Saturday, January 23, 2021

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு 


நம் மனம் கால நிலை வேறுபாட்டால் மாறும் இயல்பு உடையது. நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் தெரியும். காலையில் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, மதியம் எப்படி இருக்கிறது, மாலை மற்றும் இரவில் எப்படி இருக்கிறது என்று. நேரம் மாற மாற மனம் மாறும். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் நாம் அந்த மாற்றத்தை உணர்வது இல்லை. 


சில காரியங்களை,சில நேரத்தில் தான் செய்ய முடியும். மாற்றிச் செய்தால் என்ன என்று கேட்கலாம். செய்யலாம். அவ்வளவு சிறப்பாக இருக்காது. 


நீங்கள் இதை சோதித்துப் பார்க்கலாம். ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , குளித்து, நல்ல உடை உடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று. இன்னொரு நாள் காலை பத்து பதினொரு மணிவரை தூங்கி விட்டு எழுந்து, குளிக்காமல் உணவு உண்டு, இருந்து பாருங்கள். உங்கள் மனம் எப்படி வேலை செய்கிறது என்று. வித்தியாசம் தெரியும். 


சரி, இப்படி காலத்தோடு சேர்ந்து மனம் மாறுகிறது என்றால், அது சட்டென்று மாறாது. ௮ மணிக்கு மேல் இந்த மன நிலை என்று மாறாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குப் போகும். 


அப்படி போகும் போது, இந்த இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் குழப்பம் வரும்.  அந்த இடைப்பட்ட நேரங்களை சந்தி நேரம் என்பார்கள். இரண்டு கால நேரங்கள் சந்திக்கும் இடம். அந்த நேரத்தில் மனதில் சற்று குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை போக்க, இறை வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


சந்தி நேரத்தில் செய்யும் வழிபாட்டுக்கு "சந்தியா வந்தனம்" என்று பெயர். 


மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு அதை மென்மையாக கொண்டு செல்லும் வழி. 


இருள் விலகி பகல் வரும் ஒரு சந்தி - அதிகாலை. 

பகல் விலகி இருள் வரும் நேரம் - மாலைச் சந்தி 

இந்த இரண்டு நேரங்களும் சற்று அழுத்தம் வாய்ந்தவை. எனவே இந்த நேரங்களில் வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


பாடல் 


நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்

தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_23.html


(pl click the above link to continue reading)


நாளந்தி = நாள் அந்தி = அதி காலையில் 

கோறின்று = கோல் தின்று  என்றால் குச்சியால் பல் துலக்கி 

கண்கழீஇத் = முகம் கழுவி 

தெய்வத்தைத் = தெய்வத்தை 

தானறியு மாற்றாற் றொழுதெழுக = தான் அறியும் ஆற்றான் தொழுது எழுக. இது மிக முக்கியமானது. உனக்கு தெரிந்த மாதிரி தெய்வத்தை தொழு. அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று செய்யாமல். உன் மனதுக்கு பிடித்த மாதிரி, உன் அறிவுக்கு எட்டிய வரை தெய்வத்தைத் தொழு. 


 அல்கந்தி = மாலையில் 

நின்று தொழுதல் பழி. = நின்று தொழக் கூடாது. அமர்ந்து இறை வழிபாடு செய்ய வேண்டும். நாள் எல்லாம் வேலை செய்த பின் உடல் களைத்துப் போய் இருக்கும். நின்று செய்தால், மேலும் சோர்வு வரும். மனம் சலிக்கும். எப்படா இந்த வழிபாடு முடியும் என்று. எனவே, நன்றாக அமர்ந்து, நிதானமாக வழிபாடு செய்ய வேண்டும். 


உள் உணர்வை கூர்மையாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்று அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி உள் உணர்வு கூர்மையானால், வழிபாடு செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று தெரியும். இல்லை என்றால், ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று வாய் ஏதோ முணுமுணுக்கும், கை ஒரு வேலை செய்யும், கண் ஒரு பக்கம் போகும், காது வேறு எதையோ கேட்டுக் கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு. 


வழிபாட்டுக்கு முன்னும் பின்னும் உள்ள மன நிலையின் வேறுபாடு தெரியாவிட்டால், பின் எதற்கு வழிபாடு செய்வது? செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாவிட்டாலும் அதே தான் என்றால், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும்? 


கூர்ந்து கவனியுங்கள். 


உணவு உண்ட பின் உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். 


காப்பி குடித்தவுடன் மனம் மாறும். 


எண்ணையில் பொறித்த இனிப்பு பலகாரம் சாப்பிட்டால் மனம் மாறும். 


பழைய சோற்றில் எருமை தயிர் விட்டு சாப்பிட்டால் மனம் மாறும். 


அந்த மாற்றத்தை கவனிக்கத் தெரிய வேண்டும். 


தெரிந்தால், இந்த ஆசாரங்களின் தேவை மற்றும் அர்த்தம் புரியும். இல்லை என்றால்....என்ன சொல்ல..ஏதோ ஒரு பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். 



Friday, January 22, 2021

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க

 திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க 


பாடல்களுக்கு உரை எழுதுவது, விளக்கம் சொல்லுவது என்பது பெரிய கலை. அதற்கு மிக விரிந்த நூல் அறிவு வேண்டும். எந்த நூலுக்கு உரை சொல்கிறோமோ அந்த நூல் எழுதப்பட்ட கால கட்டத்தின் பழக்க வழக்கங்கள், நெறி முறைகள், மொழி பயன்பாடு இவை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். 


அவை எல்லாவற்றையும் விட முக்கியம், மூல நூல் எழுதிய ஆசிரியனின் நோக்கம் புரிந்து எழுத வேண்டும். 

திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை சொல்லுவது என்றால், திருவள்ளுவர் என்ன நினைத்தார், அவர் நோக்கம் என்ன என்று அறிந்து உரை சொல்ல வேண்டும். இல்லை என்றால், அது உரை சொல்பவனின் நோக்கமாகத்தான் இருக்குமே அல்லாமல், வள்ளுவர் சொல்ல வந்ததாக இருக்காது. 


திருவள்ளுவர் என்ன நினைத்தார் என்று அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் அளவு படித்து இருக்க வேண்டும். நடக்கிற காரியமா அது? 

எனவே, நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் சொல்லுவது என் கருத்துக்களே அன்றி வள்ளுவரின் கருத்து அல்ல. வள்ளுவரின் கருத்துகளை  அறிய வேண்டும் என்றால், பரிமேல் அழகர் போன்ற அறிஞர்களின் உரைகளை படிக்க வேண்டும். 

அருளுடைமை பற்றி சொல்ல வந்த வள்ளுவர், எப்படி இன்னொரு உயிரின் மேல் அருள் செலுத்துவது என்று சொல்லித் தருகிறார்.


அருள் செய்ய வழி முறை, வேறு எங்காவது கேட்டது உண்டா?  


பாடல் 


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_93.html

(click the above link to continue reading)


வலியார்முன் = நம்மை விட வலியவர்கள் முன் 

தன்னை நினைக்க  = நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும் 

தான் தன்னின் = நாம் நம்மை விட 

மெலியார்மேல்  = மெலிந்தார் மேல் 

செல்லும் இடத்து = செல்கின்ற போது 


மெலிந்தவர்கள் என்றால் எடை குறைந்தவர்கள் என்று அர்த்தம் அல்ல. வலிமை குன்றியவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இந்தக் குறள் பற்றி பல முறை யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நாம் யாரை வருத்தி இருக்கிறோம். நாம் யாரை மிரட்டி, பணிய வைத்து இருக்கிறோம். ஒரு உயிரைக் கூட கொன்று தின்றதில்லை. அப்படியானால், நான் மிக அருள் உடையவனா? அப்படி ஒன்றும் தெரியவில்லை. பின் இந்தக் குறளை எப்படி புரிந்து கொள்ளுவது?


பல தரம் காரில் போகும் போது, சில பிச்சைகாரர்கள் பிச்சை கேட்டு நிற்பார்கள். கண்டும் காணாத மாதிரி போய் விடுவேன். அவர்கள் மேல் ஒரு பக்கம் பரிதாப உணர்வு ஏற்பட்டாலும், ஏதோ ஒரு வெறுப்பும் இருக்கிறது. வேலை செய்து பிழைத்தால் என்ன?  இந்தப் பணத்தை வைத்து குடிப்பான், இப்படி பிள்ளைகளை பழக்கி பிச்சை எடுக்க வைக்கிறார்கள், இதை எல்லாம் நாம் ஊக்கு விக்கக் கூடாது என்றெல்லாம் மனம் நினைக்கும். 


நான் ஒன்றை வேண்டி ஒருவரிடம் நின்று, அவர் என்னை இப்படி உதாசீனம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன். அவர் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடலாம். கடைசியில் நான் நிராகரிக்கப் பட்டேன் என்பது தான் என்னைப் பொறுத்தவரை நிகழ்ந்த உண்மை. வலிக்கும் தானே. 

எனக்கு வேண்டியது பணமோ பொருளோ இல்லாமல் இருக்கலாம். ஒரு அன்பு, ஒரு கனிவான சொல், ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு அரவணைப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

நான் வேண்டி நின்ற அவர் என்னை பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால், எவ்வளவு வலிக்கும். அதை நினைத்துப் பார்த்தால், இந்த போக்குவரத்து நிறுத்தங்களில்  பிச்சை எடுப்பவர்களை பார்த்து முகம் திருப்பிக் கொண்டு செல்லத் தோன்றுமா? 


நமக்கும் ஒரு தேவை வரும். நாமும் யாரிடமாவது சென்று நிற்போம். அப்போது நம் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் , நமக்கு மற்றவர்கள் மேல் அருள் தானே பிறக்கும். 


வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மேல்,   காவல்காரன் மேல், வண்டி ஓட்டுபவர் மேல், என்று அனைத்து மக்கள் மீது அருள் சுரக்கும்.


நமக்கு அப்படி ஒரு காலம் வராது என்று நினைக்கக் கூடாது. 


சிவ பெருமானை மண்டை ஓட்டில் பிச்சை எடுக்க வைத்தது காலம். 

உலகளந்த பெருமாளை, கூனி குறுகி வாமன உருவில் மூன்று அடி நிலம் பிச்சை எடுக்க வைத்தது காலம். 


மும்மூர்த்திகளின் கதி இதுவென்றால், நாம் எம்மாத்திரம். 


நினைத்துப் பாருங்கள். 


அருள் தானே சுரக்கும். யார் மேலும் ஒரு அன்பும், அருளும் பிறக்கும். 

வள்ளுவர் இதை நினைத்துச் சொன்னாரா என்று தெரியாது. என் மனதில் பட்டதைச் சொல்லுகிறேன். 






இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?

 இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?


சில் பள்ளிக்கூடங்கள், அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். படிக்கிற பிள்ளை எங்கும் படிக்கும். பின், பரீட்சை எல்லாம் முடிந்த பின், தங்கள் பள்ளி நூறு சதவீதம் வெற்றி பெற்று விட்டதாக விளம்பரம் செய்வார்கள். இதில் அவர்கள் பெருமை என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. 


அது போல, 


ஆரவமுதனார் சொல்கிறார், 


"இராமானுசரே, நான் ஒன்றுக்கும் உதவாதவன். என்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை. இனி மேலும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்காக நீர் எனக்கு அருள் செய்யாமல் போனால், மற்றவர்கள் உம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நல்லவர்களுக்கு மட்டும் தான் நீர் அருள் செய்வீர். எம்மை போன்ற கதி அற்றவர்களை நீர் கண்டு கொள்ள மாட்டீர் என்று உம்மைத்தான் பரிகாசம் செய்வார்கள். எனவே, நீர் எனக்கு அருள் செய்வதுதான் உமக்கு நல்லது"


என்று நகைச்சுவைப் பட இராமானுசரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். 


அதாவது, சரண் என்று அடைந்து விட்டால், அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வது இராமனுசரின் இயல்பு என்று எளிமையாக கூறுகிறார். 


