Saturday, July 31, 2021

திருக்குறள் - வாழ்வாங்கு வாழ்பவன்

 திருக்குறள் - வாழ்வாங்கு வாழ்பவன்


இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். 


பதினொரு கடமைகள், அதுவும் அற வழியில் ஈட்டிய பொருளில்,  பகிர்ந்து உண்டு வாழ்ந்தால் என்ன கிடைக்கப் போகிறது? 


இதெல்லாம் எதற்குச் செய்ய வேண்டும். வள்ளுவர் சொல்கிறார், இதெல்லாம் அறம் என்பதற்காக செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? 


இல்வாழ்க்கை சிறந்தது என்றார், மற்ற வழியில் போய் பெறுவது ஒன்றும் இல்லை என்றார், முயல்வாருள் எல்லாம் தலை என்றார், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் கூறினார். அதெல்லாம் சரி. நமக்கு என்ன பலன்?


அதைப் பற்றி இங்கே கூறுகிறார். 


மேலே சொன்ன அனைத்தும் இந்த உலகில் இல்லறத்தில் இருப்பவனின் சிறப்பு. பெருமை. இவை பற்றி பேசிற்று. 


பலன் என்றால் இரண்டு விதமான பலன்கள் இருக்கும். 


ஒன்று இம்மைப் பலன். மற்றது, மறுமைப் பலன். 


அந்த இம்மை மறுமை பலன்களை பற்றி இங்கே கூறுகிறார். 


பாடல் 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_31.html


(Please click the above link to continue reading)



வையத்துள் = உலகில் 


வாழ்வாங்கு = வாழ்கின்ற முறைப்படி 


வாழ்பவன் = வாழ்பவன் 


வானுறையும் = வானில் இருக்கும் 


தெய்வத்துள் = தெய்வங்களில் ஒன்றாக 


வைக்கப் படும். = வைத்துப் போற்றப் படுவான் 


அதாவது, இல்லற முறைப்படி வாழ்பவன் இந்த உலகிலேயே தெய்வத்துக்கு ஒப்பாக போற்றப் படுவான் என்று கூறுகிறார். 


அப்படியா? பரவாயில்லையே...நாமும் கடவுள் மாதிரி ஆகி விடுவோமா என்று நினைக்கலாம். பரிமேலழகர் இல்லை என்றால் இந்த நுட்பம் எல்லாம் புரியாது. 


உரைக்கு போவதற்கு முன்...


இந்த உலகில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம். 


இது இந்த உலகில். 


இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகம் இருக்குமா? துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்று நம்சமயங்களும், இலக்கியங்களும் சொல்கின்றன. 


இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகத்துக்குப் பெயர் சுவர்க்கம். 


துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகத்துக்குப் பெயர் நரகம். 


நாம் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நாம் மறு பிறவியில் சுவர்கத்திலோ, நரகத்திலோ அல்லது இந்த பூமியிலோ வந்து பிறப்போம். 


இந்த சுவர்கத்தில் உள்ளவர்கள் தேவர்கள் என அழைக்கப் படுகிறார்கள். 


அது நிரந்தரம் அல்ல. வினைப் பயன் முடிந்தவுடன் மீண்டும் வேறு எங்காவது வந்து பிறக்கத்தான் வேண்டும். 


மறு பிறவியே இல்லாத ஒரு இடம் என்றால் அது இறைவனின் திருவடிதான். அதைத்தான் மோட்சம், வீடு பேறு என்கிறார்கள். 


சுவர்க்கம் வேறு, வீடு பேறு என்பது வேறு. 


வீடு பேறு பெற்று விட்டால் பின் மறு பிறவி கிடையாது. 


சுவர்கத்தில் இந்திரனுக்கும், பிரமனுக்கும்,  விஷ்ணுவுக்கும், உருத்திரனுக்கும் , எமனுக்கும் ஒரு காலக் கணக்கு உண்டு. அந்தக் காலம் முடிந்தால் அவர்கள் போய் விடுவார்கள். அடுத்த ஆள் வருவார். 


இறைவன் என்பவன் இவற்றை எல்லாம் கடந்தவன்.


"மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்" 


என்று கேட்பார் மணிவாசகர். 


இறைவன், அல்லது பரம் பொருள் என்பது மும்மூர்த்திகளுக்கும் தெரியாத ஒன்று. 

இப்போது குறளுக்கு வருவோம். 


வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தேவர்களில் ஒருவனாக வைக்கப் படுவான் என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். 


தெய்வம் என்பதை தேவர் என்று குறிப்பிடுகிறார். 


தேவர்களுக்கு இறைத் தொழிலில் ஒரு பங்கு உண்டு. அக்னி, வாயு, வருணன், இந்திரன், என்று பல தேவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தொழில் இருக்கும். 


அது போல, இல்லற தர்மத்தில் இருப்பவன், மற்ற உயிர்களை காக்கும் பணி செய்கிறான். அது ஒரு இறைச் செயல். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காத்தலும் ஒரு இறைத் தொழில். அதைச் செய்வதால், அவன் வான் உறையும் தேவர்களில் ஒருவனாக வைக்கப் படுவான், வைத்து போற்றப் படுவான் என்கிறார். 


இங்கேயே போற்றப் படுவதால், இம்மை பலன் கிடைத்து விடுகிறது. 


இப்படி சிறப்பாக வாழ்ந்ததால் கட்டாயம் சுவர்க்கம் போவான் என்பதால் மறுமை பயனும் கூறப் பட்டது. 


இப்படி அனைத்து இன்பங்களையும் தந்து, போதாக் குறைக்கு இம்மை மறுமை பலன்களையும் தருவதால் இல்லறம் சிறந்தது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?


என்ன சரிதானே?



Thursday, July 29, 2021

திருக்குறள் - அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை

திருக்குறள் - அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை 


இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்கள் இருக்கின்றன. இதில் துறவறம் என்பது மிகக் கடினமான ஒன்று. புலன்களை அடக்க வேண்டும். மனதை அடக்க வேண்டும். விரதம், தவம் எல்லாம் செய்ய வேண்டும். 


இல்லறம் அப்படி அல்ல. அனைத்து இன்பங்களையும் துயித்துக் கொள்ளலாம். ஒன்றும் முரண்பட வேண்டாம். 


இதில் எது சிறந்த அறம் என்ற கேள்வி நம் முன் நிற்கிறது. 


இந்தக் குறளில் அறம் என்றாலே அது இல்லறம் தான் என்று வள்ளுவர் கூறுகிறார். 


பாடல் 


அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_29.html



(pl click the above link to continue reading)



அறன் = அறம் 


எனப்  = என்று 


பட்டதே = சிறப்பித்து சொல்லப் பட்டதே 


இல்வாழ்க்கை = இல்வாழ்க்கை 


அஃதும் = அதுவும் 


பிறன் = மற்றவர்கள் 


பழிப்பது இல்லாயின் = பழிக்காமல் 


 நன்று = நல்லது 


இந்தக் குறளில் கொஞ்சம் குழப்பம் வரும். 



பிறர் பழிக்காத இல்லறமே சிறந்தது என்று நாம் பொருள் கொண்டு விடுவோம். 


அது சரி அல்ல என்று பரிமேலழகர் கூறுகிறார். 


அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை என்று கூறி இருக்கலாம்.  அதை விட்டுவிட்டு 


அறன் எனப்பட்ட"தே" இல்வாழ்கை என்று ஒரு ஏகாரம் போடுகிறார் வள்ளுவர். 


ஏகாரம் பிரிநிலை என்கிறார் பரிமேலழகர். 


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா? (இலக்கணம் வேண்டாம் என்பவர்கள் கீழே உள்ளதை விட்டு விடலாம்.). 


தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.

தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.

இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே


என்பது தொல்காப்பியம்.

இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.

அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.

இந்த ஏகார இடைச் சொல் பல 7 விதமாக வரும்.

ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.

எப்படி என்று பார்ப்போமா ?

1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.

நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்

நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.

இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.

நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்

நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.

நானே செய்தேன் என்பது நான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.

2. வினா

வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?

முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.

3. எண்

வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே

இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.

வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை

அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.


5. எதிர்மறை

நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.

