Monday, June 6, 2022

திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - ஒரு தொகுப்புரை

 திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - ஒரு தொகுப்புரை 


அறம் சொல்ல வந்த வள்ளுவர் அறத்தை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார்.


அறம் என்பது வேதம் முதலிய உயரிய நூல்களில் கூறிய சொன்னவை செய்தாலும், விலக்கியன ஒழித்தலும் என்று வரையறை செய்கிறார் பரிமேலழகர். 


கடவுள் வாழ்த்தோடு நூலைத் தொடங்குகிறார் வள்ளுவர். .



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_6.html


(pl click the above link to continue reading)


அறத்துக்கு அடிப்படையான மழை பற்றி  "வான்சிறப்பில்" கூறினார். 


மக்களால் அனைத்தையும் படிக்க முடியாது. .அப்படியே படித்தாலும் புரியாது. அப்படியே புரிந்தாலும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகளை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் குழப்பம் வரும். எனவே, எது அறம், எது அறம் அல்லாதது என்று தெளிவுபட கூறக் கூடிய "நீத்தார் பெருமை" பற்றி அடுத்து கூறினார். 


அறம் பற்றி நீத்தார் கூறினாலும், அதன் வலிமை என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும். கடை பிடிக்காவிட்டால் என்ன ஆகும் என்று சொல்வதற்கு "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரம் செய்தார். 


அடிப்படை அமைத்த பின், இல்லறதுக்குள் நுழைகிறார். முதலில் இல்வாழ்கையின் கடமைகளைக் கூறும் "இல்வாழ்க்கை" என்ற அதிகாரத்தை தருகிறார். 


அந்த கடமைகள் அனைத்தையும் ஒரு தலைவன் தானே செய்ய முடியாது என்பதால், அவனுக்கு ஒரு பெண்ணின் துணை அவசியம் என்று அறிந்து "வாழ்க்கை துணை நலம்" என்று ஒரு அதிகாரம் அமைத்து அதில் மனைவியின் சிறப்பு, அவளின் பெருமை, கடமை இவற்றைப் பற்றி கூறினார். 


அப்படி கணவனும், மனைவியும் ஒன்றாக இல்லறம் நடத்தும் போது, அவர்கள் அன்பின் விளைவால் பிறக்கும் குழந்தை பற்றி கூற "புதல்வர்களைப் பெறுதல்" என்று ஒரு அதிகாரம் செய்தார். 


கணவன், மனைவி, ,பிள்ளைகள் என்று ஒரு குடும்பம் ஆன பின், அங்கு விளையும் அன்பு பற்றி கூறுவதற்காக "அன்புடைமை" என்ற அதிகாரத்தை அடுத்து வைத்தார். 


அன்போடு குடும்பம் நடத்தும் போது, உற்றார் உறவினர் எல்லோரும் வந்து போவார்கள். அவர்களை உபசரிக்கும் முறை பற்றி "விருந்தோம்பல்" என்ற அடுத்த அதிகாரத்தை தந்தார். 


விருந்து என்று வரும்போது அவர்களோடு எப்படி பேசி பழக வேண்டும் என்பதை கூற "இனியவை கூறல்" என்ற அதிகாரத்தை வைத்தார். 


இனியவை கூறி, விருந்தோம்பி இருந்தாலும்,  வாழ்கையில் சில நடைமுறை சிக்கல்கள் வரும். அதை சரியான படி கையாள "நடுவு நிலைமை" என்ற அதிகாரம் வைத்தார். 


நடுவு நிலையில் இருக்க முடிந்த ஒருவனால் தான் புலன்களை அடக்க முடியும் என்பதால், அதை அடுத்து அடக்கம் உடைமை என்ற அதிகாரம் வைத்தார். 


புலன்களை அடக்கினால்தான் ஒழுக்கமாக வாழ முடியும் என்பதால் அடுத்து நாம் இறுதியில் சிந்தித்த அடக்கம் உடைமை என்ற அதிகாரம் வைத்தார். 


இனி அதிகார தொகுப்பை பார்ப்போம்:



1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_79.html


ஒழுக்கம் உயர்வைத் தருவதால் அது உயிரைவிட உயர்ந்ததாக எண்ணி போற்றப் படும் என்றார். 



2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_19.html


சிரமப்பட்டாவது ஒழுக்கத்தை காக்க வேண்டும். தவறாமல் ஆராய்ந்து பார்த்ததில் அனைத்து அற நூல்கள் சொல்வதும் இதுவே

என்று இந்த முதல் இரண்டு குறள்களில் ஒழுக்கத்தின் சிறப்பு பற்றி கூறினார். 



3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்




ஒருவன் ஒழுக்கத்தை கடைப் பிடித்தால் உயர் நிலையை அடைவான். இல்லை என்றால் தாழ்வான்.


4. மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்




ஒருவன் தன் தொழில் சார்ந்த விடயங்களை மறந்து விட்டால் கூட பின்னால் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஒழுக்கத்தை ஒரு முறை தவற விட்டாலும் தீரா பழி வந்து சேரும். 



5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.




பொறமை கொண்டவனிடம் செல்வம் எப்படி தாங்காதோ அது போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு தங்காது. 


6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_26.html



ஒழுக்கத்தை கடைபிடிப்பது கடினம் என்றால், ஒழுக்கம் இல்லாமல் வாழ்வது அதைவிடக் கடினம் என்பதால் குறைந்த துன்பம் தரக்கூடிய ஒழுக்கமான வாழ்வையே மேற் கொள்ள வேண்டும். 


7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_28.html


ஒழுக்கம் உடையார் உயர்வினை அடைவார்கள். ஒழுக்கம் இல்லாதவர்கள் அவர்கள் செய்யாத பழியையும் ஏற்க வேண்டி வரும். 


மேற்சொன்ன ஐந்து பாடல்கள் மூலமும் ஒழுக்கத்தினால் வரும் பெருமையும், அதை தவற விடுவதால் வரும் சிறுமையும் கூறினார். 


8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_30.html


எப்படி ஒரு விதை பல்கி பெருகி பலவிதங்களில் நன்மை தருகிறதோ அது போல நல்ல ஒழுக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் நலம் பயக்கும். அதே போல் தீய ஒழுக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் தீமை பயக்கும். 


இந்த குறளின் மூலம் நல்ல மற்று தீய ஒழுக்கத்தின் பின் விளைவுகள் பற்றிக் கூறினார். 


9. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post.html


ஒழுக்கம் உடையவர்கள் தவறிக் கூட பிறருக்கு நன்மை தராத சொற்களை கூற மாட்டார்கள். 


10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_4.html


உயர்ந்தவர்கள்,  மற்றும் உயர்ந்தவைகளை கைகொள்ளாதவர்கள் எவ்வளவு படித்து இருந்தாலும், படிக்காத அறிவிலிகளாகவே கருதப்படுவர். 



Sunday, June 5, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 7

     

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 7


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html

)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


அனுமன் என்ன சொன்னான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நம்மிடம் யாராவது "நீ யார்" என்று கேட்டால் என்ன சொல்லுவோம்?


நம் பெயர், படிப்பு, தொழில், திருமணம் ஆகி விட்டதா இல்லையா, எத்தனை பிள்ளைகள், அவர்கள் என்ன செய்கிரார்கள், சொந்த ஊர் என்று அடுக்கிக் கொண்டே போவோம் அல்லவா?


அனுமன் இது எதையுமே சொல்லவில்லை. சொல்லவில்லை என்றால் முதலில் சொல்லவில்லை. பின்னால் சொல்கிறான். அப்படியானால் என்னதான் சொன்னான்?


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


இங்கே முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


என்றான். 


பாடல் 


ஆயசொல் தலைமேல் கொண்ட

    அம் கையன், ‘அன்னை! நின்னைத்

தூயவன் பிரிந்த பின்பு, தேடிய

    துணைவன், தொல்லைக்

காய்கதிர்ச் செல்வன் மைந்தன்,

    கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம்

நாயகன், சுக்கிரீவன்

    என்று உளன், நவையில் தீர்ந்தான். ‘



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


(pl click the above link to continue reading) 


ஆயசொல் = அந்த சொல்லை. "வீர நீ யார்" என்று சீதை கேட்ட அந்தச் சொல்லை 


தலைமேல் கொண்ட =தலைமேல் கொண்ட 


அம் கையன் = அழகிய கைகளை உடைய அனுமன் 


‘அன்னை!  = அன்னையே 


நின்னைத் = உங்களைப் 


தூயவன் = இராமன் 


பிரிந்த பின்பு = பிரிந்த பின் 


தேடிய  துணைவன் = தேடி அடைந்த நண்பன் 


தொல்லைக் = பழமையான 


காய்கதிர்ச் செல்வன் = காய்கின்ற கதிர்களை உடைய சூரியன் 


மைந்தன் = பிள்ளை 


கவிக் குலம்  = குரங்கு கூட்டம் 


அவற்றுக்கு எல்லாம் = அவை அனைத்துக்கும் 


நாயகன் = தலைவன், அரசன் 


சுக்கிரீவன் = அவன் பெயர் சுக்ரீவன் 


என்று உளன் = என்று ஒருவன் இருக்கிறான் 


நவையில் தீர்ந்தான்.  = குற்றம் இல்லாதவன் 



கேட்டது "நீ யார்" என்று



இங்கே என்ன பதில் சொல்கிறான் என்று பாருங்கள். 



அனுமனுக்குத்  தெரிகிறது.  சீதைக்கு வேண்டியது அவன் பெயர் அல்ல. அவன் பெயர் எதுவாக இருந்தால் என்ன?  அவளுக்கு வேண்டியது இந்த சிறையில் இருந்து விடுபட்டு எப்போது இராமனிடம் சேரலாம் என்பதுதான். 


அதை அறிந்து அனுமன் பதில் சொல்கிறான். 


அவன் கூறிய ஒவ்வொரு வரியிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. 


முதலாவது, இராமனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான். அவன் தனியாக காட்டில் இருந்தால் எப்படி இராவணனை வென்று சிறை மீட்க முடியும். எனவே, இராமனுக்கு ஒரு துணைவன் இருக்கிறான் என்று முதல் செய்தியை கூறுகிறான். 


இரண்டாவது, நண்பன் சரி, அவன் யார் ? சும்மா காட்டில போற ஒரு வேடனை பிடித்துக் கொண்டு வந்து நண்பன் என்றால் என்ன பலன். எனவே, அனுமன் சொல்கிறான் "சூரிய குமாரன்" என்று. தெய்வாம்சம் பொருந்தியவன் என்று. 


மூன்றாவது, சரி நண்பன் பெரிய ஆள் தான். அவனுக்கு பின் பலம் ஏதாவது இருக்கிறதா? அல்லது அவன் தனி ஆளா என்ற கேள்விக்கு "குரங்கு குலம் அனைத்துக்கும் அவன் தலைவன்" என்றான். அவன் தனி ஆள் இல்லை. அவன் பின்னால் ஒரு பெரிய படையே இருக்கிறது என்றான். 


நான்காவது, சரி ஆள் பெரிய இடம் தான்.அரசன் தான். பெரிய படை இருக்கிறது. ஆனால், அவன் நல்லவனா? அல்லது அவனும் இராவணன் மாதிரி ஆளா? இராமனுக்கு உதவி செய்வானா? என்ற கேள்விக்கு "குற்றமற்றவன்" என்கிறான் அனுமன். 


அனைத்துக்கும் மேலாக, இவன் பழைய ஆள்.உங்களுக்குத் தெரியாது. உங்களைப் பிரிந்த பின் கிடைத்த நட்பு என்றும் சொல்கிறான். 


அதைச் சொன்ன விதம் அதை விடச் சிறப்பு....சீதை சொன்னதை தலைமேல் கொண்டு, அது ஏதோ கட்டளை போல சிரமேற்கொண்டு பணிவாக பதில் சொல்கிறான். 


இப்படி பேசிப் பழகினால் யாருக்குத்தான் பிடிக்காது?


சொக்கிப் போய் விட மாட்டோமா?


இன்னும் அனுமன் தான் யார் என்று சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்ளுங்கள். 


அடுத்த பாட்டிலாவது சொல்கிறானா என்று பார்ப்போம். 



Saturday, June 4, 2022

திருக்குறள் - ஒட்ட ஒழுகல்

திருக்குறள் - ஒட்ட ஒழுகல் 


திருக்குறளை படிக்கும் போது, அடேயப்பா, எவ்வளவு இருக்கிறது இந்த ஒரு குறளில் என்று தோன்றும். இதற்கும் மேல் என்ன சொல்லிவிட முடியும் என்று அடுத்த குறளுக்குள் போனால், அது முன்னதைவிட பல மடங்கு ஆழமாகவும், விரிவாகவும் இருக்கும். 


அப்படிப்பட்ட ஒரு குறள்தான் நாம் இன்று காண இருப்பது. 


ஒழுக்கம், ஒழுக்கம் என்று சொல்கிறோமே...யார் ஒழுக்கமாக இருக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் இலஞ்சம், பொய், புரட்டு, ஏமாற்று, ,கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், என்று ஒழுக்கமின்மை தான் தலைவிரித்து ஆடுகிறது. 


யாரையும் நம்ப முடியவில்லை. தலைவர்கள், நீதி சொல்பவர்கள், ஆசிரியர்கள், துறவிகள், படித்தவர்கள் என்று யாரையும் முழுவதுமாக நம்ப முடியவில்லை. இவன் என்ன தவறு செய்து விட்டு வந்து இங்கு உக்கார்ந்து இருக்கிறானோ என்றுதான் நினைக்க முடிகிறது. 


இந்த ஒழுக்கம் இன்மை நிறைந்த உலகில் நாம் மட்டும் ஒழுக்கமாக இருந்து என்ன பலன். அல்லது இருக்கத்தான் முடியுமா?


வள்ளுவர் சொல்கிறார் 


"உலகத்தோடு ஒன்றி வாழத் தெரியாதவர்கள், பல கற்றும் அறிவில்லாதவர்கள்" என்று. 


இந்த உலகத்தோடு ஒட்டி வாழ்ந்தால், நாமும் ஒழுக்கம் அற்றவர்களாகி விட மாட்டோமா? வள்ளுவர் ஏன் அப்படி சொல்கிறார். 


பரிமேலழகர் இல்லாவிட்டால் இந்தக் குறளை தவறாக புரிந்து கொண்டு, சரி தான் கலி காலத்தில் உலகம் இப்படிதான் இருக்கும்ம், நாமும் அதே போல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார் என்று எண்ணிக் கொண்டு தவறான வழியில் செல்ல முற்பட்டு விடுவோம். 


பரிமேலழகர் வள்ளுவருக்கு ஞாயம் செய்கிறார். 


எப்படி என்று பார்ப்போம். 


பாடல் 



உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_4.html


(pl click the above link to continue reading)


உலகத்தோடு = இந்த உலகத்தோடு 


ஒட்ட ஒழுகல் = சேர்ந்து வாழ்வதை 


பலகற்றும் = நிறைய படித்தாலும் 


கல்லார் = படிக்காதவர்கள் 


அறிவிலா தார் = அறிவில்லாதவர் 


சொற்களை கொஞ்சம் இடம் மாற்றினால், சரியாக விளங்கும். 




உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  கல்லார்


பலகற்றும்  அறிவிலா தார்


என்று வாசித்தால் பொருள் நேராக விளங்கும். 


இருந்தும், நாம் முதலில் கேட்ட கேள்விவ்க்கு இன்னும் விடை வரவில்லை. 


பரிமேலழகரின் உரை, நாம் எண்ணியும் பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறது. 


இங்கே, உலகம் என்பது நல்லவர்களை, சான்றோரை.  அயோக்கியர்களை அல்ல. எந்த காலகட்டத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், தீயவர்களும் இருப்பார்கள். நாம் யாரைப் பார்த்து படிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை பார்த்து. ஆனால், பெரும்பாலும் என்ன நடக்கிறது என்றால், கல்வி அறிவு இல்லாதவன், ,ஒழுகக் குறைவு உள்ளவன், அனுபவம் இல்லாதவன் சொல்வதைக் கேட்டு நடப்பது தான் நடக்கிறது. 


காரணம், கற்றவர்கள், அறிஞர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை. முட்டாள்கள் மேடை போட்டு பேசுகிறார்கள். அதனால் அவர்கள் பேசுவது தான் சத்தமாக கேட்கிறது. 


இரண்டாவது, நல்லவன் யார், சான்றோன் யார் என்று இனம் காண முடியாமல் உலகம் தவிக்கிறது. யாரைக் கை காட்டுவது? அவரைப் போல் வாழ் என்று யாரைக் காட்ட முடியும்? 


மூன்றாவது சிக்கல் என்ன என்றால், நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என்று உலகம் கொண்டாடியவர்களை எல்லாம் அவன் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, அவன் செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா என்று அவர்களை கீழே இறக்குவதில் ஒரு கூட்டம் முயன்று கொண்டு இருக்கிறது. என்னால் அந்த உயரத்துக்குப் போக முடியாது என்பதால், அவர்களை என் நிலைக்கு தாழ்த்துகிறேன் என்று கிளம்பி விட்டார்கள். 


இந்த சோகம் நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, ,உயர்ந்து நூல்களுக்கும் நிகழ்கிறது. 


அடுத்தது, "ஒழுகல்" என்றார். ஒழுகல் வாழ்தல், கடைபிடித்தல் என்று அர்த்தம். "உலகோடு ஒழுகல்" என்றால் நல்லவர்களை பின்பற்றி வாழ்வது என்று அர்த்தம். 


அடுத்தது, நல்லவர்கள் கண்ணிலேயே காணோம். எங்கு பார்த்தாலும் அயோக்கியர்கள் கூட்டமாகத் தான் இருக்கிறது. எங்கே ஒரு நல்லவனை காண்பியுங்கள் என்றால் சங்கடம் தான். அப்படியே கண்டு பிடித்தாலும், அவருடைய வாழ்கை முறை வேறாக இருக்கும். நம்மால் அவர் வாழ்கை முறையை கையாள முடியாது. 


உதாரணமாக, ஒரு சிறந்த மருத்துவர் இருக்கிறார். அவர் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார். ஆனால், நான் மருத்துவன் இல்லையே. நான் எப்படி இலவச மருத்துவம் செய்ய முடியும் என்று கேட்டால் வள்ளுவர் சொல்கிறார் "ஒட்ட" ஒழுகல் என்கிறார். அதாவது, பொருந்தும்படி வாழ்வது. அவர், அவர் சார்ந்த துறையில் பலருக்கு உதவி செய்கிறார் என்றால், நாம், நம் துறையில் அது போல செய்ய வேண்டும் என்கிறார். 


சரி சார், அப்படி ஒரு நல்லவன் யாரும் இல்லையே. எங்க ஊரில் அப்படி யாரும் இல்லை. இதுக்காக நான் ஊர் ஊராக சுற்றி நல்லவனை கண்டு பிடிக்க முடியுமா என்றால், வேண்டாம், அதுக்கும் ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர். 


"பல கற்றும்" , "கல்லார்", "அறிவிலாதவர்" என்று மூன்று சொற்களை வைக்கிறார். 


அதாவது, நல்லவன் என்று யாரும் உன் கண்ணுக்குப் படவில்லையா, கவலை வேண்டாம். புத்தகங்களை எடு. அதில் எவ்வளவு நல்லவர்கள் பற்றி இருக்கிறது. நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகில் உள்ள அத்தனை நாட்டிலும் உள்ள நல்லவர்களைப் பற்றி நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும் தானே?


புத்தர், ஆதி சங்கரர், ,மகா வீரர், இயேசு பிரான், இராமானுஜர், இராமர், தர்மர், விதுரர், அரிச்சந்திரன், சிபி சக்கரவர்த்தி, மார்டின் லூதர் கிங்  என்று அடுக்கிக் கொண்டே போகலாம் அல்லவா? அவர்களைப் பற்றி "கற்று" அதன்படி "ஒட்ட ஒழுகு" என்கிறார். 


இங்கும், ஒட்ட என்பதில் நம் காலத்துக்கு ஏற்ப அதை நாம் அனுசரித்து நடக்க வேண்டும். 


அது மட்டும் அல்ல, கற்பது என்பது நல்லவர்களைப் பற்றி மட்டும் அல்ல. நல்லதையும் கற்க வேண்டும்.  திருக்குறளில் எந்த ஒரு பெயரும் இல்ல. நல்லவன் என்று யாரையும் அடயாளப் படுத்தவில்ல. அதற்காக அதை விட்டுவிடுவதா? இல்லை, திருக்குறளில் "நல்லது" நிறைய இருக்கிறது.  அதை கற்றுக் கொள்ள வேண்டும். 


இதை எல்லாம் கற்றுக் கொண்டாலும், நடைமுறையோடு சேர நடக்கத் தெரிய வேண்டும். இல்லை என்றால், என்ன படித்தும், அவன் முட்டாள்தான் என்கிறார் வள்ளுவர். 


சரிதானே, படித்ததை வாழ்வில் நடைமுறை படுத்தாவிட்டால், படித்தவனுக்கும், படிக்காத முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டு பேரும் ஒரே மாதிரி செயல் பட்டால் இருவருமே முட்டாள்தானே. 


நல்லவர்களைப் பார்த்து, 

நல்ல நூல்களைப் படித்து, ,


அதில் உள்ளவற்றை நடைமுறைக்கு ஏற்றவாறு அமைத்து, அதன் படி நடக்க வேண்டும். 


இதை படித்து முடித்துவிட்டு, கண் மூடி சிந்தித்துப் பாருங்கள். இன்னும் பல அர்த்தங்கள் தோன்றும். 


இந்தக் குறளோடு இந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது. 


நாளை,ஒரு தொகுப்புரை பார்ப்போம். அதன் பின் அடுத்த அதிகாரத்துக்குள் செல்வோம். 


காலம் அதிகம் இல்லாமையால், நீங்கள் நேரடியாகவே குறளையும், அதன் உரையையும் படித்து விடுங்கள். 


Friday, June 3, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 6

    

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 6 


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html



)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் பேசப் போகிறாள். 


எவ்வளவு பேசி இருப்பாள்? என்னென்ன கேட்டு இருப்பாள்?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சீதை என்ன பேசினாள் என்பதை காண இருக்கிறோம்.  


