Monday, September 2, 2019

கம்ப இராமாயணம் - நின் மைந்தனை தெருட்டி

கம்ப இராமாயணம் - நின் மைந்தனை தெருட்டி 


தீக்குளித்து வந்த பின் சீதை களங்கம் அற்றவள் என்று அக்கினி தேவன் கூறினான்.

பிரமனும் சிவனும் அப்படியே கூறினார்கள்.

சிவன் யோசித்தார்...இனி என்ன செய்வது என்று.

இதற்கு ஒரே வழி.....

தசரதனை கூப்பிடுவது தான் என்று எண்ணி தசரதனை கூப்பிட்டார்.

ஆம், இறந்து ஸ்வர்கம் போன தசரதனை அழைத்தார் சிவன். என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது பாருங்கள்.

சொர்க்கத்தில் இருந்த தசரதனை சிவன் அழைத்து,

"மெய் அன்பு உள்ளவனே, உன் மைந்தனின் குழப்பத்தை தெளிவு படுத்தி அவனுக்கு வந்த கடுமையான துயரத்தை நீக்குவாயாக "

என்று கூறினான்.

பாடல்

பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள்  இருந்த
மன்னவற் சென்று கண்டு, 'நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்!' என்றான்.

பொருள்

பின்னும் நோக்கினான் = சிவன் மேலும் சிந்தித்து


பெருந் தகைப் = பெரியவர்

புதல்வனைப் பிரிந்த = இராமனைப் பிரிந்த

இன்னலால் = துன்பத்தால்

உயிர் துறந்து, = உயிரை விட்டு

இருந் துறக்கத்துள்  இருந்த = துறக்கம் என்ற சொல் ஆழமான சொல். இந்த இடத்தில், சுவர்க்கம் என்று வைத்துக் கொள்ளலாம்

மன்னவற் சென்று கண்டு, = மன்னனான தசரதனை சென்று கண்டு

'நின் மைந்தனைத் = உன் மகனான இராமனை

தெருட்டி, = தெளிவு படுத்துவாய்

முன்னை = முதலில்

வன் துயர் நீக்குதி, = அவனுக்கு  வந்த பெரிய துயரை நீக்குவாய்

மொய்ம்பினோய்!' = உண்மையான அன்பு கொண்டவனே

என்றான். = என்று சிவன் கூறினான்

ஊடல் தீர்க்கும் வாயில்கள் பற்றி முன்னம் ஒரு ப்ளாகில் பார்த்தோம்.

அக்கினி, பிராம்மா , சிவன் என்று யார் சொல்லியும் இராமனின் குழப்பம் தீரவில்லை.

இராமனுக்கு குழப்பம் என்று சிவன் வாயிலாக கம்பன் பதிவு செய்கிறான்.

"தெருட்டி" என்று என்றால் தெளிவு செய்தல்.

அது மட்டும் அல்ல, சீதையை எப்படி ஏற்றுக் கொள்ளுவது என்ற குழப்பம் மட்டும் அல்ல,  அது ஒரு துயரமான ஒன்றாகப் படுகிறது இராமனுக்கு.

"வன் துயர் நீக்குதி" என்றான்.

என்ன துயரம்?

இராவணன் இறந்து விட்டான்.

வீடணனுக்கு முடி சூட்டியாகி விட்டது.

சீதை சிறை மீண்டு வந்து விட்டாள்.

தீக்குளித்து கற்பை நிலை நிறுத்தியாகி விட்டது.

அக்கினி, ப்ரம்மா, சிவன் எல்லோரும் வந்து சொல்லிவிட்டார்கள்.

இருந்தும் "வன் துயர்" ...என்ன துயரம்?

சீதையை எப்படி ஏற்றுக் கொள்வது என்றா ? அல்லது இப்படி வாய்க்கு வந்தபடி பேசி விட்டோமே,  இனி இவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்  என்ற துயரமா? அல்லது இவளை ஏற்றுக் கொண்டு சென்றால், ஊருக்குள் யார் என்ன பேசுவார்களோ  என்ற துயரமா?

கம்பன் சொல்லவில்லை.

ஏதோ ஒரு துயரம்.

இராவணனை கொன்று, சீதையை சிறை மீட்டது, அவளை மீண்டும் கண்டது, இராமனுக்கு  மகிழ்ச்சியைத் தரவில்லை என்று மட்டும் புரிகிறது.

ஒரு சாதாரணமான மானிடனைப் போல, மாற்றான் வீட்டில் பல காலம் சிறை இருந்த  மனைவியை சந்தேகிப்பது போல இராமன் சந்தேகிக்கிறான்.

சரி.

சீதையைப் பிரிந்து இராமன், காட்டில் இருந்தானே.

அவனை, சீதை சந்தேகப் படலாம்தானே?

அரசர்கள் பல பெண்களை மணந்து கொள்வதும், மணம் செய்யாமல் உறவு கொள்வதும்  ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கை முறை தானே.

அப்படி இருக்க, தன்னைப் பிரிந்த இராமன் வேறு ஒரு பெண்ணை நாடி இருக்கலாம் என்று சீதை  நினைத்தால் அதில் தவறு உண்டா?

சீதை அப்படி நினைப்பாளா?  அதுவும் இராமனைப் பற்றி....

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_2.html

1 comment:

  1. கொக்கி போட்டு தினம் பதிவை நிறுத்தி விட்டுறீங்க.மறு நாள் வரை காத்து கிடைக்க வேண்டி உள்ளது.

    ReplyDelete