6. இசை நிறை

’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.

7. ஈற்று அசை

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.

 என்றுமேத்தித் தொழுவோ மியாமே

 என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.


அறன் எனப்பட்டதே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலை. 


எதைப் பிரிக்கிறது?


இல்லறத்தை, துறவறத்தில் இருந்து பிரிக்கிறது. 


இரண்டையும் பிரித்து விட்டதால், 


"அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று"


என்பதில் வரும் "அஃது" என்பது துறவறத்தை சுட்டுகிறது என்கிறார் பரிமேலழகர். 


இல்லறமே சிறந்தது. 


துறவறமும் சிறந்ததுதான் பிறர் அதை பழிக்காமல் இருந்தால் என்கிறார். 


ஏன் பழிக்கப் போகிறார்கள் என்பதற்கும் விளக்கம் தருகிறார். 


துறவறம் என்பது ஆசைகளை அடக்கி, புலன்களை அடக்கி, மனதை ஒருமுகப் படுத்தி, தவம், விரதம் எல்லாம் செய்ய வேண்டும். இவை மனித இயல்புக்கு எதிரானவை. இன்பம் துயிப்பது என்பது உயிர்களின் அடிப்படைக் குணம். துறவு அதை மறுத்து நிற்கிறது. 


எவ்வளவு நாள் நிற்க முடியும்? எங்கேனும் ஒரு கணத்தில் சறுக்கி விழ வாய்ப்பு இருக்கிறது. 


பெரிய பெரிய தவ முனிவர்கள் எல்லாம் சறுக்கி இருக்கிறார்கள். சறுக்கி தவ வலிமையை இழந்து இருக்கிரார்கள். அப்படி என்றால சாதாரண துறவிகளை என்னென்று சொல்லுவது. 


ஒரு துறவி சறுக்கினால் உலகம் அவனைப் பழிக்கும். தூற்றும். 


எனவே, பழி வராமல் துறவு இருந்தால் அதுவும் நல்லதுதான் என்ற பொருள் பட கூறினார். 


இல்லறமே சிறந்தது, பழி இல்லாமல் இருந்தால் துறவறமும்  சிறந்தது தான் என்கிறார். 


மேலும் படிப்போம்.



Wednesday, July 28, 2021

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல

 விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல 


ஒரு ஊர்ல ஒரு கழுதை இருந்தது. அந்தக் கழுதை இராத்திரி ஆனா, ஊருக்கு வெளியே உள்ள ஒரு காட்டுக்குப் போய், சத்தம் போட்டு தன்னுடைய இனிய குரலால் பாடும்.  அந்தக் காட்டுல ஒரு பேய் இருந்து வந்தது. அந்த பேய்க்கு இந்த கழுதையின் பாட்டு ரொம்ப பிடித்துப் போய் விட்டது. 


"ஆஹா, கழுதையாரே உன்னுடைய குரல் வளமே வளம். என்ன அருமையா பாடுற...இன்னும் கொஞ்சம் பாடு " என்று இரசித்துக் கேட்கும். 


அதைக் கேட்ட உடன், கழுதைக்கு பெருமை தாங்காது. நம்மை விட்டா இனிமையா பாட இந்த உலகத்ல யாரும் இல்லைன்னு பெருமிதம் கொள்ளுமாம். 


ஊருக்குள்ள இப்படி நிறைய கழுதைகளும், பேய்களும் இருக்கின்றன. 


முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்று நினைப்பதும், நாளும் நடப்பது தானே....


பாடல் 


கழுதை காவெனக் கண்டுநின் றாடிய வலகை

தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்

பழுதி லாநமக் கார்நிக ராமெனப் பகர்தல்

முழுது மூடரை மூளர்கொண் டாடிய முறைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_28.html



(pl click the above link to continue reading)


கழுதை  = கழுதை 


'கா' வெனக் = காள் காள் என்று பாடியதைக் 


கண்டு  = கண்டு 


நின் றாடிய = நின்று, அந்தப் பாட்டுக்கு ஆடிய 


வலகை = பேய் 


தொழுது = அந்தக் கழுதையை தொழுது 


மீண்டும் = மீண்டும் 


அக் கழுதையைத் = அந்தக் கழுதையை 


துதித்திட = போற்றிட 


அதுதான் = அந்தக் கழுதையும் தான் 


பழுதி லா = குற்றமில்லாத 


நமக் கார் = நமக்கு யார் 


நிக ராமெனப் = நிகராம் என 


பகர்தல் = சொல்லி 


முழுது மூடரை = முழு முட்டாளை 


மூளர்கொண் டாடிய முறைபோல் = முட்டாள் கொண்டாடியது போல 


சங்கீதம்னா என்ன என்று கழுதைக்கும் தெரியாது, பேய்க்கும் தெரியாது. 


நாட்டுக்குள்ள நிறைய பேய்கள், பல கழுதைகளை பாராட்டிக் கொண்டு இருக்கின்றன. 


இத்தனை பேய்கள் பாராட்டுகிறதே, அது தப்பாவா இருக்கும் என்று மற்றவர்களுக்கும் ஒரு சந்தேகம் வரத் தான் செய்யும். 


எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதல்ல முக்கியம். 


பாராட்டுபவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 


ஒரு முட்டாளை இன்னொரு முட்டாள் பாராட்டினால் பாராட்டி விட்டுப் போகட்டும். 


நமக்கு என்ன?



Tuesday, July 27, 2021

திருக்குறள் - அறனிழுக்கா இல்வாழ்க்கை

திருக்குறள் - அறனிழுக்கா இல்வாழ்க்கை


முந்தைய குறளில் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்று கூறினார். அதே கருத்தை மேலும் வலியுறுத்துகிறார் இந்தக் குறளில். 


பாடல் 


 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_27.html


(pl click the above link to continue reading)


ஆற்றின் = வழியில், நல்ல வழியில் 


ஒழுக்கி = நடத்திச் சென்று, நடக்கச் செய்து 


 அறனிழுக்கா = அறவழியில் இருந்து தவறாத 


 இல்வாழ்க்கை = இல்வாழ்கை 


நோற்பாரின் = தவம் நோற்பாரின், தவம் மேற் கொள்வாரின் 


நோன்மை  = வலிமை, சிறப்பு 


உடைத்து = உடையது.


அதாவது, தவம் மேற்கொள்வாரின் வாழ்கையை விட, இல்வாழ்கை உயர்ந்தது என்கிறார். 


கொஞ்சம் விரித்து பொருள் காண்போம். 


"ஒழுக்கி" ஒழுகி என்றால் தான் ஒழுகுதல். ஒழுக்கி என்றால் மற்றவர்களை நடத்திச் செல்லுதல்? 


யாரை ஒழுக்கி?  பிரம்மச்சாரி, வானப்ரஸ்தம், துறவு மேற்கொண்டவர்களை அவர்கள் அறத்துக்கு ஏற்ப வாழ்வை நடத்த உதவி செய்து என்று பொருள் கொள்ள வேண்டும். 


மற்றவர்களுக்கு, அற வழியில் செல்ல உதவி செய்கிறேன் பேர்வழி என்று தான் அற நெறியை கை விட்டு விடக் கூடாது என்பதற்காக "அறனிழுக்கா இல்வாழ்க்கை" என்றார். 


எல்லோருக்கும் நினைப்பு என்ன என்றால், தவம் செய்பவர்கள் பெரியவர்கள், உயர்ந்தவர்கள் என்று. 


திருவள்ளுவர் அதை மறுதலிக்கிறார்.  தவம் முயல்வாரைவிட இல்லற வாழ்வில் உள்ளவன் உயர்ந்தவன் என்கிறார். 


சரி, அப்படி என்றால், துறவறம் என்று ஒன்று எதற்கு? பேசாமல் எல்லோரும் இல்லறத்திலேயே இருந்து விடலாமே. துறவறத்தை விட இல்லறம் உயர்ந்தது என்றால், ஏன் தவம், விரதம் என்று துன்பப் பட வேண்டும் ? 


பின் வரும் குறள்களில் துறவறத்தை தூக்கிப் பிடிக்கிறார் வள்ளுவர்.


அப்படி என்றால் என்ன தான் சொல்ல வருகிறார்?