அதற்கு முன் ....


பேச்சு என்பது வெறும் சொல் அல்ல. அது தரும் ஒலி அல்ல அந்த சொல்லின் பொருள் மட்டும் அல்ல. அனைத்துக்கும் மேலே, பேச்சோடு கூடிய உணர்சிகள். உணர்ச்சிகள்தான் நாம் பேசும் பேச்சுக்கு வலிமை சேர்கிறது. 


உணர்வு கலவாத சொற்கள் வெற்றுச் சொற்கள். 


நமக்கு கோபம் வந்தால் அந்த உணர்ச்சி சொல்லில் தெறிக்கும். வெறுப்பு, எரிச்சல், வருத்தம் கூட சொல்லில் வெளிப்படும். அன்பு வெளிப்படுமா? 


கடைசியாக யாரிடம் அன்பு கலந்து பேசினீர்கள்?  பேச்சு வெறும் இயந்திரத்தனமாக போய் கொண்டு இருக்கிறது. 


கணவனிடம, மனைவியிடம், குழந்தைகளிடம் அன்போடு, காதலோடு பேசி இருக்கிறோமா? 


சீதை நினைக்கிறாள் 


"இவன் பேசுவதைக் கேட்டு என் உள்ளம் உருகுகிறது. இவனைப் பார்த்தால் கள்ள உள்ளம் கொண்ட வஞ்சகர் மாதிரி தெரியவில்லை. மனதில் பதியும்படி நினைத்து பேசுகிறான். கண்ணில் நீர் வழிந்து தரையில் விழுகிறது. இவனிடம் கேட்கலாம் " என்று எண்ணி "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.





பாடல் 


என நினைத்து எய்த நோக்கி,

    ‘இரங்கும் என் உள்ளம் : கள்ளம்

மனன் அகத்து உடையர் ஆய

    வஞ்சகர் மாற்றம் அல்லன் :

நினைவு உடைச் சொற்கள் கண்ணீர்

    நிலம்புகப் புலம்பா நின்றான் :

வினவுதற்கு உரியன் என்னா,

    ‘வீர! நீ யாவன்? என்றாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


(pl click the above link to continue reading) 



என நினைத்து = என்று நினைத்து 


எய்த நோக்கி, = அவனை பார்த்து 


இரங்கும் என் உள்ளம் = என்ன உள்ளம் உருகுகிறது 


கள்ளம் மனன் = கள்ள மனத்தை 


அகத்து உடையர் ஆய = உள்ளே உள்ளவர்களான 


வஞ்சகர் மாற்றம் அல்லன் = வஞ்சகர் போன்றோர் அல்லன் இவன் 


நினைவு உடைச் சொற்கள் = சொற்களை நினைத்து பேசுகிறான் 


கண்ணீர்  நிலம்புகப் = கண்ணீர் நிலத்தில் விழுகிறது 


புலம்பா நின்றான்  = புலம்பியபடி நிற்கிறான் 


வினவுதற்கு உரியன் என்னா, = இவனிடம் விசாரிக்கலாம் என்று எண்ணி 


‘வீர! நீ யாவன்? என்றாள். = வீரனே, நீ யார் என்று கேட்டாள் 


நமக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆண்கள் அழக் கூடாது. அழுவது என்பது பலவீனம். என்ன நடந்தாலும் கல்லு போல நிற்பவன் தான் ஆண் மகன் என்று நமக்கு நாமே ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு இருக்கிறோம். 


சிறு வயதில், ஆண் பிள்ளைகள் அழுதால் " பொம்பள பிள்ளை மாதிரி என்னடா அழுதுகிட்டு" என்று அவனை ஏளனம் செய்வோம். ஆண் அழுவது தவறு என்று சிறுவயது முதலே மூளைச் சலவை செய்யப்பட்டு வளர்க்கப் படுகிறோம். 


அது தவறு. 


இராமாயணத்தில் ஆண்கள் அழுகை என்று புத்தகமே எழுதலாம். 


தயரதன் அழுதான், இராமன் பல இடங்களில் அழுது இருக்கிறான், இலக்குவன் அழுதிருக்கிறான், இராவணன் அழுதிருக்கிறான். 


உள்ளே அடக்கி வைத்து, அடக்கி வைத்து புரையோடிப் போய் விடுகிறது. 


"அழுதால் உன்னைப் பெறலாமே" என்பார் மணிவாசகர். 


"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் திருஞானசம்பந்தர். 


இங்கே அனுமன் சீதையின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறான். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தாவி வந்தவன், இலங்கினியை ஒரே குத்தில் நிலை குலைய வைத்தவன், சஞ்சீவி மலையை ஒரு கையால் தூக்கியவன், கண்ணீர் சிந்துகிறான். அதில் தவறு இல்லை. அந்த உணர்ச்சி கலப்பு அவனை உயர்த்துகிறது. அவன் சொல்லுக்கு வலிமை சேர்கிறது. அந்த உணர்வு வெளிப்பாடைக் கொண்டு சீதை "இவன் நல்லவன்" என்று முடிவு செய்கிறாள். 


உணர்வுகளை உள்ளே வைத்துக் கொண்டு, வெறும் சொல்லை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு, "என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை" என்று புலம்புவதில் என்ன பலன்?


சீதை கேட்கிறாள் 'வீரனே, நீ யார்' என்று. 


அனுமன் என்ன சொன்னான், எப்படிச் சொன்னான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்ன சொல்லி இருப்பான், எப்படி சொல்லி இருப்பான் என்று யோசித்துப் பாருங்கள். நாமாக இருந்தால் என்ன பதில் சொல்லி இருப்போம் என்று சிந்திப்போம். 


அப்போதுதான் அனுமனின் பதிலின் மேன்மை புரியும்.


நாளை சந்திப்போமா? 


Thursday, June 2, 2022

திருக்குறள் - வாயால் சொலல்

 திருக்குறள் - வாயால் சொலல் 


ஒழுக்கம் பற்றி, அதன் சிறப்பு பற்றி, அதில் இருந்து வழுவுவதால் வரும் தீமை பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லக் கேட்டோம். 


ஒருவன் ஒழுக்கம் உடையவனா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?


ஏதாவது கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி இருந்தால் அதை வைத்து தீர்மானிக்கலாம். அல்லது யாரிடமாவது நன்னடத்தை சான்றிதழ் வாங்கி வரச் சொல்லலாமா? 


அதெல்லாம் சரி வராது. மிக எளிய வழி இருக்கிறது. 


அவன் பேசுவதை கவனித்தாலே போதும். 


ஒருவன் வாயில் இருந்து தீய சொற்கள் வந்தால், அவன் ஒழுக்கம் இல்லாதவன் என்று அர்த்தம். 


காரணம், வள்ளுவர் சொல்கிறார், "ஒழுக்கம் உடையவர்களுக்கு தீய சொற்கள் தவறிக் கூட அவர்கள் வாயில் இருந்து வராதாம் "


பாடல் 


ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post.html


(pl click the above link to continue reading)


ஒழுக்கம் உடையவர்க்கு = ஒழுக்கம் உள்ளவர்களுக்கு 


ஒல்லாவே = முடியாதே, வராதே 


தீய = தீய சொற்கள் 


வழுக்கியும் = தவறியும் 


வாயால் சொலல் = வாயால் சொல்வது 


மற்றவர்களை விடுங்கள். 


நாம் நம்மைப் பற்றி சிந்திப்போம். 


எப்போதாவது பிள்ளைகளை கடிந்து திட்டி இருக்கிறீர்களா? கணவன்/மனைவி மனம் புண் படும்படி பேசி இருக்கீர்களா ? உடன் பிறப்பு,, நட்பு வருந்தும் படி ஏதேனும் சொல்லி இருக்கிறீர்களா? 


அப்படி என்றால் நீங்கள் ஒழுக்கம் இல்லாதவர் என்று அர்த்தம் என்று வள்ளுவர் சொல்கிறார். 


கோபத்தில் சொல்லி விட்டேன், 

தெரியாமல் சொல்லி விட்டேன், 

அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, 

அவன் தான் முதலில் சொன்னான் நான் பதிலுக்குச் சொன்னேன் 


என்றெல்லாம் சொல்லிப் பலன் இல்லை. 


இப்படி தவறி சொல் வரும் என்று வள்ளுவருக்குத் தெரியும். 


அதனால் தான் "வழுக்கியும்" என்று சொல்கிறார். 


தரை வழுக்கி விழுந்தால் நாம் என்ன சொல்வோம். ஒரே பாசி, ரொம்ப ஈரமாக இருந்தது, வழுக்கி விட்டது...விழுந்து விட்டேன் என்று சொல்லுவோம் அல்லவா? விழுந்தது என் பிழை அல்ல. தரை வழுக்கி விட்டது, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுவோம். 


வள்ளுவர் சொல்கிறார், அது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், தவறுதலாகக் கூட தீய சொற்கள் வராது, ஒழுக்கம் உடையவர்கள் வாயில் இருந்து என்கிறார். 


குறளில் "தீய" என்று மட்டும் தான் இருக்கிறது. அதை ஏன் தீய சொற்கள் என்று எடுக்க வேண்டும்? தீய செயல் என்று ஏன் எடுக்கக் கூடாது?


பின்னால், "வாயால் சொலல்" என்று வருவதை வைத்து, "தீய" என்பது "தீய சொல்லைக் குறிக்கும் என்கிறார் பரிமேலழகர்.


அது என்ன "வாயால் சொலல்". வாயால் தான் சொல்ல முடியும்? மூக்கால், காதால் சொல்ல முடியுமா? சொலல் என்று மட்டும் போட்டு இருக்கலாமே ?


இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். 


மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த காலனை சிவ பெருமான் காலால் உதைத்தார் என்று படித்து இருக்கிறோம். 


அது என்ன காலால் உதைப்பது? கையால் உதைப்பது என்று ஒன்று இருக்கிறதா என்ன? 


இறைவன் திருவடி என்றும் அருள் செய்யக் கூடியது. முதன் முறையாக அருள் செய்வதற்குப் பதில் தண்டனை தருகிறது.  எனவே தான் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு தொழிலைச் செய்ததால் அதை தனியாகக் கூறினார். 


வாய் என்றால் நல்ல சொற்களைத் தான் சொல்ல வேண்டும். அதை விடுத்து தீய சொற்களை சொல்வதால், அது வாய் செய்யாத வேலை அல்லது செய்யக் கூடாத வேலை என்பதால் அதை தனியே சுட்டிக் காட்டுகிறார். 


"வாயால் சொலல்" என்று இருக்கிறது.  சொல்லுதல் என்றால் ஒரு தரம் சொல்லுவது என்று தான் அர்த்தம். சொல்லிக் கொண்டே இருப்பது என்று அர்த்தம் அல்ல. 


தமிழிலே சாதி ஒருமை என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. 


நாய் குரைக்கும் என்றால் ஒரு நாய் தான் குரைக்கும் என்று இல்லை. எல்லா நாயும் குரைக்கும். நாய்கள் குரைக்கும் என்று சொல்லி இருக்க வேண்டும். எங்கே நாய் என்பது சாதி ஒருமை. நாய் என்ற சாதிக்கு அது நின்றது. மாம்பழம் இனிக்கும், பசு பால் தரும் என்று சொல்லுவதைப் போல. 


