Wednesday, July 22, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம் 


சில பேர் அதைச் செய், இப்படிச் செய் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள். தங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க மாட்டார்கள்.

குலசேகர ஆழ்வார், ஒரு நாட்டின் அரசராக இருந்தவர். ஆன்மீக பக்குவம் வர, அரச போகங்களை துறந்து விட்டு ஆன்மீகத்தில் இறங்கி விட்டார்.

ஒரு அரசனாக இருந்தவன், ஆன்மீகத்தில் வருவது என்பது கடினமான காரியம்.

அரசன் என்ற அந்தத் திமிர், ஆணவம், கோவம், ஆசை, வேகம் எல்லாம் இருக்கும். பக்திக்கு அது ஒன்றுமே ஆகாது.

எப்படியோ நிகழ்ந்த இரசவாதம்.

நமக்கு இன்பம் வந்த போது, எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைக்கிறோம். என் உழைப்பு, என் அறிவு, என் திறமை இந்த வேலை கிடைத்தது, இந்த பதவி கிடைத்தது, இந்த இலாபம் கிடைத்தது என்று மகிழ்கிறோம்.

துன்பம் வரும் போது ? கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய், இந்தத் துன்பத்தில் இருந்து என்னை காப்பாற்று, என்று இறைவனை நோக்கி ஓடுகிறோம்.

ஆழ்வார் பார்க்கிறார். உலகில் பல பேர், இறைவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டதாக , சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது அவருக்கு.

உலகில் உள்ளவர்களை பார்த்துச் சொல்கிறார், "நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும், மீண்டும் இங்கு தான் வர வேண்டும்" என்று.

மேலும்,  ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் கூட, துன்பம் வந்தால், இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா,  இந்த ஆன்மா, பக்தி, இறைவன் என்பது எல்லாம் பொய் தானோ  என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கும்   அவர் சொல்கிறார் "தினம் வரும் போது நீங்கள் ஆண்டவனை விட்டு  விலகிப் போனாலும், மீண்டும் இங்கே தான் வர வேண்டும்" என்று.

அதை ஒரு உதாரணத்தில் விளக்குகிறார்.

அது ஒரு பெரிய கப்பல். அந்தக் கப்பலின் கொடி மரத்தில் சில பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. கப்பல் நங்கூரம் எடுத்து கடலில் செல்லத் தொடங்கி விட்டது. கொஞ்ச தூரம் சென்ற பின், மாலுமிகள் கப்பலின் பாய் மரத்தை மாற்ற வேண்டி  கொடி கம்பத்தைப் பார்க்கிறார்கள். அங்கே பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டுகிறார்கள்.

அந்தப் பறவைகளும் சிறகடித்து பறந்து போய் விடுகின்றன. போனால், எங்கு பார்த்தாலும் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் தான். எங்கு போகும் அந்தப் பறவைகள். மீண்டும் அந்தப் கப்பலுக்கே திரும்பி வந்து விடுகின்றன.

அது போல, இறைவா, நீ என்னை எவ்வளவு தான் துன்பம் தந்து என்னை அடித்து விரட்டினாலும், எனக்கு போவதற்கு ஒரு இடமும் இல்லை. நான் உன்னிடம்தான் வருவேன்  என்கிறார்.

பாடல்


வெங்கண்தின் களிற்டர்த்தாய்
          விற்றுவக் கோட்டம்மானே
     எங்கு போ யுய்கேனுன்
          இணையடியே யடையலல்லால்
     எங்கும் போய்க் கரை காணா
          தெறிகடல் வாய் மீண்டேயும்
     வங்கத்தின் கூம்பேறும்
          மாப்பறவை போன்றேனே
           (692) பெருமாள் திருமொழி 5 - 5


பொருள்

(click the link below to  continue reading....)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/108.html

வெங் = வெம்மையான
கண் = கண்களைக் கொண்ட
தின் = திடமான
களிற்டர்த்தாய் = களிற்றை + அடர்ந்தாய் = களிறு என்றால் யானை. அடர்தல் சண்டை போடுதல். குவாலயபீடம் என்ற யானையை கண்ணன் சண்டையிட்டு கொன்றான்

விற்றுவக் கோட்டம்மானே = வித்துவக்கோடு என்ற இடத்தில் உள்ள என் அம்மானே

எங்கு போ யுய்கேனுன் = எங்கு போய் பிழைப்பேன்

இணையடியே = உன்னுடைய இரண்டு திருவடிகளே

யடையலல்லால் = அடைக்கலம் அல்லாமல்

எங்கும் போய்க்  = எங்கு போனாலும்

கரை காணா = கரையை காணாத

தெறிகடல் வாய்  = அலைகள் தெறிக்கும் கடலின் நடுவே

மீண்டேயும் = மீண்டும் வரும்

வங்கத்தின் = கப்பலின்

கூம்பேறும் = கூம்பில் ஏறும். கொடி மரத்தில் ஏறும்

மாப்பறவை போன்றேனே = பெரிய பறவை போன்று இருந்தேனே

அவர்  சொல்வது அவரை மட்டும் அல்ல. நம்மையும் சேர்த்துதான்.

பிறவி என்ற கடலில் விழுந்து விட்டோம். எங்கும் தண்ணீர். எங்கு  போவது?

அவன் திருவடிகளே தெப்பம் என்று பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

துன்பம் வரும். அதற்காக தெப்பத்தை விட்டு விடக் கூடாது.

இந்தப் பாடல் 108  திவ்ய தேசங்களில் ஒன்றான திரு வித்துவகோடு என்ற தலத்தில் மங்களா சாசனம் செய்யப் பட்டது.

இது போல 10 பாசுரங்கள் பாடி இருக்கிறார். மூல நூலை தேடிப் படியுங்கள்.

கண்ணில் நீர் பணிக்கும் பாசுரங்கள்.

படித்துப் பாருங்கள். விழி ஓரம் நீர் திரளவில்லை என்றால் மூடி வைத்து விடுங்கள். அதைப் படிக்க உங்களுக்கு நேரம் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

சரி, அந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது?

கேரளாவில், பாலக்காடு என்ற இடத்துக்கு அருகில் உள்ளது.

பாலக்காட்டில் இருந்து பட்டாம்பி போய்விட்டால், அங்கிருந்து பக்கம்.

பட்டாம்பி வரை இரயில் இருக்கிறது. அங்கிருந்து சுமார் 2  கிமி தான்.

பஞ்ச பாண்டவர்கள் சிலை அமைத்து பூஜித்த தலம் என்று சொல்கிறார்கள்.

சிவனுக்கும், திருமாலுக்கும் ஒரே இடத்தில் கோவில். இது போல 10 திவ்ய தேசங்கள் இருக்கிறதாம்.

கேரளா பாணியும் , தமிழ் பாணியும் கலந்து நிற்கும் தலம்.


பெருமாள் - உய்ய வந்த பெருமாள்.
தாயார் - வித்துவ கோட்டு வல்லி



இந்த வைரஸ் பிரச்சனை எல்லாம் முடியட்டும்.

ஒரு நடை இந்த கோவிலுக்கு போய் விட்டு வரலாம். 

Tuesday, July 21, 2020

ஔவையார் பாடல் - நன்றே

ஔவையார் பாடல் - நன்றே 


தீயாரைக் காண்பதும், அவர்கள் சொல்வதை கேட்பதும் தீதே, அவரோடு இணங்கி இருப்பதும் தீதே என்றார்.

ஆனால் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே தீமை பயப்பதாகத்தானே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டி, திரைப்படம், வலை தளங்கள், செய்தித் தாள்கள், என்று எங்கு பார்த்ததாலும் பொய்யும், புரட்டும், வஞ்சனையும், கொலை, கொள்ளை, ஏமாற்று வேலை என்று தானே இருக்கிறது.

இதை விட்டால் ஒன்றும் இல்லையே. பின் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு ஔவை தரும் விடை

மனம் சும்மா இருக்காது. எதையவாது பிடித்துக் கொள்ளும் இயல்பு உடையது. அதை அறிந்த ஒளவை சொல்கிறாள்....

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_21.html

பாடல் 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று


பொருள்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே  = நல்லவர்களை காண்பதும் நன்றே. நேரில் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தொலைக் காட்சியில், வலை தளங்களில் பார்த்தால் கூட போதும்.

நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே = அவர்கள் சொல்வதை கேட்பதும் நன்றே

நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;  = அவர்களுடைய குணங்களை சொல்வதும் நல்லதே

அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று = அவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லது

அதாவது,


கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பதை விடுத்து நல்லவற்றை பார்க்க வேண்டும்.

எவன் எவனோ பேசுவதை கேட்பதை விட்டு விட்டு, நல்லவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்.

அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பதை விட்டு விட்டு, நல்லவர்களைத் தேடிப் போய்   கண்டு அவர்களோடு பேச வேண்டும்.

பார்க்க முடியவில்லையா, பேச முடியவில்லையா, அவர்களின் நல்ல குணத்தையாவது  மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இராமன் இப்படி வாழ்ந்தான்.

தர்மன் இப்படிச் செய்தான்.

அரிச்சந்திரன் இப்படி பொய் பேசாமல் இருந்தான் என்று நல்லவர்களின்  குணங்களை  பேச வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம், நாளடைவில் அந்த குணங்கள் நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.



Monday, July 20, 2020

ஒளவையார் பாடல் - தீதே

ஒளவையார் பாடல் -  தீதே 


பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்

மிக எளிய பாடல்.

தீயாரைக் காண்பதுவும் தீதே = தீயவர்களை காண்பதும் தீது

திரு அற்ற = சிறப்புகள் அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே = தீயவர்கள் சொல்வதை கேட்பதும் தீது

தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே = தீயவர்களின் குணங்களை உரைப்பதும் தீதே

அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. = அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இணக்கமாக இருப்பதும் தீதே


சரியாத்தானே சொல்லி இருக்கிறாள் கிழவி. இதில் என்ன சொல்ல இருக்கிறது என்று கேள்வி எழலாம்.

அதுவும் இல்லாமல் நாம எங்க தீயவர்களோடு பழகுகிறோம், பேசுகிறோம், பார்க்கிறோம்.  இதெல்லாம் நமக்கு இல்லை. நாம் பாக்குறது, பேசுறது எல்லாம் நம்ம அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நன்பர்கள், உறவினர்கள் அவ்வளவுதான்.  அவங்க எல்லாம் தீயவர்கள் இல்லை. எனவே, நமக்குச் சொன்ன அறிவுரை இல்லை   என்று எடுத்துக் கொள்ளலாமா?

சற்று யோசியுங்கள்.

நீங்கள் தீயவர்களை  பார்ப்பதே இல்லையா?  அவர்கள் சொல்வதை கேட்பதே இல்லையா?

நீங்கள் தினமும் தீயவர்களை பார்க்கிறீர்கள், அவர்கள் சொல்வதை கேட்கிறீர்கள் , அவர்களோடு இணக்கமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

எத்தனை டிவி பார்க்கிறீர்கள்?

அதில் எத்தனை சீரியல்கள், நாடகங்கள், அரசியல் அலசல்கள், "பெரியவர்களின்" பேச்சுகள் - அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

அவர்கள் நல்லதைத்தான் சொல்கிறார்களா? நல்லதைத்தான் செய்கிறீர்களா?

யாரை எப்படி கொல்லுவது , யாரை எப்படி ஏமாற்றுவது, எப்படி வஞ்சகம் செய்வது,  ஆட்களை கடத்துவது, கொலை செய்வது, திருடுவது என்று உலகில்  உள்ள அத்தனை வக்ரங்களும் அவற்றில் இல்லையா?

அவற்றை பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் மனம் பாதிக்கப் படாதா?

இல்லை பாதிக்காது என்று நீங்கள் சொன்னால், பின் நீங்கள் ஆன்மீக சொற்பொழிவுகளை  கேட்பதிலோ, படிப்பதிலோ அர்த்தம் இல்லை.

நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்தும் நம்மை பாதிக்கத்தான் செய்யும்.

சரி. நான் தான் தொலைக்காட்சியே பார்ப்பதே இல்லையே . அப்படியே பார்த்தாலும்  செய்தி, பாடல், நகைச்சுவை என்று மட்டும் தானே பார்ப்பேன்  என்று சொல்லலாம்.

அந்தச் செய்திகளில் தீயவை இல்லையா?  அதை சொல்பவர்கள் நல்லவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?  யார் யாரோ பேசியதை காட்டுகிறார்கள் செய்தியில்.  அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

சார், தொலைக் காட்சியே பார்ப்பதே இல்லை. எங்கள் வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டியே இல்லை என்று சொல்லலாம்.

சினிமா?

செய்தித்தாள் ?

தீமைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அவை தீமை என்று கூடத் தெரியாமல்   வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரி பார்த்தால் என்ன? கேட்டால் என்ன? அதில் சொன்ன மாதிரியா செய்கிறோம் . நமக்குன்னு ஒரு அறிவு இருக்குல்ல என்று சொல்லலாம்.

ஒரு நடிகர் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கிறார். எத்தனை சிறுவர்கள்  அது ஒரு பெரிய  விடயம் என்று அது போல நாமும் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள் ?

தங்கள் தங்கள் ஆதர்ச கதாநாயகர்கள் என்ன செய்கிறார்க்ளோ  அதே போல்  நாமும் செய்ய வேண்டும் விரும்புவது இல்லையா?

அது தான்  இணக்கமாக இருப்பது.

சரி, சினிமாவும் பார்ப்பது இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

Youtube ? வாட்ஸாப்ப்?

இவற்றில் இல்லாத வக்கிரங்களா?

அப்படியெல்லாம் இல்லை. எனக்கு வரும் செய்திகள் அப்படி ஒன்றும் மோசமானவை இல்லை  என்று நாம் நினைக்கலாம்.

சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு.

முதலாவது - பொய் சொல்லுதல்

இரண்டாவது - புறம் கூறுதல்

மூன்றாவது - பயனில சொல்லுதல்

நான்காவது = கடும் சொல் சொல்லுதல்

உங்களுக்கு வரும் செய்திகளில் இவை இல்லை என்று சொல்ல முடியுமா?

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் சிலர் புறம் சொல்லுபவர்களாக இருக்கலாம். அது ஒரு தீய செயல் தானே? அதைச் செய்பவர்களதீயவர்கள் தானே?

அவர்களை நாம் பார்ப்பது இல்லையா? அவர்களோடு பேசுவது இல்லையா? அவர்களோடு இணக்கமாக இருப்பது இல்லையா?

பேச்சின் மூலம் சாதிச் சண்டையை, மதச் சண்டையை தூண்டுகிறான் ஒருவன்.அவன் சொல்வதை youtube ல் கேட்பது இல்லையா?

ஒளவையார் தீயவர்களை நேரில் சென்று காண்பது தீது, அவர்கள் சொல்வதை நேரே  நின்று கேட்பது தீது என்றெல்லாம் சொல்லவில்லை.

ஒருவன் தவறான எண்ணத்தோடு ஒரு புத்தகம் எழுதுகிறான். அதை வாசித்து,  அவன் சொல்லுவதும் சரியாத்தானே இருக்கிறது என்று நாம் நினைத்தால்,  நாம் அந்த தீயவனோடு இணக்கமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அறியாமலேயே எவ்வளவு தீயவர்களோடு  நீங்கள் தொடர்பு  வைத்து இருக்கிறீர்கள் என்று புரியும்.

இது ரொம்ப நாள் நடந்து கொண்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை.

சற்று தள்ளி நின்று யோசித்தால் இதன் விபரீதம் புரியும்.

சரி, அப்படினா என்னதான் செய்றது?

டிவி கூடாது, செய்தித் தாள் கூடாது, whatsapp , youtube கூடாது, அக்கம் பக்கம் அரட்டை அடிக்கக் கூடாது  என்றால் பின் என்னதான் செய்றது?

கிழவி அதற்கும் வழி சொல்லி விட்டுப் போய் இருக்கிறாள்.

அது என்ன தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_20.html

10 இலட்சம் page views - நன்றி

10 இலட்சம் page views - நன்றி 



ஒரு நல்ல செய்தி. இன்று எனது தமிழ் blog 1 million page view வைத் தாண்டி விட்டது.  இதில் என் பெருமை ஒன்றும் இல்லை. அவ்வளவு பேர் தமிழ் படிக்கிறார்கள். நல்ல விடயங்களை படிக்கும் ஆர்வம் உள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. தொடர்ந்து படித்து வரும் உள்ளங்களுக்கு நன்றி


Sunday, July 19, 2020

கம்ப இராமாயணம் - இராமன் தோள்களை வெல்லலாம்

கம்ப இராமாயணம் - இராமன் தோள்களை வெல்லலாம்


யாப்பு இலக்கணத்திலே இல் பொருள் உவமை அணி என்று ஒன்று உண்டு.

பொதுவாக உவமை என்றால் ஒரு உயர்ந்த அல்லது நல்ல பொருளை உதாரணமாக கூறி அழகு படக் கூறுவது.

தேன் போல் இருந்தது அவர் குரல்

நிலவு போல் இருந்தது அவள் முகம்

என்றெல்லாம் உவமை கூறக் கேட்டு இருக்கிறோம்.

இல் பொருள் உவமை என்பது, இல்லாத ஒன்றைக் காட்டி அதை உவமையாகக் கூறுவது.

"தலையில் சம்மட்டியால் அடிப்பது போல வலிக்கிறது" என்று கூறினால், அதற்கு முன்னால் தலையில் சம்மட்டியால் அடி வாங்கி இருந்து, அது போல இருக்கிறது என்று கூறுகிறார் என்று அர்த்தமா? இல்லை. தலையில் சம்மட்டியால் அடிப்பது என்பது இல்லாத ஒன்று . அதை உவமையாக கூறுவது.

ஆயிரம் ஏரி மலை வெடிச்சது மாதிரி அப்படி ஒரு கோபம்.

ஆயிரம் அம்மாவாசையை ஒன்றாக சேர்த்து வச்சது மாதிரி ஒரு கறுப்பு

என்றெல்லாம் கூறுவது போல.

கம்பர் ஒரு இல் பொருள் உவமை கூறுகிறார்.

அதுவும் எப்படி இரண்டு நடவாத ஒன்றை , ஒன்றுக்கு மற்றொன்றாக உவமை படுத்திக் கூறுகிறார்.

இராவணன் அவையில் உள்ள கும்ப கர்ணன் , இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான்.

"இராவணா , நீ இராமனை வெல்லலாம் என்று நினைப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ? அது சீதையை அணைக்கலாம் என்று நினைப்பது போல இருக்கிறது " என்று இரண்டு நடவாத விடயங்களை காட்டுகிறான்.


பாடல்

கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால்--ஐயா!

பொருள்


கல்லலாம் உலகினை; = இந்த உலகையே பெயர்த்து எடுத்து விடலாம்


வரம்பு கட்டவும் சொல்லலாம்;  = இந்த உலகம் அனைத்துக்கும் வேலி போடக் கூட சொல்லலாம்

 பெரு வலி  = பெரிய வலிமையான

இராமன் தோள்களை = இராமனின் தோள்களை

வெல்லலாம் என்பது, = வென்று விடலாம் என்று நினைப்பது

சீதை மேனியைப் = சீதையின் உடலை

புல்லலாம் = அணைக்கலாம்

என்பது போலுமால்--ஐயா! = என்பது போன்றது ஐயா

இராமனை வெல்லவும் முடியாது. சீதையை புல்லவும் முடியாது.

இதற்கு அது உவமை.

நல்லா இருக்குல்ல ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_19.html

Thursday, July 16, 2020

திருவாசகம் - அஞ்சுமாறே

திருவாசகம் - அஞ்சுமாறே 


சமயப் பெரியவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் கொண்ட மதமும் கடவுளும் தான் உயர்ந்தது, மற்றது எல்லாம் தாழ்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

உன் கடவுள் உயர்ந்தது என்று சொல்ல உனக்கு உரிமை இருக்கிறது. மற்றவன் கடவுளை தாழ்ந்தது என்று சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

வைணவர்களை கேட்டால் பெருமாள் தான் உயர்வு மற்ற கடவுள் எல்லாம் தாழ்ந்தது என்பார்கள்.

சைவர்களை கேட்டால் சிவனுக்கு மிஞ்சிய கடவுள் ஒன்று இல்லை என்பார்கள்.

எல்லா மதத்திலும் இதே நிலை தான்.

இப்படி பெரியவர்கள் சொன்னதால், பின்னால் வந்தவர்கள் என் மதம், என கடவுள் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

இது சரியா?

இறை தரிசனம் பெற்ற பெரியவர்கள், இப்படி சொல்லலாமா?  ஒன்றே கடவுள் என்று அவர்களுக்குத் தெரியாதா?

காரணம் இருக்கிறது.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல பல வழிகள் இருக்கலாம். வழி கேட்பவனுக்கு ஒரு வழியைச் சொல்ல வேண்டும்.

"நீ இப்படிப் போகலாம், அப்படியும் போகலாம், இது அதைவிடச் சிறந்தது, ஆனால் அந்த நாலாவது வழி இருக்கே அதுல் இப்படி சில சௌகரியங்கள் இருக்கு "

என்று ஒரு பத்து வழி சொன்னால், கேட்டவன் குழம்பிப் போவான்.

சில பேர் எல்லா வழிகளையும் ஆராய்ந்து தனக்கு சௌகரியப் பட்ட  வழியை தேர்ந்து எடுப்பான்.   எல்லாராலும் முடியாது.

பத்து வழி சொன்னால், எதில் போவது என்று தெரியாமல் குழம்பி ஒரு வழியிலும் போக மாட்டான்.

எனவே தான், அடித்துச் சொன்னார்கள். இது தான், வேற வழியே கிடையாது. இதுல போனால் நீ போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்து விடலாம்.

ஆனால், மக்களின் அறியாமை என்ன செய்வது. உன் வழி சரியா, என் வழி சரியா என்று சண்டை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். போகும் இடத்தை விட்டு விட்டு, எது நல்ல வழி என்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இருக்கிறார்கள்.

வழியா முக்கியம்? போய் சேரும் இடம் தானே முக்கியம்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமக்கு எதில் எல்லாமோ பயம் இருக்கிறது. இப்ப புதிதாய் இந்த வைரஸ். எப்ப நமக்கு வருமோ என்று பயமாக இருக்கிறது.

மணிவாசகர் எதற்கு பயப்பட்டார் தெரியுமா ?

"புற்றில் வாழும் பாம்புக்கு அஞ்ச மாட்டேன். ஒன்றும் தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்தது மாதிரி பேசும் பொய்யர்களின் பேச்சுக்கு பயப்பட மாட்டேன். சிவன் இருக்கும் போது மற்றும் ஒரு தெய்வம் என்று எண்ணி சிவனை அறியாமல் விடுபவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது" என்கிறார்.

பாடல்


புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்


புற்றில்வாள் = புற்றில் வாழும்

அரவும் = பாம்புக்கும்

அஞ்சேன் = அஞ்சேன்

 பொய்யர்தம்  = பொய் சொல்பவர்களின்

மெய்யும் = மெய் சொல்லுக்குச்

அஞ்சேன் = அஞ்சேன்

கற்றை = கற்றையாக இருக்கும்

வார் சடை = நீண்ட சடை முடியை கொண்ட

எம் அண்ணல் = எம் தலைவன்

கண்ணுதல் = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் கொண்ட அவர்

பாதம் நண்ணி = பாதத்தை பற்றி, நெருங்கி

மற்றும் ஓர் தெய்வந் தன்னை = மற்றும் ஒரு தெய்வம் தன்னை

உண்டென நினைந்து = உண்டு என்று நினைத்து

தெம் பெம்மாற் = எம் பெருமான்

கற்றிலா தவரைக் கண்டால் = அறியாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. = ஐயோ, நான் அச்சப் படுகிறேன்

ஒன்றைப் பிடித்தால், அதைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும்.

சிவன் என்றால் சிவன்.

திருமால் என்றால் திருமால்.

அலை பாயக் கூடாது.

இங்கு இருக்கும் போதே, ஒரு வேளை அந்தக் கடவுள் இன்னும் நல்லவரோ? வலிமையானவரோ என்று மனம் சிந்திக்கக் தொடங்கினால், ஒன்றும் நடக்காது.

அப்படி அங்கும் இங்கும் அலைபவர்களை கண்டால், எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_16.html

Tuesday, July 14, 2020

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2


(இதன் முதல் பகுதி கீழே உள்ளது. மீண்டும் ஒரு முறை அதை படித்து விட்டு இதைப் படிப்பது நல்லது)

வேதம் என்பது எழுதா மறை, எழுதா கிளவி என்று பார்த்தோம்.

ஏன் என்றால், ஒலி வடிவம்தான் உயர்ந்தது. அதை அப்படியே வரி வடிவத்துக்கு மாற்ற முடியாது. வேதம் ஒலி வடிவம் ஆனது. அதை எழுதி வைத்தாலும்,  அதை ஒரு  குருவின் மூலம் தான் படிக்க வேண்டும் என்று விதி செய்து வைத்தார்கள். வரி வடிவத்தில் உள்ளதை படித்தால் தவறு நிகழ்ந்து விடலாம் என்பதால். 

சரி, வேதம் உயர்ந்தது. ஏற்றுக் கொள்வோம்.  

அந்த வேதம் எதைச் சொல்கிறது. அது சொல்லும் பாடம் என்ன? அதில் நமக்கு அறிந்து கொள்ள என்ன இருக்கிறது ?

புகழேந்தி புலவர் கூறுகிறார் 

திருமாலின் திருவடிதான் மறை நூல்களின் முடிபு என்கிறார். 

அந்தத் திருவடி எப்படிப்பட்ட திருவடி திருவடி தெரியுமா?

"மறை நூல்களுக்கெல்லாம் முடிவானது, நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியின் அர்த்தம் அதுதான். அந்தத் திருவடி, ஆதிமூலமே என்று அலறிய யானைக்கு உதவவும், அன்று ஆயர் பெண்களின் குரலுக்கும் கூப்பிடுவதற்கு முன்னே செல்வதற்கு தயாராக இருந்த அடி " என்கிறார். 

பாடல் 


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


பொருள்

முந்தை = பழமையான

மறைநூல் = வேதங்களின்

முடியெனலாம்  = முடிந்த முடிபு எனலாம்

தண் = குளிர்ச்சியான

குருகூர்ச் = குருகூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த

செந்தமிழ் = செந்தமிழ் நூலான திருவாய் மொழி என்ற

வேத = வேதத்தின்

சிரமெனலாம்  = தலை என்று கூறலாம்

நந்தும் = வருந்திய

புழைக்கைக்கும்  = யானைக்கும்

நேயப் = நேசம் கொண்ட

பொதுவர் மகளிர்க்கும் = ஆயர் குல பெண்களுக்கும்

அழைக்கைக்கு = அழைப்பதற்கு

முன்செல் அடி. = முன்பே சென்ற திருவடிகள்

அவனை அழைக்கக் கூட வேண்டாமாம். அழைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே ஓடி வந்து விடுவானாம்.

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று மணிவாசகர் கூறியது போல.

குழந்தை பசித்து அழுவதற்கு முன்பே, அதற்கு இப்போது பசிக்கும் என்று அறிந்து ஓடி வந்து  அமுது அளிக்கும் தாயைப் போல,

நினைத்தால் போதும் அவன் திருவடிகள் நம் முன் வந்து தோன்றும் என்கிறார்.

வேதத்தின் தலையிலும், நம்மாழ்வார் பாடல்களின் முடியிலும்,  உள்ள அந்த திருவடி, யானைக்கும், ஆயர் குல பெண்களுக்கும் உதவி என்று சொல்லும் முன்னே ஓடி வந்த திருவடி.

உரையை விட்டு விடுங்கள். அர்த்தம் பிடி பட்டு விட்டது அல்லவா, இனி உரை தேவை இல்லை.  நேரடியாக பாடலைப் படித்துப் பாருங்கள்.

சுவை தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/2.html

------------- பாகம் ஒன்று கீழே ---------------------------------------------------------------------



செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை 

என்று ஒரு குறள் இருக்கிறது.

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த குறள் மேல் ஒரு சந்தேகம் உண்டு.

ஏன் செவிச் செல்வம் பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். காதை விட கண் தானே சிறந்தது? கண்ணால் எவ்வளவு காண முடியும். கண்ணால் காண்பதை எல்லாம் சொல்லில் வடிக்க முடியுமா?

ரொம்ப வேண்டாம், ஒரு மலர்ந்த ரோஜா மலரைப் பார்க்கிறோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி புரிய வைக்க முடியுமா? கண்ணால் எவ்வளவோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாமே. பின் ஏன் காதை பெரிதாகச் சொன்னார்?

இன்று வள்ளுவர் நம்மிடம் இல்லை. அவர் "சொல்வதை'  நம்மால் கேட்க முடியாது. ஆனால், அவர் சொன்னதை நம்மால் வாசிக்க முடியும். இன்றும், குறளைப் படித்தது நாம் பயன் பெறுகிறோம். அப்படி இருக்க செவிச் செல்வம் எப்படி பெரிய செல்வமாக முடியும்?

இன்று நாம் கணனியில் ( கம்ப்யூட்டர்) எவ்வளவோ பார்த்து தெரிந்து கொள்கிறோம்.  தொலைக் காட்சியில் எவ்வளவு விடயங்கள் வருகிறது?

அந்தக் காலத்தில் இவை எல்லாம் இருந்திருக்காது. எனவே, வள்ளுவர்  செவிச் செல்வத்தை பெரிதாக சொல்லி இருப்பாரோ?

