Sunday, November 26, 2023

திருக்குறள் - புகழோடு தோன்றுக

 திருக்குறள் - புகழோடு தோன்றுக 


இன்று நாம் காண இருக்கும் குறள் நாம் பலமுறை கேட்டு, குழம்பிய குறள். 



தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று


தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும். இல்லை என்றால் தோன்றாமல் இருப்பது நல்லது என்பது நேரடியான பொருள். 


இதற்கு, பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும், இல்லை என்றால் பிறக்காமலே இருப்பது நல்லது என்று பொருள் எடுக்கலாம். 


பிறப்பது நம் கையில் இல்லை. பிறந்து, வளர்ந்து, புகழ் அடையலாம். அது சாத்தியம். பிறக்கும் போதே எப்படி புகழோடு பிறப்பது? குழப்பமாக இருக்கிறது. 


சிலர், தோன்றில் என்ற சொல்லுக்கு, ஒரு துறையில் நுழைதல் என்று பொருள் கொண்டு. எந்த ஒரு வேலையில் இறங்கினாலும், அதை சிறப்பாக செய்து, அதில் நல்ல பேரும் புகழும் பெற வேண்டும். இல்லை என்றால் ஏதோ நானும் செய்தேன் என்று ஒரு செயலை செய்வதை விட, செய்யாமல் விடுவதே நல்லது என்று பொருள் சொல்கிறார்கள். கேட்க சரியாகத்தான் இருக்கிறது. 


படிக்கப் போகிறாயா, அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வர வேண்டும்.  ஓடப் போகிறாயா, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும். என்று உயர்ந்த புகழ் அடையும் நோக்கத்தில் எந்தத் துறையிலும் இறங்கு என்று சொல்லுவதாக பொருள் சொல்கிறார்கள். 


ஆனால், பரிமேலழகர் அப்படிச் சொல்லவில்லை. 


பரிமேலழகர் உரை தவறாக இருக்க வாய்ப்பு இல்லை. அவ்வளவு நுண்ணியமாக படித்தவர். அவர் என்ன சொல்கிறார் என்றால், 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)


"மக்களாய் பிறப்பதாய் இருந்தால் புகழோடு பிறக்க வேண்டும். இல்லை என்றால் விலங்காகப் பிறப்பது நல்லது"


என்கிறார். 


சிக்கல்தான். 


எப்படி அவர் இந்த மாதிரி பொருள் சொல்ல முடியும் என்று அவரே விளக்குகிறார். 


"அஃதிலார்" - அப்படி இல்லாதவர்கள் என்பது உயர் திணை. எனவே, தோன்றுதல் என்பது மனிதர்களைக் குறிக்கும் என்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும் என்றும் பிரித்துக் கொள்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், பிறக்காமலேயே இருந்து விடலாம் என்று அல்ல. பிறப்பது என்பது வினைப் பயன்.  அதைத் தடுக்க முடியாது. மக்களாய் பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும். அது நல்லது என்கிறார். 


ஏன் நல்லது?


விலங்குகள் படிக்கவில்லை, தான தர்மம் செய்யவில்லை, அன்பு செலுத்தவில்லை, பொருள் தேடவில்லை என்று யாரும் குறை சொல்ல மாட்டார்கள். "அது ஒரு சரியான முட்டாள் மாடு" என்று யாரும் ஒரு மாட்டை இழித்துச் சொல்ல மாட்டார்கள். அது படிக்காவிட்டாலும், அதன் மேல் பழி விழாது. ஆனால், மக்கள், முட்டாளாக இருந்தால், "அதோ போகிறான் பார், சரியான மர மண்டை " என்று இகழ்வார்கள். 


அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறார்?


புகழ் இல்லையா, நீ விலங்கை விட கேவலம் என்கிறார். புகழ் இல்லாத விலங்கு ஒன்றும் பாதகம் இல்லை. புகழ் இல்லாத மனிதன், பழி சுமக்க வேண்டி வரும். 


மனிதர்களுக்கு என்று கடமைகள் இருக்கிறது. அவற்றைச் சிறப்பாக செய்ய வேண்டும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் செய்யும் நல் வினை, தீ வினைகள் புண்ணிய, பாவங்களாக மாறி அடுத்த பிறவியில் நமக்கு அவற்றின் பலன்களைத் தரும். 


பரிமேலழகர் உரை செய்யும் போது, "புகழ்" என்பதற்கு "புகழ் அடைவதற்கான குணங்களோடு" என்று உரை செய்கிறார். 


பிறக்கும் போதே புகழ் அடையும் குணங்களோடு பிறக்க வேண்டும். 


அது எப்படி வரும்? முற்பிறவியில் செய்த நல்வினையால் வரும். 


எனவே, அடுத்த பிறவி மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் என்றால், இப்போது நல்லது செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்த பிறவியில், புகழுக்கு உரிய நற் குணங்களோடு பிறப்போம். புகழும் அடைவோம்.


எனவே, இப்போது நல்லது செய்ய வேண்டும். 


புகழ் ஒரு பிறவியில் வருவது அல்ல. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் , மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"


என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


அவ்வளவு பிறவி வேண்டி இருக்கிறது.




No comments:

Post a Comment