சொலல் என்றால் ஏதோ ஒரு முறை சொல்லுவது மட்டும் அல்ல. எப்போதெல்லாம் சொல்லப் படுகிறதோ அப்போதெல்லாம். 


அதெல்லாம் சரி, "தீய" என்று சொல்கிறாரே...அது என்ன தீய? 


தீமை என்றால் பிறருக்கு தீமை பயக்கும் சொற்கள். 


சிலர் இனிக்க இனிக்க பேசுவார்கள். அப்படி பேசி பேசியே ஆளை கவிழ்த்து விடுவார்கள்.  அது தீமை தரும் சொல்.


பொய் சொல்லுதல், புரணி பேசுதல்,  பயனில பேசுதல், எல்லாமே தீய சொற்கள் தான். 


நாம் பேசுவதால் யாருக்காவது நன்மை விளையுமா என்று எண்ணிப் பேச வேண்டும். யாருக்குமே நன்மை இல்லை என்றால் எதற்காகப் பேச வேண்டும்? 


தவறிக் கூட தீய சொற்கள் வரக் கூடாது என்றால் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? எவ்வளவு பழக்கம் வேண்டும்? 


ஒழுக்கம் இருந்தால் தான் அது கை கூடும். 


சிந்திப்போம். 






Wednesday, June 1, 2022

ஆன்மீகமும் அறிவியலும் - சில சிந்தனைகள் - பாகம் 1

 ஆன்மீகமும் அறிவியலும் - சில சிந்தனைகள் - பாகம் 1 


நாம் இங்கே இருக்கிறோம். 


இங்கே என்றால் இந்த இடத்தில், இந்த கால கட்டத்தில் இருக்கிறோம். 


எங்கே போகிறோம் ? இந்த வாழ்வின் முடிவு என்ன? வாழ்வு என்றால் நம் ஒருவருடைய வாழ்வு அல்ல...இந்த மனித உயிர்கள் அனைத்தின் வாழ்வும்...இந்த பூமி, சூரியன், நட்சத்திரம் ..இதெல்லாம் ஏன் தோன்றியது? ஒன்றுமே தோன்றாமலே வெறும் வெட்ட வெளியாக இருந்து இருக்கலாமே? வேலை மெனக் கெட்டு இவ்வளவு பெரிய பிரபஞ்சம் எதற்கு ? விடாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது. எதற்கு? 


இதற்கு எல்லாம் காரணம் இருக்கிறதா?


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1.html


(pl click the above link to continue reading)



திடீரென்று கண் விழித்துப் பார்க்கிறோம்.ஏதோ ஒரு இரயில் வண்டியில் நாம் பயணம் செய்வது தெரிகிறது.   காலம் ஓடுகிறது. காட்சிகள் மாறுகின்றன.  நகர்கிறோம் என்று தெரிகிறது. இல்லை என்றால் எல்லாம் ஒரே மாதிரி அல்லவா இருக்க வேண்டும். 


நகர்கிறது என்றால் எதை நோக்கி? தெரியவில்லை. 


சரி, எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொண்டால், எங்கே போகிறோம் என்பதி யூகிக்க முடியும். எனவே எங்கே நம் பயணம் தொடங்கியது என்று அறியத் தலைப்படுகிறோம். 


போகும் இடமும் தெரியவில்லை, புறப்பட்ட இடமும் தெரியவில்லை.


மிகப் பெரிய கேள்விக் குறி நம் முன் நிற்கிறது. 


இதற்கு எப்படி விடை காண்பது?


ஆதியும் தெரியவில்லை, அந்தமும் தெரியவில்லை. 


அறிவியல் விடை தேடிப் புறப்பட்டது.  எங்கிருந்து வந்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. எங்கே போகிறோம் என்று ஒரு ஆராய்ச்சி. 


ஆன்மீகமும் இதே கேள்விகளை கேட்கிறது. ஆனால், அதன் விடைகள் வேறு மாதிரி இருக்கிறது.  இறைவன் தோற்றுவித்தான், அவனுள் எல்லாம் ஒடுங்கும் என்று சொல்லி விடுகிறது. 


அறிவியல் எந்த கேள்விகளை கேட்கிறதோ, எதற்கு விடை தெரியாமல் தேடிக் கொண்டு இருக்கிறதோ, அந்தத் தேடல் ஆன்மீகத்திலும் இருக்கிறது. அதே கேள்வியை ஆன்மீக வாதிகளும் கேட்டு இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடயம். 


யார் சொல்வது சரி, யார் தவறு என்று வாதம் செய்வது அல்ல என் நோக்கம். 


இரண்டு கேள்விகளையும், அவர்கள் கண்ட விடைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். நீங்கள் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். முடிவு உங்கள் கையில். 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். 


நம் முன்னவர்கள் அனைத்தையும் கண்டு பிடித்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்களிடமும் அறிவியல் கேட்கும் கேள்விகள் இருந்து இருக்கின்றன. 


ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றிணைப்பதோ, அல்லது எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று நிரூபிக்கவோ நான் முயலவில்லை. என் வேலையும் அல்ல அது. 


இது ஒரு பயணம் அவ்வளவு தான். 


இங்கே ஒரு செடி, அங்கே ஒரு மலை, ஒரு பூ, ஒரு அருவி, ஒரு செடி, ஒரு பள்ளத்தாக்கு, என்று எல்லாவற்றையும் பார்த்து இரசித்துக் கொண்டே செல்லும் ஒரு இனிய பயணம் அவ்வளவுதான். 


