Monday, November 1, 2021

திருக்குறள் - நாடாச் சிறப்பு

 திருக்குறள் - நாடாச் சிறப்பு 


"அவனுக்கு படிப்பில் அவ்வளவா ஆர்வம் இல்லை. ஆனால் விளையாட்டில் நல்ல ஆர்வம் இருக்கு" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒருவர் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்புறம் என்ன ஆகும்? அந்த அன்பு எப்படி மேலும் வளரும்? அந்த அன்பு என்ன செய்யும்? அன்பு எங்கு போய் முடியும்? அன்புக்கு வளர்ச்சி உண்டா அல்லது அது எப்போதும் ஒரே மாதிரி இருக்குமா?


இது போன்ற ஆராய்சிகளை எடுத்து வைத்துக் கொண்டு, வள்ளுவர் பதில் தருகிறார். 


நாம் சிந்திதாவது இருப்போமா? அன்பு செய்கிறோம்....அவ்வளவுதான் தெரியும். அதுக்கு மேல என்ன என்று சிந்தித்து இருக்க மாட்டோம். மிஞ்சி மிஞ்சி போனால் பதிலுக்கு அன்பை எதிர்பார்ப்போம். அவ்வளவுதான். 


வள்ளுவர் அன்பின் பரிணாமத்தை மிக பெரிதாக விவரிக்கிறார். 


என்ன என்று பார்ப்போம். 


பாடல் 


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post.html


(please click the above link to continue reading)



அன்புஈனும் ஆர்வம் உடைமை  = அன்பு ஆர்வம் உடைமையைத் தரும் 

 

அதுஈனும் = அந்த ஆர்வம் உடைமை 


நண்பென்னும் = நண்பு என்று சொல்லப்படும் 


நாடாச் சிறப்பு = தேடாத சிறப்பைத் தரும் 


அன்பு ஆர்வத்தைத் தரும். ஆர்வம் நண்பைத் தரும் என்கிறார். இதில் என்ன இருக்கிறது ?


அன்பு என்பது நமக்கு தொடர்பு உடையவர் மேல் நாம் கொள்ளும் பரிவு, பாசம், நேசம். 


ஆர்வம் என்பது அந்தத் தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள் மேல் செலுத்தும் பரிவு, பாசம், நேசம் எல்லாம்.


அது என்ன தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள்? 


நமக்கு நம் பிள்ளைகள் மேல் அன்பு இருக்கும். பிள்ளைகள் வளர்கிறார்கள். அக்கம் பக்கம் இருக்கும் இருக்கும் மற்ற பிள்ளைகளோடு விளையாடுகிறார்கள். இவர்கள் அவர்கள் வீட்டுக்குப் போகிறார்கள். அவர்கள் நம் வீட்டுக்கு வருகிறார்கள். 


சில வருடங்கள் கழித்து, அந்த நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு பெண் பிள்ளையை, நம் பையன் மணந்து கொள்கிறான். இப்போது அந்த பெண் மேல் தனி பாசம் வருகிறது அல்லவா? நேற்று இல்லாத பாசம் இன்று. காரணம், மகனின் மனைவி என்பதால். 


அதே போல் மருமகனுக்கும். 


யாரோ ஒரு பெண். அவள் மேல் அன்பு வருகிறது அல்லவா?


அந்தப் பெண்ணின் தாயார், தந்தை மேல் நமக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. அவர்களுக்கு ஒன்று என்றால் முன்னே போய் நிற்கிறோம். அந்தப் பெண்ணின் உடன் பிறப்பு மேலும் நமக்கு அக்கறை வருகிறது. ஒரு நாள் அந்தப் பெண், "என் கல்லூரியில் என்னோடு படித்தவர்கள்" என்று சில நண்பர்களை அழைத்து வருகிறாள். நாம் அவர்கள் மேலும் ஆர்வம் கொள்கிறோம் அல்லவா?


ஒருவர் மேல் வைத்த அன்பு, அந்த ஒருவர் தொடர்புள்ள மற்றவர் மேலும் படர்கிறது அல்லவா? அது தான் அன்பின் பரிணாம வளர்ச்சி. அதைத்தான் வள்ளுவர் "ஆர்வம்" என்கிறார். 


இப்படி அது விரிந்து கொண்டே போகும். அந்தப் பெண்ணுக்கு ஒருகுழந்தை பிறக்கும். பேரப் பிள்ளை மேல் அன்பு. 


இப்படி விரித்துக் கொண்டே போனால், எல்லோர் மேலும் அன்பு வரும். 


அப்படி எல்லோர் மேலும் அன்பு பிறந்தால், எல்லோரும் நம் மேல் பதிலுக்கு அன்பு செலுத்துவார்கள் தானே ? நாம் போய் கேட்கவில்லை. நாம் விரும்பவில்லை. தானே வரும். "நாடாமல் வரும்". நாம் எல்லோரிடமும் அன்பாக இருந்தால் அவர்கள் தானே நம் மீது அன்பாக இருப்பார்கள். நாம் கேட்காமலேயே அந்த சிறந்த நண்பு கிடைக்கும். 


இப்படி ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்? இந்த உலகமே ஒரு அன்பு கூடமாகி விடும் அல்லவா? யாருமே யாருக்கும் எதிரியாக இருக்க மாட்டார்கள் அல்லவா?


எப்படி ஒரு உயர்ந்த சிந்தனை கொண்ட ஒரு பாரம்பரியத்தில் வந்த நாம், எப்படி ஆகி விட்டோம். 


உடன் பிறப்புகளுக்குள் அன்பு இல்லை. 


மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாவிட்டால்தான் அதிசயம்.


மீட்டு எடுக்க வேண்டாமா?


கணவன் மேல் அன்பு என்றால், அவன் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


அதே போல் மனைவி மேல் அன்பு என்றால் அவள் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


மகன் ஆகும், மருமகள் ஆகாது என்பது எல்லாம் குறுகிய சிந்தனை. 


இல்லறம் என்பது அன்பின் விரிவு. ஒவ்வொரு நாளும் அன்பு விரிய வேண்டும். நேற்றை விட இன்று. இன்றை விட நாளை என்று அன்பு மேலும் மேலும் விரிய வேண்டும். 


குறள் படிப்பது அதை வாழ்க்கை நெறியாக்க. 


முயன்று பார்ப்போமே. 


இன்றே மனைவியின்/கணவனின் சுற்றத்தாரை கூப்பிட்டு நலம் விசார்திதால் என்ன தீபாவளி நல் வாழ்த்துச் சொன்னால் என்ன? 


இன்றிலிருந்து ஆரம்பிப்போம். 


அன்பு பெருகட்டும். 



1 comment:

  1. ஆர்வம் பற்றிய விளக்கம் ஏற்புடையதாக உள்ளது.

    ReplyDelete