Wednesday, November 3, 2021

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள்

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள் 


நம்மிடடையே முன்பு ஒரு வழக்கம் இருந்து. அதாவது, எந்த நல்ல காரியம் நடந்தாலும், நடக்க இருந்தாலும், அதற்கு சம்பந்தப் பட்டவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை, அறவுரை வழங்குவார்கள். திருமணம், முடி சூட்டுதல் போன்ற நிகழ்வுகளில் பெரியவர்கள் நல்லவற்றை எடுத்துச் சொல்லும் வழக்கம் இருந்தது. 


சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். கேட்கணுமே? இப்போதெல்லாம் யார் கேட்கிறார்கள்? சொல்லும் பெரியவர்களும் இல்லை, கேட்கும் ஆட்களும் இல்லை. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியாகி விட்டது. 


அவனுக்கு இராமன் சில நல் உரைகளை வழங்குகின்றான். 


வசிட்டரிடமும், கௌசிகனிடமும் படித்த இராமன் சொல்கின்றான் என்றால் அது எவ்வளவு உயர்வாக இருக்கும். சுக்ரீவனுக்கு சொல்வது போல கம்பர் நமக்கும் சொல்கிறார். 


அரசாங்கத்தில் பணம் வந்து குவியும். இன்றெல்லாம் இத்தனை இலடசம் கோடி என்று சொல்கிறார்கள். அவ்வளவு பணம் வரும் போது அதன் அருமை தெரியாது. இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், என்று மனம் போன வழியில் செலவழிக்கத் தோன்றும். அதுதான் ஆற்று வெள்ளம் போல வந்து கொண்டே இருக்கிறதே என்ற அலட்சியம் வரும். அப்படி இருக்காதே. பொதுப் பணத்தை மிக மிக கவனமாக கையாள வேண்டும். 


இரண்டாவது, இந்த உலகில் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். நட்பு, பகை இதுதானே நமக்குத் தெரியும். மூன்றாவது ஒன்று இருக்கிறது. நட்பும் இல்லாமல், பகையும் இல்லாமல். அதற்கு நொதுமல் என்று பெயர். தெருவில் ஒருவர் போகிறார். அவருடன் எனக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை. எல்லாம் துறந்த முனிவர்களுக்கே இந்த மூன்று பேரும் உண்டு என்றால் அரசனுக்கு சொல்லவா வேண்டும்? எனவே, மக்களை சரியாக இனம் பிரித்து நடந்து கொள்.இல்லை என்றால் பெரும் துன்பம் வரும்.


பாடல் 



 தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்

      அறு செல்வம்அஃது உன்

காவலுக்கு உரியதுஎன்றால், அன்னது

      கருதிக் காண்டி;

ஏவரும் இனிய நண்பர்,

      அயலவர், விரவார், என்று இம்

மூவகை இயலோர் ஆவர்,

      முனைவர்க்கும் உலக முன்னே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_3.html


(Pl click the above link to continue reading)



தேவரும் = தேவர்களும் 


வெஃகற்கு ஒத்த = விருப்பப்படும் 


செயிர் அறு செல்வம்  = குறம் அற்ற செல்வம் 


அஃது உன் = அது உன் 


காவலுக்கு உரியது என்றால் = காவலில் உள்ளது என்றால் 


அன்னது = அதை 


கருதிக் காண்டி; = கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள் 


ஏவரும்  = எல்லோருக்கும் 


இனிய நண்பர் =  நட்பு 


அயலவர் = நட்பு அல்லாதவர் 


விரவார் = நொதுமல் உடையார் 


என்று = என்று 


இம் மூவகை இயலோர் ஆவர் = இந்த மூன்று வகையான மக்கள் 


முனைவர்க்கும் = முனிவர்களுக்கும் 


உலக முன்னே = இந்த உலகத்தில் உண்டு 



மக்கள் வரிப் பணத்தை கண்ணும் கருத்துமாக காவல் செய்.  இந்த ஒரு வரியை எல்லா அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கடை பிடித்தால் நாடு எப்படி இருக்கும்? ஒரு வரி. 


மக்களை தெரிந்து எடுத்து உறவு கொள். 


நல்ல அறிவுரைத்தானே?


நமக்கும் பொருந்தும் தானே?



2 comments:

  1. நமக்கும் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கும் நன்றாக பொருந்தும்.

    ReplyDelete
  2. நொதுமல் என்பது ஒரு நல்ல சொல்லாக்க இருக்கிறது. ஆங்கிலத்தில் பல சொற்கள் இருக்கின்றன - Friend, enemy, acquaintance, buddy, etc. தமிழில் இத்தனை சொற்கள் இல்லையே என்று நினைத்தேன்.

    ReplyDelete