Monday, September 2, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பயன்சாரா பண்பில் சொல்

திருக்குறள் - சொற்குற்றம் - பயன்சாரா பண்பில் சொல் 


சில பேர் நல்லது சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்காது.

அப்பா மகனிடம், "நீ ஒழுங்கா படிக்கலேன்னா மாடு மேய்க்கத் தான் போற..." என்று சொல்லும் போது , அவர் பிள்ளையின் மேல் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படாது. அவர் சொல்வது அவனுடைய நன்மைக்குத்தான் என்றாலும், சொல்லும் விதம் இருக்கிறது அல்லவா.

நல்லதும் சொல்ல வேண்டும், அதை இனிமையாகவும், அழகாகவும் சொல்ல வேண்டும்.

சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டால், மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடக் கூடாது. அதை எப்படி சிறப்பாக சொல்வது என்று சிந்தித்து பின் நம் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சில கணவன்மார்கள், மனைவியிடம் "என்ன இன்னும் சமையல் ஆகலையா"" என்று அதிகாரத்தோடு கேட்பார்கள்.

பதில் "செஞ்சுகிட்டு தான இருக்கேன்...எனக்கு என்ன பத்து கையா இருக்கு" என்று வரும்.

அதுவே, "ரொம்ப பசிக்குதும்மா...இன்னும் நேரம் ஆகுமா" னு மென்மையா கேட்டால் "...இல்லீங்க, இதோ இப்ப தயார் ஆகிரும்...நீங்க கை கால் கழுவிட்டு வாங்க..." னு அன்போடு பதில் வரும்.

வள்ளுவர் சொல்கிறார், "பயன் இல்லாத, பண்பற்ற சொற்களை கூறினால், அது ஒருவனுக்கு வந்து சேர வேண்டிய அனைத்து நல்லவைகளில் இருந்தும் அவனை தள்ளி விடும்" என்று


பாடல்



நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து

பொருள்

நயன்சாரா = நயத்தல் என்றால் விரும்புதல். விருப்பம் இல்லாத

நன்மையின் = நன்மைகளில் இருந்து

நீக்கும் = நீக்கிவிடும். எது நீக்கிவிடும் என்றால்

 பயன்சாராப் = பயன் தராத

பண்பில்சொல் = பண்பற்ற சொற்கள்

பல்லார் அகத்து = பலபேரிடம்


பயன் உள்ள சொற்களை சொல்ல வேண்டும்.

அதற்காக, "நாயே, பேயே ஒழுங்கா படி" என்று சொல்லுது பயன் உள்ள சொல் தான் என்றாலும், அது பண்பற்ற சொல்.

பயனும் இருக்க வேண்டும், பண்பும் இருக்க வேண்டும்.

அப்படி சொல்லவில்லை என்றால் அந்த மாதிரி பேச்சே நல்ல நன்மைகளில் இருந்து  நம்மை நீக்கி விடும்.

"நான் மாடா உழைக்கிறேன், எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், ஆனா என்னை மட்டும் யாருக்கும்  பிடிக்க மாட்டேங்குது" என்று அங்கலாய்த்து பலன் இல்லை.

நன்மை வேண்டுமா?

எல்லோரும் உங்களிடம் அன்பாக இருக்க வேண்டுமா ?

பணமும், புகழும் வேண்டுமா ?

பயனுள்ளவற்றைப் பேசுங்கள், அதையும் பண்போடு பேசுங்கள்.

நன்மை தானே வரும்.

சரியா இருக்கும் போல இருக்குல்ல? நீங்க என்ன நினைக்கிறீரங்க?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_58.html

2 comments: