Friday, June 3, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 6

    

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 6 


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html



)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் பேசப் போகிறாள். 


எவ்வளவு பேசி இருப்பாள்? என்னென்ன கேட்டு இருப்பாள்?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சீதை என்ன பேசினாள் என்பதை காண இருக்கிறோம்.  


அதற்கு முன் ....


பேச்சு என்பது வெறும் சொல் அல்ல. அது தரும் ஒலி அல்ல அந்த சொல்லின் பொருள் மட்டும் அல்ல. அனைத்துக்கும் மேலே, பேச்சோடு கூடிய உணர்சிகள். உணர்ச்சிகள்தான் நாம் பேசும் பேச்சுக்கு வலிமை சேர்கிறது. 


உணர்வு கலவாத சொற்கள் வெற்றுச் சொற்கள். 


நமக்கு கோபம் வந்தால் அந்த உணர்ச்சி சொல்லில் தெறிக்கும். வெறுப்பு, எரிச்சல், வருத்தம் கூட சொல்லில் வெளிப்படும். அன்பு வெளிப்படுமா? 


கடைசியாக யாரிடம் அன்பு கலந்து பேசினீர்கள்?  பேச்சு வெறும் இயந்திரத்தனமாக போய் கொண்டு இருக்கிறது. 


கணவனிடம, மனைவியிடம், குழந்தைகளிடம் அன்போடு, காதலோடு பேசி இருக்கிறோமா? 


சீதை நினைக்கிறாள் 


"இவன் பேசுவதைக் கேட்டு என் உள்ளம் உருகுகிறது. இவனைப் பார்த்தால் கள்ள உள்ளம் கொண்ட வஞ்சகர் மாதிரி தெரியவில்லை. மனதில் பதியும்படி நினைத்து பேசுகிறான். கண்ணில் நீர் வழிந்து தரையில் விழுகிறது. இவனிடம் கேட்கலாம் " என்று எண்ணி "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.





பாடல் 


என நினைத்து எய்த நோக்கி,

    ‘இரங்கும் என் உள்ளம் : கள்ளம்

மனன் அகத்து உடையர் ஆய

    வஞ்சகர் மாற்றம் அல்லன் :

நினைவு உடைச் சொற்கள் கண்ணீர்

    நிலம்புகப் புலம்பா நின்றான் :

வினவுதற்கு உரியன் என்னா,

    ‘வீர! நீ யாவன்? என்றாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


(pl click the above link to continue reading) 



என நினைத்து = என்று நினைத்து 


எய்த நோக்கி, = அவனை பார்த்து 


இரங்கும் என் உள்ளம் = என்ன உள்ளம் உருகுகிறது 


கள்ளம் மனன் = கள்ள மனத்தை 


அகத்து உடையர் ஆய = உள்ளே உள்ளவர்களான 


வஞ்சகர் மாற்றம் அல்லன் = வஞ்சகர் போன்றோர் அல்லன் இவன் 


நினைவு உடைச் சொற்கள் = சொற்களை நினைத்து பேசுகிறான் 


கண்ணீர்  நிலம்புகப் = கண்ணீர் நிலத்தில் விழுகிறது 


புலம்பா நின்றான்  = புலம்பியபடி நிற்கிறான் 


வினவுதற்கு உரியன் என்னா, = இவனிடம் விசாரிக்கலாம் என்று எண்ணி 


‘வீர! நீ யாவன்? என்றாள். = வீரனே, நீ யார் என்று கேட்டாள் 


நமக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆண்கள் அழக் கூடாது. அழுவது என்பது பலவீனம். என்ன நடந்தாலும் கல்லு போல நிற்பவன் தான் ஆண் மகன் என்று நமக்கு நாமே ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு இருக்கிறோம். 


சிறு வயதில், ஆண் பிள்ளைகள் அழுதால் " பொம்பள பிள்ளை மாதிரி என்னடா அழுதுகிட்டு" என்று அவனை ஏளனம் செய்வோம். ஆண் அழுவது தவறு என்று சிறுவயது முதலே மூளைச் சலவை செய்யப்பட்டு வளர்க்கப் படுகிறோம். 


அது தவறு. 


இராமாயணத்தில் ஆண்கள் அழுகை என்று புத்தகமே எழுதலாம். 


தயரதன் அழுதான், இராமன் பல இடங்களில் அழுது இருக்கிறான், இலக்குவன் அழுதிருக்கிறான், இராவணன் அழுதிருக்கிறான். 


உள்ளே அடக்கி வைத்து, அடக்கி வைத்து புரையோடிப் போய் விடுகிறது. 


"அழுதால் உன்னைப் பெறலாமே" என்பார் மணிவாசகர். 


"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் திருஞானசம்பந்தர். 


இங்கே அனுமன் சீதையின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறான். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தாவி வந்தவன், இலங்கினியை ஒரே குத்தில் நிலை குலைய வைத்தவன், சஞ்சீவி மலையை ஒரு கையால் தூக்கியவன், கண்ணீர் சிந்துகிறான். அதில் தவறு இல்லை. அந்த உணர்ச்சி கலப்பு அவனை உயர்த்துகிறது. அவன் சொல்லுக்கு வலிமை சேர்கிறது. அந்த உணர்வு வெளிப்பாடைக் கொண்டு சீதை "இவன் நல்லவன்" என்று முடிவு செய்கிறாள். 


உணர்வுகளை உள்ளே வைத்துக் கொண்டு, வெறும் சொல்லை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு, "என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை" என்று புலம்புவதில் என்ன பலன்?


சீதை கேட்கிறாள் 'வீரனே, நீ யார்' என்று. 


அனுமன் என்ன சொன்னான், எப்படிச் சொன்னான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்ன சொல்லி இருப்பான், எப்படி சொல்லி இருப்பான் என்று யோசித்துப் பாருங்கள். நாமாக இருந்தால் என்ன பதில் சொல்லி இருப்போம் என்று சிந்திப்போம். 


அப்போதுதான் அனுமனின் பதிலின் மேன்மை புரியும்.


நாளை சந்திப்போமா? 


Thursday, June 2, 2022

திருக்குறள் - வாயால் சொலல்

 திருக்குறள் - வாயால் சொலல் 


ஒழுக்கம் பற்றி, அதன் சிறப்பு பற்றி, அதில் இருந்து வழுவுவதால் வரும் தீமை பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லக் கேட்டோம். 


ஒருவன் ஒழுக்கம் உடையவனா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?


ஏதாவது கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி இருந்தால் அதை வைத்து தீர்மானிக்கலாம். அல்லது யாரிடமாவது நன்னடத்தை சான்றிதழ் வாங்கி வரச் சொல்லலாமா? 


அதெல்லாம் சரி வராது. மிக எளிய வழி இருக்கிறது. 


அவன் பேசுவதை கவனித்தாலே போதும். 


ஒருவன் வாயில் இருந்து தீய சொற்கள் வந்தால், அவன் ஒழுக்கம் இல்லாதவன் என்று அர்த்தம். 


காரணம், வள்ளுவர் சொல்கிறார், "ஒழுக்கம் உடையவர்களுக்கு தீய சொற்கள் தவறிக் கூட அவர்கள் வாயில் இருந்து வராதாம் "


பாடல் 


ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post.html


(pl click the above link to continue reading)


ஒழுக்கம் உடையவர்க்கு = ஒழுக்கம் உள்ளவர்களுக்கு 


ஒல்லாவே = முடியாதே, வராதே 


தீய = தீய சொற்கள் 


வழுக்கியும் = தவறியும் 


வாயால் சொலல் = வாயால் சொல்வது 


மற்றவர்களை விடுங்கள். 


நாம் நம்மைப் பற்றி சிந்திப்போம். 


எப்போதாவது பிள்ளைகளை கடிந்து திட்டி இருக்கிறீர்களா? கணவன்/மனைவி மனம் புண் படும்படி பேசி இருக்கீர்களா ? உடன் பிறப்பு,, நட்பு வருந்தும் படி ஏதேனும் சொல்லி இருக்கிறீர்களா? 


அப்படி என்றால் நீங்கள் ஒழுக்கம் இல்லாதவர் என்று அர்த்தம் என்று வள்ளுவர் சொல்கிறார். 


கோபத்தில் சொல்லி விட்டேன், 

தெரியாமல் சொல்லி விட்டேன், 

அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, 

அவன் தான் முதலில் சொன்னான் நான் பதிலுக்குச் சொன்னேன் 


என்றெல்லாம் சொல்லிப் பலன் இல்லை. 


இப்படி தவறி சொல் வரும் என்று வள்ளுவருக்குத் தெரியும். 


அதனால் தான் "வழுக்கியும்" என்று சொல்கிறார். 


தரை வழுக்கி விழுந்தால் நாம் என்ன சொல்வோம். ஒரே பாசி, ரொம்ப ஈரமாக இருந்தது, வழுக்கி விட்டது...விழுந்து விட்டேன் என்று சொல்லுவோம் அல்லவா? விழுந்தது என் பிழை அல்ல. தரை வழுக்கி விட்டது, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுவோம். 


வள்ளுவர் சொல்கிறார், அது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், தவறுதலாகக் கூட தீய சொற்கள் வராது, ஒழுக்கம் உடையவர்கள் வாயில் இருந்து என்கிறார். 


குறளில் "தீய" என்று மட்டும் தான் இருக்கிறது. அதை ஏன் தீய சொற்கள் என்று எடுக்க வேண்டும்? தீய செயல் என்று ஏன் எடுக்கக் கூடாது?


பின்னால், "வாயால் சொலல்" என்று வருவதை வைத்து, "தீய" என்பது "தீய சொல்லைக் குறிக்கும் என்கிறார் பரிமேலழகர்.


அது என்ன "வாயால் சொலல்". வாயால் தான் சொல்ல முடியும்? மூக்கால், காதால் சொல்ல முடியுமா? சொலல் என்று மட்டும் போட்டு இருக்கலாமே ?


இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். 


மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த காலனை சிவ பெருமான் காலால் உதைத்தார் என்று படித்து இருக்கிறோம். 


அது என்ன காலால் உதைப்பது? கையால் உதைப்பது என்று ஒன்று இருக்கிறதா என்ன? 


இறைவன் திருவடி என்றும் அருள் செய்யக் கூடியது. முதன் முறையாக அருள் செய்வதற்குப் பதில் தண்டனை தருகிறது.  எனவே தான் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு தொழிலைச் செய்ததால் அதை தனியாகக் கூறினார். 


வாய் என்றால் நல்ல சொற்களைத் தான் சொல்ல வேண்டும். அதை விடுத்து தீய சொற்களை சொல்வதால், அது வாய் செய்யாத வேலை அல்லது செய்யக் கூடாத வேலை என்பதால் அதை தனியே சுட்டிக் காட்டுகிறார். 


"வாயால் சொலல்" என்று இருக்கிறது.  சொல்லுதல் என்றால் ஒரு தரம் சொல்லுவது என்று தான் அர்த்தம். சொல்லிக் கொண்டே இருப்பது என்று அர்த்தம் அல்ல. 


தமிழிலே சாதி ஒருமை என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. 


நாய் குரைக்கும் என்றால் ஒரு நாய் தான் குரைக்கும் என்று இல்லை. எல்லா நாயும் குரைக்கும். நாய்கள் குரைக்கும் என்று சொல்லி இருக்க வேண்டும். எங்கே நாய் என்பது சாதி ஒருமை. நாய் என்ற சாதிக்கு அது நின்றது. மாம்பழம் இனிக்கும், பசு பால் தரும் என்று சொல்லுவதைப் போல. 


சொலல் என்றால் ஏதோ ஒரு முறை சொல்லுவது மட்டும் அல்ல. எப்போதெல்லாம் சொல்லப் படுகிறதோ அப்போதெல்லாம். 


அதெல்லாம் சரி, "தீய" என்று சொல்கிறாரே...அது என்ன தீய? 


தீமை என்றால் பிறருக்கு தீமை பயக்கும் சொற்கள். 


சிலர் இனிக்க இனிக்க பேசுவார்கள். அப்படி பேசி பேசியே ஆளை கவிழ்த்து விடுவார்கள்.  அது தீமை தரும் சொல்.


பொய் சொல்லுதல், புரணி பேசுதல்,  பயனில பேசுதல், எல்லாமே தீய சொற்கள் தான். 


நாம் பேசுவதால் யாருக்காவது நன்மை விளையுமா என்று எண்ணிப் பேச வேண்டும். யாருக்குமே நன்மை இல்லை என்றால் எதற்காகப் பேச வேண்டும்? 


தவறிக் கூட தீய சொற்கள் வரக் கூடாது என்றால் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? எவ்வளவு பழக்கம் வேண்டும்? 


ஒழுக்கம் இருந்தால் தான் அது கை கூடும். 


சிந்திப்போம். 






Wednesday, June 1, 2022

ஆன்மீகமும் அறிவியலும் - சில சிந்தனைகள் - பாகம் 1

 ஆன்மீகமும் அறிவியலும் - சில சிந்தனைகள் - பாகம் 1 


நாம் இங்கே இருக்கிறோம். 


இங்கே என்றால் இந்த இடத்தில், இந்த கால கட்டத்தில் இருக்கிறோம். 


எங்கே போகிறோம் ? இந்த வாழ்வின் முடிவு என்ன? வாழ்வு என்றால் நம் ஒருவருடைய வாழ்வு அல்ல...இந்த மனித உயிர்கள் அனைத்தின் வாழ்வும்...இந்த பூமி, சூரியன், நட்சத்திரம் ..இதெல்லாம் ஏன் தோன்றியது? ஒன்றுமே தோன்றாமலே வெறும் வெட்ட வெளியாக இருந்து இருக்கலாமே? வேலை மெனக் கெட்டு இவ்வளவு பெரிய பிரபஞ்சம் எதற்கு ? விடாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது. எதற்கு? 


இதற்கு எல்லாம் காரணம் இருக்கிறதா?


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1.html


(pl click the above link to continue reading)



திடீரென்று கண் விழித்துப் பார்க்கிறோம்.ஏதோ ஒரு இரயில் வண்டியில் நாம் பயணம் செய்வது தெரிகிறது.   காலம் ஓடுகிறது. காட்சிகள் மாறுகின்றன.  நகர்கிறோம் என்று தெரிகிறது. இல்லை என்றால் எல்லாம் ஒரே மாதிரி அல்லவா இருக்க வேண்டும். 


நகர்கிறது என்றால் எதை நோக்கி? தெரியவில்லை. 


சரி, எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொண்டால், எங்கே போகிறோம் என்பதி யூகிக்க முடியும். எனவே எங்கே நம் பயணம் தொடங்கியது என்று அறியத் தலைப்படுகிறோம். 


போகும் இடமும் தெரியவில்லை, புறப்பட்ட இடமும் தெரியவில்லை.


மிகப் பெரிய கேள்விக் குறி நம் முன் நிற்கிறது. 


இதற்கு எப்படி விடை காண்பது?


ஆதியும் தெரியவில்லை, அந்தமும் தெரியவில்லை. 


அறிவியல் விடை தேடிப் புறப்பட்டது.  எங்கிருந்து வந்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. எங்கே போகிறோம் என்று ஒரு ஆராய்ச்சி. 


ஆன்மீகமும் இதே கேள்விகளை கேட்கிறது. ஆனால், அதன் விடைகள் வேறு மாதிரி இருக்கிறது.  இறைவன் தோற்றுவித்தான், அவனுள் எல்லாம் ஒடுங்கும் என்று சொல்லி விடுகிறது. 


அறிவியல் எந்த கேள்விகளை கேட்கிறதோ, எதற்கு விடை தெரியாமல் தேடிக் கொண்டு இருக்கிறதோ, அந்தத் தேடல் ஆன்மீகத்திலும் இருக்கிறது. அதே கேள்வியை ஆன்மீக வாதிகளும் கேட்டு இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடயம். 


யார் சொல்வது சரி, யார் தவறு என்று வாதம் செய்வது அல்ல என் நோக்கம். 


இரண்டு கேள்விகளையும், அவர்கள் கண்ட விடைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். நீங்கள் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். முடிவு உங்கள் கையில். 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். 


நம் முன்னவர்கள் அனைத்தையும் கண்டு பிடித்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்களிடமும் அறிவியல் கேட்கும் கேள்விகள் இருந்து இருக்கின்றன. 


ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றிணைப்பதோ, அல்லது எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று நிரூபிக்கவோ நான் முயலவில்லை. என் வேலையும் அல்ல அது. 


இது ஒரு பயணம் அவ்வளவு தான். 


இங்கே ஒரு செடி, அங்கே ஒரு மலை, ஒரு பூ, ஒரு அருவி, ஒரு செடி, ஒரு பள்ளத்தாக்கு, என்று எல்லாவற்றையும் பார்த்து இரசித்துக் கொண்டே செல்லும் ஒரு இனிய பயணம் அவ்வளவுதான். 


செல்வோமா ?


கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5

   

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html

பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


பின் மனதுக்குள் நினைக்கிறாள் 


"சரி, இப்ப என்ன? ஒரு வேளை இவன் அரக்கனா இருப்பானோ என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. அரக்கனாகவே இருந்து விட்டுப் போகட்டும். அல்லது ஒரு தேவனாக இருக்கட்டும். இல்லை, பார்பதற்கு குரங்கு இனத்தை சார்ந்தவன் போல இருக்கிறான். அதில் ஒருவனாகவே இருந்து விட்டுப் போகட்டும். கொடுமை செய்பவனாக இருக்கட்டும் அல்லது இரக்கம் உள்ளவனாக இருக்கட்டும். யாராக இருந்தால் என்ன? இங்கு வந்து இராமனின் பேரைச் சொல்லி, என் மனத்தை உருக்கி விட்டான். எனக்கு ஒரு புது உணர்வைத் தந்தான். இதை விட வேறு என்ன வேண்டும்? "


என்று அவள் சிந்திக்கிறாள். 




