Tuesday, September 3, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பெரும் பயன் இல்லாத சொல்

திருக்குறள் - சொற்குற்றம் - பெரும் பயன் இல்லாத சொல் 


பயனுள்ள சொல்லைச் சொல்ல வேண்டும். அதுவும் பண்போடு சொல்ல வேண்டும் என்று நேற்றைய பிளாகில் சிந்தித்தோம்.

உடனே பல பேர், "இந்த மீம்ஸ் எல்லாம் மத்தவங்களுக்கு அனுப்புறோமே...அதைப் பார்த்து அவங்க சிரிப்பாங்க தானே...அதுவும் ஒரு பயன்தானே " என்று சொல்லலாம்.

இந்த டிவி சீரியல் எல்லாம் பாக்குறோமே...நல்லா போகுதே அதுவும் ஒரு பயன் தானே

காலையில் whatsapp இல் எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்றோம், நாலு கிழமையினா அது சம்பந்தமா வாழ்த்து போடுறோம், கல்யாண நாள், பிறந்த நாள் என்றால் வாழ்த்துச் சொல்றோம்...இதெல்லாம் பயன் இல்லையா? அதை அன்போடுதானே சொல்கிறோம்...

என்று  ஒரு கோஷ்டி ஆரம்பிக்கலாம்.

எனவேதான் வள்ளுவர் சொல்கிறார் "பெரும் பயன் இல்லாத சொல்" சொல்லக் கூடாது என்று.

சின்ன பயன் இருக்கிறது என்று வெட்டித் தனமாக எதையும் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. பெரும் பயன் வரும் என்றால் சொல்ல வேண்டும். இல்லை என்றால் சொல்லக் கூடாது.

அப்படி யார் சொல்லுவார்கள் என்றால்,  அரிய பயன்களை ஆராய்ச்சி செய்யும் அறிவு உள்ளவர்கள்,   பெரும் பயன் தராத சொற்களை சொல்ல மாட்டார்கள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம், நாம் பெரும் பயன் பெற வேண்டும் என்றால்,  அப்படிப் பட்டவர்களை கண்டு பிடித்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

நாமும் அப்படி ஆராய்ந்து படிக்க வேண்டும். அறிய வேண்டும்.

கேட்டுக் கொண்டே இருந்தால் போதுமா? எப்போதுதான் சொல்வது?

பாடல்


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்


பொருள்

அரும்பயன் = அரிய பயன்கள். அரிய என்றால் கிடைத்தற்கு அரிய என்று பொருள். எது எளிதில் கிடைக்காது? வீடு பேறு , புகழ், மறுமைப் பயன்கள் போன்றவை அரிய பயன்கள்.  பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி,  சர்க்கரை பொங்கல் வைப்பது எப்படி என்பவை எளிய பயன்கள்.

 ஆயும்  = ஆராயும். படிக்கும் என்று சொல்லவில்லை.  யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படித்து விடலாம்.  அதை ஆராய வேண்டும்.  படிப்பதற்கு எல்லாம் மண்டைய ஆட்டுவது ஆராய்ச்சி இல்லை. படித்தவற்றை, கேட்டவற்றை ஆராய வேண்டும். சரி தப்பு, நல்லது, கெட்டது என்று பகுத்து உணர வேண்டும்.

அறிவினார் = ஆய்வு செய்யும் அறிவு உடையவர்கள்

சொல்லார் = சொல்ல மாட்டார்கள்

பெரும்பயன் = பெரிய பயன்

இல்லாத சொல் = இல்லாத சொற்களை

டிவியில் வரும் தொகுப்பாளர்கள் அப்படிப்பட்ட அரும் பயன் ஆராயும் அறிவு உள்ளவர்களா என்று அறிந்து கொண்டு , அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

யாரிடமாவது ஏதாவது கேட்க வேண்டும் என்றால், அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு  பின் அவர்களிடம் கேளுங்கள்.

உங்களுக்கு பெரிய பயன் கிடைக்கும்.

நாளையில் இருந்து அப்படிச் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எந்த ஒரு சொல்லுக்கும்  மூன்றுக்கு வேலை உண்டு.

நாம் பொதுவாக முதல் படியிலேயே நின்று விடுகிறோம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால், இரண்டாம் படிக்கு போவோம்

மூன்றாம் படி மிக உயர்ந்த படி. மிக மிக குறைந்த பேர்களே அந்த எல்லையைத் தொடுகிறார்கள்.

அது என்ன மூன்று படி என்று இப்போதே சொல்லி விடலாம்...பிளாக் நீண்டு விட்டால்  "ரொரம்ப பெரிசா இருக்கு...அப்புறம் படிக்கலாம் " என்று மூடி வைத்து விட்டேன்  என்று சிலர் சொல்லக் கூடும் என்பதால் அது  பற்றி பின்னொரு பிளாகில் சிந்திக்கலாம்தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_38.html


1 comment:

  1. இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete