Saturday, September 7, 2019

கம்ப இராமாயணம் - தீக்குளிப்புக்கு பின் சீதை கூறியது

கம்ப இராமாயணம் - தீக்குளிப்புக்கு பின் சீதை கூறியது 


இராமன் , சீதையை தீயில் இறங்கி அவளுடைய கற்பை நிலை நாட்டச் சொன்னான். சீதையும் செய்தாள். அவள் தீயில் இறங்கி வெளி வந்த பின், அக்கினி, ப்ரம்மா, சிவன், தயரதன் எல்லோரும் வந்தது இராமனிடமும் சீதையிடமும் பேசினார்கள்.

சீதை வாயே திறக்கவில்லை. பின், எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு, வீடணன் கொண்டு வந்த விமானத்தில் ஏறி அயோத்தி நோக்கி செல்லத் தொடங்கினார்கள்.

இது வரை சீதை ஒன்றும் பேசவில்லை.

இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் , என்னை சிபிஐ custody இல் எடுத்து, "உண்மையைச் சொல்லப் போகிறாயா இல்லையா, சீதை என்னதான் பேசினாள் சொல் ...இல்லையென்றால் உன்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடுவோம்" வாசகர்கள் கிளம்பினாலும் கிளம்பலாம் என்ற பயத்தில் இன்று சொல்லி விடுவதாக முடிவு செய்து விட்டேன்.

வருகிற வழியில் இராமன் , சீதைக்கு பல இடங்களை காட்டிக் கொண்டு வருகிறான், சேது பந்தனம், வருணன் சரணாகதி அடைந்த இடம், சுக்ரீவனை சந்தித்த இடம் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வருகிறான்.

சீதை பேசவே இல்லை. மெளனமாக இருக்கிறாள்.

ஒரு புன்னகை சிந்தியதாகக் கூட கம்பன் காட்டவில்லை.

சுக்ரீவன் இருந்த இடத்துக்கு இராமனும், சீதையும் வந்து சேர்கிறார்கள். உபசரிப்பு நடக்கிறது.

அவர்கள் அங்கிருந்து கிளம்பும் இடத்தில் சீதை முதன் முறையாக பேசுகிறாள்.

என்ன பேசினாள் தெரியுமா ?

தீக்குளிப்பு, கற்பு, இராமன் பேசிய சுடு சொல், மற்றவர்கள் பேசிய பேச்சு, வருகிற வழியில் இராமன் சொல்லிக் கொண்டுவந்த கதைகள் எல்லாவற்றையும் கேட்டு விட்டு, சீதை சொல்கிறாள்

"ஐய , இப்போது இவ்வளவு பெரிய வானர வெள்ளத்தோடு நாம் அயோத்தி செல்கிறோம். அதில் ஒரு பெண் கூட இல்லை. அது எனக்கு என்னவோ போல் இருக்கிறது. இங்குள்ள வானர பெண்களையும் நம்மோடு அழைத்துச் செல்லலாம் " என்று கூறுகிறாள்.

நம்ப முடிகிறதா ?

மறந்து விட்டாளா? இல்லை அது ஒரு பெரிய சங்கதி இல்லை என்று விட்டு விட்டாளா ?

இனி அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது என்று விரக்தியில் விட்டு விட்டாளா ....தெரியாது

பாடல்




 கிட்கிந்தை இதுவேல், ஐய!
    கேட்டியால் : எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள
    மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ
    ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை
    ஏற்றுதல் கடன்மைத்து ‘என்றாள்.


பொருள் 

 கிட்கிந்தை = கிட்கிந்தை

இதுவேல், = இதுவாக இருக்குமானால்

ஐய! = ஐயனே

கேட்டியால் : = கேள்

எனது பெண்மை = எனது பெண்மை

மட்கும்தான், = ஒளி மட்டுப் படும்

ஆய வெள்ள = பெரிய வெள்ளம் போன்ற

மகளிர் இன்று ஆகி,= பெண்கள் இல்லாமல் (தோழிகள் இல்லாமல்)

வானோர் = தேவர்கள்

உட்கும் = பயப்படும்

போர்ச் சேனை சூழ = போர் சேனைகள் சூழ

ஒருத்தியே அயோத்தி எய்தின்; = நான் ஒருத்தி மட்டும் பெண்ணாக அயோத்தி அடைந்தால்

கள் கொந்து  = தேன் நிறைந்த

ஆர் குழலினாரை = பூக்களை கொண்ட குழல்களை உடைய  (இந்த வானர மகளிரை)

ஏற்றுதல் = நம்மோடு ஏற்றுக் கொண்டு போதல்

கடன்மைத்து ‘என்றாள்.=  முறையாக இருக்கும் என்றாள்

ஒரே ஆம்பிளைகள் கூட்டமாக இருக்கிறது. இந்த பெண்களையும் அழைத்துக் கொண்டு  செல்லலாம் என்கிறாள்.

