Saturday, September 7, 2019

கம்ப இராமாயணம் - தீக்குளிப்புக்கு பின் சீதை கூறியது

கம்ப இராமாயணம் - தீக்குளிப்புக்கு பின் சீதை கூறியது 


இராமன் , சீதையை தீயில் இறங்கி அவளுடைய கற்பை நிலை நாட்டச் சொன்னான். சீதையும் செய்தாள். அவள் தீயில் இறங்கி வெளி வந்த பின், அக்கினி, ப்ரம்மா, சிவன், தயரதன் எல்லோரும் வந்தது இராமனிடமும் சீதையிடமும் பேசினார்கள்.

சீதை வாயே திறக்கவில்லை. பின், எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு, வீடணன் கொண்டு வந்த விமானத்தில் ஏறி அயோத்தி நோக்கி செல்லத் தொடங்கினார்கள்.

இது வரை சீதை ஒன்றும் பேசவில்லை.

இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் , என்னை சிபிஐ custody இல் எடுத்து, "உண்மையைச் சொல்லப் போகிறாயா இல்லையா, சீதை என்னதான் பேசினாள் சொல் ...இல்லையென்றால் உன்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடுவோம்" வாசகர்கள் கிளம்பினாலும் கிளம்பலாம் என்ற பயத்தில் இன்று சொல்லி விடுவதாக முடிவு செய்து விட்டேன்.

வருகிற வழியில் இராமன் , சீதைக்கு பல இடங்களை காட்டிக் கொண்டு வருகிறான், சேது பந்தனம், வருணன் சரணாகதி அடைந்த இடம், சுக்ரீவனை சந்தித்த இடம் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வருகிறான்.

சீதை பேசவே இல்லை. மெளனமாக இருக்கிறாள்.

ஒரு புன்னகை சிந்தியதாகக் கூட கம்பன் காட்டவில்லை.

சுக்ரீவன் இருந்த இடத்துக்கு இராமனும், சீதையும் வந்து சேர்கிறார்கள். உபசரிப்பு நடக்கிறது.

அவர்கள் அங்கிருந்து கிளம்பும் இடத்தில் சீதை முதன் முறையாக பேசுகிறாள்.

என்ன பேசினாள் தெரியுமா ?

தீக்குளிப்பு, கற்பு, இராமன் பேசிய சுடு சொல், மற்றவர்கள் பேசிய பேச்சு, வருகிற வழியில் இராமன் சொல்லிக் கொண்டுவந்த கதைகள் எல்லாவற்றையும் கேட்டு விட்டு, சீதை சொல்கிறாள்

"ஐய , இப்போது இவ்வளவு பெரிய வானர வெள்ளத்தோடு நாம் அயோத்தி செல்கிறோம். அதில் ஒரு பெண் கூட இல்லை. அது எனக்கு என்னவோ போல் இருக்கிறது. இங்குள்ள வானர பெண்களையும் நம்மோடு அழைத்துச் செல்லலாம் " என்று கூறுகிறாள்.

நம்ப முடிகிறதா ?

மறந்து விட்டாளா? இல்லை அது ஒரு பெரிய சங்கதி இல்லை என்று விட்டு விட்டாளா ?

இனி அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது என்று விரக்தியில் விட்டு விட்டாளா ....தெரியாது

பாடல்




 கிட்கிந்தை இதுவேல், ஐய!
    கேட்டியால் : எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள
    மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ
    ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை
    ஏற்றுதல் கடன்மைத்து ‘என்றாள்.


பொருள் 

 கிட்கிந்தை = கிட்கிந்தை

இதுவேல், = இதுவாக இருக்குமானால்

ஐய! = ஐயனே

கேட்டியால் : = கேள்

எனது பெண்மை = எனது பெண்மை

மட்கும்தான், = ஒளி மட்டுப் படும்

ஆய வெள்ள = பெரிய வெள்ளம் போன்ற

மகளிர் இன்று ஆகி,= பெண்கள் இல்லாமல் (தோழிகள் இல்லாமல்)

வானோர் = தேவர்கள்

உட்கும் = பயப்படும்

போர்ச் சேனை சூழ = போர் சேனைகள் சூழ

ஒருத்தியே அயோத்தி எய்தின்; = நான் ஒருத்தி மட்டும் பெண்ணாக அயோத்தி அடைந்தால்

கள் கொந்து  = தேன் நிறைந்த

ஆர் குழலினாரை = பூக்களை கொண்ட குழல்களை உடைய  (இந்த வானர மகளிரை)

ஏற்றுதல் = நம்மோடு ஏற்றுக் கொண்டு போதல்

கடன்மைத்து ‘என்றாள்.=  முறையாக இருக்கும் என்றாள்

ஒரே ஆம்பிளைகள் கூட்டமாக இருக்கிறது. இந்த பெண்களையும் அழைத்துக் கொண்டு  செல்லலாம் என்கிறாள்.

இது தான் சீதை கூறிய முதல் வாசகம், தீக்குளிப்புக்கு பின்.

சீதை பேசவில்லையா, அல்லது கம்பன் விட்டு விட்டானா என்றும் தெரியவில்லை.

எனக்கும் பெரிய ஆச்சரியமும், வருத்தமும் தான்.

சீதை நாலு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா ?

சீதை அப்படி ஒன்று எதிர்த்து பேசாமல் இருப்பவள் அல்ல.

இருந்தும் இது பற்றி அவள் ஒன்றும் கூறவில்லை.

வானர பெண்களை அழைத்துக் கொண்டு போகலாம் என்கிறாள்.

இது என்ன reaction ?

கணவன் என்ன சொன்னாலும், செய்தாலும் மனைவி என்பவள்  கேட்டுக் கொண்டு அப்படியே சும்மா இருக்க வேண்டும்  என்பது தான் கம்பன் காட்டும் பாடமா ?

சிந்திப்போம்



No comments:

Post a Comment