Saturday, September 19, 2020

கம்ப இராமாயணம் - மதம் கொண்ட யானை புகுந்த வயல்

கம்ப இராமாயணம்  - மதம் கொண்ட யானை புகுந்த வயல் 


காதல், அன்பு, கோபம், சகோதர பாசம், பெற்றோர் பிள்ளை பாசம், இயற்கை வர்ணனை இவற்றை எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியும். அது பற்றி கவிதை எழுதுவது என்பது வேறு விஷயம். நம்மால் அவற்றை கற்பனை செய்து பார்க்க முடியும். 


போர், போர் களம், அங்கு நடக்கும் போர் முறை, இவற்றை எப்படி கற்பனை செய்வது? 

பார்த்திருந்தால் கற்பனை செய்யலாம். அல்லது சண்டையிட்டு இருந்தால் அது பற்றி சிந்திக்க முடியும். 

கம்பனில் போர் களம் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. 

இராவணினன் தம்பி கும்ப கர்ணன் இறந்து போகிறான். அடுத்து இராவணனின் மகன் அதிகாயன் போருக்கு வருகிறான். 

போர் களத்தைப் பார்த்து மனம் நொந்து போகிறான். 

ஒரு மதம் கொண்ட யானை நெல் வயலில் புகுந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாதாம். 

இராமன் என்ற மத யானை விளையாடிய போர்க் களம் பற்றிய கம்பனின் உவமை அது. 


பாடல் 


கண்டான் அ(வ்) இராமன் எனும் களிமா
உண்டாடிய வெங்களன்; ஊடுருவ
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன் வந்த சினத் திறலோன்.


பொருள் 

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_19.html


கண்டான் = அதிகாயன் கண்டான் 

அ(வ்) = அந்த 

இராமன் எனும் = இராமன் என்ற 

களிமா = மதம் கொண்ட யானை 

உண்டாடிய = உண்டு + ஆடிய = உயிர்களை உண்டு ஆடிய 

வெங்களன்; = போர்க்களம் 

ஊடுருவ = ஊடுருவிப் பார்த்தான் 

புண்தான் = மனதில் காயம் உண்டாக 

உறு நெஞ்சு புழுக்கம் உறத் = பெரிய மனம் புழுங்கி 

திண்டாடினன் = திண்டாடினான் 

வந்த சினத் திறலோன். = அங்கு வந்த சினமும், திறமையும் கொண்ட அதிகாயன் 

மதம் கொண்ட யானை, நெல் வயலில் புகுந்து, அங்குள்ள நெல்லை எல்லாம் பறித்து வீசி, உண்டால் அந்த நெல் வயல் எப்படி இருக்குமோ அப்படி இருந்ததாம்  போர்க்களம். 

இன்னும் கம்பன் வர்ணிப்பான். 

Friday, September 18, 2020

வில்லி பாரதம் - கண்ணன் அழுத இடம்

வில்லி பாரதம் - கண்ணன் அழுத இடம் 


உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. 

அது எந்த இடம் தெரியுமா?


கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். 


கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான். 


அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா" என்று வேண்டினான். 

கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. 

கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான். கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.

கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். 

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 


"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தான். 


பாடல் 

மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர் உகந்து உகந்து,  அவனைக்

கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை நீர் ஆட்டி,

'எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி,

முத்தியும் பெறுதி முடிவில்' என்று உரைத்தான்-மூவரும் ஒருவனாம் மூர்த்தி.


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_18.html


மைத்துனன் = தனது அத்தை மகனான கர்ணன் 

உரைத்த = சொல்லிய 

வாய்மை = உண்மையான வார்த்தைகளைக் 

கேட்டு = கேட்டு 

ஐயன் = கண்ணன் 

மன மலர் உகந்து உகந்து = மலர் போன்ற மனம் மகிழ்ந்து 

அவனைக் = கர்ணனனை 

கைத்தல மலரால் = மலர் போன்ற தன் கைகளால் 

மார்புறத் தழுவி = மார்போடு தழுவிக் கொண்டு 

கண் மலர்க் = மலர் போன்ற கண்களில் இருந்து 

கருணை நீர் ஆட்டி = வழிந்த கருணை என்ற கண்ணீரால் அவனை நனைத்து 

'எத்தனை பிறவி எடுக்கினும் = எத்தனை பிறவி எடுத்தாலும் 

அவற்றுள் = அந்தப் பிறவிகளில் 

ஈகையும் = தானம் செய்து 

செல்வமும் எய்தி, = செல்வம் பெற்று 

முத்தியும் பெறுதி முடிவில்' = முடிவில் முக்தியும் பெறுவாய் 

என்று உரைத்தான் = என்று கூறினான் 

மூவரும் ஒருவனாம் மூர்த்தி. = மூன்று பேரும் ஒன்றாய் நின்ற மூர்த்தி. 

இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 

கர்ணன் இறைவனை காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை. 

இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வ ரூப தரிசனம் தந்தான்.  அவனை கட்டி அணைத்துக்  கொண்டான்.  கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான். 

இறைவனை தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மை கட்டி அணைத்துக் கொள்வான். 

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான். 

எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.

உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார். 

ஈகை எவ்வளவு பெரிய விஷயம் !

Thursday, September 17, 2020

திருக்குறள் - பொய் சொல்லணும்

 திருக்குறள் - பொய் சொல்லணும் 

சில பேர் ரொம்ப ஞாயவானாக இருப்பார்கள். எப்போதும் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடுவது.  அதில் ஒரு பெருமையும் கொள்வார்கள். 

அது யாராக இருந்தாலும் சரி. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசி விடுவது அவர்கள் வழக்கம்.

அது சரி அல்ல என்கிறார் வள்ளுவர். 

சில இடத்தில் பொய் சொல்ல வேண்டும்.  அப்போது தான் நல்லது என்கிறார் அவர். 

என்னது, வள்ளுவர் பொய் சொல்லச் சொன்னாரா?  அறத்துப் பால் எழுதிய வள்ளுவரா அப்படிச் சொன்னார்? இருக்கவே இருக்காது என்று நினைப்பீர்கள். 

கணவன் மனைவி உறவில் போய் சொல்லலாம் என்கிறார். 

உடனே,  மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு சின்ன வீடு வைத்துக் கொள்ளலாம் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. 

வள்ளுவர் சொல்லுவது, பாராட்டுவதில் பொய் சொல்லலாம் என்கிறார். 

அதற்கு அவர் வைத்த பெயர் "நலம் புனைந்து உரைத்தல்"

நல்லதை கொஞ்சம் கற்பனை கலந்து சொல்லுதல். 

உதாரணமாக,

மனைவி அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும், "எனக்கு நீ தாண்டி இரதி"  என்று சொல்ல வேண்டும். "அந்த ஒரு தெத்துப் பல்லு இருக்கே, அது தான் உனக்குஅழகு" என்று சொல்ல வேண்டும், அது அழகாக இல்லாவிட்டாலும். 

அது போல கணவன் பெரிய திறமைசாலியாக இல்லாவிட்டாலும், மனைவி  கணவனை புகழ வேண்டும்.  "இந்த வீட்டுக்காக நீங்க எவ்வளவு பாடு படுறீங்க...பாவம்" என்று அவன் மேல் பரிவு கொள்ள வேண்டும். "ஆமா, என்னத்த பெருசா கிழிச்சுடீங்க...அவனவன் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறான்...இங்க ஒரு கார்/நகை/வீடு வாங்க வக்கில்லை" என்று சொல்லக் கூடாது. அது உண்மையாகவே இருந்தாலும். 

"நீ ரொம்ப வெயிட் போட்டுட்ட...வர வர உன் சமையல் வாயில வக்க விளங்கல" என்றெல்லாம் பேசுவது கூடாது. 

நலம் புனைந்து உரைத்தல் என்ற அதிகாரத்தில் பத்து குறள் இருக்கிறது. 

அதில் முதல் குறள் 


பாடல் 

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_17.html


நன்னீரை  = நல்ல குணங்களை உடைய 

வாழி  = நீ வாழ்க 

அனிச்சமே = அனிச்ச மலரே 

நின்னினும் = உன்னை விட 

மென்னீரள் = மென்மையான இயல்பு உடையவள் 

யாம்வீழ் பவள் = என் காதலி / என் மனைவி 

அனிச்ச மலரே, என் மனைவி உன்னை விட மென்மையானவள்.

அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் இயல்பு  கொண்டது. அவ்வளவு மென்மையானது. 

ஒரு பெண்ணும் அவ்வளவு மென்மையாக இருக்க முடியாது. 

இருந்தும், அவன் சொல்கிறான்...என் மனைவி/காதலி உன்னை விட மென்மையானவள் என்று. 

சும்மா. பொய் தான். 


அந்த பொய் தான் உறவை பலப்படுத்தும்.  அதைக் கேட்ட அவள் வெட்கப் படுவாள். பெண் வெட்கப் பட்டால், அது ஒரு அழகு.

அது மட்டும் அல்ல.  அதற்கு பின்னால், ஒரு மனோ தத்துவமும் அடங்கி இருக்கிறது. 

அவள் ஏதோ ஒரு உடை, அல்லது நகை அணிந்த போது  பாராட்டினால், "அட...அவர்  இதை எல்லாம் கவனிக்கிறாரா..." என்று தன்னை அழகு படுத்திக் கொள்வதில்  மேலும் ஆர்வம் காட்டுவாள்.  சமையலில் இன்னும்  ஈடுபாடு  அதிகம் ஆகும். 

இல்லை என்றால், "என்ன செஞ்சு என்ன...ஒரு வார்த்தை சொல்றது கிடையாது...செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாட்டாலும் ஒண்ணு தான் " என்று  ஒரு சலிப்பு வந்து விடும். 

பாராட்டு ஒரு ஊக்கம் தரும். சலிப்பை போக்கும். உறவை பலப்படுத்தும். 

பொய் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்காதீர்கள். 

கணவனையோ, மனைவியையோ பாராட்டி (பொய்யாக இருந்தாலும்) சொல்லிப் பாருங்கள்.  வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரியும். 



Monday, September 14, 2020

திருக்குறள் - பொய் தீர் ஒழுக்க நெறி

திருக்குறள்   - பொய் தீர் ஒழுக்க நெறி 

இலக்கியம் படிக்க இலக்கணம் இன்றி அமையாதது. இலக்கணம் தெரிந்தால் இலக்கியத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதை நுணுக்கமாக இரசிக்க முடியும். இல்லை என்றால்  ஂமேல் எழுந்த வாரியாக வாசிக்கத்தான் முடியும். இலக்கணம் தெரியாவிட்டால் சில சமயம் தவறான அர்த்தம் கூட வந்து விடும்.

பாடல்
 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_14.html

பொறி = கண் மூக்கு வாய் செவி உடல் என்ற ஐந்து பொறிகள்

வாயில் = வழியாக

ஐந்து = ஐந்து விதமான புலன்கள் வழியாக செல்லும் அவாவினை  (சுவை,

ஒளி,ஊறு , ஓசை, நாற்றம்)

அவித்தான் = அடக்கியவன்

பொய்தீர்= பொய்மை தீர்ந்த

ஒழுக்க நெறி = ஒழுக்கமான வழியில்

நின்றார் = வாழ்பவர்

நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்

ஐந்து புலன்கள் வழியாக செல்லும் ஆசைகளை அடக்கியவனின் ஒழுக்கமான வழியில் நிற்பவர் நீண்ட நாள் வாழ்வார். 

ஆசை ஒன்றா அல்லது பலதா?

நல்ல உணவை கண்டால் உண்ண வேண்டும் என்ற ஆசை, நல்ல இடங்களை பார்த்தால் அங்கு  போக வேண்டும் என்ற ஆசை, இப்படி ஆசை பலவிதமாக  இருக்கிறதே என்றால் இல்லை.

ஆசை என்பது ஒன்றுதான். அது வெவ்வேறு புலன்கள் வழியாக வெவ்வேறு விதமாக  வெளிப்படுகிறது. அவ்வளவுதான். 

ஐந்து புலன்கள் என்பதால் ஐந்து ஆசை என்பது இல்லை. ஒரே ஆசை ஐந்து விதமாக வெளிப்படுகிறது. 

சரி. 

 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி
என்பதில்  

"பொறிவாயில் ஐந்தவித்தான்" " பொய்தீர் ஒழுக்க நெறி"

என்ற இரண்டு சொல் தொடர்கள் இருக்கின்றன. 

ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே.

ஐந்து அவித்தான் ஒரு பக்கம். ஒழுக்க நெறி இன்னொரு பக்கம். இதை எப்படி பொருள் கொள்வது?

இங்குதான் இலக்கணம் நமக்கு உதவி செய்யும். 

கிழமை என்றால் உரிமை என்று பொருள். 

முருகனை குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லுவார்கள். குறிஞ்சி நிலத்துக்கு  உரியவன், தலைவன் என்று பொருள். 

ஞாயிற்றுக் கிழமை என்றால் சூரியனுக்கு உகந்த கிழமை, சூரியனுக்கு உரிய கிழமை.

அதே போல் செவ்வாய், புதன், சனி என்று பொருள் கொள்க. 

இந்த கிழமை என்பது மூன்று வகைப்படும்.

தற் கிழமை 
பிறிதின் கிழமை 
செய்யுட் கிழமை 

என்று மூன்று விதமான கிழமைப் பொருள்கள் உண்டு. 

அது என்ன?

என்னுடைய கை என்று நான் சொன்னால், அது என்னுடையதுதான். அது ஒரு போதும்  மற்றவரின் பொருளாக ஆகாது. எனவே அது தற் கிழமை. 

என் பணம் என்று சொன்னால். என்னிடம் இருக்கும் வரை அது என் பணம்.  என்னை விட்டு சென்று விட்டால் அது மற்றவர் பணம். எனவே அது பிறிதின் கிழமை. 

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 

இதை இரண்டையும் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும் என்று.

யோசித்து இருக்கிறார்கள். அதற்கு ஒரு இலக்கணமும் எழுதி இருக்கிறார்கள். 

அது தான் செய்யுட் கிழமை என்பது. 

திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார். அந்தப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இருக்கிறது என்பதற்காக அது நான் எழுதியது என்று ஆகி விடுமா?  யாரிடம் அது போனாலும், அது திருவள்ளுவர் எழுதியதுதான். அது அவருடையது தான். 

அதாவது, அதை அவர் செய்தார். என்னவே அது அவருடைய உடமை. செய்ததால் வந்த  உரிமை செய்யுட் கிழமை.

மனைவி நினைக்கிறாள் கணவன் தன் உரிமை என்று. 

தாய் நினைக்கிறாள், அவன் செய்யுட் கிழமை என்று. என் பிள்ளையை அவள் கொண்டு போய் விட்டாள் . என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை. செய்யுட் கிழமை. 

சரி, குறளுக்கு வருவோம். 

திருவள்ளுவரது குறள்.
கம்ப காவியம் என்றால் கம்பனின் காப்பியம். 
கபிலரது பாட்டு 

என்பது போல, ஐந்து அவித்தானது ஒழுக்கம். 

இந்த ஒழுக்க என்பது இறைவன் செய்தது. நாம் கடை பிடிக்கலாம், எழுதலாம்,   உபதேசம் செய்யலாம் , ஆனால், அது யாருக்கு உரியது என்றால் இறைவனுக்கு உரியது. 

அவன் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன். அவனுடைய ஒழுக்க நெறியில்  நின்றவர்கள்  நீண்ட நாள் வாழ்வார்கள். நீண்ட நாள் என்றால், இறைவன் திருவடிக் கீழ் வாழ்வார்கள் என்று  அர்த்தம். மற்றவை எல்லாம் சிறிது நாள்தான். 

இலக்கணம் புரிந்தால், இலக்கியம் எவ்வளவு சுவையாக இருக்கிறது. 


தனியே இலக்கணம் படிப்பது என்பது சற்று கடினமான விஷயம். இலக்கியத்தோடு சேர்ந்து படித்தால், இலக்கணமும் எளிமையாக விளங்கும், இலக்கியமும் சுவைக்கும். 

Sunday, September 13, 2020

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் - பாகம் 2

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் - பாகம் 2


நேற்று இந்த குறள் பற்றி சிந்தித்த போது ஒரு வார்த்தையை விட்டு விட்டேன். நேற்றைய பதிவு கீழே இருக்கிறது. படிக்காதவர்கள் வாசித்துக் கொள்ளலாம்.

"ஏகினான்" என்று ஒரு வார்த்தை வருகிறது. ஏகினான் என்றால் சென்றான் என்று அர்த்தம். அது இறந்த கால வினை. அப்படி என்றால் இறைவன் ஏற்கனவே வந்து விட்டானா என்ற கேள்வி எழும்.

