Monday, November 13, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான்

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான் 


ஒரு நிர்வாகத் தலைமையில் உள்ளவன் எப்படி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


You are as good as your team என்று சொல்லுவார்கள். 


உன் நண்பன் யார் என்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. 


யார் யாரை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறான் கம்பன். 


நமக்கு ஒரு சிக்கல் என்றால் நாம் யாரிடம் சென்று ஆலோசனை கேட்போம்? நம் நண்பர்கள், உறவினர்கள் என்று சென்று கேட்போம். அவர்கள் ஒன்றும் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் சென்று கேட்டு என்ன பலன்?


நம்மை விட அறிவில், அனுபவத்தில், திறமையில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். 


இராவணன் யார் யாரை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினான்?



பாடல்  


பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர், 

தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க!' எனக்

கொண்டு உடன் இருந்தனன்-கொற்ற ஆணையால்

வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_13.html


(pl click the above link to continue reading)

பண்டிதர் = கல்வி அறிந்து நிறைந்தவர்கள் 


பழையவர் = நீண்ட நாள் தொடர்பில் உள்ளவர்கள். நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் 


கிழவர் = தலைவர்கள். (முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் குறிஞ்சி நிலத்தின் தலைவன்)


பண்பினர் = உயர்ந்த பண்பினை உள்ளவர்கள் 


தண்டல் இல் = பிரிதல் இல்லாத. சில மந்திரிகள் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது போல் இல்லாமல், என்றும் உடன் இருப்பவர்கள். 


மந்திரத் தலைவர் = ஆலோசனை கூறும் தலைமை பண்பு மிக்கவர்கள் 


சார்க!' = இருங்கள் 


எனக் கொண்டு = என்று கொண்டு 


உடன் இருந்தனன் = அவர்களோடு இருந்தான் 


கொற்ற ஆணையால் = தன்னுடைய அரச ஆணையால் 


வண்டொடு = வண்டுகளையும் 


காலையும் = கால் என்றால் காற்று. காற்றையும் 


வரவு மாற்றினான் = உள்ளே வருவதை நிறுத்தினான். 


ஒரு ஈ காக்க உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லுவோம் அல்லவா. 


காற்று கூட உள்ளே நுழையக் கூடாது என்று ஆணையிட்டான். 


முந்தைய பாடலில் சிலரை வெளியேற்றினான்.


இந்தப் பாடலில் சிலரை சேர்த்து வைத்துக் கொண்டான். 


எப்படி முன்னேற்பாடுகள் செய்கிறான். 


யுத்த காண்டம் தானே, என்ன சண்டை போட்டு இருப்பார்கள் என்று தள்ளிவிட்டுப் போனால், இதெல்லாம் கிடைக்குமா?






No comments:

Post a Comment