இல்லை.

மகான்களுக்கு, உண்மைகள் கேட்டது. அவர்கள் தவம் செய்த போது அரிய பெரிய உண்மைகள் அவர்களுக்கு கேட்டது. யாரும் எழுதிக் கொண்டு வந்து  காட்டவில்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்.

நம் மதத்தில் மட்டும் அல்ல, பிற மதங்களிலும் உண்மைகள் சொல் வடிவாகாவே வெளிப்பட்டு இருக்கிறது.

"ஆதியில் சப்தம் இருந்தது. அது தேவனோடு இருந்தது. தேவன் சப்த வடிவமாக இருந்தார்" என்று கிறித்துவம் பேசுகிறது.

முகமது நபிக்கு குரான் சொல்லப்பட்டது. அவர் எழுதிக் கொண்டு வரவில்லை. அவருக்கு அவை கேட்டன.

நம்முடைய வேதங்களுக்கு "சுருதி" என்று ஒரு பெயர் இருக்கிறது. சப்த வடிவம்.

தமிழிலே வேதத்துக்கு இரண்டு பெயர்கள் சொல்கிறார்கள்

"எழுதா மறை", "எழுதா கிளவி" (கிளவி என்றால் சொல். இரட்டைக் கிளவி)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - "எழுதாமறை"யின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

என்பார் அபிராமி பட்டர். 

எழுதாத  ஒன்று எப்படி தலை முறை தலை முறையாக காக்கப் பட்டு வந்திருக்கிறது?

ஒருவர் சொல்லி, மற்றவர் கேட்டு, பின் அவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு  கர்ண   பரம்பரையாக வந்திருக்கிறது. 

நமது வேதங்கள் ரிஷிகளுக்கு கேட்டது.  அவர்கள் கேட்டதை அவர்கள் தங்களுடைய  சீடர்களுக்குச் சொன்னார்கள். பின் அந்த சீடர்கள், தங்களின்  சீடர்களுக்குச் சொன்னார்கள். இப்படி குரு பரம்பரையாக இந்த வேதங்கள்  இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. 

யோசித்துப் பார்த்தால் பிரம்மிப்பாய் இருக்கிறது. 

இவற்றை காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, ஒரு தலை முறையில் இருந்து அடுத்த  தலை முறைக்கு அதை கொண்டு செல்வதற்கென்றே ஒரு சமுதாயமே பாடு பட்டு இருக்கிறது. 

இதில் நடுவில் யாராவது, "எனக்கு வேற நல்ல வேலை இருக்கிறது. இதைப் போய்  எவன் படிப்பான் " என்று ஒரு தலை முறை சொல்லி இருந்தாலும்,  அந்தத் தொடர்பு அறுந்து போய் இருக்கும். அந்த வேதம்  நமக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும். 

இவற்றை காலம்  காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் நாம் நன்றி  சொல்ல கடமை பட்டவர்கள் ஆவோம். 

இப்போது புரிகிறதா ஏன் செவிச் செல்வம் உயர்ந்தது என்று. 

மேலும்,  சில ஒலி அளவுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. 

தமிழில் ஒரு க, ஒரு ப தான் இருக்கிறது. 

ஹிந்தியில், சமஸ்க்ரிதத்தில் மூன்று இருக்கிறது.  மூன்று போதும் என்று யார் சொன்னது?  இந்த மூன்று சப்தங்களுக்கு வெளியேயும், நடுவிலும் ஆயிரம் சப்த்தங்கள் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் ஒரு எழுத்து வடிவம் தர முடியாது.  

சரி, எழுத்து வடிவம்  இல்லாவிட்டால்,   இருக்கின்ற எழுத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா   என்றால், சப்தம் மாறி விடும். சப்தம் மாறினால் பொருள் மாறி  விடும். 

வேதம் உண்மையின் வெளிப்பாடு. அது சப்த ரூபமாக சிலருக்கு கேட்டு அவர்  சொல்லி, அப்படியே வந்திருக்கிறது. 

எனவே, வேதம் என்பது யாரும் உட்கார்ந்து எழுதிய நூல் அல்ல.  

சரி, எதுக்கு இவ்வளவு பெரிய அறிமுகம்? நளவெண்பாவுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்? 

பாடல் கீழே இருக்கிறது.

அதன் பொருளை நாளை பார்ப்போமா?


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_10.html