செல்வோமா ?


கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5

   

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 5


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html

பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


பின் மனதுக்குள் நினைக்கிறாள் 


"சரி, இப்ப என்ன? ஒரு வேளை இவன் அரக்கனா இருப்பானோ என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. அரக்கனாகவே இருந்து விட்டுப் போகட்டும். அல்லது ஒரு தேவனாக இருக்கட்டும். இல்லை, பார்பதற்கு குரங்கு இனத்தை சார்ந்தவன் போல இருக்கிறான். அதில் ஒருவனாகவே இருந்து விட்டுப் போகட்டும். கொடுமை செய்பவனாக இருக்கட்டும் அல்லது இரக்கம் உள்ளவனாக இருக்கட்டும். யாராக இருந்தால் என்ன? இங்கு வந்து இராமனின் பேரைச் சொல்லி, என் மனத்தை உருக்கி விட்டான். எனக்கு ஒரு புது உணர்வைத் தந்தான். இதை விட வேறு என்ன வேண்டும்? "


என்று அவள் சிந்திக்கிறாள். 




பாடல் 


அரக்கனே ஆக : வேறு ஓர்

    அமரனே ஆக : அன்றிக்

குரக்கு இனத்து ஒருவனேதான்

    ஆகுக : கொடுமை ஆக :

இரக்கமே ஆக : வந்து இங்கு

    எம்பிரான் நாமம் சொல்லி

உருக்கினன் உணர்வைத், தந்தான்

    உயிர்; இதின் உதவி உண்டோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


(pl click the above link to continue reading) 



அரக்கனே ஆக = அரக்கனாகவே இருக்கட்டும் 


வேறு ஓர் = அல்லது வேறு ஒரு 


அமரனே ஆக = தேவனாகவே இருக்கட்டும் 


அன்றிக் = அல்லது 


குரக்கு இனத்து = குரங்கு இனத்தில் 


ஒருவனேதான் ஆகுக = ஒருவனாக இருக்கட்டும் 


கொடுமை ஆக = கொடுமை உள்ளம் உள்ளவனாக இருக்கட்டும் 


இரக்கமே ஆக = இரக்க குணம் உள்ளவனாக இருந்து விட்டுப் போகட்டும் 


வந்து இங்கு = இங்கு வந்து 


எம்பிரான் நாமம் சொல்லி = என் நாயகன் இராமனின் பெயரைச் சொல்லி 


உருக்கினன் உணர்வைத் = உள்ளத்தை உருக்கி விட்டான் 


தந்தான்  உயிர் =  போக இருந்த உயிரை போகாமல் தடுத்து நிறுத்தி அதை எனக்கு மீண்டும் தந்தான் 


இதின் உதவி உண்டோ? = இதை விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும் ?


யாராக இருந்தால் என்ன? இராமன் பேரைச் சொன்னான். அது போதும் என்கிறாள் சீதை. 


பிரான் = பிரியான் என்பதன் மருவூ 


எம்பிரான் = என்னை விட்டு எப்போதும் பிரியாதவன் 


அவன் யார் என்று இன்னமும் சீதைக்கு புரியவில்லை. இவனாக இருக்குமோ, ,அவனாக இருக்குமோ என்று ஐயுறுகிறாள். .


இருந்தும், யாரா இருந்தா என்ன, இராமன் பேரைச் சொல்லிவிட்டான், அது போதும் என்று இருக்கிறாள். 


உள்ளம் உருகியது, உயிர் மீண்டு வந்தது ...எதனால்?


அனுமனின் பேச்சால். 


பேச்சுக்கு அவ்வளவு வலிமை உண்டு. உள்ளதை உருக்கும். உயிரை நனைக்கும். 


நம்மிடம் ஒரு உயர்ந்த பொருள் இருந்தால் அதை எவ்வளவு பாதுகாப்பாக வைத்து இருப்போம்?


பல அருங்காட்சி நிலையங்களில் பல விலை மதிக்க முடியாத ஓவியங்கள், பொருள்கள் இருக்கும். அதை எல்லா நேரத்திலும் எல்லோரும் பார்க்கும் படி வைக்க மாட்டார்கள். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தினங்களில் மட்டும் காட்சிக்கு வைப்பார்கள். 


எல்லா நேரமும் வைத்து இருந்தால் அதன் மதிப்பு போய் விடும். எப்போதோ ஒரு தரம் என்றால் அதை பார்க்க ஆவல் வரும். 


நமது சொற்களும் அப்படித்தான். அவை விலை மதிக்க முடியாதவை. அதை வீணடிக்கக் கூடாது. மிகக் குறைவாக பேச வேண்டும். அளந்து பேச வேண்டும். சிறந்த வார்த்தைகளை தெரிந்து எடுத்து பேச வேண்டும். 


ஒவ்வொரு சொல்லும் மந்திரம் போல. 


அவ்வளவு வலிமை மிக்கவை. அதன் மதிப்பு தெரியமால் வீணடித்திடக் கூடாது. 


பொட்டலம் நிறைய சுண்டல் இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். 


அதுவே வைரக் கற்களாக இருந்தால்?  


நம் சொற்கள் சுண்டலா, வைரமா என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். 


இன்னும் சீதை பேசவில்லை. 


அதுவும் ஒரு செய்திதான். மற்றவர் பேசும் போது இடையிடாமல் அமைதியாக முழுவதும் கேட்பதும் ஒரு கலை தான். .


பாத்திரங்களின் ஊடாக இவற்றை எல்லாம் நாம் கவனித்தால், உயர்ந்த பண்புகள் விளங்கும். நாளடைவில் அவை நம்மிடையே நம்மையும் அறியாமல் வந்து சேர்ந்து விடும்.