Wednesday, May 14, 2014

திருக்கோத்தும்பி - ஆனந்தத் தேன் சொரியும்

திருக்கோத்தும்பி -  ஆனந்தத் தேன் சொரியும்


உலக இன்பங்கள் சிறிது நேரத்தில், சிறிது காலத்தில் தீர்ந்து போய் விடுபவை. நீண்ட காலம் இன்பம் தரும் ஒன்று இல்லை.

எவ்வளவு பெரிய இன்பம் என்றாலும் மனம் சிறிது காலத்தில் சலித்து விடும்.

இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு தன்னிரக்கம் வரும்.


சில இன்பங்கள் பார்க்கும் போது இன்பம் தரும். சில இன்பங்கள் தொடும்போது இன்பம் தரும். சில இன்பங்கள் சுவைக்கும் போது இன்பம் தரும்.

சரி பார்க்கும் போது இன்பம் தருகிறதே என்று பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா ?

சுவைக்கும் போது இன்பம் தருகிறதே என்று எப்போதும் சுவைத்துக் கொண்டே இருக்க முடியுமா ?

எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத் தான்.

எப்போதெல்லாம் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதெல்லாம் நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதேலாம் அதைப் பற்றி பேசுகிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்
அது மட்டும் அல்ல
அது மட்டும் அல்ல எல்லா நேரத்திலும், அனைத்து செயலிலும் இன்பத்தை மழையாக பொழிவது அவன் திருவடிகளே.

இந்த சின்ன பூவில் இருக்கும் தேனை விட்டு விட்டு அவன் திருவடியை நாடு என்று தும்பிக்குச்  சொல்கிறார். நமக்கும்தான்.

பாடல்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

தினைத்தனை உள்ளது = தினை அளவு சிறிய

ஓர் பூவினில் = ஒரு பூவில்

தேன் உண்ணாதே, = தேனை உண்ணாமல்

நினைத்தொறும், = நினைக்கும் ஒவ்வொரு பொழுதிலும்

காண்தொறும் = எப்போதெல்லாம் காண்கிறோமோ அப்போதெல்லாம்

பேசும்தொறும் = எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போதெல்லாம்

எப்போதும் = எல்லா சமயத்திலும்

அனைத்து எலும்பு உள் நெக = உடம்பில் உள்ள அனைத்து ஏலேம்புகளும் உருக

ஆனந்தத் தேன் சொரியும் = ஆனதமயமான தேனை பொழியும்

குனிப்பு உடையானுக்கே = குனிப்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம். ஒன்று நடனம். இன்னொன்று வளைக்கை. வளையல் அணிந்த கை. வளையல் அணிந்த கை உடையவன் அவன் ஒருவன் தான். மாதொரு பங்கன். அர்த்த நாரி.

சென்று ஊதாய் = சென்று ரீங்காரமிடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே

இது மேலோட்டமான பொருள்.

ஆழமான பொருள் என்ன ?

ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தை உருவாகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனக்குள் தாயின் (பெண்ணின்) அம்சத்தையும், தந்தையின்  (ஆணின்) அம்சத்தையும் கொண்டு பிறக்கிறது.

நாளடைவில், இந்த சமுதாயம் ஆண் குழந்தை என்றால் பெண் அம்சத்தையும், பெண் குழந்தை என்றால் ஆண் அம்சத்தையும் அழுத்தி நாளடைவில் மறக்கடித்து  விடுகிறது.

நாம் பெரியவர்கள் ஆகும் போது குறை பட்டவர்களாகவே இருக்கிறோம். ஏதோ  ஒன்று நம்மில் குறைகிறது.  அந்த குறையை வெளியில் இருந்து இட்டு நிரப்ப முயல்கிறோம். என்னதான் இட்டு நிரப்பினாலும் அது நிறைய மாட்டேன்  என்கிறது.

நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும்.

ஆண் என்றால் அழுத்தி வைக்கப்பட்ட பெண் உணர்வு வெளி வர வேண்டும். ஒன்றாகக் கலக்க வேண்டும்.

அதே போல் பெண் என்றால் அவளுக்குள் அழுந்திக் கிடக்கும் ஆண் உணர்வு வெளி வர வேண்டும்.

ஆணுக்குள் இருக்கும் பெண்ணும், பெண்ணுக்குள் இருக்கும் ஆணும் ஒன்றாக சேரும்போது  உண்மையான , நிரந்தரமான இன்பம் பிறக்கிறது.


இதே கருத்தை நாவுக்கரசரும் பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அவற்றை இன்னொரு நாள்  பார்ப்போம்.


1 comment:

  1. பாடலில் முதல் கருத்து "நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
    அனைத்து எலும்பு உள் நெக" என்பது. அருமையான வரி.

    பாடலின் துணைக் கருத்து "குனிப்பு உடையானுக்கே" என்பது. நீ உட்பொருள் என்று சொல்லியிருப்பது, ஆண்/பெண் என்பது ஒரு துணைக் கருத்தின் பொருள் போல இருக்கிறது.

    ReplyDelete