Monday, November 11, 2019

கம்ப இராமாயணம் - ஆவியும் சிறிது உண்டு கொலாம்

கம்ப இராமாயணம் - ஆவியும் சிறிது உண்டு கொலாம் 


நாம் யார் மீதாவது ரொம்ப அன்பு வைத்து இருந்தால், அவர்களின் பிரிவு நம்மை மிகவும் வாட்டும் அல்லவா?

ஒரு சோர்வு, ஒரு தளர்வு, ஒரு அயர்ச்சி வரும் அல்லவா?

அது போல, சீதையை பிரிந்த இராமன், அயர்ந்து போகிறான்.

இராஜ்யமே போனது. கவலை இல்லை. அவன் பாட்டுக்கு காட்டுக்கு மர உரி தரித்துக் கொண்டு கிளம்பிவிட்டான். ஆனால், சீதையின் பிரிவு அவனை வாட்டுகிறது. அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை விட, சீதையின் அருகாமை பெரிதாகப் படுகிறது அவனுக்கு.

அன்பென்றால் அது.

"காவி, கருங்குவளை, நெய்தல், காயம் பூ போன்ற மலர்களின் நிறத்தைக் கொண்ட இராமன், புலம்பி, தளர்ந்து, உயிர் உடலில் இருக்கிறதா என்று நினைக்கும் அளவுக்கு சோர்ந்து போய் , புலம்ப ஆரம்பிக்கிறான்"

பாடல்


காவியும், கருங் குவளையும்,
      நெய்தலும், காயாம் -
பூவையும் பொருவான் அவன்,
      புலம்பினன் தளர்வான்,
'ஆவியும் சிறிது உண்டு
      கொலாம்' என, அயர்ந்தான்,
தூவி அன்னம் அன்னாள் திறத்து,
      இவை இவை சொல்லும்:


பொருள்

காவியும் = காவி மலரும்

கருங் குவளையும் = கருங்குவளை மலரும்

நெய்தலும், = நெய்தல் மலரும்

காயாம் = காயாம்

பூவையும் = பூவையும்

பொருவான் = அந்த மலர்களின் நிறத்தை பெற்றவன்

அவன் = அவன் இராமன்,

புலம்பினன் = புலம்பினன்

தளர்வான் = தளர்வான்

'ஆவியும் = உடலில் ஆவியும்

சிறிது = கொஞ்சம்

உண்டு கொலாம்' = இருக்கிறதா

என, அயர்ந்தான், = என்று அயர்ந்தான்

தூவி அன்னம் = மெல்லிய சிறகை உடைய அன்னத்தைப் போன்ற

அன்னாள் திறத்து = சீதையின் பொருட்டு

இவை இவை சொல்லும் = இவ்வாறு சொல்ல ஆரம்பிக்கிறான்

மனைவியின் பிரிவு, இராமனையே புரட்டிப் போடுகிறது என்றால் மற்றவர்கள்   நிலை எப்படி இருக்கும்? அதாவது, மற்ற பெண்கள் சீதை மாதிரி இருந்தால்.

எவ்வளவு அன்போடு இருந்தார்கள் என்று காட்டுகிறது இந்தப் பாடல்கள்.


interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_11.html

1 comment: