Wednesday, July 29, 2020

நான்மணிக் கடிகை - உலக இயற்கை

நான்மணிக் கடிகை  - உலக இயற்கை 


கடிகை என்றால் துண்டு. மணி கடிகை என்றால் மணிகள் அமையப்பெற்ற துண்டு. இந்த நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துக்களை அழகாகச் சொல்லுவதால் இது நான் மாணிக்கடிகை என்று பெயர் பெற்றது.

இனிமையான, அனுபவ மொழிகள்.

நமக்கு இப்போது  சில வலிமைகள் இருக்கும். உடல் நன்றாக இருக்கும். ஞாபகம் சரியாக இருக்கும். நம் வேலையை நாமே செய்து கொள்ளக் கூடிய வலு இருக்கும்.

ஆனால், இந்த வலிமை அப்படியே இருக்காது. ஒரு நாள் கட்டாயம் குன்றும். எழுந்திருக்க முடியாமல் போய் விடலாம். நினைவு குறைந்து பல விட்டுப் போகலாம்.

அதை நினைக்க வேண்டும். என்றும் நாம் இதே வலிமையோடு இருப்போம் என்று நினைக்கக் கூடாது.

உடல் வலிமை மட்டும் அல்ல. எல்லா வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

உலகம் அனைத்தையும் ஆண்ட சர்வாதிகாரிகள் எங்கே? அவர்கள் கட்டிய அரசாங்கம் எங்கே? உலகிலேயே பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொண்டிருந்த சில நிறுவனங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

எல்லா வலிமையையும் ஒருநாள் குன்றும்.

அது போல, பிறந்த உயிர்கள் எல்லாம் கட்டாயம் ஒரு நாள் அழியும். சந்தேகமே இல்லை.

அது போல, செல்வம். ஓரிரு தலைமுறைகள் இருக்கும். பின் விட்டுச் சென்று விடும்.  செல்வோம் என்பதால் அது செல்வம்.

இளமை அப்படியே இருக்குமா? இளமை மாறி முதுமை வருவது கட்டாயம்.

இதை எல்லாம் உணர்ந்து என்றும் அறம் செய்ய வேண்டும்.

பாடல்

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவாது
இளமை யிசைந்தாரும் இல்லை - வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.

பொருள்

(click the link below to read further)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_64.html

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம் = பிறந்த உயிர்கள் சாகாமல் இருக்க முடியாது.


தாவாத இல்லை வலிகளும்  = எல்லாம் வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

மூவாது இளமை யிசைந்தாரும் இல்லை = மூப்பு அடையாமல் எப்போதும் இளமையோடு இருப்பவர் யாரும் இல்லை

வளமையிற் கேடுஇன்றிச் சென்றாரும் இல். = செல்வச் செழிப்போடு இருந்தாலும், அந்தச் செல்வம் நீண்ட நாள் நிற்காமல் போய் விடும்.


பிறந்தது இறக்கும், வலிமைகள் குன்றும், இளமை போய் முதுமை வரும், செல்வம் ஒரு நாள் போய் விடும்.

யாக்கை நிலையாமை
இளமை நிலையாமை
செல்வத்தின் நிலையாமை
வலிமையின் நிலையாமை

இந்த நிலையாமைகளைப் பற்றி ஒரே செய்யுளில் சொல்கிறது நான்மணிக் கடிகை.

இந்த நூலில் உள்ள மற்ற பாடல்களையும் படித்துப் பாருங்கள். 

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து 


நாலடியார் என்றால் ஏதோ தத்துவம், அறம் மட்டும் பேசும் நூல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இல்லறம் இனிமையாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும். என்னை பிரிந்து அவள் எப்படி இருப்பாளோ என்று கணவன் நினைக்க வேண்டும். அதே போல் மனைவியும்.

பிரிவு என்பது  அருளிரக்கத்தை தரும் என்பார்கள். "ஐயோ பாவம், அவள் தனியாக எப்படி துன்பப் படுவாளோ" என்று அவள் மேல் இரக்கமும், அதன் காரணமாக அவள் மேல் அருளும் பிறக்குமாம்.

"நான் இல்லாட்டி என்ன, அவ தனியா சமாளிச்சுக்குவா" என்று கணவன் நினைத்தால், பின் பிரிவு என்பதன் அர்த்தம்தான் என்ன?

