Wednesday, September 25, 2019

தேவாரம் - வழி வைத்தார்

தேவாரம் - வழி வைத்தார்


உங்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

உங்களுக்கு கர்ம வினைகளின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

நம் தமிழ் இலக்கியம் கர்மவினையை வெகுவாக நம்பியது என்றே நினைக்கிறேன்.

மனிதர்கள் மட்டும் அல்ல, தெய்வங்களும் இந்த கர்ம வினைக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது அதன் முடிவு.

சிறு வயதில், கோபிகள் குளிக்கும் போது, அவர்களின் ஆடையை திருடி அவர்களை தவிக்க விட்டான் கண்ணன். அவன் ஆற்றில் குளிக்கும் போது அவன் கட்டியிருந்த கீழாடை நீரோடு போய் விட்டது.

அது அவன் செய்த வினை.

வெளியே வர முடியாமல் நின்ற போது பாஞ்சாலி தன் சேலையின் முந்தானையில் ஒரு நீண்ட பாகத்தை கிழித்து அவனிடம் தூக்கி எறிந்தாள்.
பின் ஒரு காலத்தில், பாஞ்சாலிக்கு கோடிக்கணக்கான புடவைகளை கண்ணன் தந்து அவள் மானம் காத்தான்.

அது அவள் செய்த வினைப் பயன்.

ஒரு முறை, பிரமன் ஏதோ தவறு செய்ய, அவனின் ஒரு  தலையை சிவன் கிள்ளி எடுத்து விட்டார்.  அந்தத் தலை சிவனின் கையோடு ஒட்டிக் கொண்டது. என்ன செய்தும் கையில் இருந்து அந்த மண்டை ஓடு நீங்கவில்லை.  சிவன் செய்த வினைக்கு பரிகாரம், அவர் அந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து  உண்டால் தான் போகும் என்பது.

வினை யாரையும் விடாது.

கடவுள்கள் பாடே அப்படி என்றால்....

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அந்த ஊருக்குப் போகும் வழிப் படம் (map ) வேண்டும் அல்லவா. எப்படி போவது, எங்கே திரும்புவது, [போகிற வழியில் என்ன என்ன ஊர்கள் வரும் என்றெல்லாம் தெரிந்து இருப்பது நல்லது அல்லவா?

சொர்கத்துக்கு எப்படி போவது? வழிப் படம் இருக்கிறதா ? முன்ன பின்ன போனதும் கிடையாது. போய் வந்தவர்களிடம் கேட்கலாம் என்றால் அப்படி யாரும் இருப்பதாய் தெரியவில்லை.

பின் எப்படி போவது?

வழிப்படம் இருக்கிறது என்கிறார் திருநாவுக்கரசர். அந்த மேப்பை வைத்துக் கொண்டு  அதே வழியில் நாம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்



ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
    வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
    தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
    வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே


பொருள்

ஊனுடுத்தி  = ஆடை உடுத்துவோம். அது போல, இந்த உடம்பு சதையை உடுத்தி இருக்கிறதாம்.

யொன்பது வாசல் வைத்து = ஒன்பது வாசல் வைத்து

வொள்ளெலும்பு தூணா  = வெள்ளை எலும்புகளை தூண் போல வைத்து

வுரோமம் மேய்ந்து = அதற்கு மேல் கூரையாக முடியை வைத்து

தாமெடுத்த  கூரை = அவர் தாமே எடுத்த கூரை வீடு

தவிரப் = நீங்கும்படி ஆகும் சமயத்தில்

போவார் =  தானே வலிந்து போவார்

தயக்கம் பலபடைத்தார் = மயங்கும் படி பல வடிவில் வருவார்

தாமரையினார் = தாவுகின்ற மானை (தா+ மரை ) கையில் கொண்டவர் (சிவன்)


கானெடுத்து = கானகத்தில்

மாமயில்கள் = பெரிய மயில்கள்

ஆலுஞ் சோலைக்  = ஆடும் சோலை

கழிப்பாலை = கழிப்பாலை என்ற ஊரில்

மேய = உள்ள

கபாலப்பனார் = கையில் கபலாத்தைக் கொண்டவர் (மேலே உள்ள கதையைப் படிக்கவும்)

வானிடத்தை = வான் இடத்தில்

ஊடறுத்து = ஊடே அறுத்து

வல்லைச் செல்லும் = விரைந்து செல்லும்

வழிவைத்தார்க் = வழி வைத்தார்

கவ்வழியே போதும் நாமே = அந்த வழியாக நாம் போவோம்



அவன் இருக்கும் இடத்துக்கு செல்லும் வழியை அவன் அமைத்துக் கொடுத்து இருக்கிறான். அந்த வழியில் போனால், சீக்கிரத்தில் அவனை அடையலாம்.

அந்த வழி பற்றி திருப்பாலை தலத்து இறைவன் மேல் நாவுக்கரசர் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

வேறென்ன சொல்லப் போகிறேன், முடிந்தால், மூலத்தை தேடிப் படியுங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும் பாடல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_25.html

1 comment:

  1. நீங்கள் பாட்டுக்கு தினம் ஒரு பாடல் பல இடங்களிலிருந்து எடுத்து அழகாக விளக்கி எங்கள் ஆவலை தூண்டி விடுவதோடு அல்லாமல்,நீங்களே மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என சுலபமாக கூறி விடுகிறீர்கள். நாங்கள் படித்தாலும் இவ்வளவு எளிதில் புரியுமா

    ReplyDelete