பாடல் 


அரக்கனே ஆக : வேறு ஓர்

    அமரனே ஆக : அன்றிக்

குரக்கு இனத்து ஒருவனேதான்

    ஆகுக : கொடுமை ஆக :

இரக்கமே ஆக : வந்து இங்கு

    எம்பிரான் நாமம் சொல்லி

உருக்கினன் உணர்வைத், தந்தான்

    உயிர்; இதின் உதவி உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


(pl click the above link to continue reading) 



அரக்கனே ஆக = அரக்கனாகவே இருக்கட்டும் 


வேறு ஓர் = அல்லது வேறு ஒரு 


அமரனே ஆக = தேவனாகவே இருக்கட்டும் 


அன்றிக் = அல்லது 


குரக்கு இனத்து = குரங்கு இனத்தில் 


ஒருவனேதான் ஆகுக = ஒருவனாக இருக்கட்டும் 


கொடுமை ஆக = கொடுமை உள்ளம் உள்ளவனாக இருக்கட்டும் 


இரக்கமே ஆக = இரக்க குணம் உள்ளவனாக இருந்து விட்டுப் போகட்டும் 


வந்து இங்கு = இங்கு வந்து 


எம்பிரான் நாமம் சொல்லி = என் நாயகன் இராமனின் பெயரைச் சொல்லி 


உருக்கினன் உணர்வைத் = உள்ளத்தை உருக்கி விட்டான் 


தந்தான்  உயிர் =  போக இருந்த உயிரை போகாமல் தடுத்து நிறுத்தி அதை எனக்கு மீண்டும் தந்தான் 


இதின் உதவி உண்டோ? = இதை விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும் ?


யாராக இருந்தால் என்ன? இராமன் பேரைச் சொன்னான். அது போதும் என்கிறாள் சீதை. 


பிரான் = பிரியான் என்பதன் மருவூ 


எம்பிரான் = என்னை விட்டு எப்போதும் பிரியாதவன் 


அவன் யார் என்று இன்னமும் சீதைக்கு புரியவில்லை. இவனாக இருக்குமோ, ,அவனாக இருக்குமோ என்று ஐயுறுகிறாள். .


இருந்தும், யாரா இருந்தா என்ன, இராமன் பேரைச் சொல்லிவிட்டான், அது போதும் என்று இருக்கிறாள். 


உள்ளம் உருகியது, உயிர் மீண்டு வந்தது ...எதனால்?


அனுமனின் பேச்சால். 


பேச்சுக்கு அவ்வளவு வலிமை உண்டு. உள்ளதை உருக்கும். உயிரை நனைக்கும். 


நம்மிடம் ஒரு உயர்ந்த பொருள் இருந்தால் அதை எவ்வளவு பாதுகாப்பாக வைத்து இருப்போம்?


பல அருங்காட்சி நிலையங்களில் பல விலை மதிக்க முடியாத ஓவியங்கள், பொருள்கள் இருக்கும். அதை எல்லா நேரத்திலும் எல்லோரும் பார்க்கும் படி வைக்க மாட்டார்கள். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தினங்களில் மட்டும் காட்சிக்கு வைப்பார்கள். 


எல்லா நேரமும் வைத்து இருந்தால் அதன் மதிப்பு போய் விடும். எப்போதோ ஒரு தரம் என்றால் அதை பார்க்க ஆவல் வரும். 


நமது சொற்களும் அப்படித்தான். அவை விலை மதிக்க முடியாதவை. அதை வீணடிக்கக் கூடாது. மிகக் குறைவாக பேச வேண்டும். அளந்து பேச வேண்டும். சிறந்த வார்த்தைகளை தெரிந்து எடுத்து பேச வேண்டும். 


ஒவ்வொரு சொல்லும் மந்திரம் போல. 


அவ்வளவு வலிமை மிக்கவை. அதன் மதிப்பு தெரியமால் வீணடித்திடக் கூடாது. 


பொட்டலம் நிறைய சுண்டல் இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். 


அதுவே வைரக் கற்களாக இருந்தால்?  


நம் சொற்கள் சுண்டலா, வைரமா என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். 


இன்னும் சீதை பேசவில்லை. 


அதுவும் ஒரு செய்திதான். மற்றவர் பேசும் போது இடையிடாமல் அமைதியாக முழுவதும் கேட்பதும் ஒரு கலை தான். .


பாத்திரங்களின் ஊடாக இவற்றை எல்லாம் நாம் கவனித்தால், உயர்ந்த பண்புகள் விளங்கும். நாளடைவில் அவை நம்மிடையே நம்மையும் அறியாமல் வந்து சேர்ந்து விடும். 





Tuesday, May 31, 2022

திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 2

 

 திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும்  - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம் 


பாடல் 


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_31.html


(pl click the above link to continue reading)


நன்றிக்கு  = நன்மைக்கு 


வித்தாகும் = விதையாகும் 


நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம் 


தீயொழுக்கம் = தீய ஒழுக்கம் 


என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும். 


இதில், நன்றிக்கு வித்தாகும் என்ற தொடரில் வித்து (விதை) எப்படி பலவாக பிரிந்து பலன் தருமோ அது போல நல்ல ஒழுக்கமும் பலன் தரும் என்ற இடத்தில் முந்தைய பதிவை நிறுத்தி இருந்தோம். 


எப்படி என்று பார்ப்போம். 


வீட்டில் ஒரு பிள்ளை தினம் தோறும் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் படிக்கிறான். அது அவனது ஒழுக்கம். அதனால் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல வேலை கிடைக்கிறது. 


அது அவனுக்கு கிடைத்த பலன். நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றால் அவன் பிள்ளைகளுக்கு அது உதவும் அல்லவா? அவன் பேரப் பிள்ளைகளுக்கு உதவும் அல்லவா? 


அவன் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறானோ அது நன்றாக வளரும். அதில் முதலீடு செய்தவர்கள் பலன் பெறுவார்கள். 


அந்த நிறுவனம் வளரும் போது அங்கு வேலை செய்யும் மறவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். அவர்களும், அவர்கள் பிள்ளைகளும் பலன் பெறுவார்கள். 


மேலும், நிறுவனம் வளரும் போது மேலும் பலருக்கு வேலை கிடைக்கும். 


மேலும், அந்த நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் அரசுக்கு வருமான வரி, விற்பனை வரி கிடைக்கும். அந்தப் பணம் ஏழைகளுக்கு பல விதங்களில் பயன் படும் அல்லவா?


ஒரு ஒழுக்கம். ஒருவனிடம் இருந்தால் அதன் பலன் எப்படி பல்கி பெருகுகிறது என்று கவனிக்க வேண்டும். 


சரி, நல்ல ஒழுக்கம் இப்படி பெருகுகிறது என்றால் தீய ஒழுக்கமும் அப்படித் தான் பெருகும். ஒருவன் ஒரு தீமை செய்கிறான் என்றால் அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் குடும்பம், சுற்றம், நட்பு என்று எல்லோரையும் பாதிக்கும். 


ஒரு தவறுதானே என்று நாம் நினைக்கலாம். முதலில் அப்படித்தான் ஆரம்பிக்கும். பின் பழக்கமாகிவிடும். அதுவே ஒழுக்கமாகிவிடும். பின் தீராத துன்பத்தைத் தரும். 


இராவணன் செய்த ஒரு ஒழுக்கக் குறைவான செயல் அவன் மட்டிலுமா நின்றது? அரக்கர் குலத்தையே வேர் அறுத்தது அல்லவா? அதோடு போயிற்றா, இன்று வரை அவனை ஒழுக்கம் குறைந்தவனாகத் தான் நாம் நினைக்கிறோம். ஒரு நாளும் அந்தப் பழி போகாது. 


இதில் பரிமேலழகர் ஒரு நுட்பம் செய்கிறார். 


"என்றும் இடும்பைத் தரும்" என்பதில் உள்ள "என்றும்" என்ற சொல்லைப் பிடித்துக் கொள்கிறார். 


என்றும் என்றால் எதுவரையில் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, இந்த பிறவி மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகள் தோறும் தொடரும் என்கிறார். 


சற்றே விரித்துப் பார்ப்போம். 


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து என்பது வள்ளுவம். .


ஒரு பிறவியில் கற்ற கல்வி, ஏழு பிறவிக்கு தொடரும் என்பது கருத்து. அது போல, ஒரு பிறவியில் கொண்ட தீய ஒழுக்கம், "எப்போதும்" துன்பத்தைத் தரும். 


நரகத்தில் கிடந்து அல்லல்  பட வேண்டி வரும். 


மறு பிறப்பில் துன்பம் வந்து சேரும். 


அது மட்டும் அல்ல, தீய ஒழுக்கம் உள்ளவனை அவன் காலத்துக்குப் பின்னும் மக்கள் ஏசிக் கொண்டே இருப்பார்கள். 


கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனை இன்றும் நாம் நிந்திக்கிறோம் அல்லவா?  என்றும் இடும்பை தந்து கொண்டு இருக்கிறது அல்லவா?


கட்டபொம்மன் என்றோ இறந்து விட்டான். இன்றும் அவன் பெயரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அவன் பெயரைச் சொல்லி, இறங்குங்கள் என்று தான் சொல்கிறார்கள். இன்றும் கருவுற்ற தாய்மார்கள் அவன் தூக்கில் இடப்பட்ட இடத்துக்குச் சென்று, அங்குள்ள மண்ணை ஒரு சிட்டிகை வாயில் போட்டுக் கொள்கிறார்கள். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை கட்டபொம்மன் மாதிரி வீரனாக பிறக்க வேண்டும் என்ற ஆசையில். 


இன்றும் புகழ் சேர்கிறது அல்லவா? 


என்றும் என்பதற்கு "இம்மைக்கும், மறுமைக்கும்" என்று பொருள் சொல்கிறார் பரிமேலழகர். 


தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும். .


நல்லொழுக்கம் என்றும் நன்மை தரும். 


வித்து, என்றும் என்ற இரண்டு வார்த்தைககளில் எவ்வளவு அர்த்தங்களை பொதித்து வைத்து இருக்கிறார் வள்ளுவர். 



Monday, May 30, 2022

யாப்பிலக்கணம் - எதுகை, மோனை

 யாப்பிலக்கணம் - எதுகை, மோனை 


ஒரு புலவருக்கு எது கை தவறினாலும் எதுகை தவறக் கூடாது என்பார்கள். 


எதுகை என்றால் என்ன?


ஒரு பாடலில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி வந்தால் அது எதுகை. 


சில உதாரணங்கள் பார்ப்போம்:


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


என்ற அபிராமி அந்தாதியில் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_30.html


(pl click the above link to continue  reading)


உதிக்கின்ற, மதிக்கின்ற, துதிக்கின்ற, விதிக்கின்ற 


என்று ஒவ்வொரு அடியிலும் முதல் சீரில் இரண்டாவது எழுத்து 'தி' என்று வருகிறது அல்லவா, அது எதுகை. 


ஒவ்வொரு அடியிலும் அது வருவதால், அது 'அடி எதுகை' எனப்படும். 


ஒவ்வொரு சீரிலும் வந்தால் அது சீர் எதுகை எனப்படும். அதில் பல வகை இருக்கிறது. 


முதல் சீர் மற்றும் இரண்டாம் சீர்

முதல் சீர் ம் மற்றும் மூன்றாம் சீர்

முதல் மற்றும் நான்கு 


என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பேர் இருக்கிறது. 


ஒரு பாடலில் ஒவ்வொரு சீரிலும் எதுகை வந்தால் அது முற்றெதுகை எனப்படும். 


மாறாக, இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல், மற்ற எழுத்துகள் ஒன்றி வந்தால் அதற்கு மோனை என்று பெயர். அது முதல் எழுத்தாக இருக்கலாம், மூன்றாம் எழுத்தாக இருக்கலாம்...எந்த எழுத்தாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


உதாரணமாக 


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக


இதில் கற்க, கசடற, கற்பவை, கற்றபின் என்ற சீர்களில் 'க' என்ற முதல் எழுத்து ஒன்றி வருகிறது. எனவே அது மோனை. 


எதுகையைப் போலவே இதிலும் அடி மோனை, சீர் மோனை என்று உண்டு. 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை


என்ற பாடலில் து என்ற முதல் எழுத்து ஒன்றி வருவதால் அது மோனை, 'ப்' என்ற இரண்டாவது எழுத்து ஒன்றி வருவதால் அது எதுகை. 


இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தாலும், முதல் எழுத்து அளவோடு இருக்க வேண்டும். 


உதாரணமாக


ஆட்டம் 

பாட்டம் 


என்று வந்தால் அது எதுகை. 


ஆட்டம்

பட்டம்

என்று வந்தால் அது எதுகை இல்லை. 


ஒலியின் இனிமை குறைகிறது அல்லவா?


கூட்டம்,  வாட்டம் - எதுகை

கூட்டம், வட்டம் - எதுகை இல்லை 



எதுகை மோனை வரும் போது பாடலுக்கு ஒரு இசை நயம் வரும். கீழே உள்ள பாடலை படித்துப் பாருங்கள். ஒரு தாள இலயம் தெரிகிறது அல்லவா?




பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,

அஞ்சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.



ஒரே எழுத்து தான் இருக்க வேண்டும் என்று இல்லை. 


ஒரு எழுத்துக்கு இன எழுத்தும் எதுகை மோனையாக வரலாம். 


அது என்ன இன எழுத்து என்று அடுத்த பதிவில் காணலாம். 


அதுவரை, நீங்கள் இரசித்த எதுகை மோனை உள்ள பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே. சுவாரசியமாக இருக்கும். 


சேர்ந்து படிப்போமே....அதுவும் ஒரு சுகம்தான். 


திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 1

 திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும்  - பாகம் 1 


ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தம் கொண்டு வரும் கலை வள்ளுவருக்கே உரியது.  எப்படித்தான் அந்த சொல் வந்து விழுகிறதோ அந்த இடத்தில் என்று பிரமிப்பை ஏற்படுத்தும். 


அப்படி ஒரு சொல்லைக் கொண்ட குறள் தான் நாம் இன்று பார்க்கப் போவது. 


"நன்மைக்கு வித்தாகும் நல்ல ஒழுக்கம். தீய ஒழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும்."


இது தான் மேலோட்டமான கருத்து. ஆழமான பல செய்திகள் உண்டு. 


பாடல் 


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_30.html



(pl click the above link to continue reading)


நன்றிக்கு  = நன்மைக்கு 


வித்தாகும் = விதையாகும் 


நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம் 


தீயொழுக்கம் = தீய ஒழுக்கம் 


என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும். 


படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்று. 


முயற்சிக்கிறேன். 


முதலில், அது என்ன தீய ஒழுக்கம்? ஒழுக்கத்தில் நல்ல ஒழுக்கம் , தீய ஒழுக்கம் என்று இருக்கிறதா? அப்படி என்றால் என்ன?  


ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. எதையும் முறையாக கடைபிடிப்பது ஒழுக்கம். அது நல்ல விடயமா அல்லது தீய விடயமா என்பது வேறு செய்தி. உதாரணமாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி முகம் , கை கால் கழுவி பின் தான் காப்பி குடிப்பேன் என்பது ஒரு ஒழுக்கம். இல்லை, படுக்கையிலேயே காப்பி குடிப்பேன். அப்புறம் தான் பல் துலக்குவேன் என்பது இன்னொரு ஒழுக்கம். என்ன ஆனாலும் சரி, காப்பி குடிக்காமல் படுக்கையை விட்டு எழுந்திரிப்பது இல்லை என்று இருந்தால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். முறையாக, தவறாமல் செய்வதால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். 


நல்ல ஒழுக்கமா, தீய ஒழுக்கமா என்பது வேறு விடயம். 


காப்பி குடிப்பதே ஒரு தீமை என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார்கள். அதில் என்ன குளித்துவிட்டு குடிப்பது, குளிக்கும் முன் குடிப்பது  என்று வாதம் செய்யலாம் அல்லவா? 


எனவே முறையாகச் செய்யும் எதுவும் ஒழுக்கம் தான். 


இரண்டாவது, நன்மைக்கு வித்தாகும் நல்லொழுக்கம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நல்ல ஒழுக்கம் இல்லாவிட்டால் நன்மை விளையாது. நன்மை விளையாவிட்டால்? தீமை விளையும் என்று அர்த்தம். 


மூன்றாவது, நான் முன் சொன்ன ஒரு வார்த்தை. ஒரு சொல். அது "வித்து" என்ற சொல். வித்து என்றால் விதை. 


நன்மைக்கு விதை நல்ல ஒழுக்கம். 


விதை என்று ஏன் சொல்ல வேண்டும்? 


விதையில் இருந்து செடி வரும், மரமாக வளரும், கிளை பரப்பி, நிழல் தந்து, காய், கனி என்று மிகுந்த பலன்களைத் தரும்.  அதுவும் எப்படி? ஏதோ ஒருவருடம் நிழல், காய், கனி எல்லாம் தந்துவிட்டு நின்று விடாது. ஒவ்வொரு வருடமும் தரும் அல்லவா? அதன் ஆயுள் உள்ள வரை அதில் இருந்து நமக்கு நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும். 


சற்று பொறுங்கள், ஆயுள் உள்ள வரை மட்டுமா? 


அந்த மரத்தில் இருந்து வரும் கனியின் உள்ளே விதை இருக்கும். அந்த விதை முளைத்து இன்னும் பல மரங்கள் வரும். அந்த மரங்களில் இருந்து எவ்வளவு பலன்கள் கிடைக்கும். 


என்றோ போட்ட ஒரு விதை எவ்வளவு காலத்துக்கு எவ்வளவு பலன் தருகிறது. 


அது மட்டுமா?


ஒரு விதை, ஒரு மரமாக ஆகிறது. 


ஒரு மரம், பல்லாயிரக் கணக்கான பழங்களை தருகிறது. அவற்றில் இருந்து எவ்வளவு விதைகள் வருகின்றன? அவை அனைத்தும் மரமானால் எவ்வளவு பலன் கிடைக்கும்? 


அது மட்டும் அல்ல. விதை வளர்ந்து விதை நட்டவனுக்கு மட்டுமா பலன் தருகிறது?


மரத்தில் எத்தனையோ பறவைகள் கூடு கட்டுகின்றன. தேனீக்கள் கூட கூடு கட்டலாம். 


மரம், மண் அரிப்பை தடுக்கிறது. அதனால பல நன்மைகள். 


மரம், மழையை கொண்டு வருகிறது. அதனால் எவ்வளவு நன்மைகள். 


இப்படி கணக்கு சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு விதையில் இருந்து எவ்வளவு நன்மை? எவ்வளவு காலத்துக்கு நன்மை.


மரத்தின் கிளையை அறுத்து பெட்டி செய்யலாம், பீரோ செய்யலாம். அது எத்தனை காலம் வரும். மரம் இறந்த பின்னும், அதன் பலன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


அது போல ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால், அது ஒரு விதை போல இருந்து பல நன்மைகள் செய்யும். 


உதாரணமாக .....



(பதிவு சற்றே நீண்டு விட்டதால், இதை அடுத்த பாகத்தில் தொடர்வோம்)