Independence, equal rights, liberation என்ற பெயரில் மெல்லிய அன்பு உணர்வுகளை சிதைக்க தலைப் பட்டுவிட்டோம். ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்பது என்பது அடிமை தளை என்று நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு, அந்த அடிமை தளையில் இருந்து விடுதலை பெற துடிக்கிறோம்.

அன்புக்கு கட்டுப் படுவதின் சுகம் தெரியாதவர்கள்.

தலைவியை பிரிந்த தலைவன், வேறு ஏதோ ஊரில் இருக்கிறான். தலைவியைப் பற்றி நினைக்கிறான். அவன் மனதில் இரக்கம் பிறக்கிறது.

"பாவம் அவளை தனியே விட்டு விட்டு வந்து  விட்டேன். மாலை நேரத்தில் அவள் என் பிரிவால் மனம் ஏங்கி, கண்ணீர் விட்டு, அந்த கண்ணீரை தன்னுடைய மெல்லிய விரலால் தொட்டு துடைத்து, நான் செய்த இந்த குற்றத்தை நினைத்து, கையை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு வருந்திக் கொண்டு இருப்பாளோ" என்று ஏங்குகிறான்.

பாடல்

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_29.html

செல்சுடர்  = சுடர் என்றால் சூரியன். செல் சுடர், மாலை நேரச் சூரியன். (தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் -பாரதி தாசன்)

நோக்கிச் = அந்த சூரியனைக் கண்டு

சிதரரிக்கண் கொண்டநீர் = சிவந்த கண்களில் வந்த கண்ணீர் சிதற

மெல்விரல் =மெல்லிய விரல்களைக் கொண்ட அவள்

ஊழ்தெறியா =விதி  தெரியாமல்

விம்மித் =விம்மல் கொண்டு

தன் - மெல்விரலின் = தன்னுடைய மெல்லிய விரலின்

நாள்வைத்து =நாட்களை குறித்து

நங்குற்றம் =என்னுடைய குற்றத்தை

எண்ணுங்கொல், = நினைத்து வருந்துவாளோ

அந்தோ = அந்தோ

தன் = தன்னுடைய

தோள்வைத் தணைமேற் கிடந்து. = கையை தலைக்கு தலையணையாகக் கொண்டு

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

புதிதாக மணம் முடித்த பெண். கணவனை பிரிந்து இருக்கிறாள். மெலிந்து, தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து இருக்கிறாள்.

இரவு நேரம் கூட அல்ல. மாலை நேரம்.

சீவி முடித்து, பூ வைத்து, விளக்கு ஏற்றி, அதெல்லாம் அவளுக்குத் தோன்றவிலை. கட்டாந் தரையில் அந்தி சந்தி நேரம் படுத்துக் கிடக்கிறாள்.

கண்ணில் இருந்து நீர் வழிகிறது. விரலால் சுண்டி விடுகிறாள்.

கண்ணீர் நிறைவதால் "ஊழ் தெரியா" என்றார்.

அவள் அப்படி இருப்பாளோ என்னவோ தெரியாது. அப்படி இருப்பாள் என்று  கணவன்  நினைக்கிறான். அவன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது.

என்னால் தானே அவள் துன்பப் படுகிறாள் என்று இவன் வருந்துகிறான்.

தான் குற்றம் செய்து விட்டதாக பழியை தன் மேல் போட்டுக் கொள்கிறான் "நம் குற்றம் எண்ணும் கொல் "என்று நினைக்கிறான்.

அவளுக்கு என்ன, ஜாலியா ஊர் சுத்திட்டு, swiggy ல order பண்ணி சாப்பிட்டுக்கிட்டு இருப்பாள் என்று  நினைத்தால் காதல் வருமா?

மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வருவது அவளின் மெல்லிய விரல்கள்.

அவள் வருந்துவாளே என்று அவன் வருந்துகிறான்.

அது தான் தாம்பத்யம். அது தான் காதல்.


இப்படி மெல்லிய, நுணுக்கமான மனித உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது  நாலடியார்.

இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப் பிடித்து படியுங்கள்.

Tuesday, July 28, 2020

திருக்குறள் - நன்றி மறப்பது நன்றன்று

திருக்குறள் - நன்றி மறப்பது நன்றன்று 


தமிழ் பாடல்களை படித்து புரிந்து கொள்வது என்ன பெரிய கடினமான காரியமா என்று நான் நினைத்தது உண்டு.

எந்தப் பாடலிலும் ஒரு சில கடினமான சொற்கள் இருக்கும். அகராதியில் தேடினால் தெரியாத சொற்களுக்கு பொருள் விளங்கிவிட்டுப் போகிறது.

இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நினைத்தேன்.

அது எவ்வளவு தவறு என்று பரிமேலழகரின் உரையைப் படிக்கும் போது தெரிகிறது.

நாம் சொல்லில் இருந்து பொருளை பிடிக்க நினைக்கிறோம். அவர் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்.

பாடல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

பொருள்

(to continue reading, please click the link below)

interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_50.html

இது என்ன பெரிய சிக்கலான குறளா ? வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வதானால் இப்படி சொல்லி விடலாம்

நன்றி   = ஒருவன் நமக்குச் செய்த நல்லவைகளை

மறப்பது நன்றன்று = மறப்பது நல்லது அல்ல

நன்றல்லது = நன்மை தராதவற்றை

அன்றே மறப்பது நன்று = அன்றே மறப்பது நல்லது

அவ்வளவுதானே. பொதுவான அர்த்தம் அப்படித்தான் என்று நினைப்போம். இதில் என்ன  நுணுக்கமான பொருள் இருந்து விடப் போகிறது என்று நினைத்து  இதை அலட்சியம் செய்து விட்டு அடுத்து குறளுக்கு தாவி விடுவோம்.

பரிமேலழகர் ஒரு உரை சொல்கிறார். எத்தனை ஆயிரம் வருடம் படித்தாலும் அது  என் மர மண்டைக்கு எட்டி இருக்காது.

அது என்ன தெரியுமா?

நமக்கு நல்லது செய்வதும், அல்லாதன செய்வதும் வேறு வேறு ஆள் என்று நினைத்துக் கொண்டு நாம் பொருள் சொல்கிறோம்.

ஒரே ஆள் இரண்டையும் செய்தால்?

இப்படி யோசிக்க முடியுமா நம்மால்?

ஒருவன் நமக்கு நன்மையையும் செய்து இருக்கிறான், தீமையும் செய்து இருக்கிறான். அப்படி இருந்தால், அவன் செய்த நல்லவைகளை மனதில் வைத்துக் கொள் . அவன் செய்த தீமைகளை உடனேயே மறந்து விடு என்கிறார்.

நம்மில் பலருக்கு சிக்கல் என்ன என்றால், நல்லதை மறந்து விடுகிறோம். தீயவற்றை  நினைவில் வைத்துக் கொள்கிறோம்.

பெரும்பாலான கணவன் மனைவி சிக்கல் ஏன் வருகிறது.

என்றோ எப்போதோ நடந்த ஒன்றை ஞாபகம் வைத்துக் கொண்டு,  நீங்கள் அன்று அப்படி சொன்னீர்களே, அப்படிச் செய்தீர்களே என்று அந்த ஒரு நல்லன அல்லாதாதை  ஆயுள் முடியும் வரை மனதில் வைத்து கொண்டு சொல்லிக் சொல்லி காட்டிக் கொண்டே இருப்பது.

கணவன் எவ்வளவு நல்லது செய்து இருந்தாலும், எல்லாவற்றையும் மறந்து விட்டு, என்றோ சொன்ன ஒன்றை ஞாபகம் வைத்து மறக்காமல் சொல்வது.

நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரும் நமக்கு ஏதோ ஒரு நன்மை செய்து இருப்பார்கள். அறிந்தோ அறியாமலோ சில தீமைகளும் செய்து இருக்கலாம்.

தீமையை மறந்து, நல்லதை மட்டும் மனதில் வைத்து இருந்தால் வாழ்க்கை எவ்வளவு சுகமாக இருக்கும்? உறவுகள் எவ்வளவு இனிமையாக இருக்கும்.

ஒருவன் நமக்கு ஒரு தீமை செய்தால், அதை எப்படி மறக்க முடியும்? வள்ளுவர் சொல்லுவார். அவருக்கு என்ன.

இன்னும் சொல்லப் போனால், தீமை மட்டும் தான் ஆழமாக ஞாபகம் இருக்கிறது.

இந்த மனுஷன் திருவள்ளுவர், இப்படி ஒரு கேள்வி வரும் என்று நினைத்து, அதற்கும் பதில் சொல்லிவிட்டு   போய் இருக்கிறார்.