சில சமயம், கணவனும் மனைவியும் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று புறப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஒரு திருமண வீட்டுக்கு செல்ல இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மனைவி தயாராகிக் கொண்டே இருப்பாள். கணவன் வாசலில் நின்று கொண்டு, "என்ன, தயாரா, போகலாமா?" என்று கேட்பான். அதற்கு மனைவி, "இதோ வந்துட்டேங்க" என்று பதில் சொல்லுவாள். பதில் தான் வரும்,  ஆள் வர மாட்டாள்.

இன்னும் சிறிது நேரம் கழித்து கணவன் மறுபடியும் கேட்பான். "அதான் வந்துட்டேனு சொல்றேன் ல ...ஏன் அவசரப் படுத்தறீங்க " என்று குரல் வரும்.

வரவே இல்ல, ஆனால் "வந்துட்டேன்" என்று சொல்லுவதை நாம் கேட்கிறோம், அனுபவித்து இருக்கிறோம்.

இது கணவவன் மனைவி மட்டும் அல்ல.

நண்பர்கள் இடையிலும் இந்த பேச்சு வழக்கு உண்டு. ஒரு நண்பன் வெளியில் இருந்து குரல் கொடுப்பான்...உள்ளிருந்து அவன் நண்பன் சொல்வான் "வந்துட்டேண்டா"  என்று.

அவசரம் கருதி, எதிர் காலத்தில் நடக்க இருப்பதை இறந்த காலத்தில் சொல்லலாம் என்று  தொல்காப்பிய சூத்திரம் இருக்கிறது.

"வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44)

தொல்காப்பியத்தை கொஞ்சம் இளக்க வேண்டும்.

வாராக் காலம் என்றால் வருகின்ற காலம். அதாவது இனி வரப்போகின்ற காலம். எதிர் காலம்.

நிகழ் காலம் என்றால் இப்போது நிகழ்வது.

""வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்" என்றால் நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும்

ஓராங்கு = ஒரு சில சமயத்தில்

வரூஉம் = வருகின்ற

வினைச் சொற்  = செயலை குறிக்கின்ற சொற்கள் (வந்துட்டேங்க )

கிளவி = சொல்

இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் = இறந்த கால குறிப்போடு இருப்பது

விரைந்த பொருள் என்மனார் புலவர்" = வேககமாக நிகழ்வதை குறிப்பதற்காக என்று   புலவர்கள் கூறுவார்கள் என்கிறார் தொல்காப்பியர்.

அவசரமாக கிளம்பி வருவதை ஏற்கனவே வந்துவிட்டதாக சொல்லும் வழக்கம்  உண்டு என்று கூறுகிறார்.

இறைவன் வேகமாக வருவானாம்.  எனவே வந்து விட்டான் என்ற சொல்லால் குறிக்கிறார்.

இரவி வர்மாவின் படங்களை பார்த்தால் தெரியும்.  யானையின் காலை முதலை பற்றிக் கொண்டது.  யானை "ஆதி மூலமே" என்று பிளிறியது.  திருமால்  சக்கரத்தோடு கிளம்பி வருவது போல இருக்கும். அதில் அவருடைய முடி கலைந்து , மேலே போட்டிருக்கும் பட்டு உடை பறக்கும். அவசரம் அவசரமாக கிளம்பி வருவதை குறிக்கும்.

எழுந்து, தலை சீவி, கொஞ்சம் வாசனை திரவம் போட்டு, நல்ல உடையை தேர்ந்து எடுத்து (அதுக்கு ஒரு , ஒரு மணி நேரம்), அப்புறம் அதுக்கு பொருந்தும் படி மத்த அலங்காரம் எல்லாம் செய்து கிளம்பவில்லை. போட்டது போட்டபடி கிளம்பி வருவார்.

அது போல, அன்பர்கள் மனதில் இறைவன் அடித்து புரண்டு வருவானாம். எனவே  "ஏகினான்" என்ற இறந்த கால வினைச் சொல்லை வள்ளுவர் போட்டு இருக்கிறார் என்று பரிமேல் அழகர் கூறுகிறார்.

எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள்.

ஏகினான் என்ற ஒரு வார்த்தையை விளக்க இவ்வளவு சொல்ல வேண்டி இருக்கிறது.

அப்படி எழுதவும், பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும்.




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இந்தக் குறளை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?


மலரின் கண்ணே சென்றவனின் மாட்சிமை மிக்க திருவடிகளை சேர்ந்தவர் இந்த நில உலகில் நீண்ட நாள் வாழ்வார்கள்

என்று நாம் அர்த்தம் செய்வோம்.

வார்த்தைகளை கொண்டு அர்த்தம் செய்தால் அவ்வளவுதான் வரும்.

இதற்கு பரிமேலழகர் செய்து இருக்கின்ற உரையை படித்தால், இனி மேல் நமக்கு திருக்குறள் தெரியும் என்று சொல்லக் கூட கூச்சமாக இருக்கும்.

இனி அவர் பார்வையில் இதற்கு அர்த்தம் காண்போம்.

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_12.html

மலர்மிசை ஏகினான்.

இறைவன் ஒரு மலரில் சென்று சேர்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட மலராக இருக்கும்?

ஒரு நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ ஒரு இடத்துக்குப் போகிறார் என்றால்  அவர் எந்த மாதிரி இடங்களில் தங்குவார்?   மிகச் சிறந்த  இடத்தில் தானே  தங்குவார்?

இறைவன் ஒரு மலரில் போய் தங்குகிறான் என்றால் அது சிறந்த மலராகத்தானே  இருக்க வேண்டும்? அது என்ன மலர்?

அவருடைய அடியவர்களின் அன்பு கொண்ட மனம் தான் அந்த மலர்.

எனவே, அடியவர்களின் மனதில் இருக்கும் இறைவனின் மாண்புமிக்க  திருவடிகளை  சேர்ந்தார் நிலத்திடை "நீடு" வாழ்வார்.

நீடு வாழ்வார் என்றால் நீண்ட நாள் வாழ்வார் என்று பொருள்.

நீண்ட நாள் என்றால் எத்தனை நாள்.

மனித உயிரின் வாழ் நாள் ஒரு 100 வருடம் என்று வைத்துக் கொண்டால், 36500  நாள். இது ஒரு நீண்ட நாளா?

மனித பிறப்பை விட்டு விடுவோம்.

இந்த  பூமியே எப்போதும் இருக்காது. ஒரு நாள் அதுவும் அழியும். பல கோடி வருடம்  ஆகலாம். அதுவும் நீண்ட நாள் என்று சொல்ல முடியாது.

எனவே, நம் வாழ்நாளும் நீண்ட நாள் இல்லை.  நாம் வாழும் பூமியின் வாழ் நாளும்  நீண்ட நாள் இல்லை.

பின் எதுதான் நீண்ட நாள் ?

ஸ்வர்கம் என்று சொல்கிறார்களே  அங்கு சென்றால் நீண்ட நாள் வாழ முடியுமா என்றால்  அதுவும் இல்லை.

நாம் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்து விட்டால், நாம் மீண்டும் இங்கே வர வேண்டியதுதான்.  அதுவும் நீண்ட நாள் கிடையாது.

பின் எது தான் நீண்ட நாள்.

வீடு பேறு என்று சொல்கிறார்களே, அதாவது இறைவனை அடைந்து விட்டால் பின் பிறப்பு  கிடையாது. அங்கே சென்று விட்டால் எப்போதும் அங்கேயே இருக்கலாம். அவனுக்கு அழிவு கிடையாது. எனவே, நீண்ட நாள். அங்கு போய் விட்டால்,  நாம் வேறு எங்கும் போக வேண்டாம். எனவே நீண்ட நாள்.

எனவே, அன்பர்கள் மனதில் வாழும் இறைவனுடைய திருவடிகளைப் பற்றி விட்டால்,  அவனோடு ஒன்றாகி நீண்ட நாள் வாழலாம்.

என்று பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்.

நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா இந்த அளவு?

பரிமேல் அழகர் உரை வாசிக்கக் கொஞ்சம் கடினம்தான். பழகிக் கொண்டால் சுகமாக இருக்கும். அதில் ஒரு வசீகரம் இருக்கும்.

திருக்குறளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பரிமேல் அழகர் வேண்டும்.

திருக்குறளையும், பரிமேல் அழகர் உரையையும் தேடி கண்டு பிடித்துப் படியுங்கள்.

அதில் ஒரு ஆர்வம் வந்து விட்டால், இந்த கதை, கட்டுரை, நாவல் போன்றவற்றின் மேல் ஒரு வெறுப்பே வந்து விடும்.  என்ன குப்பை இது என்று.

குப்பைகளை மூளைக்குள் திணிப்பது நிற்கும். அறிவும் மனமும் சுத்தமாகும்.

Saturday, September 12, 2020

திருக்குறள் - மாணடி சேர்ந்தார்

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் 




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இந்தக் குறளை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?


மலரின் கண்ணே சென்றவனின் மாட்சிமை மிக்க திருவடிகளை சேர்ந்தவர் இந்த நில உலகில் நீண்ட நாள் வாழ்வார்கள்

என்று நாம் அர்த்தம் செய்வோம்.

வார்த்தைகளை கொண்டு அர்த்தம் செய்தால் அவ்வளவுதான் வரும்.

இதற்கு பரிமேலழகர் செய்து இருக்கின்ற உரையை படித்தால், இனி மேல் நமக்கு திருக்குறள் தெரியும் என்று சொல்லக் கூட கூச்சமாக இருக்கும்.

இனி அவர் பார்வையில் இதற்கு அர்த்தம் காண்போம்.

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_12.html

மலர்மிசை ஏகினான்.

இறைவன் ஒரு மலரில் சென்று சேர்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட மலராக இருக்கும்?

ஒரு நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ ஒரு இடத்துக்குப் போகிறார் என்றால்  அவர் எந்த மாதிரி இடங்களில் தங்குவார்?   மிகச் சிறந்த  இடத்தில் தானே  தங்குவார்?

இறைவன் ஒரு மலரில் போய் தங்குகிறான் என்றால் அது சிறந்த மலராகத்தானே  இருக்க வேண்டும்? அது என்ன மலர்?

அவருடைய அடியவர்களின் அன்பு கொண்ட மனம் தான் அந்த மலர்.

எனவே, அடியவர்களின் மனதில் இருக்கும் இறைவனின் மாண்புமிக்க  திருவடிகளை  சேர்ந்தார் நிலத்திடை "நீடு" வாழ்வார்.

நீடு வாழ்வார் என்றால் நீண்ட நாள் வாழ்வார் என்று பொருள்.

நீண்ட நாள் என்றால் எத்தனை நாள்.

மனித உயிரின் வாழ் நாள் ஒரு 100 வருடம் என்று வைத்துக் கொண்டால், 36500  நாள். இது ஒரு நீண்ட நாளா?

மனித பிறப்பை விட்டு விடுவோம்.

இந்த  பூமியே எப்போதும் இருக்காது. ஒரு நாள் அதுவும் அழியும். பல கோடி வருடம்  ஆகலாம். அதுவும் நீண்ட நாள் என்று சொல்ல முடியாது.

எனவே, நம் வாழ்நாளும் நீண்ட நாள் இல்லை.  நாம் வாழும் பூமியின் வாழ் நாளும்  நீண்ட நாள் இல்லை.

பின் எதுதான் நீண்ட நாள் ?

ஸ்வர்கம் என்று சொல்கிறார்களே  அங்கு சென்றால் நீண்ட நாள் வாழ முடியுமா என்றால்  அதுவும் இல்லை.

நாம் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்து விட்டால், நாம் மீண்டும் இங்கே வர வேண்டியதுதான்.  அதுவும் நீண்ட நாள் கிடையாது.

பின் எது தான் நீண்ட நாள்.

வீடு பேறு என்று சொல்கிறார்களே, அதாவது இறைவனை அடைந்து விட்டால் பின் பிறப்பு  கிடையாது. அங்கே சென்று விட்டால் எப்போதும் அங்கேயே இருக்கலாம். அவனுக்கு அழிவு கிடையாது. எனவே, நீண்ட நாள். அங்கு போய் விட்டால்,  நாம் வேறு எங்கும் போக வேண்டாம். எனவே நீண்ட நாள்.

எனவே, அன்பர்கள் மனதில் வாழும் இறைவனுடைய திருவடிகளைப் பற்றி விட்டால்,  அவனோடு ஒன்றாகி நீண்ட நாள் வாழலாம்.

என்று பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்.

நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா இந்த அளவு?

பரிமேல் அழகர் உரை வாசிக்கக் கொஞ்சம் கடினம்தான். பழகிக் கொண்டால் சுகமாக இருக்கும். அதில் ஒரு வசீகரம் இருக்கும்.

திருக்குறளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பரிமேல் அழகர் வேண்டும்.

திருக்குறளையும், பரிமேல் அழகர் உரையையும் தேடி கண்டு பிடித்துப் படியுங்கள்.

