Thursday, March 17, 2022

திருக்குறள் - விழுமம் துடைத்தார் நட்பு

திருக்குறள் - விழுமம் துடைத்தார் நட்பு 


நமக்கு சில பேரை பார்த்தவுடனேயே பிடித்துப் போய் விடும். அது போல சில பேரை முதல் தரம் பார்க்கும் போதே ஒரு வெறுப்பு வரும். காரணம் என்ன. 


இது எங்கு தெரியும் என்றால், காதல் செய்பவர்களை கேட்டால் சொல்லுவார்கள். "எனக்கும் அவளுக்கும் (அல்லது அவனுக்கும்) ஏதோ ஒரு முன் ஜென்ம தொடர்பு இருந்திருக்கிறது போல இருக்கிறது. இல்லை என்றால் இத்தனை பேரில் அவளை மட்டும் எனக்கு பிடிப்பானேன்?" என்று சொல்லுவார்கள். 


இது உண்மையா? முற் பிறவி என்று ஒன்று உண்டா? அடுத்த பிறவி என்று ஒன்று உண்டா? 


தெரியாது. ஆனால், நம் உள் உணர்வு சொல்கிறது இது ஏதோ ஜன்ம ஜென்மமாய் வரும் உறவு என்று. 


எங்கிருந்து வருகிறது அந்த உணர்வு? யார் சொல்லித் தந்தார்கள்?


இதை எல்லாம் நம்பாத நாத்திகன், பகுத்தறிவுவாதி கூட, மனைவி/காதலி மேல் உண்மையான ஆழமான அன்பு இருந்தால் இந்த உணர்வைப் பெறுகிறார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அது உண்மை. 


அப்படி ஏன் சில பேரை பார்த்த மாத்திரத்தில் அன்பு வருகிறது என்றால், அவர்கள் முற்பிறவியில் நமக்கு செய்த நன்மை. அந்த நன்மை மனதில் ஆழமாக பதிந்து, உயிரோடு கலந்து விடுகிறது. உயிர் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் செல்லும் போது, அந்த நன்றி உணர்வும் கூடவே வந்து விடுகிறது என்கிறார். 


பாடல் 


 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_17.html


(Pl click the above link to continue reading)


எழுமை  = எழும் தன்மை, உயர்தல் 


எழுபிறப்பும் = ஏழு பிறப்பிலும் 


 உள்ளுவர் = நினைப்பார்கள் 


தங்கண் = தனக்கு 


விழுமம் = துன்பம் 


 துடைத்தவர் நட்பு = நீக்கியவர்களின் நட்பை 


தனக்கு துன்பம் வந்த காலத்தில் அதை போக்க உதவி செய்தவர்களை இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, இனி வரப் போகும் ஏழு பிறவியிலும் நினைப்பார்கள் என்கிறார் வள்ளுவர். 


கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம். 


"உள்ளுவர்" என்றால் நினைப்பர் என்று அர்த்தம். நேத்து மதியம் என்ன சாப்பிட்டோம் என்பதே மறந்து போய் விடுகிறது. இதில் அடுத்த பிறவியில் மட்டும் அல்ல இன்னும் வரும் ஏழு பிறவியில் எப்படி நினைக்க முடியும்? 


முடியும். செய்த உதவியை பெரிதாக நினைத்து, மனதில் அதை ஆழமாகப் பதித்தால், தானே நினைவு வரும். 



இரண்டாவது, ஒரு விடயம் எப்படி ஞாபகம் இருக்கும். அதை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது மனதில் தங்கும்.  ஒருவர் செய்த உதவியை மறுபடி மறுபடி நினைக்க வேண்டும். அப்போது அது, இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, பல பிறவியிலும் நினைவில் நிற்கும். .


மூன்றாவது, என்ன உதவி பெற்றுக் கொண்டாலும், அதை பெரிதாக நினைத்தால் அது மறுபடி மறுபடி ஞாபகம் வரும். அதை மனதுக்குள் நன்றி பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.  "அன்னைக்கு அவர் அந்த உதவி செய்தார். அவர் மட்டும் அந்த உதவிய செய்யலேனா" என்று நினைக்க வேண்டும். 


நான்காவது, சில பேர்இருக்கிறார்கள். என்ன உதவி செய்தாலும், 'அதெல்லாம் ஒரு பெரிய உதவியா" என்று அலட்சியம் செய்வார்கள். பனைத் துணையாக செய்தாலும், தினைத் துணையாகக் கொள்வார்கள். சிறியோர். அவர்களுக்கு என்ன செய்தாலும், அது அவர்கள் நினைவில் தங்காது. 


ஐந்தாவது, "துடைத்தவர் நட்பு" என்கிறார்.  துடைப்பவர் நட்பு என்று இருந்திருக்க வேண்டும். விரைவு கருதி இறந்த காலத்தில் கூறினார் என்கிறார் பரிமேலழகர் உரையில். முன்பே இது பற்றி சிந்தித்து இருக்கிறோம். 


அவசரமாக வெளியே போக வேண்டும். மனைவி அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறாள். கணவன் வெளியே பொறுமை இல்லாமல் "எவ்வளவு நேரம்...சீக்கிரம் கிளம்பு" என்று அவசரப் படுத்துகிறான். "இதோ வந்துட்டேன்" என்கிறாள். வரவில்லை. இருந்தும், வந்து விட்டேன் என்பது, விரைவில் வந்து விடுவேன் என்பதை குறிப்பதற்காக. 


துடைத்தவர் என்றால் விரைந்து துடைப்பவர்.  ஒரு உதவி என்று கேட்டுப் போனால், அப்புறம் வா, நாளைக்கு வா, அடுத்த வாரம் இதைப் பற்றிப் பேசலாம் என்று இழுத்து அடிக்கக் கூடாது. உடனே, உடனே அவர் துன்பத்தை துடைக்க வேண்டும். அந்த நட்புதான் ஏழு பிறப்பிலும் தொடரும் என்கிறார். 


நமக்கு பாடம் என்ன என்றால், உதவி என்று யாராவது கேட்டால், குறிப்பாக நண்பர்கள், "உடனே" செய்து விட வேண்டும்.  உடுக்கை இழந்தவன் கை போல் என்று வள்ளுவர் கூறியது போல. அப்படி உதவி செய்தால் அது அவர் மனதில் நிற்கும். ஏழு பிறவியிலும். 


இந்தப் பிறவியில் அப்படிச் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தேடாமலேயே பல சிறந்த நட்பு உங்களுக்கு கிடைக்கும். அன்பு செய்வர் என்கிறார் பரிமேலழகர். 


என்ன ஒரு சிந்தனை !


படிக்க படிக்க உவகை ஊட்டும் நூல். 


இதை எல்லாம் விட்டு விட்டு 'முது காட்டில் காக்கை உகக்கும் பிணம்" போல எதையெதையோ படித்துக் கொண்டு இருக்கிறார்கள். 



Wednesday, March 16, 2022

சிவ ஞான போதம் - நூல் அறிமுகம்

 சிவ ஞான போதம் - நூல் அறிமுகம் 


சைவ சமயத்தில் சாத்திரம் தந்த நால்வர், தோத்திரம் தந்த நால்வர் என்று நான்கு நான்கும் எட்டு பெரியவர்களை குறிப்பிடுவார்கள். 


தோத்திரம் தந்த நால்வர்கள் - அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர், திரு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர். 


சாத்திரம் தந்த நால்வர்கள் - மெய்கண்டத் தேவர், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார்.


இவர்களுள் மெய்கண்ட தேவர் அருளிய நூல் சிவ ஞான போதம். 


சிவஞான போதம் என்ற இந்த நூல் இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்களை உடையது.


இருப்பது    என்னவோ பன்னிரெண்டே சூத்திரங்கள். அதற்கு இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், இயலுக்கு மூன்று சூத்திரம் என்று பன்னிரண்டு சூத்திரங்கள். 


பொது அதிகாரம்

உண்மை அதிகாரம் 


என்று அதிகாரங்கள் உண்டு. 


பொது அதிகாரத்தில், பிரமாண இயல், இலக்கண இயல் என்று இரண்டு இயல்கள். 


உண்மை அதிகாரத்தில், சாதனை இயல், பயன் இயல் என்று இரண்டு இயல்கள் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_16.html


(click the above link to continue reading)


எதை  சொன்னாலும் அதற்கு ஒரு சான்று வேண்டும் அல்லவா? அது சரியா, தவறா என்று நிரூபணம் செய்ய வேண்டும் அல்லவா? சும்மா வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டுப் போக முடியுமா? நிரூபணம் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். 


இப்போதெல்லாம் அப்படி ஆகி விட்டது. கேட்டால், "அதெல்லாம் நம்பிக்கை பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது. நம்ப வேண்டும்" என்கிறார்கள். எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு, "எல்லாம் ஒரு நம்பிக்கைதான்" என்று சொல்லி விட்டு நழுவி விட முடியாது. 


பிரமாணம் என்றால் நிறுவுதல். ஒரு எடுகோளை (hypothesis ) எடுத்துக் கொண்டு அதை நிறுவுவது. பொதுவாக பத்து பிரமாணங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அந்தப் பத்தையும் சுருக்கி மூன்று பிரமாணத்துக்குள் அடக்கி விடுகிறார்கள் நம் தர்க்க இயலார். 