மறப்பது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு?

எவ்வளவு யோசித்தாலும் கண்டு பிடிக்க முடியாது. திருவள்ளுவர் ஒருவரால் தான்  அப்படி யோசித்து சொல்ல முடியும்.

மறப்பது எப்படி என்று வள்ளுவர் சொன்னதை நாளை சிந்திப்போமா ...



Monday, July 27, 2020

நாலடியார் - எதைக் கற்பது ?

நாலடியார் - எதைக் கற்பது ?


உலகத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியுமா?  அதுவும் நன்றாக இருக்கிறது, இதுவும் சுவாரசியமாக இருக்கிறது, அது பயனுள்ளதாக இருக்கும், இது ஆன்மீகத்துக்கு உரிய நூல் என்று அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது.

சரி, ஏதோ ஒன்றை படிக்கலாம் என்று உட்கார்ந்தால் , "டொய்ங்" என்று whatsapp சத்தம். என்ன தான் வந்திருக்கிறது என்றுர் பார்ப்போம் என்று மனம் அதன் பின்னே போகிறது. பார்த்தால் அதோடு நிற்குமா மனம்? அதுக்கு ஒரு பதில் போடுவது. நாம் போட்டால் மற்றவன் சும்மா இருப்பானா? அவன் பதிலுக்கு ஒன்று சொல்லுவான். இப்படி கொஞ்ச நேரம் போகிறது.

சரி, அதை எல்லாம் முடித்து விட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,இந்த செய்திகளை கொஞ்சம் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று மனம் போகிறது.  கொரோனா என்ன ஆச்சோ, கிரிக்கட் மேட்ச் எப்படி வருமோ, தங்கம் விலை என்ன ஆயிற்றோ என்று கவலை. சரி அதை எல்லாம் பார்த்துட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,

இந்த hotmail / gmail ஒருக்க சீக்கிரம் பாத்ருவோம் என்று மனம் போகிறது.

அப்புறம், இந்த facebook update கொஞ்சம் பாக்கணும்.

இது உருப்படுமா?



நாலடியார் சொல்கிறது....

"கல்விக்கு கரை இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் சொற்பமானது. அதிலும் பல நாட்கள் நோயில் போய் விடுகிறது. எனவே, ஆராய்ந்து, தெளிந்து சிறந்தவனவற்றையே படிக்க வேண்டும். எப்படி என்றால், நீரும் பாலும் கலந்து இருந்தாலும், நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னம் போல."

பாடல்

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_34.html

பொருள்

கல்வி கரையில = கல்வி கரை காண முடியாதது. நாலடியார் காலத்திலேயே அப்படி என்றால், இப்போது எவ்வளவு வளர்ச்சி நிகழ்ந்து இருக்கிறது?

கற்பவர் நாள்சில; = கற்றுக் கொள்ள நினைப்பவர்களின் நாடுகளோ வெகு சில.


மெல்ல நினைக்கின்  = ஆராய்ந்து பார்த்தால்

பிணிபல = நோய் பல.உடல் நோயும், மன நோயும்.

தெள்ளிதின் =  தெளிந்து

ஆராய்ந்து =ஆராய்ந்து

அமைவுடைய = பொருத்தமானவற்றை

கற்பவே = கற்க வேண்டும்

நீரொழியப் = நீரை நீக்கி

பாலுண் = பாலை மட்டும் உண்ணும்

குருகின் தெரிந்து. = அன்னப் பறவையைப் போல

வாசிக்கின்ற ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க வேண்டும். நான் இப்போது வாசிப்பது எனக்கு  எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்று.

தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும், மறுமைக்கும் அறம் பொருள் இன்பம் என்றான பலன்களை தராத நூல்களை ஒரு போதும் படிக்கக் கூடாது.

என்ன ? சரியா?



கம்ப இராமாயணம் - பெண் எனும் மென்மை

கம்ப இராமாயணம் - பெண் எனும் மென்மை 


கார் காலம் முடிந்த பின் சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து போனான். அவனுக்கு, அதை நினைவு படுத்த இலக்குவனை இராமன் அனுப்புகிறான்.

கோபத்தோடு வருகிறான் இலக்குவன்.

என்ன செய்வது என்று அறியாமல் வானரங்கள் சிதறி ஓடுகின்றன.