படிக்கப் படிக்கப் புரியும். இப்போது சொன்னால் குழப்பமே மிஞ்சும். 


பொறுமையுடன் ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டே போனால், எல்லாம் தெளிவாகும். 


என்ன அவசரம்...மெதுவாக படிப்போமே....


Monday, July 26, 2021

கம்ப இராமாயணம் - இரண்டின் ஒன்றே துணிக

கம்ப இராமாயணம் - இரண்டின் ஒன்றே துணிக 


அங்கதனை தூது அனுப்புவது என்று முடிவு ஆகி விட்டது. அங்கதனுக்கும் அதில் பெரிய மகிழ்ச்சி. 


இராவணனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறான் அங்கதன். 


அதற்கு இராமன் 


"ஒண்ணு சீதையை விட்டு விட்டு உன் உயிரை காத்துக் கொள். அல்லது சண்டை போட்டு உன் தலைகள் பத்தும் போர்க் களத்தில் சிதறி விழும். இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்து எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டு வா" என்கிறான். 



பாடல் 




 'என் அவற்கு உரைப்பது?' என்ன,  ' "ஏந்திழையாளை விட்டுத


தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்றுஎனின்,  தலைகள் பத்தும்


சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல்  நன்றோ?


சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக!" எனச் சொல்லிடு' என்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_26.html


(pl click the above link to continue reading)


 'என் அவற்கு உரைப்பது?' என்ன = இராவணனுக்கு என்ன தூது செய்தி சொல்லட்டும் என்று அங்கதன் கெட்ட போது 


"ஏந்திழையாளை = அழகிய ஆபரணங்களை அணிந்த சீதையை 


விட்டுத் = சிறையில் இருந்து விடுவித்து 


தன் உயிர் பெறுதல் நன்றோ? = உன்னுடைய உயிரை தக்க வைத்துக் கொல்லுதல் நல்லதா 


அன்றுஎனின்,  = இல்லை என்றால் 


தலைகள் பத்தும் = பத்துத் தலைகளும் 


சின்னபின்னங்கள் செய்ய = சின்னா பின்னாமாக 


செருக்களம் சேர்தல்  நன்றோ? = போர்க் களத்தில் விழுந்து கிடப்பது நல்லதா 


சொன்னவை இரண்டின் = நான் சொன்ன இந்த இரண்டில் 


ஒன்றே துணிக!" = ஒன்றை தேர்ந்து எடுப்பாயாக 


எனச் சொல்லிடு' என்றான். = என்று சொல்லி விட்டு வா என்றான். 


சில கெட்ட காரியங்களை செய்யத் தொடங்கி விட்டால் பின் அதை நாமே நினைத்தால் கூட விட முடியாது. 


சரி,  இது சரிப்பட்டு வராது என்று இராவணன் சீதையை விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ?


அவனுக்கு அது பெரிய தலை குனிவாகப் போய் இருக்கும். எல்லோரும் அவனை பார்த்து சிரிப்பார்கள். அவன் வீரம், மானம், பெருமை எல்லாம் சிறுத்து விடும். இராமனிடம் பயந்து விட்டான் என்று எதிரிகள் அவனை ஏளனம் செய்வார்கள். 


எனவே, சீதையை சிறை விடுவது என்பது முடியாத காரியமாகப் போய் விட்டது. 


உடன் பிறந்த தம்பி இறந்தான், பெற்ற பிள்ளை இறந்தான், இருந்தும் முடியவில்லை. கடைசியில் அவனிடம் இருந்தது காமம் அல்ல. பிடிவாதம். நான் விடுவதா என்ற அகம்பாவம். 


விடாவிட்டால், சண்டை போட்டு உயிரை விட வேண்டி வரும். 


சிந்திக்க வேண்டும். 


கெட்ட செய்கைகளை ஆரம்பிக்கவே கூடாது. பின் அது நம்மை விடாது, நாம் விட்டு விடலாம் என்று நினைத்தால் கூட. 


ரொம்ப ஏன் சிந்திப்பான்? காப்பி, அதை விட முடிகிறதா? 


ஒரு தடவைதானே என்று ஆரம்பித்த எத்தனை கெட்ட பழக்கங்கள் ஒட்டிக் கொண்டு விடுகின்றன. 


