிறிய மொழி

யரிவையைப்  = அரிவையை , பெண்ணை, மனைவியை

பெறுகதில் = பெறுவேனாக

அம்ம = அம்ம

யானே = யானே

பெற்றாங்கு = பெற்ற பின்

அறிகதில் = அறிவார்களாக

அம்ம  இவ்வூர் = இந்த ஊரில் உள்ளவர்கள்

மறுகில்  = வீதியில்

நல்லோள்  = நல்லவளான  அவளின்

கணவ னிவனெனப்  = கணவன் இவன் என

பல்லோர் = பலர்

கூற = கூற

யா  = நான்

நாணுகஞ் சிறிதே.்   = சிறிது நாணம் கொள்வேன்

யார் யாரெல்லாம், என்ன எல்லாம் கூத்து அடித்தார்களோ அவர்கள் இளமை காலத்தில். யோசித்துப் பார்த்தால், இதழோரம் ஒரு புன்னகை அரும்பாமலா போகும்?

நாணுகஞ் சிறிதே....

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_83.html


கம்ப இராமாயணம் - அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல்

கம்ப இராமாயணம் - அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல் 


தன்னை மணந்து கொள்ளும் படி வேண்டிய சூர்பனகையிடம், நமக்குள்ள குல வேறுபாடு இருக்கிறது எனவே மணந்து கொள்ள முடியாது என்றான் இராமன்.

அதற்கு, "நான் தாய் வழியில் அரச குலத்தை சேர்ந்தவள்...எனவே நீ என்னை மணந்து கொள்ளத் தடை ஒன்றும் இல்லை" என்றால் சூர்ப்பனகை.

அதற்கு இராமன்

"நீயோ அரக்கர் குலத்தில் வந்தவள். இராவணன் உன் தமையன். அரக்கர்களும், மனிதர்களும் மணந்து கொள்வது முறை அல்ல" என்கிறான்.

அவள் எப்படியாக இருந்தாலும் இராமன் அவளை மணக்கப் போவது இல்லை. பின் எதற்கு ஒவ்வொரு காரணமாகச் சொல்லி, இந்த பேச்சை நீட்டிக்க வேண்டும் ?

பாடல்

அருத்தியள் அனைய கூற,
    அகத்து உறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல்
    உண்டாட்டம் கொண்டான்,
“‘வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில்
    மானுடர் மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று ‘‘ என்று சாலப்
    புலமையோர் புகல்வர் ‘என்றான்.


பொருள் 

அருத்தியள் = ஆசை மிகக் கொண்டவள்

அனைய கூற, = அவ்வாறு கூற

அகத்து = உள்ளத்தில்

உறு = உண்டாகிய

நகையின் = சிரிப்பின்

வெள்ளைக் குருத்து = வெள்ளை குருத்து போல

எழுகின்ற = எழும்பி வர

நீலக் = நீல நிறம் கொண்ட

கொண்டல் =  மேகம்

உண்டாட்டம் கொண்டான், = ஒரு விளையாட்டை கொண்டான்

“‘வருத்தம் நீங்கு = வருத்தம் இல்லாத

அரக்கர் தம்மில் = அரக்கர் குலத்தோடு

மானுடர் மணத்தல்,  = மனிதர்கள் மணந்து கொள்வது

நங்கை! = பெண்ணே

பொருத்தம் அன்று  = பொருத்தமானது அல்ல

என்று = என்று

சாலப் = பெரிய

புலமையோர் = அறிவாளிகள்

புகல்வர்  = சொல்வார்கள்

என்றான். = என்றான்

இராசனுக்குத் தெரிகிறது அவள் அரக்கி என்று. மேலும், அவள் யாராக இருந்தாலும் அவளை  மணந்து கொள்ளப் போவது இல்லை என்றும் தெரியும்.

தெரிந்தும், அவளிடம் விளையாடுகிறான் என்றே கம்பன் பதிவு செய்கிறான்.

"உண்டாட்டம் கொண்டான்" என்கிறான்.

பெண்ணின் உணர்ச்சிகளோடு  விளையாடுவது சரியான செயலா?

அவள் ஆசையைத் தூண்டும்படி பேசிவிட்டு பின்னால் அவளை அவமானப் படுத்தி அனுப்பியது சரியா ?

அதற்கு சூர்ப்பனகை என்ன சொல்லி இருப்பாள் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_12.html