அனுமன் ஒரு உபாயம் செய்து, இலக்குவன் முன் தாரையை அனுப்புகிறான்.

ஒரு ஆண் எவ்வளவு முரடனாக, வலிமையானவனாக இருந்தாலும், ஒரு பெண்ணின் முன் அவன் கோபம், வீரம், ஆத்திரம் எல்லாம் அடங்கி விடுகிறது.  அதுதான் பெண்ணின் பெருமை.

ஆனால் அதை எல்லாம் இப்போது எதிர் பார்க்க முடியாது.

உனக்கு கோபம் வந்தால் பொய் சுவற்றில் முட்டிக் கொள் என்கிறார்கள். உனக்கு மட்டும் தான் வலிமையா, என் biceps ஐ பார் என்று முட்டியை மடக்குகிறாரகள்.

தவறில்லை.

பெண் வடிவில் பிறந்து விட்டதற்காக பெண்மை குணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சில ஆண்கள், பெண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.

சில பெண்கள், ஆண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.

நானும் துப்பாக்கி சுடுவேன், மல் யுத்தம் செய்வேன், கயிறு கட்டி மரத்தில் ஏறுவேன்  என்று தங்கள் பெண்மையின் மென்மையை சிதைத்துக் கொண்டு ஒரு கூட்டம்  அலைகிறது.

பின் ஏன் ஓரினச் சேர்க்கை என்பது வராது?

இங்கே இரண்டு பால் எங்கே இருக்கிறது ?

ஆண்கள் இருக்கிறார்கள். ஆண்களாக வேண்டும் முயற்சி செய்யும் பெண்கள் இருக்கிறார்கள்.

பெண்ணாக இருப்பதில் பெண்ணுக்கு சந்தோஷம் இல்லை. தானும் ஒரு ஆண் போன்றவள் என்று நிலை நிறுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. அந்த எண்ணமே, முயற்சியே சொல்கிறது அந்தப் பெண் ,  ஆண் என்பவன் தன்னை  விட உயர்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு விட்டதை. இல்லை என்றா எதற்கு இத்தனை   பாடுபட வேண்டும்? தன்னை விட தாழ்ந்த ஒன்றாக மாற யார் விரும்புவார்கள்?

தாரை வந்து எதிரில் நிற்கிறாள்.

இலக்குவன் வெட்கப் படுகிறான். சங்கடப் படுகிறான். தலை கவிழ்ந்து நிற்கிறான்.  அவன் கால்கள் பலவீனமாகி விட்டன. கீழே விழுந்து விடமால் இருக்க கையில் உள்ள வில்லை தரையில் அழுத்தமாக ஊன்றி , அதைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். மாமியார் முன்னால் நிற்கும்  மருமகனைப் போல வெட்கி நிற்கிறான்.     அப்போது தோழிகள் மத்தியில் இருந்து வெளிப்பட்டு தாரை சொல்கிறாள் ....

பாடல்                       


தாமரை வதனம் சாய்த்து,
    தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
    ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
    பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
    நடுங்குவாள், இனைய சொன்னாள்.


பொருள்

(to continue reading, pleae click the link below)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_27.html

தாமரை = தாமரை போன்ற

வதனம்  = முகத்தை

சாய்த்து, = மெல்ல சாய்ந்து

தனு = வில்

நெடுந் தரையின் ஊன்றி, = நீண்ட பூமியில் ஊன்றி

மாமியர்  குழுவின் = மாமியார்கள் உள்ள குழுவின் முன்

வந்தான் = இலக்குவன் வந்தான். அந்தக் காலத்தில் மருமகன் முன் மாமியார்கள் வரமாட்டார்கள். இப்போதெல்லாம் மருமகன் கூட பைக்கில் மாமியார்கள் போகிறார்கள்.

ஆம் என = என்பதைப் போல

மைந்தன் நிற்ப, = இலக்குவன் நிற்க


பூமியில் = பூமியில்

அணங்கு அனார்தம் = தேவதைகளைப் போல உள்ள பெண்கள்

பொது இடைப் புகுந்து = மத்தியில் இருந்து புறப்பட்டு

பொன்தோள் = பொன்னைப் போன்ற தோள்களை உடைய

தூமன = தூய்மையான மனதைக் கொண்ட

நெடுங்கண் தாரை, = நீண்ட கண்களைக் கொண்ட

நடுங்குவாள் = நடுக்கம் கொண்டவளாக

, இனைய சொன்னாள். = இவற்றைச் சொன்னாள்

தாரையைக் கண்டவுடன் , இலக்குவனின் கோபம் மறைந்து விட்டது. அது தான் பெண்ணின் மகத்துவம். அதாவது பெண்ணாக இருக்கும் பெண்களின் மகத்துவம்.






