Monday, November 20, 2023

திருக்குறள் - புலவரைப் போற்றாது

 திருக்குறள் - புலவரைப் போற்றாது 


நமது வாழ்வில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கிறது. நமக்கு மட்டும் அல்ல, பொதுவாகவே இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்தே நிற்கிறது. 


இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்து நிற்கிறது. இப்படி கலக்காமல் தனித் தனியே இருக்கும் உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்கிறார்கள். 


இன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம் சுவர்க்கம் எனப்படுகிறது. 


துன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம், நரகம் எனப்படுகிறது. 


சுவர்க்கம் என்பதை புத்தேள் உலகு இன்று குறித்தார்கள் அந்த நாட்களில். 


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம். 


யார் இந்த புத்தேள் உலகுக்குப் போவார்கள்? அங்கே போனாலும் என்ன மரியாதை இருக்கும் ?  மகாத்மா காந்தியும் போகிறார், நானும் போகிறேன் என்றால் யாருக்கு மதிப்பு அதிகம் இருக்கும்?  


ஒரு ஞானியும், ஒரு இல்லறத்தானும் புத்தேள் உலகம் போனால், அங்குள்ள தேவர்கள் யாரை அதிகம் மதிப்பார்கள்?  ஞானியையா? அல்லது இல்லறத்தானையா?  


பாடல் 


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


பொருள் 



(pl click the above link to continue reading)


நிலவரை = நிலத்தின் எல்லை வரை. அதாவது, இந்த பூ உலகம் நிற்கும் வரை 


நீள்புகழ் = நீண்ட புகழை 


ஆற்றின் = ஒருவன் பெறுவானானால் 


புலவரைப் = ஞானியரை 


போற்றாது = சிறப்பாக நினைக்காது 


புத்தேள் உலகு = சொர்க்கம் 


ஞானியை விட இல்லறத்தில் இருந்து புகழ் பெற்றவனுக்குத் தான் மதிப்பு அதிகம். 


ஞானியாரைப் போற்றாது புத்தேள் உலகு.


ஏன் போற்றாது? இல்லறத்தில் இருப்பவன் எப்படி ஞானியை விட சிறந்தவனாக முடியும்?


இருவருமே புத்தேள் உலகம் போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.


ஞானி, ஒரு தனி மனிதனாக, தன் முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டு போகிறான். 


ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, தான், பிள்ளை, மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, விருந்து என்று எல்லோரையும் அணைத்துக் கொண்டு சிறப்பாக இல்லறம் நடத்தி, இங்கும் புகழ் பெறுகிறான், மேலே சென்று அங்கும் புகழ் பெறுகிறான். 


ஒருவன் சிறப்பாக இல்லறத்தை நடத்தினான் என்றால், அவன் புகழ் இந்த வையம் இருக்கும் வரை நிற்கும்.  அவனுக்கு இங்கும் சிறப்பு, அங்கும் சிறப்பு. 


சொர்க்கம் போக வேண்டுமா, இல்லறத்தை சிறப்பாக நடந்த்துங்கள். அது போதும். 


அது என்ன சிறப்பான இல்லறம் என்றால், இதுவரை நாம் பார்த்த அனைத்து குறள் வழியும் நின்றால் போதும். அதுதான் சிறந்த இலல்றம். 


அறன் , வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, விருந்தோம்பல்....என்று படித்ப் படியாக வளர்ந்து பின் ஒப்புரவு, ஈகை, அண்ட் ஆகி இறுதியில் புகழ் என்பதில் வந்து நிற்கும் இல்லறம். 


சொர்க்கம் போக short-cut ... 




Friday, November 17, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான்

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான் 


இராவணனின் மந்திர ஆலோசனை சபை கூட்டம் தொடங்கப் போகிறது. சபை கூடுமுன் என்னவெல்லாம் செய்தான் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 


அமைச்சர்கள், நீண்ட காலம் அரச சேவையில் இருப்பவர்கள் என்ற சிலரை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேறச் சொன்னான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். 


மேலும், 


அரசவையில் பல திறமைசாலிகள் இருப்பார்கள், போரில் வல்லவர்கள் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் எல்லோரையும் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க முடியாது. ஆட்கள் அதிகம் ஆக ஆக குழப்பம்தான் மிஞ்சும். மேலும், எது சரி எது தவறு என்று நினைப்பவர்கள் ஒரு புறம். தனக்கு எது நல்லது என்று சிந்திப்பவர்கள் ஒரு புறம். தனக்கு நன்மை தருவதை பற்றி சிந்திப்பவர்கள் தனக்கு நெருங்கிய சுற்றத்தார் மற்றும் உறவினர்கள். எனவே,அவர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேற்றினான். 




பாடல்  


ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு

ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும்

வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்

போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்.



பொருள் 



(pl click the above link to continue reading)

ஆன்று = ஆழமாக 


அமை = அமைந்த 


கேள்வியர் = கேள்வி அறிவு உடையவர் 


எனினும் = என்றாலும் 


ஆண் தொழிற்கு = போர்த் தொழிலுக்கு 


ஏன்றவர் = பொருந்தியவர், சரியானவர் என்ற


நண்பினர் = நண்பர்கள் 


எனினும் = என்றாலும் 


யாரையும் = அவர்கள் அனைவரையும் 


வான் = நீண்ட 


துணைச் = துணையாக உள்ள 


சுற்றத்து  மக்கள் = சுற்றத்தார் 


தம்பியர் = தன் தம்பிகள் 


போன்றவர் அல்லரைப் = அவர்கள் போன்றவர் அல்லாதவரை   


புறத்துப் போக்கினான். =  வெளியில் அனுப்பினான் 


இந்தப் பாடல் நமக்குச் சற்று நெருடலான பாடல். 


சொந்தக்காரர்களை, தம்பிகளை வைத்துக் கொண்டான், ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள், போர்த் தொழிலில் திறமையானவர்களை விலக்கி விட்டான் என்று சொன்னால், அது நமக்குச் சரியாகப் படாது. 


ஆங்கிலத்தில் nepotism என்று சொல்லுவார்கள். தன் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது. 


இன்றைய அரசியல், நிர்வாக முறைப்படி அது தவறாகத் தெரியும். 


ஆனால், அன்று இருந்தது ஜனநாயகம் அல்ல. அரசன் தான் எல்லாம். அவனை இறைவனுக்குச் சமமாக மக்கள் கருதினார்கள். 


அவனுக்கு எது நல்லதோ அது எல்லோருக்கும் நல்லது என்று நம்பினார்கள். 


எனவே, இராவணன், தனக்கு நல்லது நினைப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டான். 


ஆனால், தனக்கு எது நல்லது என்று இராவணனுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. யார் சொன்னதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எல்லாம் பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 


 


Thursday, November 16, 2023

திருக்குறள் - பொன்றாது நிற்பது

 திருக்குறள் - பொன்றாது நிற்பது 


பெரிய பெரிய அரசர்கள் உலகை கட்டி ஆண்டார்கள். பெரிய அரசியல் தலைவர்கள் உலகே வியக்கும்படி சாதனைகள் செய்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் பரம்பரை, அவர்கள் சொத்து, என்று எது இருக்கிறது இப்போது?


இராஜராஜ சோழன் பரம்பரை எங்கே, அவன் கட்டிய அரண்மனைகள் எங்கே?  அசோக சக்ரவர்த்தியின் வாரிசுகள் யார்? 


ஒன்றும் தெரியாது. 


மிஞ்சி நிற்பது அவர்கள் பேரும் புகழும் மட்டும்தான். 


என்றோ வாழ்ந்த அதியமான், சிபிச் சக்கரவர்த்தி, கர்ணன் என்று அவர்கள் புகழ் இன்றும் நிற்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கும். 


முந்தைய பாடல்களில் வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை என்றும் பாடும் புலவர்கள் பாடுவது எல்லாம் அவர்கள் புகழைத்தான் என்றும் பார்த்தோம். 


வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார். 


ஒருவனுக்கு பசிக்கிறது. உணவு அளித்தோம். புகழ் வந்து விடுமா?  


படிப்பு செலவுக்கு, திருமண செலவுக்கு என்று ஒருவன் நம்மிடம் உதவி கேட்கிறான். ஒரு ஐந்து ஆயிரமோ, பத்து ஆயிரமோ கொடுக்கிறோம். புகழ் வந்து விடுமா?  காலகாலத்துக்கும் நம் புகழ் நிற்குமா?


நிற்காது. பின் என்ன செய்தால் நீண்ட புகழ் வரும்?


வள்ளுவர் கூறுகிறார் 


"இணையில்லாத உலகில் சிறந்த புகழ் அல்லது நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை"


என்று.


பாடல் 


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_16.html



(please click the above link to continue reading)


ஒன்றா = ஒப்பிட்டு கூற முடியாத, இணை இல்லாத, 


உலகத்து = உலகில் 


உயர்ந்த புகழ் = சிறந்த புகழ் 


அல்லால் = தவிர 


பொன்றாது = நிலைத்து 


நிற்பதொன்று இல் = நிற்பது வேறு எதுவும் இல்லை 


புகழ் போல நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை என்கிறார். 


சரி, புரிகிறது. ஆனால் இதில் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார். 


இது சாதாரண விடயம். எல்லோருக்கும் தெரிந்ததுதானே. இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா?


அப்படி அல்ல. 


பரிமேலழகர் இல்லை என்றால், இதில் ஒன்றும் இல்லை என்று மேலே சென்று விடுவோம். 


பரிமேலழகர் சொற்களை இடம் மாற்றிப் போடுகிறார். 


ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்  உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்


என்று. 


இணையில்லாத உலகம் அல்ல, இணையில்லாத புகழ் அல்லது இந்த உலகில் நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை.


இணையில்லா என்ற அடைமொழியை புகழுக்குச் சேர்க்கிறார். உலகத்துக்கு அல்ல. 


சரி, அதனால் என்ன. இணையில்லாத உலகம், இணையில்லாத புகழ். புரிகிறது. 


அதனால் என்ன பெரிய அர்த்த மாற்றம் வந்து விடும்?


இணையில்லாத புகழ் எப்படி வரும்?


நான் ஒருவனுக்கு ஒரு வேளை உணவு அளிக்கிறேன் என்றால். அதே போல் இன்னொருவனும் செய்ய முடியும். அதை விட அதிகமாகக் கூட செய்ய முடியும். ஒரு வேளை என்ன ஒரு வேளை, இரு வேளை, மூன்று வேளை...ஒரு ஆள் என்ன ஒரு ஆள், பத்து பேர், நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறேன் என்று மற்றவர்கள் ஆரம்பிக்க முடியும். அப்போது, என் புகழ் மங்கிவிடும். 


இணையில்லாத புகழ் எப்போது வரும்? நான் செய்ததை மற்றவன் செய்ய முடியாத போது எனக்கு அந்த புகழ் வரும் அல்லவா?


அது என்ன செயல்?


ஒருவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அவசரமாக இரத்தம் தேவைப் படுகிறது. நான் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றுகிறேன். அதை எல்லோராலும் செய்ய முடியாது. 


அப்படி கூட சொல்ல முடியாது. இரத்த தானம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். 


அப்படி என்றால் அதைவிட சிறந்தது எது?


இங்குதான் பரிமேலழகர் உச்சம் தொடுகிறார். 


யாராலும் கொடுக்க முடியாத ஒன்று உயிர், உடல் உறுப்புகள். 


உயிரைக் கொடுப்பது என்பது நடவாத காரியம். நாட்டுக்காக, குடும்பத்துக்காக ஒருவன் உயிரை தியாகம் செய்கிறான் என்றால், அதுதான் பொன்றாப் புகழ். யாரால் முடியும்?


உடல் உறுப்பு? முடியுமா?  புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்ரவர்த்தி. அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. அவன் புகழ் இன்றளவும் நிற்கிறது. 


கண்ணை எடுத்து கொடுத்தான் கண்ணப்பன். அந்த வேடனின் புகழ் இன்றும் நிற்கிறது. 


தன்னிடம் உள்ள மிகச் சிறந்த ஒன்றை ஒருவன் கொடுக்கும் போது, பொன்றா புகழ் பெறுகிறான் என்கிறார் வள்ளுவர். 


வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்றை செய்யும் போது, நிலைத்த புகழ் வரும்.


தன் உயிரை, உடல் உறுப்புகளை (organ donation ), நேரத்தை, இன்பத்தை தானம் செய்வது இருக்கிறதே, அதுவே நீண்ட புகழைத் தரும். 


ஒரு வார்த்தையை இடம் மாத்திப் போட்டால் எவ்வளவு பெரிய அர்த்தம் வருகிறது. 


எப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்கள். 


எப்படி எல்லாம் சிந்தித்து அதற்கு உரை எழுதி இருக்கிறார்கள்.


தலை தாழ்த்தி வணங்குவோம். 



Wednesday, November 15, 2023

பழமொழி - உப்புக் கடல் போல

பழமொழி - உப்புக் கடல் போல 


ஏன் தீயவர்கள் சகவாசம் கூடாது என்று சொல்லுகிறார்கள்?


தீயவர்களோடு சேர்ந்தால், ஒன்று அவர்கள் நல்லவர்களாக வேண்டும், அல்லது அவர்களோடு சேர்ந்து நாமும் தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு விடுவோம். 


எது நடக்க சாத்தியம் அதிகம்?


மலையின் மேல் உள்ள பனி உருகி, பளிங்கு போல நதி நீர் வரும். வரும் வழியில் உள்ள மூலிகைகள், பூக்களின் நறுமணம் எல்லாம் கொண்டுவரும். அத்தனை சுவையாக இருக்கும் அந்த நதி நீர். 


அதே நீர் கடலில் சேர்ந்து விட்டால், என்ன ஆகும்?


கடல் நீர் நல்ல நீராககுமா அல்லது நதி நீர் உப்புக் கரிக்குமா?


ஆயிரகணக்கான ஆண்டுகள் நதி நீர் கடலில் சேர்ந்த வண்ணமாக இருக்கிறது. இருந்தும், கடல் நீர் மாறவே இல்லை. மாறாக, நதி நீர்தான் உப்பு நீராகிறது. 


அது போல தீயவர்களோடு (கடல்) சேர்ந்த நல்லவர்களும் (நதி) அந்தக் கடல் நீர் போல் மாறிப் போவார்கள் என்கிறது இந்த நாலடியார். 


பாடல் 




 மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய வாயினும் என்றும்

மனநலம் ஆகாவாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_15.html


(please click the above link to continue reading)


மிக்குப் = மிகுதியாக 


பெருகி = பெருகி வந்து 


மிகுபுனல் = அதிகமான நீர் 


பாய்ந்தாலும் = ஆற்றில் பாய்ந்தாலும் 


உப்பொழிதல் = உப்பு + ஒழிதல் = ஒருகாலும் உப்பை விடாத 


செல்லா ஒலிகடல்போல் = இருக்கின்ற கடல் போல 


மிக்க = நல்ல 


இனநலம் = சேரும் இனத்தின் குணம்  


 நன்குடைய வாயினும் = நல்லதாக இருந்தாலும்


என்றும் = எப்போதும் 



மனநலம் = நல்ல மனம் உடையவாக 


ஆகாவாம் = ஆகாது 


கீழ் = கீழான மனம் உடையவர்கள்.


நம்மைவிட உயர்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் உயர்வோம்.


நம்மைவிட தாழ்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் தாழ்வோம்.




Tuesday, November 14, 2023

திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம்

 திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம் 


பலர், பல விதங்களில் புகழ் அடைகிறார்கள். கல்வியில், கேள்வியில், விளையாட்டில், நிர்வாகத்தில், வீர தீர செயல்களில், இலக்கியம் படைப்பதில், கவிதை எழுதுவதில், என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 


அப்படி ஒரு துறையில் திறமையானவர்களை புகழ்ந்தாலும், எல்லா புகழும் ஒன்றையே குறித்து நிற்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது எது என்றால், வறியவர்க்கு ஒன்று தானமாக கொடுப்பதையே எல்லா புகழும் சுட்டி நிற்கிறது என்கிறார். 


