Sunday, September 8, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பொச்சாந்தும் சொல்லார்

திருக்குறள்  - சொற்குற்றம் - பொச்சாந்தும் சொல்லார் 


பயனுள்ள சொல்லை சொல்ல  வேண்டும்.அதுவும் இனிமையாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் எல்லோரும் நகைக்கும்படி ஆகிவிடும் என்றெல்லாம் பார்த்தோம்.

அதெல்லாம் சரிங்க, இந்த பயனுள்ள சொற்களை எப்படி பேசுவது? அதுக்குன்னு ஏதாவது கோர்ஸ் இருக்கா. புத்தகம் ஏதாவது இருக்கா படிக்க? அப்படியே வள்ளுவர் சில புத்தகங்களை சொல்லி இருந்தாலும், அது இந்தக் காலத்துக்கு பொருந்தி வருமா ? என்றெல்லாம் கேள்வி வரும் அல்லவா?

அனைத்து காலத்துக்கும் பொருந்தும்படி அறிவுரை சொல்ல வேண்டும்.

எப்படி சொல்லுவது ?

"மயக்கம் இல்லாத குற்றமற்ற அறிவுடையவர்கள் மறந்தும் கூட பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள்"

என்கிறார்.

புரியலையே....அது என்ன மயக்கம் இல்லாத குற்ற்றமற்ற அறிவு ?

முதலில் பாடலைப் பார்ப்போம்

பாடல்


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்


பொருள்

பொருள் = பயன்,

தீர்ந்த = இல்லாத

பொச்சாந்தும்  = மறந்தும்

சொல்லார் = சொல்ல மாட்டார்

மருள்தீர்ந்த = மயக்கம் இல்லாத

மாசறு = குற்றமற்ற

காட்சி யவர் = காட்சி உடையவர்



மறந்தும் சொல்ல மாட்டார்

சில சமயம் நமக்கு கோபம் வரும் போது ஏதாவது தவறான வார்த்தைகளை பேசி விடுவோம் . சில சமயத்தில்  பயத்தில்,சில சமயம் இலயிப்பில் ஏதாவது மறந்து பேசி விடுவோம்.

இவற்றிற்கு காரணம் என்ன ?

மனதில் எங்கோ ஒரு மூலையில் அழுக்கு, (மாசு) இருக்கிறது. அது நம்மை அறியாமல்  சில நேரங்களில் வெளிப்பட்டு விடுகிறது.

மனதில் குற்றமே இல்லை என்றால், ஒரு போதும் தவறான வார்த்தைகள் வராது அல்லவா ? மனதில் இருந்தால் தானே வாயில் வரும்.

மருள் தீர்ந்த

மயக்கம் இல்லாத என்று பொருள். மயக்கம் என்றால் என்ன ? தண்ணி அடித்துவிட்டு  மயங்கி ,  போதையில் ஏதாவது சொல்லிவிடுவதா என்றால் இல்லை.

நமக்கு உலகில் ஒன்றை அறிந்து கொள்ள முற்படும் போது இரண்டு விதமான  சிக்கலைகள் எழும்.

ஐயம் திரிபு என்ற இரண்டு சிக்கல்கள்.

ஐயம் என்றால் சந்தேகம். எது உண்மை, எது பொய் என்று அறியாமல் கலங்குவது.

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக திடமாக நம்புவது.

கயிறை பாம்பென்று நம்புவது.

செய்தித் தாளில், டிவியில் வருவது எல்லாம் உண்மை என்று நம்புவது.

முன்னோர்கள் சொன்னது எல்லாம் சரி என்று ஏற்றுக் கொள்ளுவது.

சந்தேகமே கிடையாது . நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று சொல்லுவாது.

இது திரிபு.

வாழ்வு நிரந்தரம் என்று நினைப்பது.

செல்வம் எப்போதும் நம்மிடம் இருக்கும் என்று நம்புவது.

கட்டுக் கதைகளை அப்படியே நம்புவது.

இவை எல்லாமே திரிபு.

ஐயமும் திரிபும் சேர்ந்தது மருள் அல்லது மயக்கம்.

உண்மை அறியாமல் இருப்பது.

அந்த மயக்கம் போனால்தான் பொருள் அற்றவற்றை பேசாமல் இருக்க முடியும்.

இல்லை என்றால் லொட லொட என்று எதையாவது பேசிக் கொண்டே இருக்கச்  சொல்லும்.

எனவே அறிவு சரியாக இருக்க வேண்டும். மருள் நீக்கம் பெற வேண்டும்.

மருள் நீங்கினால் மட்டும் போதாது.

அறிவு நன்றாக இருந்தாலும், சில சமயம் அது குறுக்கு சால் ஓட்டும். குயுக்தியாக சிந்திக்கும்.

எனவே மனமும் நன்றாக இருக்க வேண்டும்.

மனதில் குற்றம் இருக்கக் கூடாது.

கோபம், பொறாமை, மதம், மாச்சரியம், காமம், லோபம் போன்றவை இருக்கக் கூடாது.

அறிவும் மனமும் நன்றாக இருந்தால், மறந்தும் பொருள் அற்ற சொற்கள் வாயில் இருந்து வராது.

சிலருக்கு மனம் நன்றாக இருக்கும். அன்பு இருக்கும். காதல் இருக்கும். நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கும். ஆனால் எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.

சிலருக்கு அறிவு தெளிவாக இருக்கும்.அனுபவம் இருக்கும். இருந்தும் மனம் குறுகிக் கிடக்கும்.

இரண்டும் ஒன்று பட்டவர்கள் பயனற்ற சொற்களை பேச மாட்டார்கள்.

அப்படிப் பட்ட ஆள்களை தேடிக் கண்டு பிடித்து அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

நாமும் , நம்மை அப்படி ஒருவராக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி ஆகச் சொல்லவில்லை, முயற்சி செய்யச் சொல்கிறேன்.

முயற்சிதானே, செஞ்சுட்டு போறது...


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post.html

No comments:

Post a Comment