Thursday, July 23, 2020

கம்ப இராமாயணம் - தவறுகளும் பிராயச்சித்தங்களும்

கம்ப இராமாயணம் - தவறுகளும் பிராயச்சித்தங்களும் 


தவறு செய்வது மனித இயல்பு. தவறே செய்யாத மனிதன் எங்கும் இல்லை.

தவறு செய்து விட்டால், அது தவறு என்று உணர்ந்து விட்டால், அதில் இருந்து எப்படி வெளிப்படுவது?

செய்த தவறு உறுத்திக் கொண்டே இருக்கும். ஐயோ, அப்படி செய்து விட்டோமே , இப்படிச் சொல்லி விட்டோமே,  அப்படி செய்து இருக்கக் கூடாது என்றெல்லாம் மனம் கிடந்து உழலும்.

இதில் இருந்து வெளி வர வழி சொல்ல வேண்டும். இல்லை என்றால் இரண்டு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

முதலாவது, அதிலேயே அழுந்தி மனிதன் மன அழுத்தம் காரணமாக, மன நோயாளியாகப் போய் விடலாம். குற்ற உணர்வு ஒரு புறம் அழுத்த, மறு புறம் மனசாட்சி உறுத்த, வெளியே சொல்ல முடியாமல் உள்ளேயே புழுங்கி மனிதன் மன நோயாளியாக மாறி விடலாம்.

இரண்டாவது, சரி, தவறு செய்தது செய்தாகி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி, செய்த தவறுக்கு ஞாயம் கற்பித்து மேலும் மேலும் அதையே செய்து கொண்டிருப்பான்.

இரண்டுமே தவறான முடிவு.

எனவே, இதில் இருந்து வெளிவர ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கின்றன.

பாவ மன்னிப்பு, புனித நீராடல், புனித இடங்களுக்குச் செல்லுவது, தானம் செய்வது, என்று எவ்வளவோ பிராயச்சித்தங்கள் சொல்கின்றன.

காசிக்குப் போனால், கங்கையில் நீராடினால் அது வரை செய்த பாவம் எல்லாம் போய் விடும்  என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.

எல்லா பாவத்துக்கும் ஒரு பிராயச்சித்தம் இருக்கிறது - ஒரே ஒரு பாவத்தைத் தவிர.

அது பாவத்தில் அனைத்திலும் கொடுமையான பாவம் ஆகும் என்பது நம் முன்னோர் முடிவு.

அது என்னவாக இருக்கும்?

மழைக் காலம் முடிந்த பின் சீதையைத் தேடித் தருவதாக இராமனிடம்  வாக்களித்து விட்டு சென்றான்  சுக்ரீவன்.  மழைக் காலம் முடிந்தும் வரவில்லை. கோபம் கொண்டு இலக்குவன் போகிறான்.

மிகவும் சுவையான பல பாடல்கள் உள்ள இடம்.

அப்போது அங்கு வந்த அனுமனிடம் இலக்குவன் கேட்கிறான்...."நீயுமா  செய் நன்றி  மறந்தாய்" என்று.

அப்போது அனுமன் கூறுவான்


"பெற்றோரை, ஆசிரியரை, தெய்வம் போல் போற்றத்தக்க அந்தணர்களை, பசுவை, குழந்தைகளை, பெண்களை கொன்றவர்களுக்குக் கூட உய்வு உண்டு. ஆனால், செய் நன்றி மறந்தவர்களுக்கு ஒரு உய்வும் இல்லை" என்பதை நான் அறிவேன்.எனவே , நான் செய் நன்றி மறக்கமாட்டேன் என்று உணர்த்துகிறான்.

பாடல்


'சிதைவு அகல் காதல் தாயை,
      தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை,
      பாலரை, பாவைமாரை,
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
      ஆம் ஆற்றல்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
      ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?'


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_23.html

'சிதைவு அகல் = குற்றம் அகற்றிய

காதல் = அன்புள்ள

தாயை = தாயை

தந்தையை = தந்தையை

குருவை = குருவை

தெய்வப் பதவி அந்தணரை = தெய்வம் போல போற்றத்தக்க அந்தணர்களை

ஆவை, = பசுவை

பாலரை = குழந்தைகளை

பாவைமாரை, = பெண்களை

வதை புரிகுநர்க்கும் = கொன்றவர்களுக்கு

உண்டாம் = உண்டு

மாற்றல் ஆற்றல் =  அந்த பாவத்தில் இருந்து தப்பிக்க ஒரு மாற்று வழி உண்டு

மாயா = அழியாத

உதவி கொன்றார்க்கு = செய்த உதவியை மறந்தவர்க்கு

ஒன்றானும் = ஒருவழியிலும்

ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?' = அதை மறைக்க ஒரு வழி உண்டோ? (இல்லை என்பது பொருள் )

எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு

என்பது பொய்யா மொழி


நன்றி மறந்தால் என்றால் யார், யாருக்குச் செய்த நன்றி என்ற கேள்வி வரும்.

அது பற்றி ஆராய முற்பட்டால் பிளாக் நீண்டு விடும்.

செய் நன்றி கொன்ற குற்றத்தை முதல் குற்றமாக வைக்கிறார்கள் நம் முன்னவர்கள்.

மனித மனம் மறக்கும் இயல்பு   உடையது.

எனவே, இதுவரை பெற்ற நன்றிகளை ஒரு பட்டியல்  போடுங்கள்.  இனி பெருபவற்றையும்  குறித்துக் கொள்ளுங்கள்.

நன்றி மறவாமல் இருப்போம்.



Wednesday, July 22, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம் 


சில பேர் அதைச் செய், இப்படிச் செய் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள். தங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க மாட்டார்கள்.

குலசேகர ஆழ்வார், ஒரு நாட்டின் அரசராக இருந்தவர். ஆன்மீக பக்குவம் வர, அரச போகங்களை துறந்து விட்டு ஆன்மீகத்தில் இறங்கி விட்டார்.

ஒரு அரசனாக இருந்தவன், ஆன்மீகத்தில் வருவது என்பது கடினமான காரியம்.

அரசன் என்ற அந்தத் திமிர், ஆணவம், கோவம், ஆசை, வேகம் எல்லாம் இருக்கும். பக்திக்கு அது ஒன்றுமே ஆகாது.

எப்படியோ நிகழ்ந்த இரசவாதம்.

நமக்கு இன்பம் வந்த போது, எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைக்கிறோம். என் உழைப்பு, என் அறிவு, என் திறமை இந்த வேலை கிடைத்தது, இந்த பதவி கிடைத்தது, இந்த இலாபம் கிடைத்தது என்று மகிழ்கிறோம்.

துன்பம் வரும் போது ? கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய், இந்தத் துன்பத்தில் இருந்து என்னை காப்பாற்று, என்று இறைவனை நோக்கி ஓடுகிறோம்.

ஆழ்வார் பார்க்கிறார். உலகில் பல பேர், இறைவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டதாக , சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது அவருக்கு.

உலகில் உள்ளவர்களை பார்த்துச் சொல்கிறார், "நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும், மீண்டும் இங்கு தான் வர வேண்டும்" என்று.

மேலும்,  ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் கூட, துன்பம் வந்தால், இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா,  இந்த ஆன்மா, பக்தி, இறைவன் என்பது எல்லாம் பொய் தானோ  என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கும்   அவர் சொல்கிறார் "தினம் வரும் போது நீங்கள் ஆண்டவனை விட்டு  விலகிப் போனாலும், மீண்டும் இங்கே தான் வர வேண்டும்" என்று.

அதை ஒரு உதாரணத்தில் விளக்குகிறார்.

அது ஒரு பெரிய கப்பல். அந்தக் கப்பலின் கொடி மரத்தில் சில பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. கப்பல் நங்கூரம் எடுத்து கடலில் செல்லத் தொடங்கி விட்டது. கொஞ்ச தூரம் சென்ற பின், மாலுமிகள் கப்பலின் பாய் மரத்தை மாற்ற வேண்டி  கொடி கம்பத்தைப் பார்க்கிறார்கள். அங்கே பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டுகிறார்கள்.

அந்தப் பறவைகளும் சிறகடித்து பறந்து போய் விடுகின்றன. போனால், எங்கு பார்த்தாலும் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் தான். எங்கு போகும் அந்தப் பறவைகள். மீண்டும் அந்தப் கப்பலுக்கே திரும்பி வந்து விடுகின்றன.

