Wednesday, November 29, 2023

நாலடியார் - வயதான காலத்தில்

 நாலடியார் - வயதான காலத்தில் 


ஒருவன் அல்லது ஒருத்தி எவ்வளவு பாடுபட்டு உழைத்து கணவன்/மனைவி/பெற்றோர், பிள்ளைகள், உறவு, நட்பு என்று எல்லோரையும் அரவணைத்துச் சென்றாலும், வயதான காலத்தில், அவர்களுக்கு மதிப்பு குறைவது என்பது இயல்பு. 


"கிழத்துக்கு வேற வேலை இல்லை, எதையாவது பிதற்றிக் கொண்டே இருக்கும்"


"காதும் கேக்குறது இல்ல, சும்மா இருன்னு சொன்னாலும் இருக்கிறது இல்ல"


"உனக்கு ஒண்ணும் தெரியாது, பேசாம வாய மூடிகிட்டு சிவனேன்னு இறேன்"


இது போன்றவற்றை கேட்க வேண்டி இருக்கும். நேரடியாக முகத்துக்கு நேரே சொல்லாவிட்டாலும், பின் புறம் பேசுவார்கள். 


என்ன செய்யலாம்?


வயதாகி, படுக்கையில் விழும் முன், நமக்கு எது நல்லதோ, அதைச் செய்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், எனக்கு வேண்டியதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அந்த அப்புறம் வரும் போது உடலில் வலு இருக்காது. 


அப்போது வருந்திப் பயன் இல்லை. என்ன செய்தாலும், முதுமை வந்தே தீரும். உடலும், மனமும், மூளையும் செயல் குறையும். அதெல்லாம் இப்ப வராது, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது அறிவீனம். 


பாடல் 


மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை

ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்

புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்

தொழுத்தையாற் கூறப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_29.html


(pl click the above link to continue reading)


மூப்பு = வயதாகுதல் 


மேல் வாராமை = மேல் வரும் நாட்களில் வருவதை, அல்லது உண்டது வாய் வழியும், மூக்கு வழியும் வருவது. வயதான காலத்தில் வாயில் நீர் வழிவது இயற்கை. 


முன்னே = அதற்கு முன்னே 


அறவினையை = அறம் சார்ந்த செயல்களை 


ஊக்கி = முயன்று செய்து 


அதன்கண் = அச்செயல்களை 


முயலாதான் = செய்ய முயற்சி செய்யாதவன் 


நூக்கிப் = தள்ளி வைத்து, நீக்கி வைத்து 

 

புறத்திரு = புறத்து இரு. வெளிய போய் இரு 


போ = இருந்து என்ன செய்யப் போற. போ(ய் தொலையேன்) 


கென்னும் = என்று சொல்லும் 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


 இல்லுள் = சொந்த வீட்டில் 


தொழுத்தையாற் = வேலைக்காரர்களால்  


கூறப் படும். = கூறப் படுவீர்கள் 


வீட்டில் உள்ள மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் அல்ல, வீட்டில் வேலை செய்பவர்கள் கூட வயதானவர்களை  மதிக்க மாட்டார்கள். 


அப்படிச்செய்து இருக்கலாம், இப்படிச் செய்து இருக்கலாம் என்று வயதான காலத்தில் வருத்தப் பட்டு பலன் இல்லை. 


இப்போதே அறவினைகளை செய்யத் தொடங்க வேண்டும். 




1 comment: