Wednesday, September 9, 2026

திருக்குறள் - தான் அறிவான்

 திருக்குறள் - தான் அறிவான் 



பிறருக்குத் துன்பம் செய்யக் கூடாது என்று ஏதாவது அற நூல்களில் சொல்லி இருக்கிறதா?  நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் படிப்பு அறிவு இல்லைங்க.  நமக்கு கீழே உள்ளவன் சரியா வேலை செய்யாவிட்டால், மண்டையில உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டா எல்லாம் சரியாப் போயிரும். அப்படி திட்டக் கூடாது என்று எந்த நூலில் சொல்லி இருக்கிறது என்று சிலர் வாதம் செய்யலாம். 


இதுக்கு எல்லாம் புத்தகம் எழுத முடியாது.....


நமக்கு ஒருவர் துன்பம் செய்தால் அது நமக்கு வலிக்கிறது அல்லவா. அதை அறிந்த பின், அதே துன்பத்தை நாம் மற்றவருக்குச் செய்தால் அவர்களுக்கும் அதே மாதிரி வலிக்கும் என்பது புரியும் அல்லவா? அப்படி அறிந்த பின், எதற்காக அதை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் ?


துன்பம் என்றால் ஏதோ கை நீட்டி அடிப்பது என்று நினைக்க வேண்டியது இல்லை. 


நம்மிடம் ஒருவர் கோபமாக பேசுகிறார், நம்மை பற்றி கேலி பேசுகிறார், தாழ்வாகப் பேசுகிறார், நம் நம்பிக்கையை கிண்டல் செய்கிறார்...அப்போதெல்லாம் நமக்கு அது ஒரு வலியைத் தரும் அல்லவா ? 


அப்படி என்றால், நாம் மற்றவர்களிடம் கோபமாகவோ, அவர்களைப் பற்றி தாழ்வாகவோ, கிண்டல் செய்தோ பேசக் கூடாது. 


இப்படியே ஒவ்வொரு இன்னா செயலையும் புரிந்து கொள்ள வேண்டும். 


நமக்கு வலிப்பது மாதிரித்தானே மற்ற உயிர்களுக்கும் வலிக்கும் என்று நினைக்க வேண்டும். 


பாடல் 


தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்


பொருள் 


தன்னுயிர்க்கு = தனக்கு 


இன்னாமை = துன்பம் என்று 


தான்அறிவான் = எவன் அறிந்து கொள்வானோ 


என்கொலோ = எதனால்  


மன்னுயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு 


இன்னா செயல் = துன்பம் தரும் செயல்களை செய்வது  


சர்கரை வைத்திருக்கும் டப்பாவில் எறும்பு வந்து விட்டால், அதைத் தூக்கி வெயிலில் வைக்கிறோம். சூட்டில் அந்த எறும்புகள் சாகட்டும் என்று. நம்மை தூக்கி ஒருவர் அப்படி வெயிலில் போட்டால் நமக்கு எப்படி இருக்கும். அது எவ்வளவு துன்பமாக இருக்கும் என்று நினைத்தால் அப்படிச் செய்வோமா? 


வீட்டில் வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் திட்டுகிறோம். அவர்கள் உடலும் மனமும் கூசும் படி பேசுகிறோம். நம்மை யாராவது அப்படித் திட்டினால் நம் மனம் என்ன பாடு படும் என்று ஒரு கணம் நினைத்தால் அப்படிச் செய்வோமா?


மற்றவர்களை என்ன மற்றவர்களை - மனைவியை, குழந்தைகளை, மருமகளை, உடன் பிறப்புகளை எல்லாம் எப்படி நடத்துகிறோம். அவர்களுக்கும் மனம் இருக்கும் தானே?


எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நினைத்தால் யாருக்கும் தீங்கு செய்யும் எண்ணம் வராது. 




No comments:

Post a Comment