இது தான் சீதை கூறிய முதல் வாசகம், தீக்குளிப்புக்கு பின்.

சீதை பேசவில்லையா, அல்லது கம்பன் விட்டு விட்டானா என்றும் தெரியவில்லை.

எனக்கும் பெரிய ஆச்சரியமும், வருத்தமும் தான்.

சீதை நாலு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா ?

சீதை அப்படி ஒன்று எதிர்த்து பேசாமல் இருப்பவள் அல்ல.

இருந்தும் இது பற்றி அவள் ஒன்றும் கூறவில்லை.

வானர பெண்களை அழைத்துக் கொண்டு போகலாம் என்கிறாள்.

இது என்ன reaction ?

கணவன் என்ன சொன்னாலும், செய்தாலும் மனைவி என்பவள்  கேட்டுக் கொண்டு அப்படியே சும்மா இருக்க வேண்டும்  என்பது தான் கம்பன் காட்டும் பாடமா ?

சிந்திப்போம்



Friday, September 6, 2019

கம்ப இராமாயாணம் - அங்கி புக்கிடு

கம்ப இராமாயாணம் - அங்கி புக்கிடு 


அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை இராமன் சந்தேகக் கண் கொண்டு பார்த்தான். அவள் மேல் சுடு சொற்களை வீசினான். அது பொறுக்க மாட்டாமல், சீதை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபித்தாள் என்று பார்த்தோம்.

 கேள்வி என்ன என்றால் தீயில் இருந்து வந்த பின் சீதை என்ன சொன்னாள் ? என்பதுதான்.

அங்கு வந்த சிவன், சொர்க்கத்தில் இருந்து தயயரதனை வரவழைக்கிறான் .

சீதை, தயரதனின் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறாள்.

அப்போது தயரதன் சொல்லுவான்


" சீதையே, மற்றபடி உன் கற்பினை உலகுக்கு காட்டவே உன்னை தீயில் இறங்கிடு என்று இராமன் உணர்த்தினான். அதை நீ மனதில் வைத்துக் கொள்ளாதே.  சந்தேகம் கொண்டவர்கள், இது போலச் செய்யச் சொல்லி நிரூபனங்களை பெறுவது உண்டு. அது உலக இயற்கை.  உன் கணவன் மேல் கொள்ளாதே "

இது தயரதன் கூற்று.


பாடல்


''நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட, 

அங்கி புக்கிடு'' என்று உணர்த்திய அது மனத்து  அடையேல்;

சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு; அது சரதம்; 

கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். 

பொருள்


''நங்கை! = பெண்ணே

மற்று  = மற்றபடி

நின் கற்பினை = உனது கற்பை

உலகுக்கு நாட்ட,  = உலகுக்கு நிலை நிறுத்தவே


அங்கி புக்கிடு' '  = தீயில் புகுந்திடு

என்று உணர்த்திய அது  = என்று உணர்த்தியது

மனத்து  அடையேல்; = அதை மனதில் வைத்துக் கொள்ளாதே

சங்கை  = சந்தேகம்

உற்றவர் = கொண்டவர்கள்

பெறுவதும் உண்டு = இது போல நிரூபணங்களை கேட்டுப் பெறுவது உண்டு

; அது சரதம்;  = அது உலக இயற்கை



கங்கை நாடுடைக் கணவனை = கங்கை நாட்டின் கணவனை

முனிவுறக் கருதேல்.  = கோபம் கொள்ளாதே


இந்தப் பாடலில் சில முக்கிய குறிப்புகளை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாவது, பெரும்பாலான இராம பக்தர்கள் கூறுவது என்ன என்றால் " இராமன் கோபித்து   பேசினான். ஆனால், அவன் சீதையை தீயில் இறங்கச் சொல்லவில்லை.  முன்னர் இலக்குவன் மேல் சந்தேகம் கொண்டதால், அதற்கு பரிகாரமாக,  சீதையே இலக்குவனை தீ வளர்க்கச் சொல்லி, அதில் இறங்கினாள் "

இது, பழியை சீதை மேல் போடும் உபாயம். இராமனை காப்பாற்ற வேண்டி, சீதையை  காவு கொடுத்து விடுகிறார்கள்.