காட்சிப் பிரமாணம்,


அனுமானப் பிரமாணம் 


ஆகமப் பிரமாணம் 


என்று மூன்று பிரமாணங்கள் உண்டு. 


ஒன்றை உண்மை என்று சொல்லுவதற்கு இவை பயன் படுகின்றன.


"அவன் அடித்ததை நான் கண்ணால் பார்த்தேன்" என்றால் அது காட்சிப் பிரமாணம். 


காட்சி என்றால் பார்ப்பது மட்டும் அல்ல. புலன்களால் அறியும் எல்லாமே காட்சிப் பிரமாணம் தான்.


பக்கத்து வீட்டில் நெய் விட்டு பொங்கல் செய்கிறார்கள். வாசம் இங்கே மூக்கை துளைக்கிறது. ம்ம்...நல்ல பொங்கல் வாசம் வருது" என்கிறோம். நேரில் பார்க்கவில்லை. வாசத்தை வைத்து "கண்டு" பிடிக்கிறோம். 


வெளியே ஒரு வண்டிச் சத்தம் கேட்கிறது. "...அப்பா வந்தாச்சு" என்று பிள்ளை ஓடுகிறது. அப்பா வந்ததை பார்க்கவில்லை. ஸ்கூட்டர் சப்தத்தை கொண்டு "கண்டு" பிடிக்கிறது. 


பிள்ளை அப்பாவின் முதுகில் ஏறிக் கொண்டு, கண்ணை மறைத்துக் கொண்டு, "யார் சொல்லு பார்ப்போம்" என்கிறது. தொடு உணர்ச்சியில் கண்டு கொள்ள முடிகிறது. 


எல்லாவற்றையும் புலன்களால் அரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 


புகை இருந்தால் தீ இருக்கும் என்று அனுமானித்து அறியலாம். 


காலையில் எழுந்து பார்க்கிறோம். சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. "இராத்திரி மழை பொழிந்திருக்கிறது" என்று அனுமானிக்கிறோம். மழை பெய்ததை பார்க்கவில்லை. இருந்தும் மழை பெய்த உண்மையை அறிந்து கொள்கிறோம். எப்படி? அனுமானம். 


இதற்கு அனுமான பிரமாணம் என்று பெயர். 


சிவ ஞான போதம் என்ற இந்த நூல், பொது அதிகாரத்தில் வரும் முதல் இயலான அனுமான இயலில், உண்மையை அனுமான பிரமாணம் கொண்டு நிறுவுகிறது. 


அப்படி என்ன உண்மைகளை அது நிறுவுகிறது என்பதை வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம். 


(புரிந்து கொள்ள எளிமையாக இருக்கிறதா? புரிவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டுமா?)



Tuesday, March 15, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - மறவற்க, துறவற்க

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - மறவற்க, துறவற்க 


இதுவரை சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்த அதிகாரம், இப்போது ஒரு சிக்கலான ஒரு விடயத்தை சொல்ல வருகிறது. 


நமக்கு துன்பம் வந்த காலத்தில் ஒருவர் உதவி செய்கிறார். பின்னாளில் அவர் அவ்வளவு நல்லவர் இல்லை என்று தெரிய வருகிறது. என்ன செய்யலாம்? அவர் செய்த நன்றியை மறவாமால் போற்ற வேண்டுமா அல்லது அவர் நல்லவர் இல்லை என்பதால் அவர் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டுமா? 


இது ஒரு சிக்கலான கேள்வி. நல்லவர் இல்லை என்று தொடர்பை துண்டித்துக் கொண்டால், செய் நன்றி மறந்த குற்றம் வரும். சரி, அவருடன் நட்பில் இருக்கலாம் என்றால் அதனால் என்னென்ன சிக்கல்கள் வருமோ என்ற பயமும் வரும். 


இதுக்கு என்ன தான் தீர்வு? 


சரி, அது புறம் இருக்கட்டும். 


சிலபேருடன் நாம் நட்பாக இருப்போம். அவர்கள் நமக்கு நேரடியாக ஒரு உதவியும் செய்து இருக்க மாட்டார்கள். பணமோ, பொருளோ, எதுவும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் நட்பு நம்மை எவ்வளவோ விதத்தில் உயர்த்தி இருக்கும். அவருடைய அறிவு, பண்பு,  போன்றவை நம்மை வியக்க வைக்கும். நாமும் அது போல இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை நம்முள் விதைக்கும். நம்மை அறியாமலேயே நாம் அவர்கள் சொல்வது போல், பேசுவது போல, நடந்து கொள்வது போல் நடக்க தலைப் படுவோம். அது நம்மை உயர்த்தும். 

அது ஒரு நன்மையா? அது அவர்கள் செய்த உதவியா? அதை மறக்காமல் இருக்க வேண்டுமா? 


இது அடுத்த கேள்வி. 


இந்த இரண்டு சிக்கலான கேள்விக்கும், ஒரே குறளில் பதில் தருகிறார் வள்ளுவர். 


"குற்றமற்ற நல்லவர்களின் நட்பை மறக்கக் கூடாது. நமக்கு துன்பம் வந்த காலத்தில் உதவி செய்தவர்களின் நட்பை துறக்கக் கூடாது" 


பாடல் 



மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_15.html


(pl click the above link to continue reading)



மறவற்க = மறக்காமல் இருக்க 


மாசற்றார் = குற்றம் அற்றவர் 


கேண்மை = நட்பு 


துறவற்க = விட்டுவிடக் கூடாது 


துன்பத்துள் = நமக்கு ஒரு துன்பம் வந்த காலத்து 


 துப்பாயார் நட்பு. = துணையாய் நின்றவர்களின் நட்பை 


இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 


மாசற்றார் கேண்மை மறவற்க - குற்றமறவர் நல்லவர்களின் நட்பை மறக்கக் கூடாது. 


சரி, அதுக்கும் இந்த அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கு. அதுதான் வள்ளுவர். 


நல்லவர்களின் நட்பால் நமக்கு பல நன்மைகள் விளையும். அப்படி நன்மை விளைந்ததால் அதை செய் நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் வைத்ததார். 


ஆனால், அப்படி ஒன்றும் நன்மை விளைந்த மாதிரி தெரியலையே என்றால் , பரிமேலழகரிடம் தான் கேட்க வேண்டும்.   அவர் சொல்கிறார் 


"மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்" 


மாசு அற்றார் கேண்மை மறுமைக்கு உறுதி தரும் என்கிறார். அவர்களுடைய நட்பால் நாம் அற வழியில் செல்வோம். அதனால் நமக்கு மறுமைக்கு நன்மை கிடைக்கும் என்பதால், அவர்கள் நட்பை விட்டுவிடக் கூடாது என்கிறார். 


அடுத்தது, 



"துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு"


நமக்கு துன்பம் வந்த காலத்தில் நமக்கு துணை நின்றவர் நட்பை விட்டு விடக் கூடாது என்கிறார். 


நம் துன்பம் கண்டு, நமக்கு இரங்கி உதவி செய்தார் அல்லவா, அதுவே ஒரு நல்ல குணம் தான். அவரிடம் வேறு பல தீய குணங்கள் இருக்கலாம். அவர் தண்ணி அடிக்கலாம், கையூட்டு வாங்கலாம். அதெல்லாம் செய்தாலும், நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லையே? இருந்தும் செய்தார். அந்த நன்றியை மறக்கக் கூடாது.  குற்றம் இல்லாத மனிதன் எங்கே இருக்கிறான். தவறே செய்யாதவன் என்று ஒருவனும் கிடையாது. உதவி செய்தவர்களிடம் உள்ள குறைகளை, குற்றங்களை ஆராய முற்பட்டால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டார். பின் செய்நன்றி அறிதல் என்பதே அர்த்தம் இல்லாமல் போய் விடும். 


அவன் எப்படியோ இருக்கட்டும். உனக்கு துன்பம் வந்த காலத்தில் காப்பாற்றினான் அல்லவா, அந்த நன்றியை மறவாதே என்கிறார். 


அதில் உள்ள இன்னொரு ஆழ்ந்த அர்த்தம் என்ன என்றால், யாரிடம் உதவி கேட்கிறோம் என்று தெரிந்து கேட்க வேண்டும். ஏன் என்றால், உதவி பெற்றுக்கொண்டால், நன்றி மறக்கக் கூடாது. 


ஊரிலேயே உள்ள பெரிய அயோக்கியனிடம் சென்று உதவி கேட்டுப் பெற்றால், பின்னாளில் சிக்கல் வரத்தான் செய்யும். 


இப்போதைக்கு உதவி வாங்கிக் கொள்ளலாம். பின்னால் கழட்டி விட்டு விடலாம் என்று நினைக்கக் கூடாது.. 


உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மறக்கக் கூடாது.  (இம்மைப் பலன்)


நல்லவர்கள், உதவியே செய்யாவிட்டாலும், அவர்கள் நட்பை விட்டுவிடக் கூடாது. (மறுமைப் பயன்)



எவ்வளவு சிந்தித்து இருந்தால் இவ்வளவு சொல்ல முடியும்?