அதில் ஒரு ஆர்வம் வந்து விட்டால், இந்த கதை, கட்டுரை, நாவல் போன்றவற்றின் மேல் ஒரு வெறுப்பே வந்து விடும்.  என்ன குப்பை இது என்று.

குப்பைகளை மூளைக்குள் திணிப்பது நிற்கும். அறிவும் மனமும் சுத்தமாகும்.


Friday, September 11, 2020

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்


நம்மை அறியாமலேயே நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம்.

செய்யும் போது அது தவறு என்று தெரிவதில்லை.

பின்னாளில், ஐயோ, இப்படி தவறு நிகழ்ந்து விட்டதே என்று நினைந்து வருந்தி இருக்கிறோம்.

இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சரியானவைதானா? நாளை, இன்று நாம் செய்கின்ற காரியங்கள் தவறானது என்று நினைத்து வருந்த மாட்டோம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.

பின், எப்படித்தான் சரியான பாதையை தேர்ந்து எடுத்து அதில் செல்வது?

இந்தக் குழப்பம் நமக்கு மட்டும் அல்ல...மிகப் பெரியவர்கள் வாழ்விலும் நிகழ்ந்து இருக்கிறது.

திருநாவுக்கரசர், இளம் வயதில், சைவ சமயத்தை துறந்து, சமண சமயத்தில் சேர்ந்தார். சேர்ந்தது மட்டும் அல்ல, சைவ நிந்தனை, சிவ நிந்தனை போன்றவற்றையும் செய்தார்.

ஏன்? ஏன் அப்படி ஒரு தவறான பாதையில் போனார்?

சேக்கிழார் பெருமான் சொல்கிறார்

"இறைவன் அருள் இன்மையால்"

இறைவன் அருள் இல்லாததால், நல்ல பாதையை விட்டு தவறான பாதையில் சென்றார் என்று.

பாடல்

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.


பொருள்


நில்லாத = நிலை இல்லாத

உலகு = உலகின்

இயல்பு கண்டு = இயல்பினை உணர்ந்து

நிலையா = நிலையற்ற

வாழ்க்கை = வாழ்க்கையை

அல்லேன் என்று = பற்றி வாழ்தல் சரி அல்ல என்று

அறத் துறந்து = முற்றுமாக  துறந்து

சமயங்கள் ஆன வற்றின் = உள்ள சமயங்களில்

நல் ஆறு தெரிந்து = சரியான வழி தெரிந்து

உணர = உணர்ந்து கொள்ள

நம்பர் அருளாமை யினால்  = இறைவன் அருளாமையால்

கொல்லாமை = கொல்லாமை

மறைந்து  உறையும் = அதன் பின் மறைந்து வாழும்

அமண் சமயம் குறுகுவார். = சமண சமயத்தை சென்று அடைந்தார் (நாவுக்கரசர்)

சில பேரிடம் ஒரு சில நல்ல குணங்கள் இருக்கும். நாம் அவற்றால் கவரப் பட்டு  அவர்கள்பால் ஈர்க்கப் படுவோம். அவர்களோடு பழகிய பின்னால் தான் தெரியும் அவர்களிடம் உள்ள மற்ற தீய குணங்கள் என்னென்ன என்று.

வேறு வழி இல்லாமல் அவர்களிடம் மாட்டிக் கொள்வோம்.

அது போல சமண சமயம், கொல்லாமை என்ற ஒரு நல்ல குணத்தின் பின்னால் பல  தீய செயல்களை செய்து வந்தது. ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்குத் தெரியாது.  நாவுக்கரசரும், அது தெரியாமல் அந்த சமயத்தில் சென்று  சேர்ந்தார்.

சொல்ல வந்த செய்தி இதுதான்...

இறைவன் அருள் இல்லாவிட்டால், எவ்வளவு அறிவு இருந்தாலும் வழி தவறிச் செல்ல  வாய்ப்பு இருக்கிறது.

நாவுக்கு அரசர், அவ்வளவு படித்தவர். தடம் மாறிப் போனார். காரணம், இறை அருள் இன்மை.

எவ்வளவோ படித்தவர்கள், அறிவாளிகள் பெரிய பெரிய தவறு செய்கிறார்கள். காரணம் இறை அருள் இன்மை என்கிறார் சேக்கிழார்.