தயரதன் அதை மறுக்கிறான். சீதையை தீயில் இறங்க உணர்த்தியது இராமன் தான்  என்று தெளிவாகச் சொல்லுகிறான்.

இரண்டாவது, இராமனுக்கு சீதை மேல் சந்தேகம் இல்லை , உலகுக்கு அவள் கற்பை நிலை நாட்டவே, அப்படிச் செய்தான் என்று தயரதன் , இராமனின் செயலுக்கு  நியாயம் கற்பிக்கிறான்.

அது சரி என்று வைத்துக் கொள்வோம். நாளை ஒவ்வொரு பக்தர்களும், அப்படிச் செய்ய தொடங்கி விட்டால்?

ஒவ்வொரு கணவனும், தங்கள் மனைவியை ஊர் அறிய தீயில் இறங்கி அவர்கள் கற்பை  நிலை நாட்டச் சொன்னால் , அது ஏற்றுக்க்கொள்ளக் கூடியதா?  எத்தனை பெண்கள், தீயில் இறங்க சம்மதிப்பார்கள் ?\\\\


மூன்றாவது, உலகுக்கு கற்பை நிலை நாட்டவே இந்த தீக்குளிப்பு நாடகம் என்று சொன்ன  தயரதன், அடுத்த வரியிலேயே அதை மாற்றுகிறான்.  "சந்தேகம் கொண்டவர்கள், இப்படி நிரூபணம் கேட்பது உலக இயற்கை" என்று   இராமனின் செயலை மேலும் நியாயப் படுத்த முயலுகிறான்.  இராமனுக்கு , சீதை  மேல் சந்தேகம், என்று தெள்ளத் தெளிவாக கூறி விடுகிறான்.

நான்காவது, அப்படி எல்லாம், இராமனுக்கு சந்தேகம் எல்லாம் இல்லை என்று இன்னும்  சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு, தயரதன் கடைசியாக ஒரு அடி அடிக்கிறான்.  "நீ இதை மனதில் வைத்துக் கொள்ளாதே. அவன் மேல் கோபப் படாதே" என்று.

தயாரதனுக்குத் தெரிகிறது. சீதை இதை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று. எனவே, அவளிடம் வேண்டுகிறான் "கண்டுக்காதே, கோவிச்சுக்காதே" என்று.

செய்றதையும் செய்திட்டு...


இப்போதாவது சீதை பேசினாளா என்றால், இல்லை.

இப்பவும் பேசவில்லை.

சரி என்றும் சொல்லவில்லை. மாட்டேன் என்றும் சொல்லவில்லை.

என்னடா இது...இவ எப்பதான் பேசுவாள். என்னதான் சொல்லினாள் ?

உங்களைப் போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன் தெரிந்து கொள்ள....

மேலும் காவியத்தை தேடுவோம். எப்போதாவது பேசி இருக்க வேண்டுமே?

கடைசி வரை பேசாமலேயா இருந்து  விடுவாள்?

பட்டாபிஷேகம் வரை போயாவது இதை கண்டு பிடிக்காமல் விடுவது இல்லை.

வாருங்கள், தேடுவோம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_6.html

Tuesday, September 3, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பெரும் பயன் இல்லாத சொல்

திருக்குறள் - சொற்குற்றம் - பெரும் பயன் இல்லாத சொல் 


பயனுள்ள சொல்லைச் சொல்ல வேண்டும். அதுவும் பண்போடு சொல்ல வேண்டும் என்று நேற்றைய பிளாகில் சிந்தித்தோம்.

உடனே பல பேர், "இந்த மீம்ஸ் எல்லாம் மத்தவங்களுக்கு அனுப்புறோமே...அதைப் பார்த்து அவங்க சிரிப்பாங்க தானே...அதுவும் ஒரு பயன்தானே " என்று சொல்லலாம்.