பாடல் 


என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_22.html

Click the above link to continue reading


என்னையும் பார்த்தென் = என்னையும் பார்த்து என் 

இயல்வையும் பார்த்து = என் குணத்தையும் பார்த்து 

எண்ணில் = எண்ண முடியாத 

பல்குணத்த = பல குணங்களை கொண்ட 

உன்னையும் = உன்னையும் (இராமானுசரையும்) 

பார்க்கில் = பார்த்தால் 

அருள் செய்வதே நலம் = நீர் எனக்கு அருள் செய்வதே நல்லது 

அன்றியென்பால் = மாறாக, என் பால் 

பின்னையும் பார்க்கில் = மேலும் பார்த்துக் கொண்டே இருந்தால் 

நலமுள தே? = நல்லாவா இருக்கு 

உன் பெருங்கருணை = உன்னுடைய பெரும் கருணை 

தன்னையென் பார்ப்பர் = தன்னை என்ன என்று நினைத்துப் பார்ப்பார்கள்? 

இராமா னுச! = இராமானுசரே 

உன்னைச் சார்ந்தவரே? = உன்னுடைய அடியவர்கள் 


பணக்காரனுக்குத் தான் உதவி செய்வேன் என்றால், அது உதவியா? அவனுக்கு தேவை இல்லை. பிச்சை காரனுக்குத்தான் பசிக்கும், உணவு வேண்டும். சீ சீ , நீ பிச்சைகாரன், உனக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்றால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? 


ஆரவமுதனார் சொல்கிறார்,


என்னைப் பார்த்து

என் இயல்பைப் பார்த்து 

பின்னும் பார்த்து 


என்று. 


அதாவது, நான் இப்போது மோசம். இனிமேல் ஏதாவது நல்லது செய்யக் கூடிய வாய்ப்புள்ள குணம் ஏதாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி, இப்ப இல்லை, பின்னாளில் வருமா என்றால் வராது. 


எனவே, இராமானுசரே, பேசாமல் யோசிப்பதை விட்டு விட்டு எனக்கு நீர் அருள் செய்யும்.இல்லை என்றால், எனக்கு ஒன்றும் இல்லை. உம் அடியவர்கள் உம்மைப் பற்றி வேறுவிதமாக நினைப்பார்கள் என்கிறார். 


அருமையான பாடல். எவ்வளவு மோசமான ஆளுக்கும் அருள் செய்வார் என்பது பொருள். 


மூல நூலை தேடித் பிடித்துப் படியுங்கள். தேன் சொட்டும் பாடல்கள். 



Thursday, January 21, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை 


ஏன் ஆசாரம் வேண்டும் என்று முந்தைய பிளாகில் சிந்தித்தோம். இனி, என்னவெல்லாம் ஆசாரம் இருக்கிறது, அதை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்று சிந்திப்போம். 

பாடலை படிக்கும் முன், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் நம் கலாச்சாரம் இரண்டையும் தெரிந்து கொள்வோம். 


தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். 


சிறு பொழுது, பெரும் பொழுது. 


ஒரு நாளின் வேறு வேறு பகுதிக்கு சிறு பொழுது என்று பெயர்.


ஒரு ஆண்டின் வேறு வேறு பகுதிக்கு பெரும் பொழுது என்று பெயர். 


6  - 10  -  காலை 

10 - 2 - நண்பகல் 

2 - 6 - ஏற்பாடு 

6 - 10 - மாலை 

10 - 2 - யாமம் 

2 - 6 - வைகறை 


இந்த அதிகாலை 2 முதல் 6 மணிவரை உள்ள நேரம் இருக்கிறதே, இதை ப்ரம்ம முகூர்த்தம்  என்று சொல்லுவார்கள். 

படிக்க, பாராயணம் செய்ய, நல்ல காரியங்கள் தொடங்க சிறந்த நேரம் என்று சொல்லுவார்கள். 

சாத்வீக குணம் உச்சம் பெற்று இருக்கும் நேரம். 


ஆசாரக் கோவை சொல்கிறது - வைகறையில் படுக்கையில் இருந்து எழுந்து விட வேண்டும். 

எழுந்த உடன், அன்று செய்ய வேண்டிய நல்ல வேலைகளை பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். மனதில் சிந்திக்க வேண்டும்.  அந்த ரிப்போர்ட் அனுப்பனும், இதில் முதலீடு செய்ய வேண்டும், இன்னாரை பார்க்க வேண்டும், அந்த பதிலை இன்று போட்டு விட வேண்டும், என்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை சிந்தித்து மனதில் குறித்துக் கொள்ள வேண்டும். 

பின் தந்தையையும், தாயையும் தொழ வேண்டும். 


பாடல் 

 வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்

நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே-

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_21.html


click the above link to continue reading


வைகறை யாமம் துயில் எழுந்து = யாமம் தாண்டி, வைகறையில் துயில் எழுந்து. வைகறை ஆறு மணி வரை இருக்கிறதே என்று அதுவரை தூங்கக் கூடாது. யாமம் தாண்டிய வைகறையில் எழ வேண்டும். 

தான் செய்யும் = நாம் செய்ய வேண்டிய 

நல் அறமும்  = நல்ல அறச் செயல்களையும் 

ஒண் பொருளும் = சிறந்த பொருள்களையும் 

சிந்தித்து = மனதில் சிந்தித்து 

வாய்வதின் = வாய்த்த, 

தந்தையும்  = தந்தையையும் 

தாயும் தொழுது எழுக!’ = தாயையையும் தொழுது எழுக 

என்பதே- = எனபதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர் கண்டா நல்ல வழி 


இது ஆசாரக் கோவை சொல்வது அல்ல. இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அது   சொல்கிறது. 


5 am club என்று ஒரு ஆங்கில நூல் எழுதினால், காசு போட்டு வாங்கி படித்து விட்டு, பிரமாதம் என்று சொல்கிறார்ககள். 

அதற்கு ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே இதையெல்லாம் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள். 


அதி காலை எழுந்து பாருங்கள். அதன் சுகம் தெரியும். 

நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்வீர்கள். 


இப்படி, பல பாடல்கள் இருக்கின்றன.


மூல நூலை தேடிப் பிடித்து படித்து பயன் அடையுங்கள். 





Wednesday, January 20, 2021

கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன்

 கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் 


வீடணன் செய்தது சரியா, தவறா என்ற வாதம் இன்று வரை தொடர்கிறது. 

என்னைப் பொறுத்தவரை சரி தவறு எல்லாம் அறிவு சம்பந்தப் பட்டது.  சாத்திரங்கள், சட்டங்கள், நடைமுறை பழக்க வழக்கங்கள் இவற்றைக் கொண்டு, தர்கா ரீதியாக அலசி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகளை சரியா தவறா என்று விவாதம் செய்யலாம்.


அளவற்ற அன்பில், கருணையில் பிறக்கும் ஒரு செயலை எப்படி சரி தவறு என்று நிர்ணயம் பண்ணுவது. 


பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறது. சோர்ந்து படுத்து இடுக்கிறது. ஊரெல்லாம் விழாக் கோலம். பக்கத்து வீடுகளில் இருந்து நிறைய பலகாரங்கள் வந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையின் அம்மா உற்சாகமாக அவற்றை எடுத்து உண்பாளா ? அல்லது, அவற்றை வெறுத்து ஒதுக்குவாளா?


பிள்ளைக்குத் தானே உடம்பு சரி இல்லை. இவளுக்கு என்ன? சாப்பிட வேண்டியது தானே?  இவள் சாப்பிடாமல் விட்டால் பிள்ளைக்கு உடம்பு சரியாகுமா?  அவள் செய்தது சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


எனக்குத் தெரிந்து எவ்வளவோ வீடுகளில் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும், கணவன் நலமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் பல விரதங்கள் இருக்கிறார்கள்.  பிள்ளை பிழைத்து வந்தால், இனி வாழ் நாள் எல்லாம் இனிப்பு சாப்பிடாமல் இருப்பேன்  என்றெல்லாம் தியாகம் செய்கிறார்கள். இவை எல்லாம் சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


அன்புக்கு முன்னால் எல்லாம் சரி தான். 


கருணைக் கொலை என்று சொல்கிறார்கள்.  அன்புக்கு உரியவர் படும் பாடு தாங்க முடியாமல்  அவர்கள் நிம்மதியாகப் போய் சேரட்டும் என்று அவர்களுக்கு தரும்  சிகிச்சையை நிறுத்தி அவர்கள் உயிர் பிரிய வழி செய்கிறார்கள். அது கொலை தான். அதற்குப்   பெயர் கருணைக் கொலை. பல நாடுகள்   அதை அங்கீகரிக்கிறது. 


