Tuesday, November 2, 2021

திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக இனிமையானது

 திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக  இனிமையானது 


இந்த உலகம் மிக இனிமையானது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? 


என்ன இனிமை? எப்பப் பாரு ஏதாவது ஒரு சங்கடம், சிக்கல், துக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள். சுற்றுப் புற சூழ்நிலை மாசு. அரசாங்கங்கள் செய்யும் அராஜாகங்கள். 


வேலை செய்யும் இடத்தில் சிக்கல், போட்டி, பொறாமை, சூது. 


வீட்டில் உறவுகளில் சிக்கல்.


இப்படி எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் நிறைந்து கிடக்கிறது. இடையிடையே சில சந்தோஷங்கள் வந்தாலும், பெரும்பாலும்  துன்பமே மண்டிக் கிடக்கிறது. 


எது எப்படி இருந்தாலும், முதுமை வந்து விட்டால் பலப்பல துன்பங்கள். 


இருந்தும், மணிவாசகர் சொல்கிறார்....


மேலுலகத்தில் உள்ள தேவர்கள் எல்லாம் "ஐயோ, நாம் பூமியில் போய் பிறக்கவில்லையே" என்று வருந்துகிரார்களாம். இப்படி அனாவசியாம இந்த மேலுலகத்தில் நேரத்தை வீணே கழித்துக் கொண்டு இருக்கிறோமே என்று வருந்துகிரார்களாம். 


திருமாலுக்கும், பிரமனுக்கும், சிவனுக்கும் இங்கு வருவதில் அவ்வளவு விருப்பமாம். அவர்களே அங்கு போகும் போது, நாமும் அங்கு போனால் என்ன மறைய தேவர்களும் விரும்புவார்களாம். 


பாடல் 


புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_2.html


(pl click the above link to continue reading)



புவனியிற் = இந்த பூ உலகில் 


போய்ப்பிற வாமையின் = போய் பிறக்காமல் 


நாள்நாம் = நாட்களை நாம் 

போக்குகின் றோம் = போக்கிக் கொண்டு இருக்கிறோம் 


அவ மே = அனாவசியமாக 


யிந்தப் பூமி = இந்த பூமி 


சிவனுய்யக் = சிவன் நம்மை காக்க 


கொள்கின்ற வாறென்று = ஏதுவான இடம் என்று 


 நோக்கித் = நோக்கி 


திருப்பெருந் துறையுறை வாய் = திருப்பெரும்துறை என்ற தலத்தில் உறைபவனே 


திரு மாலாம் = திருமால் 


அவன்விருப் பெய்தவும்  = அவருக்கும் விருப்பம் இங்கே வர 


மலரவன் = தாமரை மலரில் வீற்று இருக்கும் பிரமன் 


ஆசைப் படவும்  = இங்கு வர ஆசைப் படவும்


நின்  = உன் 


அலர்ந்த = மலர்ந்த 


மெய்க் கருணையும் = உயர்ந்த கருணையும் 


 நீயும் = நீயும் 


அவனியிற் புகுந் = இந்த உலகில் புகுந்து 


தெமை ஆட்கொள்ள வல்லாய் = எங்களை ஆட்கொள்ள வல்லவன் 


ஆரமு தே = அருமையான அமுதமே 


பள்ளி எழுந்தரு ளாயே. = பள்ளி எழுந்து அருளாயே 


மூவரும் இங்கு வந்து நம்மை ஆட்கொள்ள மிக விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 


அவர்களுக்கே பிடித்து இருக்கிறது என்றால், இது ஒரு நல்ல இடமாகத்தானே இருக்கும்?


நமக்கு அருமை தெரியவில்லை. 


இரசிப்போம். அவ்வளவு இனிமையானது இந்த பூமி. 




No comments:

Post a Comment