அது போல, இறைவா, நீ என்னை எவ்வளவு தான் துன்பம் தந்து என்னை அடித்து விரட்டினாலும், எனக்கு போவதற்கு ஒரு இடமும் இல்லை. நான் உன்னிடம்தான் வருவேன்  என்கிறார்.

பாடல்


வெங்கண்தின் களிற்டர்த்தாய்
          விற்றுவக் கோட்டம்மானே
     எங்கு போ யுய்கேனுன்
          இணையடியே யடையலல்லால்
     எங்கும் போய்க் கரை காணா
          தெறிகடல் வாய் மீண்டேயும்
     வங்கத்தின் கூம்பேறும்
          மாப்பறவை போன்றேனே
           (692) பெருமாள் திருமொழி 5 - 5


பொருள்

(click the link below to  continue reading....)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/108.html

வெங் = வெம்மையான
கண் = கண்களைக் கொண்ட
தின் = திடமான
களிற்டர்த்தாய் = களிற்றை + அடர்ந்தாய் = களிறு என்றால் யானை. அடர்தல் சண்டை போடுதல். குவாலயபீடம் என்ற யானையை கண்ணன் சண்டையிட்டு கொன்றான்

விற்றுவக் கோட்டம்மானே = வித்துவக்கோடு என்ற இடத்தில் உள்ள என் அம்மானே

எங்கு போ யுய்கேனுன் = எங்கு போய் பிழைப்பேன்

இணையடியே = உன்னுடைய இரண்டு திருவடிகளே

யடையலல்லால் = அடைக்கலம் அல்லாமல்

எங்கும் போய்க்  = எங்கு போனாலும்

கரை காணா = கரையை காணாத

தெறிகடல் வாய்  = அலைகள் தெறிக்கும் கடலின் நடுவே

மீண்டேயும் = மீண்டும் வரும்

வங்கத்தின் = கப்பலின்

கூம்பேறும் = கூம்பில் ஏறும். கொடி மரத்தில் ஏறும்

மாப்பறவை போன்றேனே = பெரிய பறவை போன்று இருந்தேனே

அவர்  சொல்வது அவரை மட்டும் அல்ல. நம்மையும் சேர்த்துதான்.

பிறவி என்ற கடலில் விழுந்து விட்டோம். எங்கும் தண்ணீர். எங்கு  போவது?

அவன் திருவடிகளே தெப்பம் என்று பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

துன்பம் வரும். அதற்காக தெப்பத்தை விட்டு விடக் கூடாது.

இந்தப் பாடல் 108  திவ்ய தேசங்களில் ஒன்றான திரு வித்துவகோடு என்ற தலத்தில் மங்களா சாசனம் செய்யப் பட்டது.

இது போல 10 பாசுரங்கள் பாடி இருக்கிறார். மூல நூலை தேடிப் படியுங்கள்.

கண்ணில் நீர் பணிக்கும் பாசுரங்கள்.

படித்துப் பாருங்கள். விழி ஓரம் நீர் திரளவில்லை என்றால் மூடி வைத்து விடுங்கள். அதைப் படிக்க உங்களுக்கு நேரம் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

சரி, அந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது?

கேரளாவில், பாலக்காடு என்ற இடத்துக்கு அருகில் உள்ளது.

பாலக்காட்டில் இருந்து பட்டாம்பி போய்விட்டால், அங்கிருந்து பக்கம்.

பட்டாம்பி வரை இரயில் இருக்கிறது. அங்கிருந்து சுமார் 2  கிமி தான்.

பஞ்ச பாண்டவர்கள் சிலை அமைத்து பூஜித்த தலம் என்று சொல்கிறார்கள்.

சிவனுக்கும், திருமாலுக்கும் ஒரே இடத்தில் கோவில். இது போல 10 திவ்ய தேசங்கள் இருக்கிறதாம்.

கேரளா பாணியும் , தமிழ் பாணியும் கலந்து நிற்கும் தலம்.


பெருமாள் - உய்ய வந்த பெருமாள்.
தாயார் - வித்துவ கோட்டு வல்லி



இந்த வைரஸ் பிரச்சனை எல்லாம் முடியட்டும்.

ஒரு நடை இந்த கோவிலுக்கு போய் விட்டு வரலாம்.