அன்புக்கு முன்னால், எதுவும் சரி தான். 


அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சட்டப் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வரக் கூடாது. மனம் நிறைய அன்பைக் கொண்டு வர வேண்டும்.   அவ்வளவு அன்பு வந்து விட்டால், இந்த விவாதங்கள் இருக்காது. 


இராமனிடம் அடைக்கலம் வேண்டி வீடணன் வருகிறான். 


அவன் வரும் அந்தக் காட்சியை கம்பன் காட்டுகிறான். படித்துப் பாருங்கள். அதற்குப் பின், சரியா தவறா என்ற வாதங்கள் எவ்வளவு அபத்தம் என்று புரியும். 


"இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி வருகிறான். அவன் மனதில் உள்ள அன்பும் கருணையும் கண்ணில் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து கல்லும் மரமும் உருகுகின்றன. இராமன் அவனை பார்த்த போது, தரையில் விழுந்து வணங்குகிறான்".


இது நான் சொல்லும் உரை. கம்பன் பாடலைப் பாருங்கள். மனம் உருகும்.


பாடல் 

கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்

மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை  வள்ளல்

இரங்கினன் நோக்கும்தோறும், இரு நிலத்து இறைஞ்சுகின்றான்;

வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_20.html


click the above link to continue reading


கரங்கள் = கைகளை 

மீச்  = மேலே 

சுமந்து = சுமந்து. கைகள் மேலே நிற்கவில்லை. தளர்ந்து விழுகின்றது. அதை தலையில் சுமந்து 

செல்லும் = செல்லுகின்ற 

கதிர் = ஒளி வீசும் 

மணி  = மணிகள் நிறைந்த 

முடியன் = கிரீடம் அணிந்த வீடணன் 

கல்லும் = கல்லும் 

மரங்களும் = மரங்களும் 

உருக = உருகும்படி 

நோக்கும் காதலன் = நோக்கும் காதலன் 


கருணை  வள்ளல் = கருணை வள்ளலான இராமன் 

இரங்கினன் = இரக்கம் கொண்டு 

நோக்கும்தோறும், = பார்க்கும் போதெல்லாம் 

இரு நிலத்து இறைஞ்சுகின்றான்; = நிலத்தில் விழுந்து வணங்குவான் 

வரங்களின் = வரங்களின் 

வாரி அன்ன = கடல் போன்ற 

தாள் இணை = இரண்டு திருவடிகளில் 

வந்து வீழ்ந்தான். = வந்து வீழ்ந்தான். வணங்கினான் என்று கூட இல்லை. வீழ்ந்தான்  என்கிறான் கம்பன். 


இராமனை சொல்லும் போது , "வரங்களின் கடல்" என்கிறான். எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. 


வீடணனின் தோற்றம் கண்டு கல்லும் மரமும் உருகியது. 


அப்படிப்பட்ட மனதில் குற்றம் இருக்குமா?  துரோக சிந்தனை இருக்குமா? பதவி ஆசை இருக்குமா? 


சரியா தவறா என்று ஆய்வு செய்வது அன்பில்லாதவர்,  அன்பு பற்றி அறியாதவர் செய்யும் செயல். 


அன்புக்கு மிஞ்சிய ஒரு அறம் இல்லை. 





Tuesday, January 19, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

 ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை


ஆசாரம் என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் என்றால் நம்மை விட உயர்ந்தவர்கள் செய்தவற்றை நாம் இடைவிடாமல் செய்வது. 

உயர்ந்தவர்கள் என்றால் அறிவில், அனுபவத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.  இன்று என்ன ஆகி விட்டது என்றால் யார் சொல்வதை கேட்பது, யார் செய்வதை பின்பற்றுவது என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லவன் என்று சினிமா மற்றும் பிற ஊடகங்கள் சித்தரிக்கத் தொடங்கிவிட்டன. மக்கள் குழம்ப ஆரம்பித்து விட்டார்கள். எது சரி, எது தவறு என்பதில் தடுமாற்றம் வருகிறது. 


யாரிடம் கேட்பது?


வக்கிரங்கள் எல்லாம் நடை முறையாகிக் கொண்டு வருகிறது. 


இந்த மாதிரி தருணங்களில், நமக்கு வழிகாட்ட ஆசாரக் கோவை போன்ற நூல்கள் உதவுகின்றன.


எதற்கு ஆசாரத்தை  கடை பிடிக்க வேண்டும்?


அது எல்லாம் அந்தக் காலத்தில் செய்தார்கள். இது கம்ப்யூட்டர் காலம். இப்ப வந்து ஆசாரம்   என்று பேசிக் கொண்டு என்று கேலி பேசுகிறார்கள். 


ஆசாரத்தை கடை பிடிப்பவர்கள் கூட அதைஏன் செய்கிறாய் என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிக்கிறார்கள். முன்னோர்கள் செய்தார்கள். நானும் செய்கிறேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். 


ஆசாரம் என்றால் என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு கடைபிடிப்போம். 


மனித வாழ்க்கை அகம் புறம் என இரண்டாக இருக்கிறது. இரண்டாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. 


மனதை செம்மை செய்தால், வாழ்வு உயரும். மனதில் உள்ள அழுக்கை நீக்கினால், வாழ்வு சுகப்படும். 


பொறாமை, கோபம், வன்மம், துவேஷம்,  பொருந்தா காமம், பேராசை, கயமை போன்ற  கீழான எண்ணங்களை நீக்கினால், வாழ்வு எவ்வளவு சுகமாக இருக்கும். 


ஆனால், எப்படி நீக்குவது? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_19.html


click the above link to continue reading


மனதை வெளியே எடுத்து, சுத்தம் செய்து திருப்பி உள்ளே வைக்க முடியுமா? 


முடியாது. மனதை நம்மால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. 


ஆனால், மனமும், உடலும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. உடலை மாற்றினால் மனம் மாறும். 


நாலு நாள் குளிக்காமல் இருந்து பாருங்கள். உடல் அழுக்காக இருக்கும். ஆனால், மனமும் சோர்ந்து, குறுகி விடும். 


நல்ல வெந்நீர் வைத்தது குளித்து, புது ஆடை அணிந்து, கொஞ்சம் வாசனை திரவங்களை தெளித்தால், உடம்பு புத்துணர்ச்சி அடைவது மட்டும் அல்ல, மனமும்  துள்ளிக் கொண்டு நிற்கும். 


உடலை சரி செய்தால், மனம் சரியாகும்.  


இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


ஆசாரம் என்பது உடலின் மூலம் மனதை சரி செய்யும் வித்தை. 


வெறும் ஆசாரத்தோடு நின்று விடக் கூடாது. 


காலையில் எழுந்து பல் விளக்கி குளித்து விட்டுத்தான் அடுப்பே பத்த வைப்பேன் என்று பெருமையாக சொல்வார்கள். 


ஏன்? குளிக்காமல் பத்த வைத்ததால் என்ன ஆகும் என்று கேட்டால் தெரியாது. 


காலையில் குளிக்கும் போது மனம் எப்படி சிலிர்க்கிறது என்று பார்க்க வேண்டும். இரவின் சோம்பல் எல்லாம் போய், உடம்பு புத்துணர்ச்சி பெறும் போது உள்ளமும் மகிழும். சுறுசுறுப்பாக இருக்கும். புத்தி நன்றாக வேலை செய்யும். 


குளிப்பதற்கு அல்ல ஆசாரம். மனதையும், புத்தியையும் தெளிவு படுத்த. 


எனவே, உடலை எப்படி ஒரு ஒழுக்க நிலையில் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல வருகிறது  ஆசாரக் கோவை. 


நமக்குத் தெரியுமா எப்படி உடம்பை, நாளை, மூளையை நெறி படுத்துவது என்று? தெரிந்தால் பின் ஆசாரக் கோவை படிக்க வேண்டாம். 


தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாரக் கோவை நமக்கு வழி காட்டும். 


என்ன தான் சொல்கிறது என்று பார்ப்போமே.....கடை பிடிக்கறோமோ இல்லையோ, தெரிந்து கொள்வோமே...


தெரிந்து கொள்வோமா?

