Wednesday, September 11, 2019

திருக்குறள் - பொறுமை - அகழ்வாரை

திருக்குறள் - பொறுமை - அகழ்வாரை 


முந்தைய சில நாட்களில், பயனில் சொல்லாமை பற்றி சிந்தித்தோம்.

அடுத்தது பொறுமை பற்றி வள்ளுவப் பேராசான் என்ன கூறுகிறார் என்று சிந்திப்போம்.

பொறுமை என்ற குணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு.

யாரிடமும், யாருக்கும் பொறுமை இல்லை.

கணவன் மனைவி உறவில் பொறுமை இல்லை. வார்த்தைகள் வந்து விழுகிறது. கோபம் தெறிக்கிறது. உறவில் விரிசல் ஏற்படுகிறது.

பெற்றோர் பிள்ளைகள் உறவில் பொறுமை இல்லை. சகிப்பு தன்மை இல்லை.

தெருவில் வண்டி ஒட்டிக் கொண்டு போகிறவர்கள் மீது கோபம். பொறுமை இல்லாமல் வண்டி ஒட்டுகிறோம்.

பொறுமை என்பது தலையாய குணம் என்கிறார் வள்ளுவர்.

நமக்கு கெடுதல் செய்தவர்கள், நம்மைப் பற்றி தவறாக சொன்னவர்கள் மீது பொறுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.

பாடல்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொருள்


அகழ்வாரைத் = தோண்டுபவரை, பள்ளம் பறிப்பவர்களை

தாங்கும் = தாங்குகின்ற

நிலம்போலத் = நிலத்தைப் போல

தம்மை = தம்மை

இகழ்வார்ப் = இகழ்பவர்களை

பொறுத்தல் = பொறுத்துக் கொள்ளுதல்

தலை = தலை சிறந்த அறம்


"நான் அவனுக்கு எவ்வளவோ செய்தேன், எனக்கு எதிராக, என்னைப் பற்றி இழிவாக பேசிவிட்டானே " என்று குமுறுபவர்கள் ஒரு வகை.

"என் உப்பை தின்றுவிட்டு எனக்கு துரோகம் செய்து விட்டானே" என்று வருந்துதல் இன்னொரு வகை.

ஒன்று சொல், இன்னொன்று செயல்.

வள்ளுவர் இரண்டையும் எப்படி சேர்கிறார் என்று பாருங்கள்.

"இகழ்வார் பொறுத்தல்" என்ற போது இகழ்ச்சியாக பேசியதை குறிப்பிடுகிறார்.

"அகழ்வாரை தாங்கும் நிலம் போல " என்று சொல்லும் போது தவறான செயல்களை செய்வதை குறிப்பிடுகிறார்.

நிலமானது நமக்கு இருக்க இடம், நாம் உண்ண காய் கனிகள் வளர தோட்டம், என்று எல்லாம் தருகிறது.

அதை கடப்பாரை கொண்டு குத்தினாலோ, மண்வெட்டி கொண்டு வெட்டினாலோ, குண்டு வைத்து தகர்த்தாலோ, அப்படி செய்பவர்களைக் கூட அது தண்டிப்பதில்லை. மாறாக அவர்களை தாங்குகிறது.

நம்மை பற்றி தவறாக , இழிவாக பேசுபவர்களை, செய்பவர்களை பொறுத்தால் மட்டும் போதாது  அவர்களுக்கு தீங்கு வராமல் தாங்க வேண்டும்.  தீங்கு செய்பவர்களை தாங்கும் நிலம் போல.



தன்னை காட்டுக்கு அனுப்பிய கைகேயியை மன்னித்து விடும்படி தயரதனிடம் , இராமன் வேண்டினான்.

அது பொறுமை.

அந்த அளவுக்கு நம்மால் போக முடியாவிட்டாலும்,  பொறுமை பற்றி சிந்தியுங்கள்.

எதற்கும் உடனடியாக சுவற்றில் எறிந்த பந்து போல பதில் சொல்ல முயலாதீர்கள்.  ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு ஒன்று சொன்னால், அதற்கு பதில் மேலும் உணர்ச்சியை காட்டுவது அல்ல.

பொறுமையை கடை பிடியுங்கள்.

இதுவரை எப்படியோ. இன்றில் இருந்து பொறுமையாக இருக்கப் பழகுங்கள்.
தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

இதெல்லலம் நம்மால் முடியாது என்ற பழைய பல்லவியையே பாடாமல், பொறுமை பற்றி மேலும் சிந்தியுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_11.html

No comments:

Post a Comment