Friday, November 17, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான்

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான் 


இராவணனின் மந்திர ஆலோசனை சபை கூட்டம் தொடங்கப் போகிறது. சபை கூடுமுன் என்னவெல்லாம் செய்தான் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 


அமைச்சர்கள், நீண்ட காலம் அரச சேவையில் இருப்பவர்கள் என்ற சிலரை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேறச் சொன்னான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். 


மேலும், 


அரசவையில் பல திறமைசாலிகள் இருப்பார்கள், போரில் வல்லவர்கள் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் எல்லோரையும் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க முடியாது. ஆட்கள் அதிகம் ஆக ஆக குழப்பம்தான் மிஞ்சும். மேலும், எது சரி எது தவறு என்று நினைப்பவர்கள் ஒரு புறம். தனக்கு எது நல்லது என்று சிந்திப்பவர்கள் ஒரு புறம். தனக்கு நன்மை தருவதை பற்றி சிந்திப்பவர்கள் தனக்கு நெருங்கிய சுற்றத்தார் மற்றும் உறவினர்கள். எனவே,அவர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேற்றினான். 




பாடல்  


ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு

ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும்

வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்

போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்.



பொருள் 



(pl click the above link to continue reading)

ஆன்று = ஆழமாக 


அமை = அமைந்த 


கேள்வியர் = கேள்வி அறிவு உடையவர் 


எனினும் = என்றாலும் 


ஆண் தொழிற்கு = போர்த் தொழிலுக்கு 


ஏன்றவர் = பொருந்தியவர், சரியானவர் என்ற


நண்பினர் = நண்பர்கள் 


எனினும் = என்றாலும் 


யாரையும் = அவர்கள் அனைவரையும் 


வான் = நீண்ட 


துணைச் = துணையாக உள்ள 


சுற்றத்து  மக்கள் = சுற்றத்தார் 


தம்பியர் = தன் தம்பிகள் 


போன்றவர் அல்லரைப் = அவர்கள் போன்றவர் அல்லாதவரை   


புறத்துப் போக்கினான். =  வெளியில் அனுப்பினான் 


இந்தப் பாடல் நமக்குச் சற்று நெருடலான பாடல். 


சொந்தக்காரர்களை, தம்பிகளை வைத்துக் கொண்டான், ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள், போர்த் தொழிலில் திறமையானவர்களை விலக்கி விட்டான் என்று சொன்னால், அது நமக்குச் சரியாகப் படாது. 


ஆங்கிலத்தில் nepotism என்று சொல்லுவார்கள். தன் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது. 


இன்றைய அரசியல், நிர்வாக முறைப்படி அது தவறாகத் தெரியும். 


ஆனால், அன்று இருந்தது ஜனநாயகம் அல்ல. அரசன் தான் எல்லாம். அவனை இறைவனுக்குச் சமமாக மக்கள் கருதினார்கள். 


அவனுக்கு எது நல்லதோ அது எல்லோருக்கும் நல்லது என்று நம்பினார்கள். 


எனவே, இராவணன், தனக்கு நல்லது நினைப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டான். 


ஆனால், தனக்கு எது நல்லது என்று இராவணனுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. யார் சொன்னதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எல்லாம் பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 


 


1 comment:

  1. I'm thankful for the positive community your blog has fostered. It's a supportive space.

    ReplyDelete