Tuesday, January 12, 2021

திருவாசகம் - ஒளி செய் மானிடம்

 திருவாசகம் - ஒளி செய் மானிடம் 


திருவாசகம் படிக்க படிக்க கண்ணில் நீர் நிறைவது என்னவோ உண்மைதான். 

நமக்கு கிடைத்து இருக்கும் கொடைகளை எண்ணிப் பாருங்கள். ஆரோக்கியமான உடல். இது நாள் வரை. கண் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இரண்டு கால் இல்லாமல் இருந்திருந்தால்? எத்தனையோ குறைகள் இல்லாமல் இருக்கிறோம். என்றாவது அது பற்றி மகிழ்ந்தது உண்டா? திருப்தி அடைந்தது உண்டா? 

அறிவு இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. படிக்க ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கிறது. அறிவை அள்ளி அள்ளித் தர வரிசையில் நிற்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். 

அதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை. 

இருப்பதை எல்லாம் புறம் தள்ளி விட்டு, இல்லாததை கொண்டா என்று எவ்வளவு கீழ்மையாக நாம் நடந்து கொள்கிறோம். 


மணிவாசகர் உருகுகிறார். 


எனக்கு முன்னால் வந்தவர்கள், உன் கருணை வேண்டும் என்று உண்மையிலேயே வேண்டி, அதைப் பெற்றுக் கொண்டார்கள். எவ்வளவோ பெரிய ஆள் நீ. எனக்காக அருள் செய்ய வந்தாய். அந்தக் கருணையைக் கூட நான் புரிந்து கொள்ளவில்லை. என்னே என் கீழ் மதி 


என்று நொந்து கொள்கிறார். 


பாடல் 


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,

வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;

ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_12.html


click the above link to continue reading


மாறு இலாத = மாற்றம் இல்லாத 

மாக் கருணை = பெரிய கருணை 

வெள்ளமே! = வெள்ளமே 

வந்து = இங்கு வந்து 

முந்தி = எனக்கு முன்னால் 

நின் மலர்கொள் = உன்னுடைய மலர் போன்ற 

தாள் இணை, = இரண்டு திருவடிகளை 

வேறு இலாப் = நீங்குதல் இல்லாத 

பதப் பரிசு பெற்ற = அந்தப் பாதங்களை அடையும் பரிசு பெற்ற 

நின் = உன் 

மெய்ம்மை அன்பர் = உண்மையான அன்பர்கள் 

உன் மெய்ம்மை மேவினார்; = உன்னை அடைந்தார் 

ஈறு இலாத நீ = முடிவே இல்லாத நீ 

எளியை ஆகி வந்து = எளிமையாக வந்து 

ஒளிசெய் மானிடம் ஆக = ஒளி பொருந்திய மானிட வடிவம் பெற்று 

நோக்கியும், = எனக்கு காட்சி தந்தும் 

கீறு இலாத  =  இளகாத 

நெஞ்சு உடைய = மனதை உடைய 

நாயினேன் = நாயைப் போன்றவன் 

கடையன் = கீழானவன் 

ஆயினேன் = ஆயினேன் 

பட்ட கீழ்மையே. = நான் பட்ட கீழ்மையே 


முக்தி வேண்டும், இறைவனை அடைய வேண்டும், அற வழியில் வாழ வேண்டும் என்பார்கள். சரி, எப்படி என்று சொன்னால், அதெல்லாம் சரிப்படாது,  நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள். பின்னும், முக்தி அடைவது எப்படி,  இறைவனை அடைவது எப்படி என்று படிப்பார்கள். 


என்ன சொல்வது அவர்களை. 


இறைவன் எத்தனையோ வழிகளில் வந்து அருள் செய்கிறான். அது வேண்டாம், இது சரி இல்லை என்று தள்ளி விட்டுக் கொண்டே இருந்தால் என்ன செய்வது. உண்மையான  பக்தி உள்ளவர்கள், அருளை பெற்றார்கள். முக்தி அடைந்தார்கள். எனக்கு நீ எவ்வளவோ சொல்லியும், தந்தும் ஒன்றும் புரியாமல்  கடின நெஞ்சோடு வாழ்கிறேனே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பக்குவம் அடைந்து விட்டால், ஒரு வார்த்தை போதும்.