Monday, September 9, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - சொல்லுக, சொல்லற்க

திருக்குறள் - சொற்குற்றம் - சொல்லுக, சொல்லற்க 




எதைச் சொல்லணும், எதைச் சொல்லக் கூடாதுனு எல்லாம் சொல்லிட்டு தலைவர் கடைசியா ஒரு குறள் சொல்றார்.

எதைச் சொல்லணும் - பயனுள்ள சொல்லை

எதைச் சொல்லக் கூடாது - பயனற்ற சொல்லை

அவ்வளவுதாங்க.

பாடல்


சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்

பொருள்

சொல்லுக  = சொல்லுங்கள் என்று  ஒரு கட்டளையே போடுகிறார்.

சொல்லின் = சொற்களில்

பயனுடைய = பயனுள்ளவற்றை

சொல்லற்க = சொல்லாதீர்க்கள்

சொல்லின் = சொற்களில்

பயனிலாச் சொல் = பயனில்லாத சொற்களை


பேசப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டால், நாம் பேசுவதால் மற்றவர்களுக்கு என்ன பயன் என்று அறிந்து கொண்டு பேச வேண்டும். பயன் இல்லை என்றால் பேசக் கூடாது. மௌனம் சிறந்தது.

நம்ம எல்லாம் பேசவே முடியாது  போல இருக்கே.....

ஏன் சொல்லுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்.

காசா பணமா, சும்மா பேசி விட்டுப் போக வேண்டியதுதானே...என்று நாம் நினைப்போம்.

ஏன் என்றால்  நமக்கு சொற்களின் வலிமை புரிவது இல்லை.

ஒரு கழுதையின் கழுத்தில் வைர மாலையை கட்டிவிட்டால், அதற்குத் தெரியுமா  அந்த மாலையின் மதிப்பும், பெருமையும்?

அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும்.

வள்ளுவருக்குத் தெரிந்திருக்கிறது அது வைரம் என்றும்.

எனவே இவ்வளவு மெனக்கிடுகிறார்.

அப்படி சொல்லில் என்னதான் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_9.html

No comments:

Post a Comment