மாற்றான் மனைவி மேல் கொண்ட ஆசை அவனை எங்கு கொண்டு நிறுத்தியது? 


அது அறத்தின் வலிமை. 




Sunday, July 25, 2021

திருக்குறள் - பெறுவது என்ன?

 திருக்குறள் - பெறுவது என்ன? 


இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற கேள்வி இன்று வரை தொடர்கிறது. பற்றினை விட்டு விட வேண்டும், ஆசை கூடாது, ஆசையே துன்பத்திற்கு எல்லாம் காரணம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 


இங்கே, இல்லறத்தின் சிறப்பை சொல்ல வந்த வள்ளுவர், இல்லறத்துக்கு வெளியே போய் கிடைப்பது என்ன இருக்கிறது என்று கேட்கிறார். 


பாடல் 


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவது எவன்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_25.html


(pl click the above link to continue reading)


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அற வழியில் நடத்துபவன் ஆனால் 


 புறத்தாற்றில் = அதற்கு வெளியே 


போஒய்ப் பெறுவது எவன்? = போய் பெறுவது என்ன இருக்கிறது ? (ஒன்றும் இல்லை)



இல் வாழ்கையை அற வழியில் செலுத்தினால், அதை விட அடையப் போவது ஒன்றும் இல்லை. 


அதாவது, இல்லறத்தை விட்டு துறவறத்தில் சென்று அடையப் போவது ஒன்றும் இல்லை என்கிறார். 


அற வழி என்றால், மேலே உள்ள குறள்களில் சொன்ன பதினொரு கடமைகளும், அற வழியில் பொருள் ஈட்டுதலும், அன்பும் அன்புடன் கூடிய இல்லறமும் ஆகும். 


அது சரி, வள்ளுவர் பாட்டுக்கு சொல்லி விட்டார். அதில் உண்மை இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டாமா? 


இல்லறம் ஏன் சிறந்தது? 


இல்லறத்தில் உள்ள ஒருவன், தானும் இன்பம் அனுபவித்து, மற்றவர்களுக்கும் இன்பம் தருகிறான் (பதினொரு கடமைகள்). ஆனால், துறவறத்தில், தானும் இன்பம் அனுபவிக்கமால் (விரதம், தவம், போன்றவற்றால் உடலை வருத்தி) மற்றவர்களிடம் பிச்சை பெற்று அவர்களையும் துன்பப்படுத்துவதால் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்கிறார் இந்தக் குறளில். 


"அங்க ஒண்ணும் இல்ல, பேசாம் இங்கேயே இருந்து இன்பம் காண், இதுவே சிறந்தது" என்று சொல்கிறார். 


இல்லறம் அன்பைக் காட்டும், அருளுக்கு அழைத்துச் செல்லும், அருள் வீடு பேற்றைத் தரும் எனவே இந்தப் பிறவியில் இன்பமும், பின் வீடு பேறும் தருவதால், இல்லறமே சிறந்தது என்பது அவர் முடிவு.


அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 




Saturday, July 24, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 3

  

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 3


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/3.html


(pl click the above link to continue reading)


இந்தக் குறளுக்கு விளக்கம் எழுதிய பின், "இதற்கு மேல் என்ன இருக்கிறது" என்று எழுதியிருந்தேன். 


இருக்கிறது. 


இரண்டு விடயம் விடுபட்டு போய் விட்டது. 


"தானென்றாங்கு " என்று குறளில் வருகிறது. 


தனக்குத் தானே ஒன்றைச் செய்வது அறமாகுமா?


நான் இன்று ஒரு பெரிய அறம் செய்தேன்...அந்த உணவு விடுதியில் சென்று மூக்கு முட்ட சாப்பிட்டேன்...என்றால் அது அறமா? 


பின் ஏன் வள்ளுவர் "தான்" என்பதையும் இல்லறக் கடமைகளில் சேர்கிறார்?


பரிமேலழகர் இல்லாவிட்டால் இதற்கு அர்த்தம் தெரியாமலேயே போய் இருக்கும். அல்லது தவறான அர்த்தம் புரிந்து கொண்டிருப்போம். வள்ளுவரே சொல்லி விட்டார், நமக்கு நாம் செய்வதும் அறம் தான், எனவே நான் எனக்கும் என் குடும்பத்துக்கும் நிறைய அறம் செய்யப் போகிறேன் என்று ஒரு கும்பல் கிளம்பி இருக்கும். 


பரிமேலழகர் உரை செய்கிறார்....


"எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று."


மற்ற அறங்கள் எல்லாம் செய்ய வேண்டும் என்றால், நான் இருந்தால்தானே செய்ய முடியும். நான் என்னைச் சரியாக கவனிக்கமால், சாப்பிடாமல், உறங்காமல், நோய் வந்தால் கவனிக்காமல் விட்டு விட்டால், நான் தளர்ந்து போவேன், வேலை செய்ய முடியாமல் முடங்கிப் போவேன், அல்லது இறந்து போவேன். பின் எப்படி அறம் செய்ய முடியும்? 


அறங்களைச் செய்ய நான் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா? எனவே, அதற்காக நீ உன்னை காத்துக் கொள் என்கிறார். சந்தோஷம் அனுபவிக்க அல்ல, மற்ற அறங்களைச் செய்ய வேண்டி இருப்பதால், உன்னை நீ காத்துக் கொள் என்கிறார். 


இது விட்டுப் போன ஒரு விடயம். 


இன்னொன்று, இந்த ஐந்து பேருக்கும் அறம் செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது, எவ்வளவு செய்வது. எப்பவாவவது, மனம் தோன்றிய படி செய்யலாமா? 


நன் இன்றைக்கு சிரார்த்தம் செய்யப் போகிறேன், எனவே வீட்டுக்கு வந்த விருந்தாளியை விரட்டி விடலாமா?


இல்லை. இந்த ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய கடமையாக வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வை என்கிறார்.  


வீட்டுச் செலவுக்கு இவ்வளவு (தான்), தெய்வ காரியங்களுக்கு இவ்வளவு, விருந்தினர் வந்தால் போனால் அவர்களை உபசரிக்க இவ்வளவு என்று எல்லாவற்றிற்கும் பங்கு வை என்கிறார். 


அதோடு நின்றால் பரவாயில்லை. 


ஒரு அரசாங்கம் எவ்வளவு வரி போடலாம் என்றும் இதற்குள் சொல்லிவிட்டுப் போகிறார். 


இந்த ஐந்து பேருக்கு ஒரு கூறு. ஆறாவதாக அரசன் அல்லது அரசாங்கம். வரி செலுத்த வேண்டும் அல்லவா? இல்லறத்தான் வரி கட்டாமல் இருக்க முடியுமா? வள்ளுவர் சொல்லவில்லை, எனவே வரி கட்ட மாட்டேன் என்று சொல்ல முடியுமா?


மறவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் கூட விடலாம். வரி கட்டா விட்டால், அரசன் அல்லது அரசாங்கம் வலிந்து கொள்ளும். சொத்தை பறிமுதல் செய்யும். கட்டாதவர்களை சிறையில் போடும். எனவே, நீ தராவிட்டாலும் அரசன் எடுத்துக் கொள்வான் என்பதால் அதை சொல்லாமல் விட்டார் என்கிறார் பரிமேலழகர்.


மேலும், வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்கிறார். 


இவர்கள் ஐவருக்கும் ஐந்து கூறு. அரசனுக்கு ஆறாவது கூறு. அதாவது, 1/6 அல்லது  16% வரி என்கிறார். 


"அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக"


என்பது பர்மேலழகர் உரை. 


வருமானத்தை ஆறு பிரிவாக பிரித்துக் கொள். ஆறில் ஒரு பகுதி அரசனுக்கு வரி. மீதி ஆறில் ஐந்து பகுதி மேற் சொன்ன ஐந்து பேருக்கும் என்று பிரித்துக் கொள் என்கிறார். 


வீடு, நாடு என்று எவ்வளவு பொறுப்புணர்வோடு இல்லற கடமைகளை சொல்லித் தருகிறார். 


படிக்க படிக்க, இத்தனை நாள் இதை படிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. 



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html )


(இதன் இரண்டாம் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/07/2_17.html