Monday, November 8, 2021

கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல்

 கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல் 


வாழ்க்கை யாரை எங்கே எப்படி கொண்டு சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயம் குப்பை காகிதம் கோபுர உச்சிக்கும் போய் விடும். 


நம்மை விட குறைந்தவர்களை, அவர்கள் சாதரணமானவர்கள் என்று நினைத்து நாம் அவர்களுக்கு ஏதோ தீமை செய்தால், அதை அவர்கள் மனதில் வைத்து இருந்து சரியான நேரத்தில் நமக்கு மிகப் பெரிய தீமையை செய்து விடுவார்கள். நம்மால் தாங்க முடியாது. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் வழங்கினான். 

அப்போது இராமன் சொல்கிறான் 


"சிறியர் என்று எண்ணி மற்றவர்களுக்கு துன்பம் செய்து விடாதே. அப்படி செய்ததால், கூனி என்ற ஒரு கிழவி எனக்கு செய்த தீமையால் நான் துயரம் என்ற கடலில் வீழ்ந்தேன்"


என்றான். 


பாடல் 


'சிறியர் என்று இகழ்ந்து நோவு

      செய்வன செய்யல்; மற்று, இந்

நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை

      இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,

குறியது ஆம் மேனி ஆய

      கூனியால், குவவுத் தோளாய்!

வெறியன எய்தி, நொய்தின் வெந்

      துயர்க் கடலின் வீழ்ந்தேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_8.html


(please click the above link to continue reading)



'சிறியர் என்று = நம்மை விட அறிவில், பணத்தில், அதிகாரத்தில், சிறியவர்கள் என்று எண்ணி 


இகழ்ந்து = அவர்களை இகழ்வாகப் பேசி 


நோவு செய்வன செய்யல் = துன்பம் தருவனவற்றை செய்யாதே 


மற்று, = மேலும் 


இந்நெறி இகழ்ந்து = இந்த வழியை மறந்து 


யான் = நான் (இராமன்) 


ஓர் தீமை இழைத்தலால் = தீமை செய்ததால் 


உணர்ச்சி நீண்டு = அந்த பகைமை உணர்ச்சியை நீண்ட நாள் மனதில் வைத்து இருந்து 


குறியது ஆம் மேனி ஆய = குறுகிய வடிவை உடைய 


கூனியால் = கூனியால் 


குவவுத் தோளாய்! = திரண்ட தோள்களை உடையவனே (சுக்ரீவனே) 


வெறியன எய்தி = துன்பத்தினை அடைந்து 


நொய்தின்  = வருந்தி 


வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். = துன்பம் என்ற கடலில் வீழ்ந்தேன் 


யோசித்துப் பார்த்து இருப்பானா இராமன். 


சக்ரவர்த்தி திருமகன் அவன். 


அவளோ அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு கூன் விழுந்த கிழவி. 


அவளால் என்ன செய்ய முடியும்?


ஆனால், அவள் சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டாள். 


தசரத சக்ரவர்த்தி இறந்தான். இராமன் கானகம் போனான். சீதையும், இலக்குவனும் காடு போனார்கள். இராமன் அரசை இழந்தான். இருக்க இடம் இன்றி, உடுத்த துணி இன்றி காட்டில் பதினாலு வருடம் அலைந்தான். 


பரதன் அரசை ஏற்கவில்லை. இராமன் பாதுகையை வைத்து, அயோத்திக்கு வெளியே இருந்து ஆட்சி செய்தான். 


வாலி இறந்தான். 


இராவணன் இறந்தான். கும்பகர்ணன், இந்திரசித்து போன்றோர் இறந்தனர். 


எல்லாம் யாரால்? அந்தக் கூனியால். 


பெரிய பிழை ஒன்றும் இல்லை. மண் உருண்டை வைத்து அவள் கூன் முதுகில் இராமன் அம்பு விட்டான், சிறு வயதில். 


அது பொறுக்காமல் அந்தக் கூனி இவ்வளவு செய்தாள்.


பெரிய பெரிய படைகள் சாதிக்க முடியாதவற்றை அந்த பெண் தனி ஒரு ஆளாக நின்று செய்தாள். 


வீட்டு வேலை செய்பவர்களை, வண்டி ஓட்டுபவர்களை, காவல்காரர்களை, கீழே வேலை செய்பவர்களை, யாராக இருந்தாலும், அவர்களுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதிலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழே பலர் இருப்பார்கள். என்றோ ஒரு மறதியில், அசதியில் தவறு இழைத்து விட்டால் பின் ஆயுள் முழுவதும் வருந்த வேண்டி இருக்கும்.  இராமன் வருந்தியதைப் போல. 


சில சமயம் அவர்கள் நமக்கு தீமை செய்தார்கள் என்று கூடத் தெரியாது. இல்லாததும் பொல்லாததும் சொல்லக் கூடாத இடத்தில் போய் சொல்லி விடுவார்கள். நாம் செய்யாததை, சொல்லாததை செய்ததாகவும், சொன்னதாகவும் திரித்துச் சொல்லி நம்மை சிக்கலில் மாட்டி வைத்து விடுவார்கள். 


சிறியாரை இகழேல் என்று தன் அனுபவத்தை பாடமாக்கிச் சொல்கிறான் இராமன். 


படிப்போம். 



Sunday, November 7, 2021

ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம்

 ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம் 


கவிதை என்பது ஒரு அனுபவம். அதை அனுபவித்துத் தான் அறிய முடியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உரை சொல்லி விடலாம். எல்லா சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து விட்டால், கவிதை புரிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. 


ரோஜா மலரின் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாக பியித்து பியித்து பார்த்தால் இறுதியில் காம்புதான் மிஞ்சும். 


ஒரு குழந்தையின் அழகு எங்கே இருக்கிறது? அதன் கண்ணிலா? மூக்கிலா? என்று தேடக் கூடாது. 


சொல்லின் அர்த்தம் தெரியாமல் அழகு புரியுமா என்றால் புரியாதுதான். ஆனால், சொல்லின் அர்த்தம் மட்டும் அல்ல கவிதையின் அழகு. 


பலபேர் சொல்லின் அர்த்தத்தோடு நின்று விடுகிறார்கள். 


எந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்? இதுவா அர்த்தம்? அது கூட சரியாக வரும் போல் இருக்கிறதே? அப்படிச் சொன்னால் என்ன? என்று சொல்லுக்குள் நின்று விடுகிறார்கள். 


பாடல் 


இலக்கணக் கவிஞர் சொல்லின்பம் தேடுவர்

மலக்கும்சொல் தேடுவர் வன்க ணாளர்கள்

நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டதீ

தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_7.html


(Please click the above link to continue reading)



இலக்கணக் கவிஞர் = நெறிமுறை அறிந்த கவிஞர்கள் 


 சொல்லின்பம் தேடுவர் = சொல்லின் இன்பத்தைத் தேடுவார்கள் 


மலக்கும் சொல் = மயக்கும் சொற்களை 


தேடுவர் வன்க ணாளர்கள் = தேடுவார்கள் கீழானவர்கள் 


நிலத்துறும்  கமலத்தை நீளும் வண்டத் = நிலத்தில் உள்ள வண்டு நீரில் உள்ள கமலத்தை (தாமரையை) நாடி அதில் உள்ள தேனை அனுபவிக்கும் 


ஈ = வண்டு 


தலைக்குறை = முதல் குறைந்த 


கமலத்தைச் = கமலத்தை 


சாரும் தன்மைபோல் = தேடுவதைப் போல 


ஔவையார் குசும்பு.


தலைக்குறை என்றால் தலை இல்லாத. அல்லது தொடக்கம் இல்லாத. 


கமலம் - இதில் முதல் எழுத்து இல்லை என்றால்? 


மலத்தை தேடும் ஈ போல என்று அர்த்தம். 


வார்த்தைகளை விட்டுவிட வேண்டும். அர்த்தத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


என்னைக் கேட்டால், கவிதையின் அர்த்தத்தையும் விட்டுவிடலாம். கவிஞனின் மனதை, அவன் உணர்சிகளை பிடிக்க வேண்டும். 


அபிராமி பட்டர் சொல்லுவார் 


"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே" என்று அபிராமியை. 


மூப்பு இல்லாத முகுந்தனுக்கு இளையவள் என்றால் என்ன அர்த்தம் என்று மண்டையை போட்டு கசக்கக் கூடாது. 


அவருக்கு, அவள் எப்போதும் இளமையானவள். அவளுக்கு வயதே ஆகாது. அதை எப்படியோ சொல்கிறார். வார்த்தைகளை தாண்டி உணர்சிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


அது தான் சொல்லின் இன்பம். 


மனைவி செய்த சமையலின் சுவை அவள் தரும் உணவில் இல்லை. அதை நமக்காக நேரம் செலவழித்து, பொறுமையாக, ஒவ்வொரு பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்யும் கனிவில் இருக்கிறது. அந்த அன்பு மனம் புரிந்தால் சமையல் சுவைக்கும். இதில் உப்பு இல்லை, அதில் காரம் கூட இருக்கிறது என்று சொல்லுவது அந்த ஈயை போன்ற செயல். 


அப்பா அல்லது அம்மா, பிள்ளையைத் திட்டுகிறார்கள். சொல்லின் அர்த்தத்தைக் கொண்டா அதைக் கணிப்பது. நாம் நன்றாக வேண்டும் என்ற காதலில் அல்லவா திட்டுகிறார்கள் என்ற அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். 


கவிதையை புரிந்து கொள்ள முயல்வதெல்லாம் ஒரு வாழ்க்கைப் பயிற்சி. 




Saturday, November 6, 2021

திருக்குறள் - இன்புற்றார் எய்தும் சிறப்பு

 திருக்குறள் -  இன்புற்றார் எய்தும் சிறப்பு


குடும்ப வாழக்கை வாழும் போதே எல்லாவற்றையும் விட்டு விட்டு, சுவர்க்கம் போகணும், வைகுண்டம் போகணும், கைலாசம் போகணும் என்று நினைக்கிறோம். 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நம்மை போல் எத்தனை பேர் எத்தனை யுகமாக இப்படி வேண்டி அங்கு போய் இருப்பார்கள். எவ்வளவு பெரிய கூட்டமாக இருக்கும்? அதில் போய் என்ன செய்வது?


சுவர்க்கம் என்றால் ஒரே ஒரு ஊர்வசி, ஒரே ஒரு இரம்பை...முப்பது முக்கோடி தேவர்கள்.  அவர்கள் ஆட்டத்தை எத்தனை நாள் தான் இரசிப்பது? 


சலிப்பு வராதா? அலுத்துப் போகாதா? அப்புறம் என்ன செய்வது? அதற்கு மேல் எங்கே போவது? பெரிய பிரச்னை அல்லவா அது. 


வள்ளுவர் சொல்கிறார், அதையெல்லாம் விடுங்கள். 


இந்த உலகில் அன்பு செய்யுங்கள். அதை விட பெரிய சுவர்க்கம் இல்லை. 


கட்டிய கணவன், மனைவி மேல் அன்பு செய்யத் தெரியாதவர்கள் எப்படி காணாத கடவுள் மேல் அன்பு செய்யப் போகிறார்கள். 


அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, நட்பு, உறவு, சுற்றம், பேரன், பேத்தி, அத்தை, மாமா என்று ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அன்பை அள்ளிக் கொட்ட, திகட்ட திகட்ட முகர்ந்து கொள்ள. 


அதை விடவா சுவர்க்கம் சுகமாக இருக்கப் போகிறது. 


உடன் பிறப்பிடமும், நட்பிலும் அன்பு பரிமாறத் தெரியாதவன் முன்ன பின்ன தெரியாத தேவர்கள் மத்தியில் போய் என்ன செய்வான்? 


அன்பு பரிமாறும் வித்தை தெரிந்து விட்டால் இந்த வாழ்க்கை தான் சுவர்க்கம். 


பாடல் 


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_6.html


(Please click the above link to continue reading)


அன்புற்று  = அன்பு கொண்டு 


அமர்ந்த = இல்லறத்தோடு 


வழக்கு  = கூடிய வாழ்வின் நெறி என்று


கென்ப  = என்ப, என்று சொல்லுவார்கள் 


வையகத்து = உலகில் 


இன்புற்றார் = இன்பம் அடைந்தவர்கள் 


எய்தும் சிறப்பு  = அடையும் சிறப்பு. 


இந்தப் குறளின் அர்த்தத்தை பரிமேலழகர் கண்டு சொல்கிறார். நாம் தலையால் தண்ணி குடித்தாலும் அந்த உரையின் பக்கம் கூட போக முடியாது. அவ்வளவு ஆழமான சிந்தனை.


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


என்ற குறளில், "அன்புற்று அமர்ந்த" என்பதில் அன்புற்று என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "அமர்ந்த" ?


இந்தக் குறள் இல்லறவியலில் இருக்கிறது. எனவே, அமர்ந்த என்றால் "இல்லறத்தில் ஈடுபட்டு" என்று பொருள் கொள்கிறார். 


சரி. "வழக்கு" என்றால் என்ன? 


வழக்கு என்றால் "இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்" என்று பொருள் சொல்கிறார். 


அன்புற்று அமர்ந்த வழக்கு என்றால் அன்பு கொண்டு இல்லறத்தோடு கூடிய நெறியின் பயன் என்று வந்து விட்டது. 


அடுத்து வருவதுதான் பரிமேலழகர் உச்சம் தொடும் இடம்.


"இன்புற்றார் எய்தும் சிறப்பு".  இன்புற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு, துன்பமே இல்லாமல், எப்போதும் இன்பத்தில் இருப்பவர்கள், அதாவது தேவர்கள். அவர்கள் நம்மை விட இன்பமாக இருப்பவர்கள் அல்லவா? 


அது எப்படி இன்புற்றார் என்றால் தேவர்கள் என்று கொள்ள முடியும்? என் பக்கத்து வீட்டுக்காரன்  கூட எப்போதும் இன்பமாகத்தான் இருக்கிறான். ஏன் அவனைச் சொல்லக் கூடாது என்று கேள்வி எழும் அல்லவா?


"சிறப்பு" என்றால் என்ன? சிறந்தது, சிறப்பு எனப்படும் அல்லவா. ஐந்து உருபாயையை விட பத்து உருபாய் சிறந்தது. மிதி வண்டியை விட ஆகாய விமானம் சிறந்தது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று சிறந்தது என்று சொல்லிக் கொண்டே போனால், எல்லாவற்றையும் விட சிறந்தது எது?


அதைத்தான் பேரின்பம் என்கிறோம். நீண்ட இன்பம், முடிவில்லா இன்பம். துன்பம் கலக்காத இன்பம். 


அந்த பேரின்பத்தை அடைந்தவர் யார்?  


தேவர்கள். 


எனவே "இன்புற்றார் அடையும் சிறப்பு" என்றால் தேவர்கள் அடையும் சிறப்பு என்று பொருள் கொள்கிறார். 


எனவே அன்போடு இல்லற நெறியின் கண் வாழ்வதின் பயன் தேவர்கள் அடையும் பேரின்பம் என்று பொருள். 


அப்படின்னு யார் சொல்கிறார்கள்? அப்படி யாரும் சொன்ன மாதிரி தெரியவில்லையே?


என்னைக் கேட்டால் மூன்று வேளையும் நல்லா சுவையான உணவை சாப்பிடுவதுதான் சிறப்பு என்பேன்.


பரிமேலழகர் சொல்கிறார் "என்ப" என்றால் அறிவுடையோர் சொல்லுவர் என்று அர்த்தம் என்று. 


இப்படி வாழ்ந்தால் அப்படிபட்ட இன்பம் அடையலாம் என்று அறிவுடையோர் கூறுவார். 


அப்படி கூறாதவர்கள் யார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம். 



அன்பு செய்யுங்கள். மேலும் மேலும் அன்பு செய்து கொண்டே போங்கள். இல்லறம் என்பது அன்பு செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பு. 


நேற்றை விட இன்று கொஞ்சம் அதிகம் அன்பு செய்ய வேண்டும். இன்றை விட நாளை. 







Friday, November 5, 2021

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய்

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய் 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் கூறுகிறான். 


இது அரசனுக்கு கூறியது தானே, நமக்கு எதற்கு என்று நினைக்க வேண்டியது இல்லை. இது எந்தப் பொறுப்பில் உள்ளவர்க்கும் பொருந்தும். 


எவ்வளவு பெரிய அறங்களை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். 


யோசித்துப் பார்ப்போம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு சொல்வதென்றால் என்ன சொல்லுவோம்? 


எவ்வளவோ சொல்லலாம். எதைச் சொல்வது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். 


கடுமையான உழைப்பு, நீதி, நேர்மை, என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள். 



பாடல் 


 செய்வன செய்தல், யாண்டும்

      தீயன சிந்தியாமை,

வைவன வந்தபோதும் வசை

      இல இனிய கூறல்,

மெய்யன வழங்கல், யாவும்

      மேவின வெஃகல் இன்மை,

உய்வன ஆக்கித் தம்மோடு

      உயர்வன:  உவந்து செய்வாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



செய்வன செய்தல் = செய்ய வேண்டியதை செய்து விட வேண்டும். ஒரு பொறுப்பு என்று வந்து விட்டால் அதை முடிக்க வேண்டும். வினை முடித்தல். யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து விட வேண்டும். 


யாண்டும் = எப்போதும் 

தீயன சிந்தியாமை = தீயவற்றை சிந்திக்கக் கூட கூடாது. 


வைவன வந்தபோதும் = ஒரு பொறுப்பில் இருந்தால், நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். ஒருவன் நல்லது என்பான். அதையே ஒருவன் கெடுதல் என்று வைவான். பொது வாழ்வில் இதெல்லாம் இயற்கை.  


வசை  இல இனிய கூறல், = அப்படியே ஒருவன் வைத்தாலும், பதிலுக்கு திட்டாமல், இனியவற்றை கூற வேண்டும். அரசாங்கம் என்றால் மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு கடுமையான விமரிசனம் என்றாலும் பொறுத்துக் கொண்டு இனிய பேச வேண்டும். 


மெய்யன வழங்கல்  = எது சரியோ அதைச் செய்ய வேண்டும். பிடித்தவன், பிடிக்காதவன் என்று பாராபட்சம் பார்க்காமல், உண்மை எதுவோ, எது சரியோ, அதைச் செய்ய வேண்டும். 



யாவும் மேவின வெஃகல் இன்மை = வெஃகல் என்றால் பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளுதல். அரசனிடம் ஏராளமான அதிகாரம் இருக்கும். யாரிடம் இருந்தும் எதையும் தன் அதிகாரத்தால் பறிக்க முடியும். அப்படி செய்யக் கூடாது என்கிறார். பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், சொத்து வைத்து இருப்பவர்களை மிரட்டி அவர்கள் பொருள்களை பறிக்கக் கூடாது. பறிக்க நினைக்கவே கூடாது என்கிறார். 

 

உய்வன ஆக்கித்  = உய்தல் காப்பாற்றுதல். 


தம்மோடு உயர்வன = இந்த நல்ல குணங்கள் இருக்கின்றனவே, அவை என்ன செய்யும் என்றால் யார் அவற்றை கடைப் பிடிகிறார்களோ அவர்களை காக்கும். அது மட்டும் அல்ல அவர்களை தங்கள் உயரத்துக்கு உயர்த்தும். அவை கை பிடித்து மேலே தூக்கி விடும். தாமும் உயர்ந்து, தங்களை கடைப் பிடிப்பவர்களையும் உயர்த்தும். 


 உவந்து செய்வாய். = இவற்றை மன மகிழ்ச்சியோடு செய்வாய். அது தான் சிக்கல். நாமாக இருந்தால் என்ன செய்வோம்...."இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு...நடை முறை சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விடுவோம். அல்லது, செய்ய வேண்டுமே என்று கடனே என்று செய்வோம். 


நல்ல காரியங்களை மன மகிழ்ச்சியோடு, விருப்பத்தோடு செய். 


விரதம் இருப்பது நல்லது என்றால், அதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். 


உடற் பயிற்சி நல்லது என்றால் அதை செய்வதில் ஒரு உற்சாகம் வேண்டும். மூக்கால் அழுது கொண்டே செய்யக் கூடாது. 


தானம் செய்வது என்றால் விருப்பத்தோடு செய்ய வேண்டும். 


செய்வதில் மகிழ்ச்சி இல்லை என்றால் செய்ய மாட்டோம். கொஞ்ச நாள் செய்வோம் அப்புறம் விட்டு விடுவோம். விருப்பம் இருந்தால் மேலும் மேலும் செய்வோம். 


அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை. விரும்பிச் செய்ய வேண்டும். 



நல்லவற்றை செய்வதில் விருப்பம் இருக்க வேண்டும். 


"உவந்து செய்வாய்" என்கிறான் இராமன். 



Wednesday, November 3, 2021

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள்

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள் 


நம்மிடடையே முன்பு ஒரு வழக்கம் இருந்து. அதாவது, எந்த நல்ல காரியம் நடந்தாலும், நடக்க இருந்தாலும், அதற்கு சம்பந்தப் பட்டவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை, அறவுரை வழங்குவார்கள். திருமணம், முடி சூட்டுதல் போன்ற நிகழ்வுகளில் பெரியவர்கள் நல்லவற்றை எடுத்துச் சொல்லும் வழக்கம் இருந்தது. 


சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். கேட்கணுமே? இப்போதெல்லாம் யார் கேட்கிறார்கள்? சொல்லும் பெரியவர்களும் இல்லை, கேட்கும் ஆட்களும் இல்லை. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியாகி விட்டது. 


அவனுக்கு இராமன் சில நல் உரைகளை வழங்குகின்றான். 


வசிட்டரிடமும், கௌசிகனிடமும் படித்த இராமன் சொல்கின்றான் என்றால் அது எவ்வளவு உயர்வாக இருக்கும். சுக்ரீவனுக்கு சொல்வது போல கம்பர் நமக்கும் சொல்கிறார். 


அரசாங்கத்தில் பணம் வந்து குவியும். இன்றெல்லாம் இத்தனை இலடசம் கோடி என்று சொல்கிறார்கள். அவ்வளவு பணம் வரும் போது அதன் அருமை தெரியாது. இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், என்று மனம் போன வழியில் செலவழிக்கத் தோன்றும். அதுதான் ஆற்று வெள்ளம் போல வந்து கொண்டே இருக்கிறதே என்ற அலட்சியம் வரும். அப்படி இருக்காதே. பொதுப் பணத்தை மிக மிக கவனமாக கையாள வேண்டும். 


இரண்டாவது, இந்த உலகில் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். நட்பு, பகை இதுதானே நமக்குத் தெரியும். மூன்றாவது ஒன்று இருக்கிறது. நட்பும் இல்லாமல், பகையும் இல்லாமல். அதற்கு நொதுமல் என்று பெயர். தெருவில் ஒருவர் போகிறார். அவருடன் எனக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை. எல்லாம் துறந்த முனிவர்களுக்கே இந்த மூன்று பேரும் உண்டு என்றால் அரசனுக்கு சொல்லவா வேண்டும்? எனவே, மக்களை சரியாக இனம் பிரித்து நடந்து கொள்.இல்லை என்றால் பெரும் துன்பம் வரும்.


பாடல் 



 தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்

      அறு செல்வம்அஃது உன்

காவலுக்கு உரியதுஎன்றால், அன்னது

      கருதிக் காண்டி;

ஏவரும் இனிய நண்பர்,

      அயலவர், விரவார், என்று இம்

மூவகை இயலோர் ஆவர்,

      முனைவர்க்கும் உலக முன்னே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_3.html


(Pl click the above link to continue reading)



தேவரும் = தேவர்களும் 


வெஃகற்கு ஒத்த = விருப்பப்படும் 


செயிர் அறு செல்வம்  = குறம் அற்ற செல்வம் 


அஃது உன் = அது உன் 


காவலுக்கு உரியது என்றால் = காவலில் உள்ளது என்றால் 


அன்னது = அதை 


கருதிக் காண்டி; = கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள் 


ஏவரும்  = எல்லோருக்கும் 


இனிய நண்பர் =  நட்பு 


அயலவர் = நட்பு அல்லாதவர் 


விரவார் = நொதுமல் உடையார் 


என்று = என்று 


இம் மூவகை இயலோர் ஆவர் = இந்த மூன்று வகையான மக்கள் 


முனைவர்க்கும் = முனிவர்களுக்கும் 


உலக முன்னே = இந்த உலகத்தில் உண்டு 



மக்கள் வரிப் பணத்தை கண்ணும் கருத்துமாக காவல் செய்.  இந்த ஒரு வரியை எல்லா அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கடை பிடித்தால் நாடு எப்படி இருக்கும்? ஒரு வரி. 


மக்களை தெரிந்து எடுத்து உறவு கொள். 


நல்ல அறிவுரைத்தானே?


நமக்கும் பொருந்தும் தானே?



Tuesday, November 2, 2021

திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக இனிமையானது

 திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக  இனிமையானது 


இந்த உலகம் மிக இனிமையானது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? 


என்ன இனிமை? எப்பப் பாரு ஏதாவது ஒரு சங்கடம், சிக்கல், துக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள். சுற்றுப் புற சூழ்நிலை மாசு. அரசாங்கங்கள் செய்யும் அராஜாகங்கள். 


வேலை செய்யும் இடத்தில் சிக்கல், போட்டி, பொறாமை, சூது. 


வீட்டில் உறவுகளில் சிக்கல்.


இப்படி எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் நிறைந்து கிடக்கிறது. இடையிடையே சில சந்தோஷங்கள் வந்தாலும், பெரும்பாலும்  துன்பமே மண்டிக் கிடக்கிறது. 


எது எப்படி இருந்தாலும், முதுமை வந்து விட்டால் பலப்பல துன்பங்கள். 


இருந்தும், மணிவாசகர் சொல்கிறார்....


மேலுலகத்தில் உள்ள தேவர்கள் எல்லாம் "ஐயோ, நாம் பூமியில் போய் பிறக்கவில்லையே" என்று வருந்துகிரார்களாம். இப்படி அனாவசியாம இந்த மேலுலகத்தில் நேரத்தை வீணே கழித்துக் கொண்டு இருக்கிறோமே என்று வருந்துகிரார்களாம். 


திருமாலுக்கும், பிரமனுக்கும், சிவனுக்கும் இங்கு வருவதில் அவ்வளவு விருப்பமாம். அவர்களே அங்கு போகும் போது, நாமும் அங்கு போனால் என்ன மறைய தேவர்களும் விரும்புவார்களாம். 


பாடல் 


புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_2.html


(pl click the above link to continue reading)



புவனியிற் = இந்த பூ உலகில் 


போய்ப்பிற வாமையின் = போய் பிறக்காமல் 


நாள்நாம் = நாட்களை நாம் 

போக்குகின் றோம் = போக்கிக் கொண்டு இருக்கிறோம் 


அவ மே = அனாவசியமாக 


யிந்தப் பூமி = இந்த பூமி 


சிவனுய்யக் = சிவன் நம்மை காக்க 


கொள்கின்ற வாறென்று = ஏதுவான இடம் என்று 


 நோக்கித் = நோக்கி 


திருப்பெருந் துறையுறை வாய் = திருப்பெரும்துறை என்ற தலத்தில் உறைபவனே 


திரு மாலாம் = திருமால் 


அவன்விருப் பெய்தவும்  = அவருக்கும் விருப்பம் இங்கே வர 


மலரவன் = தாமரை மலரில் வீற்று இருக்கும் பிரமன் 


ஆசைப் படவும்  = இங்கு வர ஆசைப் படவும்


நின்  = உன் 


அலர்ந்த = மலர்ந்த 


மெய்க் கருணையும் = உயர்ந்த கருணையும் 


 நீயும் = நீயும் 


அவனியிற் புகுந் = இந்த உலகில் புகுந்து 


தெமை ஆட்கொள்ள வல்லாய் = எங்களை ஆட்கொள்ள வல்லவன் 


ஆரமு தே = அருமையான அமுதமே 


பள்ளி எழுந்தரு ளாயே. = பள்ளி எழுந்து அருளாயே 


மூவரும் இங்கு வந்து நம்மை ஆட்கொள்ள மிக விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 


அவர்களுக்கே பிடித்து இருக்கிறது என்றால், இது ஒரு நல்ல இடமாகத்தானே இருக்கும்?


நமக்கு அருமை தெரியவில்லை. 


இரசிப்போம். அவ்வளவு இனிமையானது இந்த பூமி. 




Monday, November 1, 2021

திருக்குறள் - நாடாச் சிறப்பு

 திருக்குறள் - நாடாச் சிறப்பு 


"அவனுக்கு படிப்பில் அவ்வளவா ஆர்வம் இல்லை. ஆனால் விளையாட்டில் நல்ல ஆர்வம் இருக்கு" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒருவர் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்புறம் என்ன ஆகும்? அந்த அன்பு எப்படி மேலும் வளரும்? அந்த அன்பு என்ன செய்யும்? அன்பு எங்கு போய் முடியும்? அன்புக்கு வளர்ச்சி உண்டா அல்லது அது எப்போதும் ஒரே மாதிரி இருக்குமா?


இது போன்ற ஆராய்சிகளை எடுத்து வைத்துக் கொண்டு, வள்ளுவர் பதில் தருகிறார். 


நாம் சிந்திதாவது இருப்போமா? அன்பு செய்கிறோம்....அவ்வளவுதான் தெரியும். அதுக்கு மேல என்ன என்று சிந்தித்து இருக்க மாட்டோம். மிஞ்சி மிஞ்சி போனால் பதிலுக்கு அன்பை எதிர்பார்ப்போம். அவ்வளவுதான். 


வள்ளுவர் அன்பின் பரிணாமத்தை மிக பெரிதாக விவரிக்கிறார். 


என்ன என்று பார்ப்போம். 


பாடல் 


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post.html


(please click the above link to continue reading)



அன்புஈனும் ஆர்வம் உடைமை  = அன்பு ஆர்வம் உடைமையைத் தரும் 

 

அதுஈனும் = அந்த ஆர்வம் உடைமை 


நண்பென்னும் = நண்பு என்று சொல்லப்படும் 


நாடாச் சிறப்பு = தேடாத சிறப்பைத் தரும் 


அன்பு ஆர்வத்தைத் தரும். ஆர்வம் நண்பைத் தரும் என்கிறார். இதில் என்ன இருக்கிறது ?


அன்பு என்பது நமக்கு தொடர்பு உடையவர் மேல் நாம் கொள்ளும் பரிவு, பாசம், நேசம். 


