Wednesday, August 18, 2021

திருக்குறள் - பெண்ணுக்குக் காவல்

 திருக்குறள் - பெண்ணுக்குக் காவல் 


கற்பு என்பதை உடல் சார்ந்த விடயமாகவே வைத்துக் கொண்டாலும், அது ஏன் பெண்ணுக்கு மட்டும் பெரிதாகச் சொல்லப் படுகிறது? ஆணுக்கு கற்பு வேண்டும் என்று எந்த இலக்கியமும் கூறவில்லை. 


கோவலன், மாதவியோடு சென்றான் என்றால் அவனை ஒரு கெட்டவனாக சிலப்பதிகாரம் சித்தரிக்கவில்லை. ஏன், அவன் மனைவியே கூட அவனை திட்டவில்லை. 


தசரதனுக்கு பதினாறாயிரம் மனைவிகள் என்றால் கேட்டுவிட்டு சிரித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். சீ என்று யாரும் சொல்லுவதில்லை. அவன் மகனா இராமன் என்று யாரும் இராமனை கேலி செய்யவில்லை. 


ஆயிரம் உதாரணம் சொல்லலாம். இந்து கடவுள்கள் கூட பலதாரம் மணம் செய்து கொள்கிறார்கள். கேட்டால் ஏதாவது ஒரு கதை சொல்கிறார்கள். ஒன்று இச்சா சக்தி, இன்னொன்று கிரியா சக்தி என்கிறார்கள். நாங்களும் அந்த இரண்டு சக்திகளை வைத்துக் கொள்கிறோம் என்று பக்த கோடிகள் ஆரம்பித்து விட்டால்?


பெண்ணுக்கு கற்பு ஏன் பெரிதாக கூறப்பட்டது என்றால், பெண் கற்பு நிலை பிறழ்ந்தால் குடும்பம் சிதைந்து விடும்.  குடும்பம் சிதைந்தால் சமுதாயமும், நாடும் சிதையும். 


எப்படி. 


ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்கிறாள் அல்லது பல ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்தால், அவளுக்கு பிறக்கும் பிள்ளைக்கு யார் தகப்பன் என்ற கேள்வி வரும். யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளைக்கு படிப்பு, உணவு, உடை, மருத்துவம், நல்லது கெட்டது சொல்வது என்று யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளை அனாதை போலத்தான் வளரும். இன்னும் சொல்லப் போனால், தகப்பன் பெயர் தெரியாதவன் என்று பழியோடு வளரும். 


அப்படி வளர்ந்தவன்தான் கர்ணன். அவன் எவ்வளவு சங்கடப்பட்டான் என்று பாரதம் கூறுகிறது. 


இப்படி நாடு பூராவும் தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள் இருந்தால் எப்படி இருக்கும். 


எனவே தான், அதில் ஆழமாகச் செல்லாமல், பெண்ணுக்கு கற்பை பெரிய விடயமாக சொன்னார்கள். 


சரி, பெண் வெளியில் சென்றால் தானே, நாலு பேரிடம் பழகினால் தானே அவள் மனம் சலனப் பட வாய்ப்பு இருக்கிறது? கற்பு நெறி பிறழ வாய்ப்பு இருக்கிறது? எனவே அவளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பூட்டி வைத்து விட்டால் ஒரு குழப்பமும் வராது தானே என்று நினைத்து பெண்ணை பூட்டி வைக்க நினைப்பவர்களைப் பற்றி இங்கே கூறுகிறார். 


"ஒரு பெண், அவளே நினைத்தால் அல்லது அவளை கற்பு நெறியில் நிற்க வைக்க யாராலும் முடியாது. சிறை வைத்தாலும் நடக்காது" என்கிறார். 


பாடல் 


சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_18.html


(please click the above link to continue reading)


சிறைகாக்கும் = சிறையில் வைத்து காக்கும் 


காப்பு = காவல் 


எவன் செய்யும் = யாரால் செய்ய முடியும் 


மகளிர் = பெண்கள் 


நிறைகாக்கும் = கற்பு என்ற என்ற நெறியில் நின்று காக்கும் 


காப்பே தலை = காவலே தலை சிறந்தது 


பெண்கள் கற்பு நெறியில் நிற்க வேண்டும் என்றால் அது அவர்கள் மேல் செலுத்தும் அன்பால் தான் முடியும். மாறாக கணவன், அவனுடைய புகழ், செலவாக்கு, உடல் பலம், இவற்றைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் வள்ளுவர். 


இதுவும் கூட கொஞ்சம் நெருடலான குறள் தான். கற்பு என்று வந்து விட்டாலே கூடவே சச்சரவும் வரத்தான் செய்யும். 


தாண்டிப் போவோம். 


Tuesday, August 17, 2021

நாலடியார் - வருந்தியும் கேட்பர்

 நாலடியார் - வருந்தியும் கேட்பர் 


வீட்டிலோ, அலுவலகத்திலோ நமக்கு வேண்டிய ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால் நாம் என்ன செய்வோம்?


உடனே, சுறுசுறுப்பாக அந்தத் தவற்றைச் சுட்டி காட்டுவோம். அப்படி காட்டினால் நமது புத்திசாலித்தனம் வெளிப்படும் என்று நாம் நினைக்கிறோம். 


"வள்ளுவர் சொன்னது தவறு" என்று சொல்லுவதன் மூலம், நாம் வள்ளுவரை விட பெரிய அறிஞர் என்று காட்டிக் கொள்ள முனைவோம். 


அது நாகரிகம் அல்ல. பண்பாடு அல்ல. 


ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், ஒரு சபையில் வைத்து அவனை திருத்தக் கூடாது. படித்தவர்கள், பெரியவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். தனியாக கூப்பிட்டு, அதை சுட்டிக் காட்டுவார்கள். 


"கற்றறிந்தோர் சபையில் ஒரு கல்லாதவன் ஏதாவது உளறினால், அங்குள்ள பெரியவர்கள், கஷ்டப்பட்டாவது அவன் சொல்வதைக் கேட்பார்கள். ஏன் என்றால், அவன் பிழையை சுட்டிக் காட்டினால் அவன் பல பேர் முன்னிலையில் வெட்கப் பட வேண்டி வரும் என்று நினைத்து "



பாடல் 


புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி|

நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்

பல்லாரு ணாணல் பரிந்து. 


பொருள் 



(please click the above link to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_17.html


புல்லா = பொருந்தாத, சரி இல்லாத 


வெழுத்திற் = எழுத்தை, 


பொருளில் = பொருள் இல்லாமல் 


வறுங் = வீணாகப் பேசி 


கோட்டி = கற்றறிந்தோர் சபையில் 


கல்லா = கல்வி அறிவு இல்லாத 


வொருவ னுரைப்பவுங்  = ஒருவன் உரைப்பவும் = ஒருவன் சொல்லக் கேட்டும் 


கண்ணோடி| = கருணையினால் 


நல்லார் = நல்லவர்கள் 


வருந்தியுங் கேட்பரே  = துன்பப் பட்டாவது கேட்பார்கள் 


மற்றவன் = அவன் 


பல்லாரு ணாணல் பரிந்து.  = பல பேர் முன் நாணப்படுதலை சிந்தித்து 


ஒருவன் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். 


முட்டாளோடு வாக்குவாதம் செய்து என்ன ஆகப் போகிறது. 


மேலும், அந்தக் கல்லாதவன் நமக்கு வேண்டியவனாகப் போய் விட்டால், அவனை திருத்தப் போய், அவன் உறவும் முறியும்.


அவன் பலரால் கேலி செய்யப் படுவானே என்று நினைந்து நல்லவவர்கள் வருந்தியும் கேட்பார்களாம். 


நாகரீகத்தின் உச்சம். 


"வருந்தியும் கேட்பர்"  என்ன ஒரு அழகான சொற் கையாளல். 




Monday, August 16, 2021

திருக்குறள் - மனைவி என்பவள் யார்?

 திருக்குறள் - மனைவி என்பவள் யார்? 


ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் மனைவி ஆகி விடுவாளா?  இல்லை. 


பிள்ளை பெற்று விட்டால் தாயாகி விடுவாளா? இல்லை. 


மனைவி என்றால் யார் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார். 


அவர் யார் எங்களை சொல்ல என்று நினைப்பவர்கள் மேலே படிக்காமல் வேறு ஏதாவது உயர்ந்த விடயங்களை படிப்பது நல்லது.


"தன்னைக் காத்துக் கொண்டு, பின் தன்னை கொண்ட கணவனையும் காத்து, இருவரின் இல்லறம் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து பேசும்படி இறுதிவரை கடைப் பிடிப்பவளே பெண் (மனைவி)"


என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_16.html


(Please click the above link to continue reading)


தற்காத்துத் = தன்னை காத்துக் கொண்டு 

தற்கொண்டாற் = தன்னைக் கொண்ட கணவனை 

பேணித் = போற்றி, பாதுகாத்து 

தகைசான்ற = பெருமை அமைந்த 

சொற்காத்துச் = புகழைக் காத்து 

சோர்விலாள் பெண் = சோர்வு இல்லாதவள் பெண் (மனைவி)


கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம். 


தற்காத்துத் = முதலில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். பரிமேலழகர் உரையில் "கற்பினின்று வழுவாமல் தன்னைக் காத்துக் கொண்டு" என்று குறிப்பிடுகிறார். சற்று விரிவாகப் பொருள் கொண்டால், தன்னை அனைத்து விதத்திலும் காத்துக் கொண்டு என்று கூறலாம். 


பட்டினி கிடந்து, சரியான உணவை, சரியான நேரத்தில் உண்ணாமல் தியாகச் சுடராக இருக்கச் சொல்லவில்லை. அவள் தன்னைக் காத்துக் கொண்டாள் தான் குடும்பத்தை காக்க முடியும் என்பதால், முதலில் அவள் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். 


அடுத்து, "தற்கொண்டான் பேணி". கணவனை பேண வேண்டும். "உணவு முதலியன கொடுத்து" என்கிறார் பரிமேலழகர். 


அடுத்து, "தகை சான்ற சொற் காத்து". இது மிக மிக முக்கியமான ஒன்று. அவர்கள் இல்லறத்தைப் பற்றி எல்லோரும் புகழ வேண்டும். கணவனோ மனைவியோ தங்களுக்குள் ஏற்படும் மன வேற்றுமைகளை வெளியே சொல்லக் கூடாது. சொன்னால், குடும்பத்தின் பெருமைக்கு கேடு வரும். சொல் என்பது இங்கே புகழ். மாமனார்,மாமியார், கணவன், என்று குடும்பத்தில் உள்ள நபர்களின் குறைகளை வெளியே சொன்னால், குடும்பத்தின் புகழ் குறையும்.


இதோடு நிறுத்தி இருந்தால், வள்ளுவர் பெரிய ஆள் இல்லை. 


அடுத்து ஒரு வார்த்தை சேர்கிறார். 


"சோர்விலாள்".  சோர்வு என்றால் மறதி என்கிறார் பரிமேலழகர்.  இடை விடாமல் கடை பிடிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் கடை பிடித்தோம் அப்புறம் விட்டு விட்டோம் என்று இருக்கக் கூடாது. வேலை செய்யும் வரை கணவனுக்கு மரியாதை இருக்கும்...அப்புறம் அவனை தூக்கி ஒரு மூலையில் வைத்து விடுவது என்பது "சோர்வில்" வரும். இறுதிவரை குடும்பத்தின் புகழை நிலை நிறுத்த வேண்டும். 


"அடடா, வீடு என்றால் அது, குடும்பம் என்றால் அது " என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். 


அப்படி செய்பவள்தான் "பெண்" (மனைவி) என்கிறார். 


அதெல்லாம் இல்லை. எங்கள் மனதுக்குப் பட்டதை நாங்கள் சொல்லுவோம். குடும்ப மானத்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கணவனோ, மாமியாரோ யாராக இருந்தாலும், தவறு செய்தால் நாலு பேருக்குத் தெரியும் படி உரக்கச் சொல்வோம் என்று கொடி பிடிப்பவர்களுக்கு அல்ல இந்தக் குறள். 


வள்ளுவர் சொற்களை தேர்ந்து எடுத்துப் போடக் கூடியவர்.


"சோர்விலாள் மனைவி" என்று சொல்லி இருக்கலாம். "சோர்விலாள் பெண்" என்று கூறுகிறார். 


இந்தக் குணம் இல்லாதவளை அவர் பெண் என்ற பட்டியலிலேயே சேர்க்கத் தயாராக இல்லை. தற்கொண்டான் என்று வருவதால், இங்கே பெண் என்பதை மனைவி என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


இது ஒரு வழிகாட்டி. எங்களுக்கு ஒரு வழி காட்டியும் வேண்டாம், நாங்கள் மனம் போன படி போவோம் என்று செல்பவர்களுக்கு நாம் கை அசைத்து விடை தருவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?



 தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்



Sunday, August 15, 2021

கம்ப இராமாயணம் - அவன் கிட்ட பேச மாட்டீங்களா ?

 கம்ப இராமாயணம் - அவன் கிட்ட பேச மாட்டீங்களா ?


கணவன் மனைவிக்கு இடையே ஏதோ காரணத்தால் பிரிவு. ஒருவருக்கு ஒருவர்  பேசுவதில்லை. யார் பேசுவது என்று ஒரு வீராப்பு இரண்டு பக்கமும். 


மனைவி, கணவனின் நெருங்கிய நண்பரை கூப்பிட்டுச் சொல்கிறாள் "நீங்க அவர் நெருங்கிய நண்பர் தானே...நீங்களாவது அவர்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா?" என்று அந்த நண்பரிடம் வேண்டுகிறாள். 


இது இயல்பாக நடக்கக் கூடியது தான். 


அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதை சொல்கிறாள் 


"ஏய் நிலவே, இருளே, நீங்கள் எல்லாம் என் மேல் நெருப்பை அள்ளி வீசி அலைந்து கொண்டு இருக்கிறீர்கள். என் உயிரைப் பற்றி உங்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை. நீங்கள் இராமனுடன் பழகுகிறீர்கள் தானே. என் நிலைமை பற்றி அவனிடம் பேச மாட்டீர்களா? "


என்று. 


பாடல் 


தழல் வீசி உலாவரு வாடை தழீஇ

அழல்வீர்; எனது ஆவி அறிந்திலிரோ?

நிழல் வீரை அனானுடனே நெடுநாள்

உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)



தழல் வீசி = நெருப்பை வீசி 


உலாவரு = உலவுகின்ற நீங்கள் 


வாடை தழீஇ = வாடைக் காற்றை தழுவி 


அழல்வீர் = என்னைச் சுடுகின்றீர்கள் 


எனது ஆவி அறிந்திலிரோ? = என் உயிரைப் பற்றி அறிய மாட்டீர்களா? 


நிழல் வீரை அனானுடனே = ஒளி வீசும் அவனுடன் (இராமனுடன்) 


நெடுநாள் = நீண்ட நாள் 


உழல்வீர்; = ஒன்றாகத் தானே இருக்கிறீர்கள் 


கொடியீர்! = கொடுமையானவர்களே 


உரையாடிலிரோ? = அவனுடன் என் நிலைமை பற்றிபேசுவது இல்லையோ ?


வாடைக் காற்றை வீசி நெருப்புப் போல என்ன சுடுகிறீர்கள் என்கிறாள். பாவம். குளிரின் கொடுமையும், பிரிவின் தனிமையும் அனுபவித்தால் தான் தெரியும். 


ஒரே ஒரு முறை குளிர் என்றால் என்ன என்று அறிந்து இருக்கிறேன். 


வட இந்தியாவில் வேலை பார்க்கும் போது, ஒரு தரம் பணி நிமித்தமாக மற்றோர் இடத்துக்கு செல்ல நேர்ந்தது. பணி முடித்து திரும்பி வரும் போது இரயில் தாமதமாக வந்து சேர்ந்தது. நள்ளிரவு இருக்கும். 


இரயில் நிலையத்தில் இருந்து நான் பணி செய்யும் இடம் கிட்டத்தட்ட ஒரு நாற்பது கிமீ இருக்கும். 


பேருந்து எதுவும் கிடையாது அந்த நள்ளிரவில். சரி என்று ஒரு லாரியைப் பிடித்து இருப்பிடம் சென்று கொண்டிருந்தேன். 


முக்கால்வாசி தூரம் வந்த பின், அந்த லாரி ஓட்டுனர், "இதற்கு மேல் நாங்கள் வேறு வழியில் போய் விடுவோம் ...நீங்கள் இங்கே இறங்கிக் கொள்ளுங்கள். வேறு லாரி பிடித்துப் போங்கள்" என்று ஒரு அத்துவான காட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போய் விட்டார். 


குளிர்காலம். - 4 degree C. குளிருக்கு ஏற்ற ஆடை ஒன்றும் இல்லை. வெடவெட என நடுங்குக்கிறது உடம்பு. விரல் எல்லாம் விரைக்கிறது. பெட்டியைத் திறந்து இருக்கிற சட்டை pant எல்லாம் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு போட்டுக் கொண்டேன். கொஞ்ச நேரம் தாங்கியது. பின் மீண்டும் குளிர். வழியில் செல்லும் லாரியை நிறுத்த கை காட்டினால், நிறுத்தாமல் போய் விடுகிறார்கள். போவது மட்டும் அல்ல, அந்த போகும் வேகத்தில் அடிக்கும் குளிர் காற்று இருக்கிறதே....


அப்போது யாராவது ஒரு குவளை சூடான தேனீர் தந்தால் என் இராஜ்யத்தில்  பாதியையும், என் மந்திரியின் மகளையும் அவருக்கு தந்து இருப்பேன். 


அப்படி ஒரு குளிர். எலும்பு வரை எட்டிப் பாய்ந்த குளிர். 


இதைப் படிக்கும் போது, அன்றைய குளிரின் ஞாபகம் வந்தது. 


என்றோ கம்பன் எழுதியது, என்றோ எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்,


இரண்டும், ஒரு புள்ளியில் சந்திப்பது தான் இலக்கியத்தின் அதிசயம்.






Saturday, August 14, 2021

திருக்குறள் - பெய்யெனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய்யெனப் பெய்யும் மழை


தெய்வத்தை தொழ மாட்டாள். கொண்ட கணவனை தொழுது எழுவாள். அவள் "பெய்" என்றால் மழை பெய்யும் என்கிறது அடுத்த குறள். 


பாடல் 


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_14.html


(click the above link to continue reading)




தெய்வம் தொழாஅள் = தெய்வத்தை தொழ மாட்டாள் 


கொழுநன் = கணவனை 


தொழுதெழுவாள் = தொழுது எழுவாள் 


பெய்யெனப் = அவள் பெய் என்று சொல்ல 


பெய்யும் மழை. = மழை பெய்யும் 


மிகவும் சிக்கலான குறள். 


கணவனை மனைவி தொழுதாள் என்பதற்கு அந்தக் காலத்திலும் சான்றுகள் இல்லை. பெண்கள் கோவிலுக்குப் போவதும், இறை வழிபாடு செய்வதும் அன்றும், இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 


தெய்வத்தை தொழாமல், கணவனை தொழும் பெண்கள் பற்றி சில கதைகள் இருக்கலாம்.  அதுவே எல்லோராலும் பின் பற்றப்பற்ற ஒன்று என்று சொல்ல முடியாது. 


பின் ஏன் வள்ளுவர் அப்படி எழுதினார்? 


வள்ளுவர் பெண்மையை சிறுமை படுத்துகிறவர் அல்ல. 


பெண்களை இழிவு படுத்த வேண்டும், அவர்களை ஆண்களின் அடிமைகளாக வைக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்லர். அவர் நினைத்தாலும் அது நடக்காது என்பது வேறு விஷயம். 


பின் ஏன் இந்தக் குறள் இப்படி சொல்கிறது. 


வள்ளுவரை போற்றும் பலரும் இந்த குறளுக்கு உரை சொல்லும் போது தடுமாறத்தான் செய்திருக்கிறார்கள். 


ஒரு வேளை இடைச் செருகலாக இருக்குமோ என்று நினைத்தால் அதற்கும் இடம் இல்லை. காரணம், வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப் பட்ட பல்வேறு நூல்களில் இந்தக் குறள்மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. 



தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாம்

மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து


என்று சிலப்பதிகாரம் பேசுகிறது. 


"பெய்யெனப் பெய்யும் மழை" அருமையான வரி. 


அவள், பெய் என்றால் உடனே மழை பெய்தால் அது எந்த அளவு இன்பமாக இருக்குமோ, அப்படி இன்பமானவள் என்று கூட பொருள் சொல்லிப் பார்த்தார்கள். 


அதெல்லாம் சரி. முதல் வரிக்கு என்ன பதில் என்றால் சரியான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


இதுவரை, அந்த வரிக்கு ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. 


எழுந்து தொழுவாள் என்று கூட சொல்லவில்லை. தொழுது பின் எழுவாளாம். தூக்கத்தை விட்டு எழும்பும் முன்னே தொழுது விடுவாளாம். 


நம் இலக்கியம் அனைத்திலும் கற்புடைய பெண்களின் அபரிமிதமான ஆற்றல் பற்றிப் பேசப் பட்டு இருக்கிறது. 


ஏதோ ஒரு புலவர் பாடினால் மிகைக் கற்பனை என்று விட்டு விடலாம். 


"எல்லை நீத்த இந்த உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்" என்கிறாள் சீதை. 


சொன்னாளே, சுட்டாளா என்று கேட்டால்....


சுட்டுக் காட்டினால் ஒரு பெண். 


கண்ணகி. 


மதுரையை எரிந்து போ என்றாள். எரிந்தது. 


ஆண்கள் யாரும் அப்படி செய்தது மாதிரி தெரியவில்லை. 


"தீயே (அனுமனை" சுடுதியேல்" என்றாள் சீதை. வாலில் இட்ட நெருப்பு அனுமனை சுடவில்லை. 


இயற்கை கட்டுப்பட்டது. 


"நான் கற்புள்ள பெண் என்பது உண்மையானால், சூரியனே நீ நாளை உதிக்காதே" என்றாள் ஒருத்தி, அது உதிக்கவில்லை. 


கதையாக இருக்கலாம். 


கற்பு பலம் தந்திருக்கிறது. 


இந்த அளவு என்பது கற்பனை என்றாலும், ஏதோ ஒரு அளவு தந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். 


கற்பு என்பது கணவனை தொழுவதிலா இருக்கிறது? 


விடை காண முடியாத கேள்வி இது. 


இதற்கு ஆண்கள் என்ன பதில் சொன்னாலும், அது தவறாகவே பார்க்கப் படும். 


யாரவது ஒரு பெண் தான் விளக்கம் சொல்ல வேண்டும். 


"வள்ளுவர் சொன்னது பிழை" என்பதல்ல பதில். நமக்கு புரியாத, தெரியாத எல்லாவற்றையும் பிழை என்று ஒதுக்கி விட முடியாது. 


இவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக எழுதிய வள்ளுவர் பிழை செய்வாரா? 


பின் என்னதான் இதற்கு அர்த்தம்?




Friday, August 13, 2021

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கோபிங்க..அவனை ஒண்ணும் சொல்லாதீங்க

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கோபிங்க..அவனை ஒண்ணும் சொல்லாதீங்க 


அசோக வனத்தில் தனித்து இருக்கும் சீதை புலம்புகிறாள். 


அவளை யாரும் ஒண்ணும் சொல்லவில்லை. இருந்தாலும் அவளுக்கு எல்லோரும் அவளையே குறை சொல்வது போல இருக்கிறது. 


எல்லோரும் என்றால் அங்கே யார் இருக்கிறார்கள். அவள் இயற்கையைப் பார்த்து கேட்கிறாள். 


"ஏய், அறிவு இல்லாத சந்திரனே, கத்தி போல கூர்மையாக வெட்டும் கதிர்களை கொண்ட சந்திரனே, செல்லாமல் அப்படியே நிற்கும் இரவே, குறையாமல் இருக்கும் இரவே, எல்லோரும் என் மேலேயே கோபம் கொள்கிறீர்கள். இராமனை யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டீர்களா?'


என்று கேட்கிறாள். 


பாடல் 



'கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !

செல்லா இரவே !சிறுகா இருளே !

எல்லாம் எனையேமுனிவீர்; நினையா

வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ? 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_13.html


(please click the above link to continue reading)



'கல்லா மதியே ! = கற்காத நிலவே 


கதிர் வாள் நிலவே ! = வாள் போல் கூர்மையாக குத்தும் கதிர்களை கொண்ட நிலவே 


செல்லா இரவே ! = செல்லாமல் அப்படியே இருக்கும் இரவே 


சிறுகா இருளே ! = குறையாமல் இருக்கும் இருளே 


எல்லாம் =எல்லோரும் 


எனையேமுனிவீர் = என்னையே கோபிக்கிறீர்கள் 


நினையா = என்னை நினைக்காமல்  இருக்கும் 


வில்லாளனை = இராமனை 


யாதும் விளித்திலிரோ ?  = யாரும் கூப்பிட்டு சொல்ல மாட்டீர்களா ?


கல்லா மதி - பாவம் இந்த பெண் தனியாக தவிக்கிறாளே என்று இரக்கம் காட்டாமல் அவளை படுத்துவதால், கல்லா மதி 


கதிர் வாள் நிலவு = குளிர்ந்த நிலவின் கதிர்கள் வாள் போல அறுக்கிறது 


செல்லா இரவு - நீண்டு கொண்டே போகும் இரவு. போய்த் தொலைய மாட்டேன் என்கிறது. 


சிறுகா இரவே - வெளிச்சம் வந்தால் இரவு குறைந்து முடியும். இது எங்க முடியுது? 


என்னை வந்து சிறை மீட்டிக் கொண்டு போகச் சொல்லி இராமனிடம் சொல்லாமல் என்னையே எல்லாரும் குறை சொல்லுங்க என்று அங்கலாய்க்கிறாள் சீதை. 


ஒரு வேளை இராமன் வில்லுக்குப் பயந்து அவனிடம் சொல்லாமல் மறைந்து இருக்கின்றனவோ என்று நினைக்கிறாள். 


இனிமையான பாடல்...


சோகத்திலும் ஒரு சுகம்...




Thursday, August 12, 2021

திருக்குறள் - பெண்ணின் பெருந்தக்க யாவுள

 திருக்குறள் - பெண்ணின் பெருந்தக்க யாவுள


வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 


முதலில் குறளைப் பார்த்து விடுவோம். இது கொஞ்சம் சிக்கலான குறள். 


பாடல் 


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_72.html


(please click the above link to continue reading)


பெண்ணின் = பெண்ணைப் போல 


பெருந்தக்க = பெருமையுள்ளது 


யாவுள = எது இருக்கிறது? (ஒன்றும் இல்லை) 


கற்பென்னும் = கற்பு என்கின்ற 


திண்மையுண் டாகப் பெறின் = கலங்கா அல்லது உறுதி உண்டாகப் பெற்றால் 


இதற்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.  சில உரைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவும் உள்ளன. 


சற்று ஆழ்ந்து யோசிக்க வேண்டிய குறள் இது. 


கற்பு என்ற உடனேயே கொடி பிடிப்பவர்கள் வந்து விடுவார்கள். ஏன், பெண்ணுக்கு மட்டும் தான் கற்பா ? ஆணுக்கு கற்பு வேண்டாமா? என்று ஆரம்பித்து விடுவார்கள். இது பெண்களை அடிமைப் படுத்தும் குறள் என்று சிலர் குரல் கொடுக்கலாம். 


இங்கே பெண் என்பது மனைவியைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம், அதிகாரம் வாழ்கை துணை நலம். எனவே, இங்கே பெண் என்பதை மனைவி என்று சொல்வது சரியாக இருக்கும். 


கற்புள்ள மனைவியை விட ஒருவன் வேறு என்ன சிறப்புப் பொருளை பெற்று விட முடியும்?  என்று பொருள் விரியும். 


ஒருவனுக்கு ஆகச் சிறந்த உயர்ந்த, சிறந்த பொருள் என்பது கற்புள்ள மனைவிதான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்கிறார். இது முந்திய இரண்டு குறள்களோடு இயைந்து வருகிறது. 


இங்கே வள்ளுவர், 


பெண்ணின் பெருந்தக்க யாவுள  கற்பு உண்டாகப் பெறின் 


என்று சொல்லவில்லை. கற்பு எனும் திண்மை உண்டாகப் பெறின் என்கிறார்.


கற்பு என்ற கலங்கா நிலை, உறுதியான நிலை. 


துன்பம் வந்தாலும், சிக்கல்கள் வந்தாலும் கலங்காமல், உறுதியாக இருக்கும் தன்மை. 


மேலும்,


கணவனோ, பிள்ளைகளோ தவறு செய்வார்களேயானால், உறுதியாக அவர்களை திருத்தும் தன்மை.  கணவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்கிறான் என்றால், நல்லது தானே, கார், வீடு, நகை கிடைக்கிறது என்று மகிழாமல் இது தவறான வழியில் வரும் பணம், இது நமக்கு வேண்டாம் என்று கணவனை திருத்தி நல் வழி படுத்தும் தன்மையுள்ள  பெண் மனைவியாக வந்து விட்டால, அதை விட பெரிய சிறப்பு ஒருவனுக்கு என்ன இருக்க முடியும். 


பல ஆண்கள் தவறு செய்ய அடிப்படை காரணம் பெண்ணின் ஆசை. "உங்க அளவு தான படித்து இருக்கிறார் அவர், அவரைப் பாருங்கள் வீடு, காருன்னு எப்படி வசதியாக இருக்கிறார் ..." என்று மனைவி ஆரம்பித்து விட்டால், ஒரு நாள் அல்லது ஒரு நாள் கணவன் தவறு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. 


"வீடு வாங்கித் தா, நகை வாங்கித் தா, வெளிநாட்டுக்கு சுற்றுலா கூட்டிக் கொண்டு போ" என்று முடிவில்லா பட்டியலை நீட்டினால், கணவன் என்ன செய்வான் ?


இதுதான் வரவு, இதற்குள் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று ஒரு பெண் முடிவு எடுத்து விட்டால், அதை விட சுவர்க்கம் என்ன இருக்கிறது. 


"பெறின்" என்றால் "அமைந்தால்", "கிடைத்தால்" என்று பொருள். 


பொதுவாக கிடைக்காது என்று அர்த்தம். 


எனக்கு லாட்டரியில் பத்து கோடி விழுந்தால்,  நான் படித்த பள்ளிக்கு ஒரு இலட்சம் நன்கொடை தரலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னால், ஒரு இலட்சம் தருவது நடக்காது என்று புரிகிறது அல்லவா? 


ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் படித்தால், நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையலாம். 


படிக்கணுமே.


பெறின் என்பதன் அர்த்தத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.