Tuesday, September 8, 2026

அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

 அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post.html


ஒரு நாள் பச்சை நிறத்தில் பட்டுப் புடவை. மறு நாள் மஞ்சள் கலரில் சுடிதார். மற்றொரு நாள் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ்...என்ன போட்டாலும் அவளுக்கு அழகா இருக்கு. எப்படித்தான் எல்லா நிறமும் அவளுக்கு ஒத்துப் போகிறதோ....


தினமும் அபிராமியை தரிசிக்கிறார் பட்டர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறாள். அது எப்படி முடியும்?  அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ, அப்படியே அபிராமி அவருக்கு காட்சி தருகிறாள். 


காக்கைச் சிறகினிலே

பார்க்கும் இடமெல்லாம் நின்றன் பச்சை நிறம் 

தீக்குள் விரலை வைத்தால் தோன்றும் இன்பம் 


என்று பாரதிக்குத் தோன்றிய மாதிரி எப்படியெல்லாம் நினைக்கிறோமோ அப்படியெல்லாம் அவள் தோன்றுகிறாள். 


பாடல் 


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே




பொருள் 

மங்கலை = மங்களகரமானவள் 

செங்கலசம் = செம்மையான கலசம் போன்ற 

முலையாள் = மார்பகம் உடையவள் 

மலையாள் = மலைமகள் 

வருணச் = வருணனின் இருப்பிடமான (கடல். அதில் உள்ள ) 

சங்கலை  = சங்குகள் 

செங்கைச்= சிவந்த கைகளை உடையவள் 

சகலகலாமயில் தாவு = சகல கலைகளையும் அறிந்த மயில் போன்ற சாயல் உடையவளே 


கங்கை பொங்கி = பொங்கி வரும்  வருகின்ற கங்கையையும் 

கலை = பிறை நிலவையும்  

தங்கும் = குடி இருக்கும் 
 

புரிசடையோன் = சடை முடி கொண்ட சிவனின் 

புடையாள் = அவனின் இடப்பாகம் உடையவளே 


பிங்கலை =   பார்வதியே 

நீலி = கரிய நிறம் கொண்டவள் 


செய்யாள் = சிவந்த நிறம் கொண்ட இலக்குமி 

வெளியாள் = வெள்ளை நிறம் கொண்ட சரஸ்வதி 

பசும் = பசுமையான 

பெண்கொடியே = கொடி போன்ற பெண்ணே 


பார்த்து பார்த்து முடியவில்லை. 

ஒரு நாள் கோபமாக, கருமையாக பார்வதி போல இருக்கிறாள் 

இன்னொரு நாள் சிவந்த நிறமாக, இலக்குமி போல செல்வத்தோடு ஜொலிக்கிறாள் 

இன்னொருநாள் வெள்ளையான தாமரை மேல் அமர்ந்து இருக்கும் அறிவே வடிவான சரஸ்வதி போல இருக்கிறாள். 

இவளை என்ன என்ன என்று சொல்லுவது. 

மயில் போல, கொடி போல இருக்கிறாள். 

அவளை எப்படியாவது முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால்தானே. 



பெண் என்பவள் புரிந்து கொள்ள அல்ல. 

அன்பைச் செலுத்தவும், அன்பை பெற்றுக் கொள்ளவும் உருவானவளோ ?

வார்த்தைகளில் அகப்படுபவள் அல்ல அவள். அன்பால் உணர்ந்து கொள்ளப் படுபவள். 

அபிராமி அந்தாதிக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் கேட்கக் கூடாது. 

கண்மூடி, மனதுக்குள் கரைய வேண்டிய ஒன்று அது. 




No comments:

Post a Comment