ஆர்வம் என்பது அந்தத் தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள் மேல் செலுத்தும் பரிவு, பாசம், நேசம் எல்லாம்.


அது என்ன தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள்? 


நமக்கு நம் பிள்ளைகள் மேல் அன்பு இருக்கும். பிள்ளைகள் வளர்கிறார்கள். அக்கம் பக்கம் இருக்கும் இருக்கும் மற்ற பிள்ளைகளோடு விளையாடுகிறார்கள். இவர்கள் அவர்கள் வீட்டுக்குப் போகிறார்கள். அவர்கள் நம் வீட்டுக்கு வருகிறார்கள். 


சில வருடங்கள் கழித்து, அந்த நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு பெண் பிள்ளையை, நம் பையன் மணந்து கொள்கிறான். இப்போது அந்த பெண் மேல் தனி பாசம் வருகிறது அல்லவா? நேற்று இல்லாத பாசம் இன்று. காரணம், மகனின் மனைவி என்பதால். 


அதே போல் மருமகனுக்கும். 


யாரோ ஒரு பெண். அவள் மேல் அன்பு வருகிறது அல்லவா?


அந்தப் பெண்ணின் தாயார், தந்தை மேல் நமக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. அவர்களுக்கு ஒன்று என்றால் முன்னே போய் நிற்கிறோம். அந்தப் பெண்ணின் உடன் பிறப்பு மேலும் நமக்கு அக்கறை வருகிறது. ஒரு நாள் அந்தப் பெண், "என் கல்லூரியில் என்னோடு படித்தவர்கள்" என்று சில நண்பர்களை அழைத்து வருகிறாள். நாம் அவர்கள் மேலும் ஆர்வம் கொள்கிறோம் அல்லவா?


ஒருவர் மேல் வைத்த அன்பு, அந்த ஒருவர் தொடர்புள்ள மற்றவர் மேலும் படர்கிறது அல்லவா? அது தான் அன்பின் பரிணாம வளர்ச்சி. அதைத்தான் வள்ளுவர் "ஆர்வம்" என்கிறார். 


இப்படி அது விரிந்து கொண்டே போகும். அந்தப் பெண்ணுக்கு ஒருகுழந்தை பிறக்கும். பேரப் பிள்ளை மேல் அன்பு. 


இப்படி விரித்துக் கொண்டே போனால், எல்லோர் மேலும் அன்பு வரும். 


அப்படி எல்லோர் மேலும் அன்பு பிறந்தால், எல்லோரும் நம் மேல் பதிலுக்கு அன்பு செலுத்துவார்கள் தானே ? நாம் போய் கேட்கவில்லை. நாம் விரும்பவில்லை. தானே வரும். "நாடாமல் வரும்". நாம் எல்லோரிடமும் அன்பாக இருந்தால் அவர்கள் தானே நம் மீது அன்பாக இருப்பார்கள். நாம் கேட்காமலேயே அந்த சிறந்த நண்பு கிடைக்கும். 


இப்படி ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்? இந்த உலகமே ஒரு அன்பு கூடமாகி விடும் அல்லவா? யாருமே யாருக்கும் எதிரியாக இருக்க மாட்டார்கள் அல்லவா?


எப்படி ஒரு உயர்ந்த சிந்தனை கொண்ட ஒரு பாரம்பரியத்தில் வந்த நாம், எப்படி ஆகி விட்டோம். 


உடன் பிறப்புகளுக்குள் அன்பு இல்லை. 


மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாவிட்டால்தான் அதிசயம்.


மீட்டு எடுக்க வேண்டாமா?


கணவன் மேல் அன்பு என்றால், அவன் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


அதே போல் மனைவி மேல் அன்பு என்றால் அவள் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


மகன் ஆகும், மருமகள் ஆகாது என்பது எல்லாம் குறுகிய சிந்தனை. 


இல்லறம் என்பது அன்பின் விரிவு. ஒவ்வொரு நாளும் அன்பு விரிய வேண்டும். நேற்றை விட இன்று. இன்றை விட நாளை என்று அன்பு மேலும் மேலும் விரிய வேண்டும். 


குறள் படிப்பது அதை வாழ்க்கை நெறியாக்க. 


முயன்று பார்ப்போமே. 


இன்றே மனைவியின்/கணவனின் சுற்றத்தாரை கூப்பிட்டு நலம் விசார்திதால் என்ன தீபாவளி நல் வாழ்த்துச் சொன்னால் என்ன? 


இன்றிலிருந்து ஆரம்பிப்போம். 


அன்பு பெருகட்டும்.