Thursday, September 12, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மருவு நெஞ்சே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மருவு நெஞ்சே 


நமக்கு உறவுகள் மேல் ஒரு பிடித்தம் உண்டு. தாய், தந்தை, தமக்கை, தமையன், நண்பர், உற்றார், உறவு என்று பெரிய கூட்டமே வைத்து இருக்கிறோம்.

இதில் யாருக்காவது ஏதாவது என்றால் நமக்கு துன்பமாக இருக்கிறது.

"என் தாய்/தந்தை இறந்த துக்கத்தை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உண்டு.

தமிழில் உள்ள வார்த்தைகளை உற்று நோக்கினால் ஒன்று தெரியும்.

தந்தையார், தாயார், தமக்கையார், தமையனார் என்ற சொற்களை உற்று நோக்குங்கள்.

தந்தை + யார்

தாய் + யார்

தமக்கை + யார்

தமையன் + யார்

என்று ஒரு கேள்வி அதில் தொக்கி நிற்கும்.

இந்த உடலுக்கு இவர் தந்தை, தாய், தமையன், தமக்கை...அவ்வளவுதான்.

இதற்கு முன் எத்தனை உடலோ? எத்தனை தாயோ, எத்தனை தந்தையோ...

யாரை தந்தை என்று சொல்லுவது ? யாரை தாய் என்று சொல்லுவது?

முப்பது நாப்பது வருட தொடர்பு...அவ்வளவுதான்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,

வாழ்வில் ஒரு கட்டம் வரும். இந்த தந்தை, தாய், சுற்றம் எல்லாம் வியர்த்தம் என்று நொந்து கொள்ளும் நாளும் வரும். இந்த பந்தங்கள் பெரிய சுமை என்று மனதில் தோன்றும். அப்படித் தோன்றும் பொழுது, இந்த உலகில் எனக்கென்று யார் இருக்கிறார்கள் என்ற ஆயாசம் தோன்றும். ஒரு மாபெரும் தனிமை தோன்றும். அப்போதாவது, வல்லை வாழ் அந்தப் பெருமாளின் பெயரைச் சொல்ல இசைவாய் நெஞ்சே என்று தன் மனத்திடம் கூறுகிறார்.

பாடல்

தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற 
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ  பழியெனக் கருதி னாயேல் 
அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய 
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா  வல்லையாய் மருவு நெஞ்சே


பொருள்


தந்தை = தந்தை

தாய் = தாய்

மக்களே = பிள்ளைகள்

சுற்றம் = சுற்றம்

மென் = என்

உறுற்றுவர் = உறவினர்

பற்றி நின்ற  = என்று இந்த பந்த பாசங்களை பற்றி நின்று

பந்தமார் = பந்தங்கள் நிறைந்த

வாழ்க்கையை = இந்த வாழ்க்கையை

நொந்து = வருந்தி

நீ  = நீ

பழியெனக் கருதி னாயேல்  = பழி, குற்றம் என்று கருதினால்

அந்தமாய் = முடிவாய்

ஆதியாய் = தொடக்கமாக

ஆதிக்கும் ஆதியாய் = தொடக்கத்திற்கு முன்னால் உள்ள தொடக்கமாய்

ஆய னாய = ஆயர் குலத்தில் தோன்றியவனான

மைந்தனார் = மைந்தன்

வல்லவாழ் = திரு வல்லவாழ் என்ற திருப்பதியை

சொல்லும் ஆ  = வாயால் சொல்லினால்

வல்லையாய் = வலிமை உடையவனாவாய்

மருவு நெஞ்சே = ஏற்றுக் கொள் நெஞ்சே. ஒன்றாகிவிடு நெஞ்சே

இந்த உறவு பிடிப்பு தளரும். உறவுகளின் உண்மை ஒரு நாள் புரியும்.

எல்லாம் விட்டு தனித்து நிற்பாய்.

அப்போது, உன் சக்தியெலாம் கூட்டி, அவன் பெயரைச் சொல்லு

"பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ  பழியெனக் கருதி னாயேல் "

பந்தம் நிறைந்த வாழ்க்கையை நொந்து, வருந்தி, பழி என்று கருதினாயேல்

உங்களின் உறவுப்  பிடிப்புகளை கொஞ்சம் தளர விடுங்கள்.

நம் வாழ்கை மிக மிக சிறிது காலம்தான்.

அதிலும் இந்த உறவுகள் வருவதும் போவதும் அதிலும் சிறிய காலம் தான்.

20 அல்லது 25 வயதுக்கு மேல் கணவன்/ மனைவி வருகிறார்கள் நம் வாழ்வில்.  எத்தனை நாள் நம்மோடு இருப்பார்களோ. நாம் அவர்களோடு இருப்போமோ?

அப்புறம் பிள்ளைகள் வருகிறார்கள். கொஞ்சம் காலம். அவர்கள் திருமணம் ஆன பின்  பிரிந்து போய் விடுகிறார்கள்.

இந்த உறவுகளுக்கா இத்தனை சிரமம்?

நொந்து கொள்ளும் நாள் வரும் முன் யோசனை செய்யுங்கள்.

வெள்ளம் வந்த பின்பா கரை கட்டுவது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_12.html


1 comment:

  1. அந்த பற்றற்ற நிலை எளிதில் சாமானியர்க்கு வரும் என தோன்றவில்லையே. வாழ்க்கை வழி முறையில் முன்னோர்களுக்காக விதிக்கப் பட்டுள்ள சில நியமங்கள் பந்த பாசங்களை முற்றிலும் மறக்க செய்யவில்லையே. பெரியோர்களுக்கு கிட்டிய அந்த பக்குவம் நமக்கும் வர வேண்டிக்கொள்ளுவதை தவிர வேறு ஒன்றுமில்லை.

    ReplyDelete