Friday, September 20, 2019

திருக்குறள் - பொறுமை - ஒருநாளை இன்பம்

திருக்குறள் - பொறுமை - ஒருநாளை இன்பம் 


இன்பமாக வாழ்வதுதானே வாழ்வின் குறிக்கோள்.

இனிப்பு உண்பது இன்பமா? துன்பமா?

இன்பம்தான். இலட்டு , அல்வா, ஐஸ் கிரீம், ஜிலேபி, எல்லாம் சாப்பிட்டால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

தினமும் சாப்பிட்டால் என்ன? இன்பம்தானே ? மகிழ்ச்சிதானே ?

செய்ய மாட்டோம். ஏன் என்றால், அது உண்ணும் போது இன்பம் தந்தாலும், பின்னால் பெரிய துயரைத் தரும். சர்க்கரை வியாதி வரும். உடல் பருமன் கூடும். இல்லாத நோய் எல்லாம் வந்து சேரும்.

எனவே,

உடனடி இன்பத்தை விட, நீண்ட நாள் இன்பம்தான் முக்கியம் என்று நமக்குத் தெரிவதால், அவற்றை நாம் முடிந்தவரை தவிர்க்கிறோம்.

அதே போல், ஓடுவது, பளு தூக்குவது, மாடி ஏறுவது போன்றவை கடினமான செயல்தான். எதுக்கு மூச்சு வாங்க நாலு மாடி ஏறனும் ? மின் தூக்கி (லிப்ட்) இருக்கிறதே என்று அதில் போகலாம்.

உடற் பயிற்சி செய்தால், அப்போது துன்பம் போலத்  தெரிந்தாலும், பின்னால் அது நல்லது செய்யும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். முட்டு , தசை எல்லாம் வலிமையாக இருக்கும்.

எனவே,

உடனடி துன்பம் என்றாலும், நீண்ட நாள் இன்பம் என்றால் அதை நாம் செய்கிறோம். செய்ய விரும்புகிறோம்.

ஒருவன் நமக்கு தீங்கு செய்தால், அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்தால் அது அப்போதைக்கு இன்பம்.  பதிலுக்கு பதில் திட்டி விடலாம், முடிந்தால் அடிக்கவும் செய்யலாம்,  இல்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு  பேசாமல் நாலு நாள் இருக்கலாம்...

அப்படி செய்தால், நமக்கு உடனடி இன்பம் கிடைக்கும். அது நீண்ட நாள் இன்பமா?

அந்த உறவு நிலைக்குமா? அன்பு ஆழமாகுமா? நாம் அவவனுக்கு தீங்கு செய்தால் அவன் நமக்கு  அதை விட பெரிய தீங்கு செய்ய மாட்டானா? இது எங்கு போய் முடியும்?

மாறாக, தீங்கு செய்தவனை மன்னித்து பொறுத்துக் கொண்டால் ?

வள்ளுவர் சொல்லுகிறார்,

"நமக்கு தீங்குக்கு செய்தவனுக்கு பதிலுக்கு நாம் தீங்கு செய்தால், அது அந்த ஒரு நாளைக்கு இன்பம். மாறாக, அந்த தீமையை பொறுத்துக் கொண்டால், இறுதி வரை புகழ் நிலைக்கும்" என்று

பாடல்


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்


பொருள்

ஒறுத்தார்க்கு = தண்டித்தவர்க்கு

ஒருநாளை  = ஒரு நாள்

இன்பம்  = இன்பம்

பொறுத்தார்க்குப் = பொறுத்துக் கொண்டவர்களுக்கு

பொன்றும் = இறுதி வரை

துணையும் = துணையாக நிற்கும்

புகழ் = புகழ்

"இறுதி வரை" என்றால் எதன் இறுதி?

அவனுடைய வாழ் நாள் வரை, இந்த உலகத்தின் இறுதி வரை என்று கூட சொல்லலாம். பொறுமையை கடை பிடித்த மகான்களின் புகழ் அவர்கள் வாழ்நாள் தாண்டியும்  நிலைத்து நிற்கிறது அல்லவா?

தண்டித்தவர்களுக்கு ஒரு நாளுக்கு இன்பம்.

பொறுத்தவர்களுக்கு இறுதி வரை இன்பம் என்று சொல்லவில்லை. இறுதி வரை புகழ்  என்கிறார்.  பெருமை, உயர்வு.

ரொம்ப இல்லாவிட்டாலும்,

கணவன் மனைவி, பிள்ளைகளிடம், நண்பர்களிடம், மருமகளிடம், என்று வீட்டில் நெருங்கிய  உறவில் இருந்து இந்த பொறுமையை ஆரம்பிக்கலாமே?

முடிந்தால் பின்னால் விரிவு பண்ணிக் கொள்ளலாம்.

இது நடை முறை சாத்தியம் தானே? சாதாரண மனுஷன், மனுஷி செய்யக் கூடிய  செயல் தானே?

முயன்று பாருங்கள். நல்லதே நடக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_20.html


1 comment: