Tuesday, November 14, 2023

திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம்

 திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம் 


பலர், பல விதங்களில் புகழ் அடைகிறார்கள். கல்வியில், கேள்வியில், விளையாட்டில், நிர்வாகத்தில், வீர தீர செயல்களில், இலக்கியம் படைப்பதில், கவிதை எழுதுவதில், என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 


அப்படி ஒரு துறையில் திறமையானவர்களை புகழ்ந்தாலும், எல்லா புகழும் ஒன்றையே குறித்து நிற்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது எது என்றால், வறியவர்க்கு ஒன்று தானமாக கொடுப்பதையே எல்லா புகழும் சுட்டி நிற்கிறது என்கிறார். 


ஒரு நடிகர் இருக்கிறார். அவர் மிக நன்றாக நடிக்கிறார். அவரை புகழ்ந்து பரிசுகள், பட்டங்கள் தருகிறார்கள். அது எப்படி வறியவர்க்கு கொடுப்பதை குறிக்கும் புகழாகும்?  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


எல்லா புகழும் வறியவர்க்கு கொடுப்பதை பாராட்டும் புகழ் என்றால் சரியாகப் படவில்லையே என்று தோன்றும். 


மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும். 


பாடல் 


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_14.html


(pl click the above link to continue reading)

\

உரைப்பார் = சொல்லுபவர் 


உரைப்பவை = சொல்லியவை 


எல்லாம் = எல்லாம் 


இரப்பார்கொன்று = இரப்பார்க்கு + ஒன்று = யாசிப்பவர்களுக்கு ஒன்று 


ஈவார்மேல் = கொடுப்பவர்கள் பற்றி 


நிற்கும் புகழ் = நிற்கின்ற புகழ் பற்றியே ஆகும்.


நம் குழப்பம் தீரவில்லை. 


நீங்களும், நானும், சாகித்ய அகடமியும், ஒலிம்பிக் குழுவும் பாராட்டுவதை இங்கே அவர் குறிப்பிடவில்லை. 


"உரைப்பார்"...உலகத்துக்கு ஒன்று சொல்லுபவர்கள் என்று உரை எடுக்கிறார் பரிமேலழகர். நீங்களும், நானும் ஒருவரை பாராட்டுகிறோம் என்றால் அது நமக்கு பிடித்து இருக்கிறது, பாராட்டுகிறோம். நாம் உலகத்துக்கு அதன் மூலம் ஒரு செய்தியை சொல்ல வரவில்லை. மனைவி நன்றாக சமைத்து இருக்கிறாள். அதை பாராட்டினால் அதில் ஒன்றும் உலகத்துக்கு செய்தி இல்லை. 


உரைப்பார் என்றால் உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் பெரியவர்கள் என்று கொள்ள வேண்டும். அறிஞர்கள், கவிஞர்கள் சொல்லுவது எல்லாம். 


"உரைப்பவை" அவர்கள் சொல்லுவது எல்லாம்.


உலகில் உள்ள பெரியவர்கள், சான்றோர்கள் சொல்லியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, இரப்பவர்க்கு ஒன்று ஈவார் பற்றிய புகழ் ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. 


மற்ற எல்லா புகழும் ஒரு திறமையை, வீரத்தை, காட்டி பெறுவது. அதில் தனி மனிதனுக்கு நன்மை இருக்கிறது. 


வறியவர்க்கு ஒன்று கொடுப்பதில் தீரம், வீரம், எல்லாம் இல்லை. அன்பு, கருணை, மனிதாபிமானம் மட்டுமே இருக்கிறது. அந்த ஈகைக்கு பலம் தேவை இல்லை, பொருள் கூடத் தேவையில்லை, மனதில் அன்பும் கருணையும் இருந்தால் போதும். 


அந்தக் கருணைதான் உலகில் மிகச் சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


இல்லறத்தின் உச்சம் ஈகையும், அதனால் வரும் புகழும். 


மனைவி மேல் அளவு கடந்த காதலும், பிள்ளைகள் மேல் பேரன்பும், சுற்றமும், நட்பும் தழுவி இல்லறம் நடத்தும் ஒருவன், வறுமையில் வாடி தன்னை நாடி வருபவனுக்கு இல்லை என்று சொல்லாமல் ஏதாவது கொடுப்பான். அவன் அன்பில், முதிர்ச்சி பெற்று இருக்கிறான். இல்லறம் அவனுக்கு அன்பை போதித்து இருக்கிறது. 


அப்படி கொடுக்கவில்லை என்றால், அவன் இல்லறத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். சரியாக நடத்தவில்லை என்று அர்த்தம். 


இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் சொல்லி தந்துவிட்டு, இப்போது பரீட்சை வைக்கிறார். 


வறியவர்க்கு ஈந்து புகழ் அடைகிறாயா, நீ பாஸ். இல்லை என்றால் பெயில் என்று. 


நமக்கு எவ்வளவு மதிப்பெண் வரும்?




1 comment:

  1. Brilliantly expressed! Your post is a standout, offering insightful perspectives. Thanks for sharing your wisdom.

    ReplyDelete