இந்த டிவி சீரியல் எல்லாம் பாக்குறோமே...நல்லா போகுதே அதுவும் ஒரு பயன் தானே

காலையில் whatsapp இல் எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்றோம், நாலு கிழமையினா அது சம்பந்தமா வாழ்த்து போடுறோம், கல்யாண நாள், பிறந்த நாள் என்றால் வாழ்த்துச் சொல்றோம்...இதெல்லாம் பயன் இல்லையா? அதை அன்போடுதானே சொல்கிறோம்...

என்று  ஒரு கோஷ்டி ஆரம்பிக்கலாம்.

எனவேதான் வள்ளுவர் சொல்கிறார் "பெரும் பயன் இல்லாத சொல்" சொல்லக் கூடாது என்று.

சின்ன பயன் இருக்கிறது என்று வெட்டித் தனமாக எதையும் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. பெரும் பயன் வரும் என்றால் சொல்ல வேண்டும். இல்லை என்றால் சொல்லக் கூடாது.

அப்படி யார் சொல்லுவார்கள் என்றால்,  அரிய பயன்களை ஆராய்ச்சி செய்யும் அறிவு உள்ளவர்கள்,   பெரும் பயன் தராத சொற்களை சொல்ல மாட்டார்கள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம், நாம் பெரும் பயன் பெற வேண்டும் என்றால்,  அப்படிப் பட்டவர்களை கண்டு பிடித்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

நாமும் அப்படி ஆராய்ந்து படிக்க வேண்டும். அறிய வேண்டும்.

கேட்டுக் கொண்டே இருந்தால் போதுமா? எப்போதுதான் சொல்வது?

பாடல்


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்


பொருள்

அரும்பயன் = அரிய பயன்கள். அரிய என்றால் கிடைத்தற்கு அரிய என்று பொருள். எது எளிதில் கிடைக்காது? வீடு பேறு , புகழ், மறுமைப் பயன்கள் போன்றவை அரிய பயன்கள்.  பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி,  சர்க்கரை பொங்கல் வைப்பது எப்படி என்பவை எளிய பயன்கள்.

 ஆயும்  = ஆராயும். படிக்கும் என்று சொல்லவில்லை.  யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படித்து விடலாம்.  அதை ஆராய வேண்டும்.  படிப்பதற்கு எல்லாம் மண்டைய ஆட்டுவது ஆராய்ச்சி இல்லை. படித்தவற்றை, கேட்டவற்றை ஆராய வேண்டும். சரி தப்பு, நல்லது, கெட்டது என்று பகுத்து உணர வேண்டும்.

அறிவினார் = ஆய்வு செய்யும் அறிவு உடையவர்கள்

சொல்லார் = சொல்ல மாட்டார்கள்

பெரும்பயன் = பெரிய பயன்

இல்லாத சொல் = இல்லாத சொற்களை

டிவியில் வரும் தொகுப்பாளர்கள் அப்படிப்பட்ட அரும் பயன் ஆராயும் அறிவு உள்ளவர்களா என்று அறிந்து கொண்டு , அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

யாரிடமாவது ஏதாவது கேட்க வேண்டும் என்றால், அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு  பின் அவர்களிடம் கேளுங்கள்.

உங்களுக்கு பெரிய பயன் கிடைக்கும்.

நாளையில் இருந்து அப்படிச் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எந்த ஒரு சொல்லுக்கும்  மூன்றுக்கு வேலை உண்டு.

நாம் பொதுவாக முதல் படியிலேயே நின்று விடுகிறோம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால், இரண்டாம் படிக்கு போவோம்

மூன்றாம் படி மிக உயர்ந்த படி. மிக மிக குறைந்த பேர்களே அந்த எல்லையைத் தொடுகிறார்கள்.

அது என்ன மூன்று படி என்று இப்போதே சொல்லி விடலாம்...பிளாக் நீண்டு விட்டால்  "ரொரம்ப பெரிசா இருக்கு...அப்புறம் படிக்கலாம் " என்று மூடி வைத்து விட்டேன்  என்று சிலர் சொல்லக் கூடும் என்பதால் அது  பற்றி பின்னொரு பிளாகில் சிந்திக்கலாம்தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_38.html


கம்ப இராமாயணம் - இரு மாதரை

கம்ப இராமாயணம் - இரு மாதரை 


சீதையின் கற்பை இராமன் சந்தேகித்தான். அதை அறிந்த சீதை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபித்தாள்.

இராமனுக்கு சீதையின் மேல் சந்தேகம் வந்தது போல சீதைக்கும் இராமன் மேல் சந்தேகம் வந்தால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா என்று பெண்ணிய வாதிகள் கொந்தளிக்கலாம்.

ஒரு வேளை சீதையும் சந்தேகப் பட்டாளோ என்று சிந்திக்க வைக்கும் பாடல் உள்ளது.

அசோகவனத்தில் சிறை இருந்த சீதையை கண்ட அனுமன், இராமனிடம் கூற சேதி ஏதாவது உள்ளதா என்று கேட்கிறான்.

சீதைக்கும் இராமனுக்கும் இடையில் ஆயிரம் அந்தரங்க செய்தி பரிமாற்றம் இருந்திருக்கலாம்.  கணவன் மனைவி இடையில் அந்தரங்க செய்திக்கு பஞ்சமா?

இருந்தும், சீதை குறிப்பாக ஒரு செய்தியை கூறுகிறாள்.

"என்னை வந்து திருமணம் செய்து கொண்ட நேரத்தில், உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் நினைக்க மாட்டேன்  எனக்கு ஒரு வரம் தந்தார். அதை அவர் காதில உரக்கச் சொல்லு " என்று கூறுகிறாள்.


பாடல்

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்தவாறு திருச்செவி சாற்றுவாய்!

பொருள் 

வந்து = மிதிலைக்கு வந்து

எனைக்  = என்னை

கரம் பற்றிய  = கைகளை பற்றிய அந்த

வைகல்வாய் = நேரத்தில்

‘இந்த இப் பிறவிக்கு = இந்தப் பிறவியில்

இரு மாதரைச் = இரண்டு பெண்களை

சிந்தையாலும் தொடேன்  = மனதாலும்  தொட மாட்டேன்

‘என்ற = என்று கூறிய

செவ் வரம் = சிறந்த வரத்தை

தந்தவாறு = தந்ததை

திருச்செவி சாற்றுவாய்! = அவருடைய செவிகளில் சாற்றுவாய்

சாற்றுதல் என்றால் உரக்கச் சொல்லுதல், விளம்பரப் படுத்தல் என்ற பொருளில் வரும்.

இதை ஏன், மூன்றாம் மனிதனான, திருமணம் ஆகாத அனுமனிடம் கூற வேண்டும்?

இன்னொரு பெண்ணை தொட மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்திருக்கிறார். அதை அவருக்கு நினைவு படுத்து என்றால் என்ன அர்த்தம்?

சீதை அப்படி எல்லாம் நினைக்க மாட்டாள். அவள் அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்க  மாட்டாள் என்று யாரேனும் நினைக்கலாம் என்று நினைத்து, கம்பன் இன்னும் சில பாடலைகளை சேர்த்து இருக்கிறான். அவை பற்றி பின் ஒரு  நாள் சிந்திக்க இருக்கிறோம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சந்தகேம் பொது.

இராமன் சேந்தேகப் பட்டான், அக்கினி, ப்ரம்மா, சிவன் எல்லாம் வந்து சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை.

சிவன், வேறு வழியில்லை என்று தசரதனை அழைத்து வரச்சொன்னான்.

தயாரதனும் வந்தான்.

தயாரதனுக்கும் , இராமனுக்கும் இடையே நடத்த பேச்சு மிக சுவாரசியமானது.

அதை இல்லம் விட்டு விடுவோம். மேலே போவோம்.

தயரதன் சீதையிடம் என்ன சொன்னான்?

அதற்கு சீதை என்ன மறு மொழி சொன்னாள் என்று நாளை சிந்திக்க இருக்கிறோம்.

மறக்காம வந்திருங்க....

interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_3.html

Monday, September 2, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பயன்சாரா பண்பில் சொல்

திருக்குறள் - சொற்குற்றம் - பயன்சாரா பண்பில் சொல் 


சில பேர் நல்லது சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்காது.

அப்பா மகனிடம், "நீ ஒழுங்கா படிக்கலேன்னா மாடு மேய்க்கத் தான் போற..." என்று சொல்லும் போது , அவர் பிள்ளையின் மேல் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படாது. அவர் சொல்வது அவனுடைய நன்மைக்குத்தான் என்றாலும், சொல்லும் விதம் இருக்கிறது அல்லவா.

நல்லதும் சொல்ல வேண்டும், அதை இனிமையாகவும், அழகாகவும் சொல்ல வேண்டும்.

சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டால், மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடக் கூடாது. அதை எப்படி சிறப்பாக சொல்வது என்று சிந்தித்து பின் நம் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சில கணவன்மார்கள், மனைவியிடம் "என்ன இன்னும் சமையல் ஆகலையா"" என்று அதிகாரத்தோடு கேட்பார்கள்.

பதில் "செஞ்சுகிட்டு தான இருக்கேன்...எனக்கு என்ன பத்து கையா இருக்கு" என்று வரும்.

அதுவே, "ரொம்ப பசிக்குதும்மா...இன்னும் நேரம் ஆகுமா" னு மென்மையா கேட்டால் "...இல்லீங்க, இதோ இப்ப தயார் ஆகிரும்...நீங்க கை கால் கழுவிட்டு வாங்க..." னு அன்போடு பதில் வரும்.

வள்ளுவர் சொல்கிறார், "பயன் இல்லாத, பண்பற்ற சொற்களை கூறினால், அது ஒருவனுக்கு வந்து சேர வேண்டிய அனைத்து நல்லவைகளில் இருந்தும் அவனை தள்ளி விடும்" என்று


பாடல்



நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து

பொருள்

நயன்சாரா = நயத்தல் என்றால் விரும்புதல். விருப்பம் இல்லாத

நன்மையின் = நன்மைகளில் இருந்து

நீக்கும் = நீக்கிவிடும். எது நீக்கிவிடும் என்றால்

 பயன்சாராப் = பயன் தராத

பண்பில்சொல் = பண்பற்ற சொற்கள்

பல்லார் அகத்து = பலபேரிடம்


பயன் உள்ள சொற்களை சொல்ல வேண்டும்.

அதற்காக, "நாயே, பேயே ஒழுங்கா படி" என்று சொல்லுது பயன் உள்ள சொல் தான் என்றாலும், அது பண்பற்ற சொல்.

பயனும் இருக்க வேண்டும், பண்பும் இருக்க வேண்டும்.

அப்படி சொல்லவில்லை என்றால் அந்த மாதிரி பேச்சே நல்ல நன்மைகளில் இருந்து  நம்மை நீக்கி விடும்.

"நான் மாடா உழைக்கிறேன், எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், ஆனா என்னை மட்டும் யாருக்கும்  பிடிக்க மாட்டேங்குது" என்று அங்கலாய்த்து பலன் இல்லை.

நன்மை வேண்டுமா?

எல்லோரும் உங்களிடம் அன்பாக இருக்க வேண்டுமா ?

பணமும், புகழும் வேண்டுமா ?

பயனுள்ளவற்றைப் பேசுங்கள், அதையும் பண்போடு பேசுங்கள்.

நன்மை தானே வரும்.

சரியா இருக்கும் போல இருக்குல்ல? நீங்க என்ன நினைக்கிறீரங்க?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_58.html

கம்ப இராமாயணம் - நின் மைந்தனை தெருட்டி

கம்ப இராமாயணம் - நின் மைந்தனை தெருட்டி 


தீக்குளித்து வந்த பின் சீதை களங்கம் அற்றவள் என்று அக்கினி தேவன் கூறினான்.

பிரமனும் சிவனும் அப்படியே கூறினார்கள்.

சிவன் யோசித்தார்...இனி என்ன செய்வது என்று.

இதற்கு ஒரே வழி.....

தசரதனை கூப்பிடுவது தான் என்று எண்ணி தசரதனை கூப்பிட்டார்.

ஆம், இறந்து ஸ்வர்கம் போன தசரதனை அழைத்தார் சிவன். என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது பாருங்கள்.

சொர்க்கத்தில் இருந்த தசரதனை சிவன் அழைத்து,

"மெய் அன்பு உள்ளவனே, உன் மைந்தனின் குழப்பத்தை தெளிவு படுத்தி அவனுக்கு வந்த கடுமையான துயரத்தை நீக்குவாயாக "

என்று கூறினான்.

பாடல்

பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள்  இருந்த
மன்னவற் சென்று கண்டு, 'நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்!' என்றான்.

பொருள்

பின்னும் நோக்கினான் = சிவன் மேலும் சிந்தித்து


பெருந் தகைப் = பெரியவர்

புதல்வனைப் பிரிந்த = இராமனைப் பிரிந்த

இன்னலால் = துன்பத்தால்

உயிர் துறந்து, = உயிரை விட்டு

இருந் துறக்கத்துள்  இருந்த = துறக்கம் என்ற சொல் ஆழமான சொல். இந்த இடத்தில், சுவர்க்கம் என்று வைத்துக் கொள்ளலாம்

மன்னவற் சென்று கண்டு, = மன்னனான தசரதனை சென்று கண்டு

'நின் மைந்தனைத் = உன் மகனான இராமனை

தெருட்டி, = தெளிவு படுத்துவாய்

முன்னை = முதலில்

வன் துயர் நீக்குதி, = அவனுக்கு  வந்த பெரிய துயரை நீக்குவாய்

மொய்ம்பினோய்!' = உண்மையான அன்பு கொண்டவனே

என்றான். = என்று சிவன் கூறினான்

ஊடல் தீர்க்கும் வாயில்கள் பற்றி முன்னம் ஒரு ப்ளாகில் பார்த்தோம்.

அக்கினி, பிராம்மா , சிவன் என்று யார் சொல்லியும் இராமனின் குழப்பம் தீரவில்லை.

இராமனுக்கு குழப்பம் என்று சிவன் வாயிலாக கம்பன் பதிவு செய்கிறான்.

"தெருட்டி" என்று என்றால் தெளிவு செய்தல்.

அது மட்டும் அல்ல, சீதையை எப்படி ஏற்றுக் கொள்ளுவது என்ற குழப்பம் மட்டும் அல்ல,  அது ஒரு துயரமான ஒன்றாகப் படுகிறது இராமனுக்கு.

"வன் துயர் நீக்குதி" என்றான்.

என்ன துயரம்?

இராவணன் இறந்து விட்டான்.

வீடணனுக்கு முடி சூட்டியாகி விட்டது.

சீதை சிறை மீண்டு வந்து விட்டாள்.

தீக்குளித்து கற்பை நிலை நிறுத்தியாகி விட்டது.

அக்கினி, ப்ரம்மா, சிவன் எல்லோரும் வந்து சொல்லிவிட்டார்கள்.

இருந்தும் "வன் துயர்" ...என்ன துயரம்?

சீதையை எப்படி ஏற்றுக் கொள்வது என்றா ? அல்லது இப்படி வாய்க்கு வந்தபடி பேசி விட்டோமே,  இனி இவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்  என்ற துயரமா? அல்லது இவளை ஏற்றுக் கொண்டு சென்றால், ஊருக்குள் யார் என்ன பேசுவார்களோ  என்ற துயரமா?

கம்பன் சொல்லவில்லை.

ஏதோ ஒரு துயரம்.

இராவணனை கொன்று, சீதையை சிறை மீட்டது, அவளை மீண்டும் கண்டது, இராமனுக்கு  மகிழ்ச்சியைத் தரவில்லை என்று மட்டும் புரிகிறது.

ஒரு சாதாரணமான மானிடனைப் போல, மாற்றான் வீட்டில் பல காலம் சிறை இருந்த  மனைவியை சந்தேகிப்பது போல இராமன் சந்தேகிக்கிறான்.

சரி.

சீதையைப் பிரிந்து இராமன், காட்டில் இருந்தானே.

அவனை, சீதை சந்தேகப் படலாம்தானே?

அரசர்கள் பல பெண்களை மணந்து கொள்வதும், மணம் செய்யாமல் உறவு கொள்வதும்  ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கை முறை தானே.

அப்படி இருக்க, தன்னைப் பிரிந்த இராமன் வேறு ஒரு பெண்ணை நாடி இருக்கலாம் என்று சீதை  நினைத்தால் அதில் தவறு உண்டா?

சீதை அப்படி நினைப்பாளா?  அதுவும் இராமனைப் பற்றி....

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_2.html

Sunday, September 1, 2019

கம்ப இராமாயணம் - வரதர்க்கும் வரதன்

கம்ப இராமாயணம் - வரதர்க்கும் வரதன்


சீதை தீக்குளித்து வந்து விட்டாள். அக்கினி தேவன் , சீதை கற்புள்ளவள் என்று சான்றிதழும் கொடுத்து விட்டான். பத்தா குறைக்கு "இராமா, நீ இப்படி செய்வது அறம் அல்ல" என்றும் உபதேசம் செய்தான்.

சீதை பேசவில்லை.

அடுத்து பிரமன் வருகிறான். அவன் இராமனுக்கு அவன் யார் என்று சொல்லுகிறான்.

சீதை பேசவில்லை.

அடுத்து சிவன் வருகிறான். அவனும் இராமனைப் பற்றி அவனுக்கே எடுத்து உரைக்கிறான்.

எல்லாம் சொல்லிவிட்டு சொல்லுவான்

"இந்த சீதை இருக்கிறாளே, இவள் உன்னால் கைவிடப் படக் கூடியவள் அல்லள். இந்த உலகம் அனைத்துக்கும் தாய் போன்றவள் அவள். இவள் தவறு செய்தால் என்றால், இந்த உலகில் பல உயிர்கள் அழிந்து போகும். நீ இவளை இகழ்வாக எண்ணியதை மறந்து விடு " என்று சொன்னான்.

சொன்னது யார், வரம் தருபவர்களுக்கு வரம் தருபவன். அதாவது கடவுள்களுக்கே வரம் தரும் சிவன்.

பாடல்

'துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள் திறத்து  இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன் - வரதர்க்கும் வரதன். 



பொருள்

'துறக்கும் = துறந்து விடக் கூடிய

தன்மையள் அல்லளால் = தன்மை கொண்டவள் அல்ல இவள்.

தொல்லை = பழமையான

எவ் உலகும் = அனைத்து உலகும்

பிறக்கும் = தோன்றும்

பொன் வயிற்று அன்னை = பொன் போன்ற வயிற்றை கொண்ட தாய் இவள்

இப் பெய்வளை = இந்த வளையல்கள் அணிந்த சீதை

பிழைக்கின், = பிழை செய்தால்

இறக்கும் பல் உயிர் = பல உயிர்கள் அழிந்து போகும்

இராமன்! = இராமா

நீ இவள் திறத்து = நீ இவள் பால் கொண்ட

இகழ்ச்சி = இகழ்ச்சி, தாழ்ந்த எண்ணம்

மறக்கும் தன்மையது'  = அதை மறந்து விடு. அது மறக்கும் தன்மையது

என்றனன் = என்றான்

வரதர்க்கும் வரதன்.  = வரம் தருபவர்களுக்கு வரம் தருபவன்


சீதையின் கற்பை உலகுக்கு காட்டவே இராமன் அவளை தீயில் இறங்க வைத்தான் என்று  சிலர் கூறுவார்கள். இராமனை எப்படியாவது அந்த அபவாதத்தில் இருந்து  காப்பாற்ற அவன் பக்தர்கள் செய்யும் வேலை அது.

சிவன் சொல்கிறான், "அவள் மேல் நீ கொண்ட இகழ்வான எண்ணத்தை மறந்து விடு " என்று.

இராமனுக்கு, சீதை மேல் தாழ்வான எண்ணம் இருத்தது என்று சிவன் சொல்கிறான், எல்லோர் முன்னிலையிலும்.  இராமன், சீதையை தவறாக நினைத்தான் என்றே கம்பனும் காட்டுகிறான்.

கம்பன் நினைத்து இருந்தால், இந்தப் பகுதியை அப்படியே நீக்கி இருக்கலாம். காப்பிய போக்கு ஒன்றும் கெட்டு விடாது.

வேலை மெனக்கிட்டு கம்பன் எழுதுகிறான் "அவள் மேல் கொண்ட இழிவான எண்ணத்தை  மறந்து விடு" என்று சிவன் சொன்னதாக.

இதற்கு இராமன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

சீதையும் பேசவில்லை.

சிவனுக்கு என்ன செய்வது  என்று தெரியவில்லை.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்களை ஊரறிய செய்தால் இதுதான்  நடக்கும்  என்று கம்பன் சொல்லாமல் சொல்கிறானோ என்னவோ.

அக்கினி தேவன் சொல்லியாச்சு...ஒன்றும் நடக்கவில்லை.

பிரம்மன் சொல்லியாச்சு ...ஒன்றும் நடக்கவிலை

சிவன் வந்து சொல்லிப் பார்த்தான்....ஒன்றும் நடக்கவில்லை

இனி என்னதான் செய்வது...

பார்த்தார் சிவன், இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்று நினைத்து அதைச் செய்தார்....

அது என்ன வழின்னா.....


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_1.html