Saturday, February 22, 2020

ஆத்திச்சூடி - அழகு

ஆத்திச்சூடி - அழகு 

ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம். போகும் போது மணமக்களுக்கு ஏதோ ஒரு பரிசு வாங்கிக் கொண்டு போகிறோம். அந்த பரிசுப் பொருளை அப்படியேவா கொடுக்கிறோம்? அதை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து, அழகான காகிதத்தில் சுத்தி, அதற்கு மேல் ஒரு வண்ணை ரிப்பன் வைத்து கட்டி, ஒரு சிறு கார்டில் நம் பேரை எழுதித்தானே தருகிறோம். 

எப்படியும், அதை எல்லாம் கிழித்து குப்பையில் போடப் போகிறார்கள். பின் எதற்கு வேலை மெனக்கெட்டு இவ்வளவு வேலை?

இரவு, வேலை எல்லாம் முடிந்து படுக்கப் போகிறோம். படுக்கை அழகாக விரித்து, தலையணை எல்லாம் ஒழுங்காக வைத்து, அறை சுத்தமாக இருந்தால், மனதுக்கு ஒரு சுகம் இருக்கும் இல்லையா. அதை விட்டு விட்டு, கசங்கிய படுக்கை விரிப்பு, அழுக்கான தலையணை உறை, படுக்கை மேல் ஓரிரண்டு புத்தகங்கள், ஒரு உணவு உண்ட தட்டு என்று இருந்தால் படுக்க மனம் வருமா?

அலுவலகத்தில் ஒரு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ரிப்போர்ட் தயார். அதை அப்படியே அனுப்புவதை விட, அதில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை எல்லாம் சரி பார்த்து, எழுத்தின் அளவு (font size), எழுத்தின் தன்மை (font ), alignment , எல்லாம் சரி பார்த்து, பத்தி (paragraph ) பிரித்தது சரி தானா, பக்க இலக்கம் போட்டு இருக்கிறோமா (page number ) என்று பார்த்து பின் அனுப்பினால், படிக்கவே ஒரு சுகம் இருக்கும் அல்லவா?

பரீட்சை எழுதினாலும் அப்படி அழகாக எழுத வேண்டும். 

எதைச் செய்தாலும், அதில் ஒரு அழகு இருக்க வேண்டும். 

ஏதோ செய்து விட்டோம் என்று இருக்கக் கூடாது. 

வீடு பெறுக்கினாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். 


“If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.”


― Martin Luther King Jr.


என்று மார்ட்டின் லூதர் கிங் கூறுவார். 

ஒரு கடிதம் எழுதுவது, ஒரு காப்பி போடுவது, உணவு பரிமாறுவது, குளித்து தலை வாரி உடை உடுத்துவது என்று எதிலும் ஒரு அழகு உணர்ச்சி வேண்டும். 

கசங்கிய ஆடையை உடுத்திக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும்?

சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒளவை ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் 

" அழகு அலாதன செய்யேல்"

என்று. 

அழகு இல்லாத ஒன்றை செய்யக் கூடாது. 

அதாவது, எதையும் அழகாகச் செய்ய வேண்டும், இல்லை என்றால் செய்யக் கூடாது. 

எந்த காரியம் செய்து முடித்தாலும், அது அழகாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால், அதற்கு அழகு கூட்டுங்கள். 

Tom Peters என்ற மேலாண்மை (மேனேஜ்மென்ட்) குரு சொல்லுவார்,

"No work is completed until you get an 'Wow' effect" 

என்று. 

எதையும் அழகாகச் செய்து படியுங்கள். 

(ஒண்ணாப்புல படிச்சது, இந்த ஆத்திச் சூடி)


Friday, February 21, 2020

கம்ப இராமாயணம் - அரக்கியர் தோற்றம்

கம்ப இராமாயணம் - அரக்கியர் தோற்றம் 


அறிவு எப்படி வளர்கிறது? அல்லது அறிவை எப்படி வளர்ப்பது?

பல வழிகள் இருந்தாலும், மூன்றை முக்கியமானதாகச் சொல்கிறார்கள்.

காட்சி பிரமாணம் - நேரில் பார்த்து அறிந்து கொள்வது.

அனுமான பிரமாணம் - யூகித்து அறிந்து கொள்வது.  காலையில் சாலை ஈரமாக இருக்கிறது என்றால், இரவு மழை பெய்திருக்கிறது என்று யூகித்து அறிந்து கொள்வது. மலையில் புகை தெரிந்தால், அங்கே நெருப்பு இருக்கிறது என்று யூகித்து அறிவது.

மூன்றாவது, ஆகம பிரமாணம். பெரியவர்கள் சொல்லிப்  போனதை, எழுதி வைத்துப் போனதை உண்மை என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது.

இதில் இரண்டாவது கூறிய அனுமான பிரமாணம் வளர்வதற்கு கற்பனை மிக மிக அவசியம். காணாத ஒன்றை மனதால் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த கற்பனையை எப்படி வளர்த்துக் கொள்வது? எங்காவது சொல்லித் தருகிறார்களா? அல்லது, ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்றால் இல்லை.

இலக்கியங்கள் தான் நம் கற்பனையை வளர்க்க உதவும். இலக்கியத்தைத் தவிர வேறு வழி இல்லை.

சினிமா, நாடகம், கவிதை, கதை, போன்றவற்றில் இருந்து தான் நாம் நம் கற்பனையை  வளர்த்துக் கொள்கிறோம்.

ஆழ்ந்து, இரசித்து படிக்கும் போது, நம் கற்பனை விரியும். மனம் விரியும்.

கண்டதை கொண்டு காணாததை அறியும் பழக்கம் வந்து விட்டால், யார் அறிவார்  ஒரு நாள் கண்ட உலகைக் கொண்டு காணாத இறைவனைக் கூட  அறிய முடியுமோ என்னவோ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.



அசோக வனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அவளை சுற்றி பல அரக்கியர் காவல் இருக்கிறார்கள். அவர்கள் தோற்றம் எப்படி இருக்கிறது என்று கம்பன் காட்டுகிறான்.


பாடல்

வயிற்றிடைவாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றியவிழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்குஇடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள்வெம் பிலன் என, தொட்ட வாயினர்.


பொருள்


வயிற்றிடைவாயினர்;  = வயிற்றின் நடுவில் வாய் இருக்குமாம். வாயில போட்டு, மென்று, தின்று அது வயிற்றுக்குப் போக கொஞ்சம் நேரம் பிடிக்கும். வாய், வயிற்றியிலேயே இருந்தால், வாயில் போட்டவுடன் உடனே வயிற்றுக்கு போய் விடும் அல்லவா.

(கரு உற்றிருக்கும் பெண்ணை வாயும் வயிறுமாய் இருக்கிறாள் என்பார்கள்.  காரணம்,  அவளுடைய வயிற்றில் பிள்ளையின் வாய் இருக்கிறது என்பதால்).

வளைந்த நெற்றியில் = வளைந்த நெற்றியில்

குயிற்றியவிழியினர் = குழி தோண்டி புதைத்து வைத்தது போன்ற விழியினை உடையவர்கள்

கொடிய நோக்கினர்; = பார்வை கொடுமையாக இருக்கும்

எயிற்றினுக்கு = பற்களுக்கு

இடை இடை = இடை இடையே

யானை, யாளி, பேய், = யானை, யாளி, பேய்

துயில் கொள் = படுத்து தூங்கும்

வெம் பிலன் என, = பெரிய குகை (பில ன் என்றால் குகை) [போன்ற

தொட்ட வாயினர். =  பெரிய வாயை உடையவர்கள்

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா ?

இரண்டு பல்லுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் ஒரு யானை படுத்து தூங்கும் என்றால்   எவ்வளவு பெரிய இடைவெளி இருக்க வேண்டும். இடை வெளி அவ்வளவு என்றால், பற்கள் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும். பற்கள் அவ்வளவு பெரிது என்றால், முகம் எவ்வளவு பெரிதாக இருக்கும். அப்படி என்றால் உடம்பு எப்படி இருக்கும்?

கற்பனை செய்ய முடிகிறதா?

யானை நிற்கும் என்று என்று சொல்லவில்லை. நிம்மதியா படுத்து தூங்குமாம். ஒரு தொந்தரவும், நெருக்கடியும் இல்லாமல் , சுகமாக யானை தூங்க வேண்டும் என்றால்  பார்த்துக் கொள்ளுங்கள்.

யானை மட்டும் அல்ல, யாளி என்ற விலங்கும் , பேய்கள் கூட தூங்குமாம்.

அழகான இராமன், சீதை மட்டும் அல்ல, அகோரமான அரக்கியரைக் கூட  கம்பன்  வேலை மெனக்கெட்டு வர்ணனை செய்கிறான்.

இரசித்துப் படிக்க வேண்டும்.

கற்பனை விரிய வேண்டும்.

நிறைய இலக்கியம் படிக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_21.html

Thursday, February 20, 2020

கம்ப இராமாயணம் - அவர் உடம்பு எப்படி இருக்கிறது?

கம்ப இராமாயணம் - அவர் உடம்பு எப்படி இருக்கிறது?


சீதையை அசோகவனத்தில் காண்கிறான் அனுமன். தன்னைப் பற்றி கூறுகிறான். தான் இராமனின் தூதன் என்று அறிவிக்கிறான். முதலில் சந்தேகப் பட்டாலும் பின் சீதை உள்ளம் தெளிந்து அனுமனை இராமனின் தூதன் என்று நம்புகிறாள்.

அடுத்து என்ன சொல்லி இருப்பாள்?

தன்னுடைய துன்பத்தை சொல்லி இருக்கலாம். இராவணன் செய்யும் கொடுமைகளை சொல்லி இருக்கலாம். எப்ப வந்து தன்னை சிறை மீட்பார் என்று கேட்டு இருக்கலாம்.

அதெல்லாம் கேட்கவில்லை.

இராமனின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள்.

தன்னுடைய துன்பம் அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை. கணவன் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள்.

பாடல்


எய்து அவன்உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி  ஓங்க,
'உய்தல் வந்துஉற்றதோ ?' என்று அருவி நீர் ஒழுகு  கண்ணாள்,
'ஐய ! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி ?'  என்றாள்.

பொருள்


எய்து அவன் = தூதாக வந்த அவன் (அனுமன்)

உரைத்தலோடும் = சொன்னவுடன்

எழுந்து = எழுந்து

பேர் உவகை ஏற = பெரிய சந்தோஷத்துடன்

வெய்து உற = துன்பம் உற்றதால்

ஒடுங்கும் மேனி  = மெலிந்த உடம்பு

வான் உற விம்மி = வானம் வரை விம்மி

ஓங்க = பெரிதாக ஆக

'உய்தல் வந்துஉற்றதோ ?' = தான் இதில் இருந்து தப்பிக்கும் வழி வந்து விட்டதோ

என்று = என்று

அருவி நீர் ஒழுகு கண்ணாள், = அருவி போல நீர் வழியும் கண்களைக் கொண்ட சீதை


'ஐய ! சொல், = ஐயனே சொல்

ஐயன் மேனி எப்படிக்கு  = இராமனின் மேனி நலம் எப்படி இருக்கிறது

அறிதி ?' = நீ அறிவாயா . அறிந்தால் சொல்

என்றாள் = என்றாள்


தன் சுயநலத்தை விட, தன் கணவனின் நலத்தை நினைக்கிறாள் சீதை. அதுதான் பெண்மையின் உயர்ந்த குணம்.

தன் இரத்தத்தை பாலாகி பிள்ளைக்கு சந்தோஷமாக தருவாள்.

கணவனுக்காக, பிள்ளைகளுக்காக அவள் எதுவும் செய்வாள்.


தான் பசித்து இருந்தாலும், கணவன் மற்றும் பிள்ளைகள் சாப்பிட வேண்டும் என்று நினைப்பாள்.

"பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் 
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் "

என்று கண்ணதாசன் பாடுவான்.

பால், பழம் எல்லாம் (யாவும்) கணவனுக்கு தந்து விட்டு, அவன் சாப்பிட்ட பின் அவன் முகம் பார்த்து அவள் பசியாறுவாளாம்.

"பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா" என்றான் பாரதி.

பெண்ணை விட பெரியது என்ன இருக்கிறது என்று கேட்டான் வள்ளுவன்.

"பெண்ணின் பெருந்தக்க யாவுள?" என்பது வள்ளுவம்.


நாம் எவற்றைப் படிக்கிறோமோ, அவற்றால் பாதிக்கப் படுகிறோம்.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது, சீதையின் மன நிலை  நமக்குப் புரிகிறது. அது நமக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சீதை அப்படி கணவன் மேல் உயிராக இருந்தாள்.

அதனால், இராமன் தன் உயிரையும் பொருட்படுத்தாது, இராவணன் மேல் படை எடுத்து அவளை காப்பாற்றினான்.

இன்று இந்த மாதிரி விஷயங்களை நாம் படிக்கிறோம்? நம் பிள்ளைகள் படிக்கிறார்கள்?

ஓரினச் சேர்க்கை. ஒரு பாலாருக்குள் திருமணம்.  பெண் விடுதலை. ஆணுக்கு பெண் சமம்.  நாங்கள் ஏன் எங்கள் நலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.

என்பது போன்ற விஷயங்களை படித்துக் கொண்டு இருக்கிறது நம் சமுதாயம்.  அவற்றால் பாதிப்பு கட்டாயம் இருக்கும்.

ஒழுக்கம் என்ற சொல் ஒழுகுதல் என்ற சொல்லில் இருந்து பிறந்ததது.

எப்படி ஒழுகும். மேலிருந்து கீழாக ஒழுகும். கீழ் இருந்து மேலாக அல்ல.

நம்மை விட உயர்ந்தவர்களை பார்த்து, அவர்களை போல நாம் வாழ முயல்வது ஒழுக்கம்.

இன்று வேலை வெட்டி இல்லாத கும்பல்,  மன வக்கிரம் கொண்டவர்களை பார்த்து,  அவர்கள் சொல்வதும் சரிதானே என்று கீழானவர்களை பார்த்து இந்த சமுதாயம்  பாடம்  படிக்க முயல்கிறது.

அவர்கள் செய்வது சரியா , தவறா என்பதல்ல கேள்வி.

அவர்கள் உயர்ந்தவர்களா? சிறந்தவர்களா ? ஒழுக்கம் உள்ளவர்களா? சமுதாய அக்கறை உள்ளவர்களா? குறிப்பாக உங்களை விட உயர்ந்தவர்களா என்று   பாருங்கள்.

உங்களை விட உயர்ந்தவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து நீங்கள் என்ன படித்து விட முடியும்.

எந்த விஷயத்தைக் கேட்டாலும், சொல்பவர் யார் என்று பாருங்கள்.

வியாசர், கம்பர், வள்ளுவர்,  நாயன்மார், ஆழ்வார் போன்றவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள ஏராளமாக இருக்கிறது.

whatsapp ஐ விட்டு வெளியே வாருங்கள்.

இலக்கியங்கள், உயர்ந்தவர்களை இனம் காட்டும்.

நேற்று தர்மரைப் பற்றி சிந்தித்தோம். இன்று சீதை.

உயர்ந்த விஷயங்களை மனதுக்குள் தெளிக்க வேண்டும்.

அவை பின் வளர்ந்து நல்ல பலன் தரும்.

விதைப்பது தானே முளைக்கும்.

நல்லவற்றை விதையுங்கள். நல்லதே விளையும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_20.html

Tuesday, February 18, 2020

வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வேம்

வில்லி பாரதம் - இரு திறத்தேமும்  சென்று மாள்வேம்


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கும். அந்த குணங்களை நாம் பெரும்பாலான சமயங்களில் கடை பிடிப்போம். அது அல்ல சாமர்த்தியம். அந்த நல்ல பண்புகளுக்கு ஒரு சோதனை நேரும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது தான் கேள்வி.

இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பது நம் கொள்ககையாக இருக்கலாம். நமக்கு என்று ஒரு அவசரம் வரும் போது நாம் இலஞ்சம் கொடுக்காமல் இருப்போமா என்பது தான் கேள்வி.

பிள்ளைக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் வேண்டும். போதுமான மதிப்பெண்கள் இல்லை. பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும். கொடுப்போமா, மாட்டோமா?

பொறுமை நல்லது. கோபம் கெட்டது. நமக்கு இது தெரியும். இருந்தும், நமக்கு தீங்கு செய்தவர்கள் மேல் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்போமா? மனது அளவிலாவது அவர்களுக்கு தீங்கு வர வேண்டும் என்று நினைக்க மாட்டோமா?

தர்மன்.

இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு ஒரு கதா பாத்திரம்.

சூதில் தோற்று, மனைவியை, அரச சபையில் துகில் உரிந்தவனை, தன்னையும் தன்   தம்பிகளையும் பதினான்கு வருடம் காட்டுக்கு அனுப்பியவன் மேல் யாருக்காவது கோபம் வராமல் இருக்குமா?

சொல்லியபடி நாட்டை தர மறுக்கிறான் துரியோதனன்.

பஞ்ச பாண்டவர்களிடம் , கண்ணன் கேட்கிறான், "நான் தூது போகிறேன். துரியோதனனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்" என்று.

தர்மன் சொல்கிறான்

"காட்டிலே மூங்கில் காடுகள் இருக்கும். அதில் உள்ள மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பிடித்துக் கொள்ளும். அப்படி பிடித்த தீ, அந்த இரண்டு மூங்கில்களை மட்டும் அல்ல, அந்த காட்டையே எரித்து அழித்து விடும். அது போல, எங்களுக்குள் யுத்தம் வந்தால், இரண்டு பக்கத்து மக்களும் அழிவோம். எனவே சண்டை வேண்டாம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வழி தேடு"  என்று.

பாடல்

வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர்
                                வரைக்காடென்னச்,
செயிரமரில் வெகுளிபொரச் சேரவிருதிறத்தேமுஞ்
                            சென்றுமாள்வேம்,
கயிரவமுந்தாமரையுங் கமழ்பழனக்குரு நாட்டிற்கலந்துவாழ,
வுயிரனையாய் சந்துபடவுரைத்தருளென்றானறத்தினுருவம்
                                 போல்வான்.

பொருள்


வயிரமெனுங் = வயிரம் போன்று

கடு நெருப்பை = கொடிய நெருப்பை

மிக மூட்டி = அதிகமாக மூட்டி

வளர்க்கினுயர் = வளர்கின் உயர் = வளர்த்தால் உயர்ந்த

வரைக் = மலை போல் பெரிய

காடென்னச் = காடு போல

செயிரமரில் = வரும் போரில்

வெகுளிபொரச் = கோபம் போங்க

சேர = ஒன்றாக

விருதிறத்தேமுஞ் = இரு திறத்தில் உள்ளவர்களும்

சென்று மாள்வேம், = சென்று இறப்போம்

கயிரவமும் = ஆம்பல் மலர்களும்

தாமரையுங்  = தாமரை மலர்களும்

கமழ் = மலர்ந்து  மணம் வீசும்

பழனக் = பழைய,

குரு நாட்டிற் = குரு நாட்டில்

கலந்துவாழ, = நாங்கள் எல்லோரும் கலந்து வாழ

வுயிரனையாய்  = எங்கள் உயிர் போன்றவனே

சந்துபட = சமாதானத்துடன் வாழ

வுரைத்தருளென்றான = உரைத்து அருள் என்றான்

அறத்தினுருவம் = அறத்தின் உருவம்

போல்வான். = போன்றவன்

எங்களுக்குள் சண்டை வந்தால் நாங்கள் மட்டும் அல்ல, எங்களை சேர்ந்தவர்களும் அழிவார்கள். மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப் பிடித்தால், அந்த மரங்கள் மட்டும் அல்ல, அவை சேர்ந்த காடும் அழியும். அது போல.

இரவில் மலர்வது ஆம்பல்.

பகலில் மலர்வது தாமரை.

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண் பட்ட மலர்கள் ஒன்றாக இருக்கும் நாட்டில், மனிதர்களாகிய  நாங்கள் ஒன்றாக இருக்க முடியாதா. எனவே, நாங்கள் ஒன்றாக வாழ வழி பார் என்றான்.

கௌரவர்கள் செய்தது சின்ன கொடுமை அல்ல. எங்களுடைய கோபத்தால், எத்தனையோ பேர்  அழிந்து போவார்கள். அவர்கள் பக்கம் மட்டும் அல்ல, எங்கள் பக்கத்திலும்  அழிவு இருக்கும். எனவே, போர் வேண்டாம் என்கிறான்.

கோபம் யார் மேல் வருகிறதோ, அது அவர்களை அழிக்கிறதோ இல்லையோ, கோபம் கொண்டவர்களை  கட்டாயம் அழிக்கும்.