Sunday, March 13, 2022

சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம்

 சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம் 


சிவஞான போதம் என்ற நூல் மிக மிக சிறிய நூல். 


பன்னிரெண்டே சூத்திரங்கள் கொண்ட நூல். 


எழுதியவர் மெய்கண்ட தேவர். 


அந்த பன்னிரண்டு சூத்திரத்துக்குள் சைவ சமயத்தின் அத்தனை சாரத்தையும் அடக்கி விட்டார். 


படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். இவ்வளவு இருக்கா என்ற பிரமிப்பு வரும். 


இந்த நூலுக்கு எவ்வளவோ பேர் உரைகள், விரிவுரைகள், பொழிப்புரைகள் என்று எழுதி இருக்கிறார்கள். எழுதி முடியவில்லை. அவ்வளவு ஆழம் கொண்ட நூல். .


கடல் போல் விரிந்த சைவ சமய கோட்பாடுகளை பன்னிரண்டு சூத்திரத்துக்குள் அடக்குவது என்பது முடிகிற காரியமா? 



https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_0.html


(click the above link to continue reading)


நான் வாசித்தவரை, எனக்குத் தெரிதவரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


எனக்கு சைவ சமயம் பற்றி ஒன்றும் தெரியாது.  நான் செய்வது எல்லாம் இருக்கும் உரைகளை தொகுத்து, எளிமைப் படுத்துவது மட்டும் தான். 


ஆன்மீகத்துக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்மந்தம் கிடையாது. 


இது பற்றி மேலும் உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பின், சைவ சமய பெரியவர் யாரையாவது அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 


நூலை எளிமையாக அறிமுகப் படுத்துவது ஒன்றுமட்டும் தான் என் வேலை. 


மெய்கண்டர் பற்றி பல சுவையான தகல்வகள் உள்ளன. அவற்றை நடுநடுவே பார்ப்போம்.


இனி, நேரே நூலுக்குள் நுழைவோம். 


முதல் சூத்திரம்.....





திருக்குறள் - செய்நன்றி அறிதல் - செயப்பட்டார் சால்பின் வரைத்து

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - செயப்பட்டார் சால்பின் வரைத்து 


உதவி செய்பவர், உதவி பெற்றுக் கொண்டவர், உதவி என்ற மூன்று இருக்கிறது. 


இதில், உதவியின் அளவை எப்படி மதிப்பிடுவது? உதவி செய்தவரை வைத்தா, உதவி பெற்றுக் கொண்டவரை வைத்தா? 


உதவியின் அளவு பெற்றுக் கொண்டவரின் தன்மையைப் பொறுத்து என்கிறார். 


சிலர் இருக்கிறார்கள்...என்ன உதவி செய்தாலும், "என்ன சார் பெரிய உதவி செஞ்சிட்டார்...அவருக்கு இருக்கிற பணத்துக்கு இதெல்லாம் ஒரு உதவியே கிடையாது...இன்னும் எவ்வளவோ செய்யலாம், சரியான கஞ்சன்" என்று உதவியைப் பெற்றுக் கொண்டு, உதவி செய்தவரை ஏளனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அது அவரின் தன்மை.


இன்னும் சிலர், கொஞ்சம் உதவி செய்தாலும், "மகராசன், சரியான நேரத்தில் உதவி செய்தான். அவனுக்கு ஒரு கோவில் கட்டி கும்பிடணும்" என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அது அவன் இயல்பு. 


நாம் ஒருவரிடம் ஒரு உதவியைப் பெற்றுக் கொண்டால், அதனால் நமக்கு என்ன நன்மை, பயன், என்று பார்க்க வேண்டுமே தவிர, உதவி செய்தவனுக்கு அது பெருசா, சிறுசா என்று ஆராயக் கூடாது. 


இன்றும் சில மாணவர்கள் சொல்வதைக் கேட்டு வருந்துகிறேன் "என்ன பெரிய ஆசிரியர். சும்மாவா சொல்லிக் கொடுக்கிறார்.சம்பளம் வாங்கிக் கொண்டு தானே சொல்லிக் கொடுக்கிறார். அந்த சம்பளம் யார் கொடுத்தது ? நான் கட்டிய fees இல் இருந்து அவருக்கு சம்பளம் கிடைக்கிறது" என்று பேசுகிறார்கள். "இவர் இல்லாட்டி, இன்னொரு ஆசிரியர்" என்றும் பேசுகிறார்கள். 


ஆசிரியரைப் பொறுத்தவரை அது என்னவோ சின்ன விடயம்தான். அதே பாடத்தைத் தான் அவர் வருட வருடம் சொல்லிக் கொடுக்கிறார். அது அவருக்கு பெரிய விடயம் அல்லதான். ஆனால், மாணவனுக்கு அது எவ்வளவு பெரிய உபகாரம்? அந்த அறிவின் பயனை பெற்றுக் கொண்ட மாணவன் சிந்திக்க வேண்டும். 


"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" என்று தமிழ் பேசுகிறது. 


அறிவித்தவன் என்றால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அ ஆ சொல்லித் தந்தவர். ABCD சொல்லித் தந்தவர். அவர் இறைவனுக்கு சமம் என்கிறது தமிழ். 


ஒரு பாட்டில் இரத்தம் ஒன்றும் பெரிய விலை கிடையாது. சாதாரண நேரத்தில் வாங்கி விடலாம். ஆனால், நாம் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் போது, யாராவது ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்தால், அதை பணத்தைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. 


பெற்றுக் கொண்டவரின் சால்பு என்கிறார். சால்பு என்றால் பெருந்தன்மை, உயரிய மனம் என்று கொள்ளலாம். 


முட்டாளுக்கு என்ன செய்தாலும் பெரிதாகத் தெரியாது. 


அறிவு உள்ளவர்களுக்கு திணை துணை செய்யினும் அதை பனைத் துணையாகக் கொள்வர்.


பாடல் 


உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_13.html


(pl click the above link to continue reading)



உதவி வரைத்தன்று உதவி = ஒரு உதவியின் அளவு அந்த உதவியைப் பொறுத்து அல்ல 


உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து = உதவி செய்யப்பட்டார் சால்பின் தன்மையைப் பொறுத்தது. 


பத்து மில்லுக்கு முதலாளியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு வேட்டி தானம் தந்தால் அது பெரிய விடயம் இல்லை. 


உடுத்த துணி இல்லாமல், கிழிந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு, மானத்தை மறைக்க போராடும் ஒரு ஏழைக்கு ஒரு வெட்டினேன் கொடுத்தால் அது எவ்வளவு உயர்ந்தது?


கொடுத்தது என்னவோ ஒரு வேட்டிதான்.  அதன் மதிப்பு பெற்றுக் கொண்டவரின் தன்மையைப் பொறுத்தது.


நாம், எப்போது ஒரு உதவியைப் பெற்றுக் கொண்டாலும், அதை உயர்வாக நினைத்துப் பழக வேண்டும். எவ்வளவு உயர்வாக நினைகிறோமோ அவ்வளவு நம் நிலை உயர்ந்து நிற்கிறது என்று பொருள். 


எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள்.




Saturday, March 12, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒக்கலையில் கொண்டு

 நாலாயிர திவ்ய பிரபந்தம் -  ஒக்கலையில் கொண்டு 


குழந்தையை கொஞ்சுவது போல ஒரு சுகம் உலகில் இல்லை. 


குழந்தையை தோளில் போட்டு தூங்க வைப்பது, அதோடு விளையாடுவது, அது நம் விரல் பிடித்து நடப்பது எல்லாம் அவ்வளவு சுகம். 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு


என்பார் வள்ளுவர். குழந்தைகள் நம்மை கட்டி அணைப்பது நம் உடலுக்கு இன்பம். அவர்கள் சொல்லும் மழலையைக் கேட்பது செவிக்கு இன்பம் என்கிறார். 


பெண்களுக்கு ஒரு படி மேலே. குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொள்வார்கள். அவர்கள் இடுப்பு குழந்தை அமர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் பெண்களின் இடுப்பு ஒடுங்கி இருந்தது. 


"உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு" என்று ஔவையார் சொன்னால், "ஆகா, பெண்கள் பட்டினி கிடக்க வேண்டுமா? நீங்கள் எங்களை பார்த்து இரசிக்க நாங்கள் பட்டினி கிடந்து துன்பப் பட வேண்டுமா? நாங்களும் நல்லா சாப்பிடுவோம்" என்று பெண் விடுதலை பேசி, இடுப்பு என்பதே இல்லாமல் தூண் போல ஆகும் ஒரு தலைமுறை வந்து கொண்டு இருக்கிறது.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


கண்ணன் தெருவில் விளையாடுகிறான். அவன் மேல் அங்குள்ள பெண்களுக்கு அவ்வளவு அன்பு, ஆசை. போவோர் வருவோர் எல்லாம் அவனை தூக்கி தங்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு "வா, நம்ம வீட்டுக்குப் போகலாம்"  என்று தூக்கிக் கொண்டு போய் விடுவார்களாம். 


அங்கு கொண்டு போய், அவனோடு ஆசை தீர விளையாடுவார்களாம். 


வீட்டுல உள்ள பெண் பிள்ளைகள் அவனோடு விளையாடுவார்கள். கொஞ்சுவார்கள். மற்றவர்களுக்கு அவன் செய்வதைப் பார்த்து அப்படி ஒரு சந்தோஷம். 


அந்தக் காட்சியை மனதில் கண்டு, பெரியாழ்வார், கண்ணனை நோக்கி, "கண்ணா, நீ நல்லா ஆடு" என்று நேரில் பார்த்து கூறுவதைப் போலக் கூறுகிறார். 



பாடல் 



உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி

உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*

கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்

கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*

மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்

சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!*

என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_12.html


(Pl click the above link to continue reading)



உன்னையும்  = உன்னை (கண்ணனை) 


ஒக்கலையில் கொண்டு = இடுப்பில் தூக்கிக் கொண்டு 


தமில்மருவி = தம் + இல் + மருவி = தங்களது இல்லத்துக்கு தூக்கிச் சென்று 


உன்னொடு = உன்னோடு (கண்ணனோடு) 


தங்கள் கருத்தாயின செய்துவரும் = தங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றியதோ அப்படி எல்லாம் விளையாடி 


கன்னியரும் மகிழக் = பெண்கள் அவனைக் கொஞ்சி, அவன் கூட விளையாடி மகிழ 


கண்டவர் கண்குளிரக் = அதைப் பார்பவர்கள் மனம் குளிர 

 

கற்றவர் = படித்தவர்கள் 


தெற்றிவரப் பெற்ற = அருள் கொண்டு நோக்கப் பெற்ற 


 எனக்குஅருளி = எனக்கு (பெரியாழ்வார்) அருள் செய்து 


மன்னுகுறுங் குடியாய்! = நிலைத்து நிற்கும் புகழுடைய திருக்குறுங்குடி என்ற தலத்தில் உறைபவனே 


வெள்ளறையாய்!  = திரு வெள்ளறை என்ற தலத்தில் இருப்பவனே 


மதிள்சூழ் = கோட்டை மதிள் சூழ்ந்த 


சோலைமலைக் கரசே! = திருமாலிருஞ்சோலைக்கு அரசனே 


கண்ண புரத்தமுதே! = கண்ணபுரத்தில் இருக்கும் அமுதம் போன்றவனே 


என்னவலம்  = என் அவலம் (துன்பம்) 


களைவாய்! = நீக்குவாய் 


ஆடுக செங்கீரை = ஆடுக 


ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. = ஏழு உலகம் உடையவனே ஆடுக, ஆடுகவே 


(செங்கீரை என்பது ஒரு குழந்தைப் பருவம்) 


பெரியாழ்வார் கற்பனையில் காண்கிறார். கண்ணன் தெருவில் விளையாடினால் அங்கு என்னவெல்லாம் நிகழ்ந்து இருக்கும் என்று. 


அவர் கற்பனையில் கண்டது மட்டும் அல்ல, அதை நம் கண் முன்னே கொண்டு வந்தும் நிறுத்தி விடுகிறார். 


ஏதோ நாமும் கண்ணனை நம் வீட்டுக்கு கொண்டு வந்து அவன் கூட விளையாடுவது போல இருக்கிறது. 


அவ்வளவு அன்யோன்யம். 


பிரபந்தம் படிக்க ஒரு மனம் வேண்டும். 




Friday, March 11, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன் தெரிவார்

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன் தெரிவார் 


செய்யாமல் செய்த உதவி 

காலத்தினால்  செய்த உதவி 

பயன் தூக்கார் செய்த உதவி 


என்று உதவியின் உயர்வு பற்றி கூறினார். .


அடுத்ததாக உதவி பெற்றுக் கொள்பவர் பற்றி கூறுகிறார். .


ஒரு உதவி பெற்றுக் கொண்டவன் அதை எப்படி நினைக்க வேண்டும் ?


ஒரு விதை இருக்கிறது என்றால், அது விதை மட்டும் அல்ல..அதனுள் பெரிய மரம் இருக்கிறது, அந்த மரத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழங்கள் வரும். அந்த பழங்களில் விதை இருக்கும். அந்த விதைகளில் இருந்து பல மரங்கள் வரும் என்று எவ்வளவு இருக்கிறது. 


ஒரு விதை என்றால், விதை என்று மட்டும் பார்க்கக் கூடாது. 


சிறு வயதில் எனக்கு என் ஆசிரியர்கள் எழுத்துச் சொல்லித் தந்தார்கள். அதன் பலன் என்ன? அதனால் மேலும் படித்து, வேலைக்குப் போய், நிறைய பொருள் ஈட்ட முடிந்தது. அ ஆ சொல்லிக் கொடுத்தார் என்று சொல்லக் கூடாது. எனக்கு இத்தனை வசதியும் அவர் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும். 


எனக்கு மட்டும் அல்ல, நான் பொருள் ஈட்ட முடிந்ததால் என் பிள்ளைகளை உயர் கல்விக்கு அயல் நாட்டுக்கு அனுப்ப முடிந்தது. அது எப்படி முடிந்தது? ஆரம்பப் பள்ளியில் அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அ ஆ, ஒன்று இரண்டு போன்றவற்றில் இருந்து. 


இப்படி ஒவ்வொரு உதவியையும் அந்த உதவியை மட்டும் வைத்துப் பார்க்கக் கூடாது. அதனால் விளையும் பயன்களை எண்ணிப் பார்க்க வேண்டும். 


அடி பட்டு இரதம் சிந்திக் கொண்டு இருந்த போது,ஒரு பத்து சென்டிமீட்டர் நீளம் உள்ள நூலால் தையல் போட்டார் என்று சொல்லக் கூடாது. அந்தத் தையலால் இரத்தம் செல்வது நின்று, உயிர் பிழைத்தது அல்லவா அதை நினைக்க வேண்டும். 


கண்ணன் ஆற்றில் குளிக்கும் போது அவன் உடை தண்ணீரில் போய் விட்டது. வெளியே வர முடியாமல் தவித்தான். பாஞ்சாலி தன் சேலையில் ஓரத்தில் கொஞ்சம் கிழித்து அவன்பால் தூக்கி எறிந்தாள். அது ஒரு முழ துணி அல்ல. அவனின் மானம். 


அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். 


"திணை அளவு நன்றி செய்தாலும் அதை பனை அளவாகக் கொள்வர் பயன் தெரிவார்" என்று. 


பாடல் 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_11.html


(pl click the above link to continue reading)



தினைத்துணை = திணை அளவு 


நன்றி செயினும் = நன்றி செய்யினும் 


பனைத்துணையாக் = அதை பனை அளவாகக் 


கொள்வர் = நினைத்துக் கொள்வர் 


 பயன்தெரி வார் = அதன் பயன் தெரிந்தவர்கள் 


இதில் திணை, பனை என்பது அளவு குறித்து நின்றது என்கிறார் பரிமேலழகர். 


நான் சற்று வேறு விதமாக சிந்திக்கிறேன். தவறாகவும் இருக்கலாம். 


திணை அளவு உதவிக்குள் பனை அளவு பயன் இருப்பது அதை பெற்றுக் கொள்ளும் போது பெரும்பாலும் தெரியாது. 


உதவி பெற்றுக் கொள்ளும் போது திணை அளவு தான் தெரியும். 


எனக்கு பாடம் சொல்லித் தந்த போது, அதனால் இவ்வளவு பயன் விளையப் போகிறது என்று அப்போது தெரியவில்லை. 


அது சிறு வயது. 


ஆனால், வயது முதிர முதிர, அனுபவம் கூடும் போது, ஒவ்வொரு உதவியின் பின்னாலும் எவ்வளவு பலன் என்று அறிந்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். 


உதவியின் பலனை அறிந்து கொண்டால் அந்த உதவியின் அளவு எவ்வளவு பெரியது என்று தெரியும். 


ஒவ்வொரு நன்மையின் பின்னாலும் மிகப் பெரிய பலன் இருக்கிறது என்று தெரிந்தால் நாம் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம் என்று தெரிய வரும். 


ஒட்டு மொத்த சமுதாயமும் நன்றிக் கடனில் நெகிழ்ந்து நிற்கும். 


இப்போது புரிகிறதா, செய் நன்றி மறந்தால் ஏன் பிரயாசித்தம் இல்லை என்று. 


அது மிகப் பெரிய கடன். அவ்வளவு பெரிய கடனை வாங்கிவிட்டு இல்லை என்று மறந்தால் எப்படி?


ஒரே ஒரு வார்த்தை "பயன்" தெரிவார் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். 


உயிரை உருக்கி பெற்று எடுத்து வளர்த்த தாய், ஒவ்வொரு நாளும் பாடுபட்டு உழைத்து காப்பாற்றும் தந்தை, எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து நிற்கும் மனைவி, என்ன ஆனாலும் உன்னைக் காப்பேன் என்ற கணவன், தேவைப் பட்ட காலத்தில் கை நீட்டும் உடன் பிறப்புகள், உயிர் காக்கும் தோழன்...


பயன் தெரிந்து கொள்ள வேண்டும்.