ஒரு நடிகர் இருக்கிறார். அவர் மிக நன்றாக நடிக்கிறார். அவரை புகழ்ந்து பரிசுகள், பட்டங்கள் தருகிறார்கள். அது எப்படி வறியவர்க்கு கொடுப்பதை குறிக்கும் புகழாகும்?  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


எல்லா புகழும் வறியவர்க்கு கொடுப்பதை பாராட்டும் புகழ் என்றால் சரியாகப் படவில்லையே என்று தோன்றும். 


மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும். 


பாடல் 


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_14.html


(pl click the above link to continue reading)

\

உரைப்பார் = சொல்லுபவர் 


உரைப்பவை = சொல்லியவை 


எல்லாம் = எல்லாம் 


இரப்பார்கொன்று = இரப்பார்க்கு + ஒன்று = யாசிப்பவர்களுக்கு ஒன்று 


ஈவார்மேல் = கொடுப்பவர்கள் பற்றி 


நிற்கும் புகழ் = நிற்கின்ற புகழ் பற்றியே ஆகும்.


நம் குழப்பம் தீரவில்லை. 


நீங்களும், நானும், சாகித்ய அகடமியும், ஒலிம்பிக் குழுவும் பாராட்டுவதை இங்கே அவர் குறிப்பிடவில்லை. 


"உரைப்பார்"...உலகத்துக்கு ஒன்று சொல்லுபவர்கள் என்று உரை எடுக்கிறார் பரிமேலழகர். நீங்களும், நானும் ஒருவரை பாராட்டுகிறோம் என்றால் அது நமக்கு பிடித்து இருக்கிறது, பாராட்டுகிறோம். நாம் உலகத்துக்கு அதன் மூலம் ஒரு செய்தியை சொல்ல வரவில்லை. மனைவி நன்றாக சமைத்து இருக்கிறாள். அதை பாராட்டினால் அதில் ஒன்றும் உலகத்துக்கு செய்தி இல்லை. 


உரைப்பார் என்றால் உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் பெரியவர்கள் என்று கொள்ள வேண்டும். அறிஞர்கள், கவிஞர்கள் சொல்லுவது எல்லாம். 


"உரைப்பவை" அவர்கள் சொல்லுவது எல்லாம்.


உலகில் உள்ள பெரியவர்கள், சான்றோர்கள் சொல்லியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, இரப்பவர்க்கு ஒன்று ஈவார் பற்றிய புகழ் ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. 


மற்ற எல்லா புகழும் ஒரு திறமையை, வீரத்தை, காட்டி பெறுவது. அதில் தனி மனிதனுக்கு நன்மை இருக்கிறது. 


வறியவர்க்கு ஒன்று கொடுப்பதில் தீரம், வீரம், எல்லாம் இல்லை. அன்பு, கருணை, மனிதாபிமானம் மட்டுமே இருக்கிறது. அந்த ஈகைக்கு பலம் தேவை இல்லை, பொருள் கூடத் தேவையில்லை, மனதில் அன்பும் கருணையும் இருந்தால் போதும். 


அந்தக் கருணைதான் உலகில் மிகச் சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


இல்லறத்தின் உச்சம் ஈகையும், அதனால் வரும் புகழும். 


மனைவி மேல் அளவு கடந்த காதலும், பிள்ளைகள் மேல் பேரன்பும், சுற்றமும், நட்பும் தழுவி இல்லறம் நடத்தும் ஒருவன், வறுமையில் வாடி தன்னை நாடி வருபவனுக்கு இல்லை என்று சொல்லாமல் ஏதாவது கொடுப்பான். அவன் அன்பில், முதிர்ச்சி பெற்று இருக்கிறான். இல்லறம் அவனுக்கு அன்பை போதித்து இருக்கிறது. 


அப்படி கொடுக்கவில்லை என்றால், அவன் இல்லறத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். சரியாக நடத்தவில்லை என்று அர்த்தம். 


இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் சொல்லி தந்துவிட்டு, இப்போது பரீட்சை வைக்கிறார். 


வறியவர்க்கு ஈந்து புகழ் அடைகிறாயா, நீ பாஸ். இல்லை என்றால் பெயில் என்று. 


நமக்கு எவ்வளவு மதிப்பெண் வரும்?




Monday, November 13, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான்

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான் 


ஒரு நிர்வாகத் தலைமையில் உள்ளவன் எப்படி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


You are as good as your team என்று சொல்லுவார்கள். 


உன் நண்பன் யார் என்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. 


யார் யாரை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறான் கம்பன். 


நமக்கு ஒரு சிக்கல் என்றால் நாம் யாரிடம் சென்று ஆலோசனை கேட்போம்? நம் நண்பர்கள், உறவினர்கள் என்று சென்று கேட்போம். அவர்கள் ஒன்றும் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் சென்று கேட்டு என்ன பலன்?


நம்மை விட அறிவில், அனுபவத்தில், திறமையில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். 


இராவணன் யார் யாரை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினான்?



பாடல்  


பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர், 

தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க!' எனக்

கொண்டு உடன் இருந்தனன்-கொற்ற ஆணையால்

வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_13.html


(pl click the above link to continue reading)

பண்டிதர் = கல்வி அறிந்து நிறைந்தவர்கள் 


பழையவர் = நீண்ட நாள் தொடர்பில் உள்ளவர்கள். நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் 


கிழவர் = தலைவர்கள். (முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் குறிஞ்சி நிலத்தின் தலைவன்)


பண்பினர் = உயர்ந்த பண்பினை உள்ளவர்கள் 


தண்டல் இல் = பிரிதல் இல்லாத. சில மந்திரிகள் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது போல் இல்லாமல், என்றும் உடன் இருப்பவர்கள். 


மந்திரத் தலைவர் = ஆலோசனை கூறும் தலைமை பண்பு மிக்கவர்கள் 


சார்க!' = இருங்கள் 


எனக் கொண்டு = என்று கொண்டு 


உடன் இருந்தனன் = அவர்களோடு இருந்தான் 


கொற்ற ஆணையால் = தன்னுடைய அரச ஆணையால் 


வண்டொடு = வண்டுகளையும் 


காலையும் = கால் என்றால் காற்று. காற்றையும் 


வரவு மாற்றினான் = உள்ளே வருவதை நிறுத்தினான். 


ஒரு ஈ காக்க உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லுவோம் அல்லவா. 


காற்று கூட உள்ளே நுழையக் கூடாது என்று ஆணையிட்டான். 


முந்தைய பாடலில் சிலரை வெளியேற்றினான்.


இந்தப் பாடலில் சிலரை சேர்த்து வைத்துக் கொண்டான். 


எப்படி முன்னேற்பாடுகள் செய்கிறான். 


யுத்த காண்டம் தானே, என்ன சண்டை போட்டு இருப்பார்கள் என்று தள்ளிவிட்டுப் போனால், இதெல்லாம் கிடைக்குமா?






Thursday, November 9, 2023

திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம்

 திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம் 


ஒருவன் நன்றாக படித்து, நான் படித்து விட்டேன் என்று சொன்னால், "அப்படியா, எங்க நாலு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்" என்று தானே உலகம் சொல்லும். 


படித்து, அறிந்து இருந்தாலும், தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பள்ளியோ, கல்லூரியோ சான்றிதழ் வழங்கினால்தான் உலகம் ஏற்றுக் கொள்ளும். 


இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார், இவர் இரண்டாம் வகுப்பு என்று மற்றவர் சொல்ல வேண்டும். நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் உலகம் நம்பாது. 


வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான். அதில் நாம் தேர்வு பெற்றோமா இல்லையா என்று உலகம் சொல்ல வேண்டும். அந்த உலகம் சொல்வதுதான் "புகழ்".


"அவர் நல்ல மனிதர், ஏழைகளுக்கு உதவி செய்வார், ஒருத்தரை ஒரு வார்த்தை கடிந்து பேச மாட்டார், நல்ல படித்த மனிதர், சிறந்த நடிகர், வள்ளல், " என்றெல்லாம் ஒருவரை உலகம் பாராட்ட வேண்டும். 


அந்த பாராட்டுதல்தான் புகழ் என்பது. 


ஒருவன் இல்லறத்தை செம்மையாக நடத்துகிறான் என்பதற்கு சான்று, அவன் பெறும் புகழ். 


நல்ல மனைவியைப் பெற்று, இல்லற கடமைகளை சரிவர செய்து, விருந்தோம்பி, நடுவுநிலை தவறாமல் இருந்து, செய்நன்றி மறவாமல் இருந்து, இனியவை பேசி, அடக்கமாய் இருந்து, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் இருந்து, ஊருக்கும், தனி மனிதர்களுக்கும் தன்னால் ஆன உதைவிகளை செய்து ஒருவன் சிறப்பான இல்லறம் நடத்தினால், அவனுக்கு நல்ல பேர் கிடைக்கும். 


எனவே, புகழ் என்ற இந்த அதிகாரத்தை இல்லறத்தின் முடிவில் வைத்தார். 


வள்ளுவர் சொன்ன ஒவ்வொன்றையும் சரியான படி செய்து வந்தால், புகழ் தானே வரும். 


வள்ளுவர் கூறுகிறார், 


"வாழ்வின் நோக்கம் என்ன? இந்த வாழ்க்கை வாழ்வதின் பலன் என்ன? எதுக்காக நாம் வாழ்கிறோம். எப்படி வாழ வேண்டும் என்று கேட்டால், மற்றவர்களுக்கு உதவி செய்வதும், புகழோடு வாழ்வதும், இந்த இரண்டைத் தவிர வாழும் உயிர்களுக்கு வேறு ஒரு பயனும் இல்லை"


பாடல் 


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_9.html


(please click the above link to continue reading)



ஈதல் =  வறியவர்களுக்கு உதவுதல் 


இசைபட = அதனால் வரும் புகழோடு 


வாழ்தல் = வாழ்தல் 


அதுவல்லது = அதைத் தவிர 


ஊதியம் = பயன் ஏதும் 


இல்லை உயிர்க்கு = இல்லை இந்த உயிர்களுக்கு 


ஈதல், இசைபட வாழ்தல் என்று இரண்டு விடயங்களைக் கூறி இருக்கிறாரே, உதவி செய்யாமல், வேறு விதத்தில் புகழ் வந்தால் பரவாயில்லையா?


ஒலிம்பிக்கில் மெடல் வாங்கி, நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்று, சிறந்த நடிகர்/எழுத்தாளர்/பாடகர் என்றெல்லாம் புகழ் அடைந்தால் போதாதா?  என்றால் போதாது. 


காரணம் இலக்கணம். 


ஈதல், இசைபட வாழ்தல் "அது" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார். 


அது என்பது ஒருமை. 


மாறாக, 


ஈதல், இசைபட வாழ்தல் "அவை" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று சொல்லி இருந்தால், "அவை" என்பது பன்மை. எனவே ஈதல் அல்லது இசை பட வாழ்தல் என்று பொருள் சொல்லலாம்.


ஆனால் வள்ளுவர் அபப்டிச் சொல்லவில்லை,


அது என்றதால், இங்கே ஒரு செயல் தான். ஈதல் மூலம் வரும் புகழ் தான் வாழ்வின் பயன். வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும். 


ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம். 


பெரிய நடிகராக இருப்பார். கோடி கோடியாக பணம் சேர்த்து இருப்பார். அவர் நடித்து வெளிவரும் படம் என்றால் கோடிக்கணக்கில் விற்பனை ஆகும். ஊரில் ஒரு வெள்ளம், மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் ஒரு மிக மிக சொற்பமான தொகையை நன்கொடையாகத் தருவார். 


நடிகராக அவர் புகழ் பெற்று இருக்கலாம். 


அது அல்ல முக்கியம் என்பது வள்ளுவர் கருத்து. 


"உயிர்க்கு" என்று பொதுவாகச் சொன்னாலும், இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். விலங்குகள், தன்னை விட வறுமையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவி செய்வதில்லை. எனவே, உயிர் என்றது மனித உயிர்கள் என்று கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர்.