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் எனும் எமப் புணையைச் சுடும்

என்பார் வள்ளுவர்.

சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. யாரிடம் இருக்கிறதோ, அவர்களைக் கொல்லும்.

இன்று உலக அரங்கில் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன. நாடுகள் ஒன்றோடு ஒன்று   மோதிக் கொண்டு இருக்கின்றன.

சமாதானம் என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.

பாரதம் போன்ற நீதி நூல்கள் நம் சிந்தனையை பக்குவப் படுத்த உதவும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_18.html

Saturday, February 15, 2020

திருக்குறள் - பழியஞ்சிப் பாத்தூண்

திருக்குறள்  - பழியஞ்சிப் பாத்தூண்


திருமணம் செய்து கொள்வது பதினோரு கடமைகளை செய்வதற்காக என்று பார்த்தோம்.

பதினோரு பேருக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வளவுதானே. செஞ்சுட்டாப் போகுது என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து எல்லோருக்கும் உதவி செய்து விட்டால் போகுது என்று சிலர் நினைக்கலாம். அப்படி யாராவது நினைத்தால் என்ன செய்வது என்று யோசித்து, அதற்கும் ஒரு குறள் எழுதி இருக்கிறார்.

பாடல்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

பொருள்

பழியஞ்சிப்  = பழிக்கு அஞ்சி

பாத்தூண் = பகுத்து ஊண் (உணவு)

உடைத்தாயின் = உள்ளது என்றால்

வாழ்க்கை = வாழ்க்கை

வழியெஞ்சல் = வழி முடிதல்

எஞ்ஞான்றும் இல் = எப்போதும் இல்லை

பழிக்கு அஞ்சி பொருள் சேர்க்க வேண்டும்.

சட்டத்துக்கு அஞ்சி, தர்மத்துக்கு அஞ்சி என்று சொல்லவில்லை. பழிக்கு அஞ்ச வேண்டும்.

ஊருக்குள் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் எவ்வளவோ தவறுகள் செய்கிறார்கள்.  சட்டத்தால் அவர்களை தொட முடிவதில்லை. சாட்சி இல்லை, திறமையான வக்கீல்,  சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சாட்சிகளை விலைக்கு  வாங்குவது அல்லது மிரட்டுவது என்று பல வழிகளில்  சட்டத்தின் பிடியில் இருந்து  தப்பி விடுகிறார்கள்.

ஆனால், ஊராரின் பழி சொல்லுக்கு தப்ப முடியாது. அந்த பழிக்கு பயந்து  நேர்மையான வழியில் பொருள்  சேர்க்க வேண்டும்.

அப்படி சேர்த்த பொருளை,

பாத்தூண் = பகுத்து உண்ண வேண்டும்.

முதலில் கூறிய  பதினோரு பேருடன் பகுத்து உண்ண வேண்டும்.

அப்படி செய்தால் என்ன கிடைக்கும்?

அப்படி செய்தால் ஒருவன் செல்லும் வழி எப்போதும் முடிவு அடையாது.

அது என்ன வழி முடிவு அடையாது?

அற வழியில் பொருள் சேர்த்து அதை எல்லோருடனும் சேர்ந்து உண்பவனுக்கு  பகைவராலோ, அல்லது மற்ற யார் மூலமாவதோ தடை வந்து சேராது. அவன் தன் வழியில் சென்று கொண்டே இருக்கலாம். ஒரு பயமும் இல்லாமல் , தடை வந்து விடுமோ என்ற பயம் இல்லமால் செல்லலாம்.

இன்னொரு பொருள்,  அவன் வழியை பின் பற்றி அவன் சந்ததியினரும் மற்றவர்களும் நடப்பார்கள்.  எனவே, அவனுக்குப் பின்னும், அவன் சென்ற நல்வழி  தொடர்ந்து நடக்கும்.

மற்றும் ஒரு பொருள், வழி என்பதற்கு வம்சா வழி என்று ஒரு பொருளும் உண்டு. அதாவது, அவன் சந்ததி செழித்து நிற்கும். இப்ப கூட, ஏதாவது ஆபத்தில் இருந்து நாம்  தப்பினால் "எதோ உன் முன்னோர் செய்த புண்ணியம், அவங்க செய்த தான தர்மம் உன்னை இன்னிக்கு காப்பாத்தியது"  என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?

அற வழியில் பொருள் சேர்த்து பகுத்து உண்டால், அது நம் சந்ததியினரை காக்கும்.

இது என்ன பெரிய அக்கிரமமா இருக்கே. கல்யாணம் பண்ணி மனைவி பிள்ளைகளோடு சந்தோஷமா இருக்கலாம் என்றால், இந்த வள்ளுவர் ஊரில் உள்ளவருக்கெல்லாம்  உதவி செய் , அதற்குத்தான் கல்யாணம் என்கிறார். அப்படி எல்லாம் இருக்க முடியுமா ?  நடக்கிற காரியமா? இதுக்கா திருமணம் செய்வது?

அவசரப் படாமல், வள்ளுவர் மேலும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_15.html



Wednesday, February 12, 2020

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


"கொடுங் கூற்றுக்கு இரையாகி மாள்வேன் என்று நினைத்தாயோ" என்று இடுப்பில் கை வைத்து காளியிடம் பார்தி கேள்வி கேட்கிறான் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

காளி கேட்டிருப்பாள்..."உனக்கு எப்படித் தெரியும் நீயும் அப்படி ஒரு வேடிக்கை மனிதராய் மாறமாட்டாய் " என்று?

பாரதி: எனக்குத் தெரியும் ஏன் என்றால், நான் உன்னிடம் சில வரங்கள் கேட்பேன். அவற்றை நீ எனக்குத் தருவாய். அதன் மூலம் நான் மற்ற மனிதர்களை போல ஆக மாட்டேன்

காளி : அப்படி என்ன வரங்கள் கேட்கப் போகிறாய்?

பாடல்

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

எளிய பாடல். எனவே அருஞ்சொற் பொருள் எழுதவில்லை.

இந்து மதம் மூன்று விதமான கர்மங்களைப் பற்றி பேசுகிறது.


முன் பிறவியில் செய்து, அப்போது தீர்க்காமல் தொடர்ந்து வருவது.  இதை சஞ்சித கர்மம் என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிறவியில் செயல்படத் தொடங்கும் வினைகள். இதற்கு பிராரப்த கர்மம் என்று பெயர்.

இந்த இரண்டும் சேர்ந்து, இந்தப் பிறவியில் கழிக்காமல் அடுத்த பிறவிக்கு கொண்டு செல்வது. இதற்கு ஆகாமிய கர்மம் என்று பெயர்.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான்" என்பார் மணிவாசகர்.


சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி 

என்பது சிவபுராணம்.




இந்தப் பிறவியில் கர்மம் செய்யாமல் இருந்து விடலாம். முன்பு செய்த பழிக்கு என்ன செய்வது?

"முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோள்களும்" என்பார் அருணகிரி.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே



நமக்கு தெரியக் கூடத் தெரியாது.

எனவே பாரதி முதலில் அதை வேண்டுகிறான்


"என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -"

இனியும் அது தொடர கூடாது என்று.



"இனி என்னைப் புதிய உயிராக்கி "


எப்போதும் பழமையிலேயே கிடந்து உழல்கிறோம். பழைய பஞ்சாங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். வேதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது,  புராணத்தில் இப்படி சொல்லி இருக்கிறது என்று இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

பாரதி சொல்கிறான்,  "என்னை உயிராக ஆக்கி" என்று.

அடுத்தது,

" எனக்கேதுங் கவலையறச் செய்து -"


கவலை அறவே இல்லாமல் செய்து விடு என்கிறான்.

கவலை இல்லாமல் எப்படி இருப்பது?


"மதிதன்னை மிகத் தெளிவு செய்து -"

அறிவு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் அனைத்து கவலைகளுக்கும் காரணம். குழப்பமே எல்லா கவலைகளுக்கும் காரணம். மதி தெளிவாகிவிட்டால்  கவலை தீர்ந்து விடும்.


என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

கவலை போனால் மட்டும் போதாது. அதோடு சேர்ந்து சந்தோஷமும் போய் விட்டால்  என்ன செய்வது? 

என்னவே, கவலை போகட்டும், சந்தோஷம் இருக்கட்டும் என்று வேண்டுகிறான். 

ஆண்டவனிடம் இப்படி அதிகாரமாக கேட்கலாமா?  ஒரு பணிவு வேண்டாம்? 
பக்தி வேண்டாம்?

பாரதியைப் போல ஆண்டவனிடம் அதட்டிக் கேட்டது யாராவது உண்டா ? 

நாளை சிந்திப்போம் அது பற்றி.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_12.html

Tuesday, February 11, 2020

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள்

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள் 


நாம் பல பாடல்களை முதல் சில வரிகளை படித்து இருப்போம். அதுவே முழுப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அல்ல. முழுப் பாடலும் படிக்கும் போது ' அட ! இந்தப் பாடலுக்குப் பின் இவ்வளவு இருக்கிறதா' என்று ஆச்சரியம் வரும்.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ள பாடல்.

பாடல்

தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

தனித்த்தனியே பொருள் சொல்லத் தேவை இல்லை. மிக எளிதான பாடல்தான்.

இது ஒரு பக்திப் பாடல் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

'நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?' என்று யாரிடம் சவால் விடுகிறான் பாரதி தெரியுமா?

காளியிடம்.

மற்ற மனிதர்களை போல  நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ  என்று காளியிடம் கேள்வி  கேட்க்கிறான் பாரதி.

இந்தப் பாடலின் பிற் பகுதியைப் படித்தால் அது புரியும். அது நாளை வரும்.

வேடிக்கை மனிதர்கள் என்று பாரதி சொல்வது யாரை?

ஒரு வேளை நம்மைத்தானோ?

என்ன செய்தோம் இதுவரை ?

தினம் உணவு உண்டோம்.

"தேடிச் சோறுநிதந் தின்று -"

அந்த சோறு தின்பதற்காக, ஒரு இருப்பது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள் படித்தோம். வேலைக்குப் போனோம். சம்பாதித்து உணவு உண்கிறோம். அது தானே முதல். வீடு, கார் எல்லாம் அப்புறம் தானே. சோறு திங்க வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழிக்கிறோம்.

சரி.

அப்புறம் என்ன சாதித்தோம்?

"பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -"

பெரிதாக ஏதாவது சிந்திக்கிறோமா?  உலகை மாற்றும் படி, பெரிய கண்டு பிடிப்பு ஏதாவது செய்ய சிந்திக்கிறோமா? Whatsapp , faceboook , என்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் இந்த வெட்டிக் கதைப் பேசுவதில் போக்குகிறோம்.

சரி நல்லா சாப்பிட்டாச்சு, வாட்சப்பில் foward பண்ணுவதும், வந்த forward களை படிப்பதுமாக   நாள் ஓடுகிறது.

அப்புறம் என்ன செய்கிறோம்?

" மனம் வாடித் துன்பமிக உழன்று -"

நிச்சயம் செய்கிறோம். கவலைப் படாத நாள் உண்டா? துன்பம் இல்லாத நாள் உண்டா ? ஒன்றும் இல்லாவிட்டாலும், எதையாவது நினைத்து கவலைப் படுவதே இயல்பாகப் போய் விட்டது. கவலை இல்லாதா நாள் ஒரு நாளே இல்லை என்று ஆகி விட்டது.

சரி, சாப்பாடு, அரட்டை, துன்பம் ஆச்சு. அப்புறம் வேற ஏதாவது செய்கிறோமா?

" பிறர் வாடப் பலசெயல்கள் செய்து "


நாம் கவலைப் பட்டால் போதாது என்று, மற்றவர்களையும் கவலைப் படுத்துகிறோம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மற்றவர்களை கவலைப் பட வைக்கிறோம்.


" நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -"

வாழ்க்கை இப்படியே போய் விடுகிறது. நரை கூடி, கிழப் பருவம் வந்து சேர்கிறது.


" கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -"

கூற்றுவன் வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவான் ஒரு நாள்.


" பல வேடிக்கை மனிதரைப் போலே -"

Funny Fellows என்று பாரதி நம்மைச் சொல்வது போலவே இருக்கிறது.

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

நானும் அப்படி ஆவேனோ என்று காளியிடம் எதிர்த்துக் கேட்கிறான்.

அதற்கு காளி என்ன சொன்னாள் ?

நாளை பார்ப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_11.html