Tuesday, March 18, 2025

திருக்குறள் - தூய்மை

 திருக்குறள் - தூய்மை 


ஒவ்வொரு நாளும் வீட்டு வேலை, வெளி வேலை என்று அலைகிறோம். வியர்வை, தூசி, புகை, என்று அசுத்தங்கள் உடல் மேல் படித்து உடம்பு அழுக்கு ஆகிறது. நாற்றம் அடிக்கிறது. உடம்பை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் குளிக்க வேண்டும். ஒரு நல்ல குளியல் போட்டால் அழுக்கு, வியர்வை எல்லாம் நீங்கி உடம்பு சுத்தமாகிவிடும். 


உடம்பை சுத்தம் செய்துவிடலாம். 


உள்ளத்தை? மனதை? எப்படி சுத்தம் செய்வது?


வள்ளுவர் சொல்கிறார் 


"எப்படி நீர் கொண்டு உடம்பை சுத்தம் செய்கிறோமோ, அது போல மனதை வாய்மையால் சுத்தம் செய்யலாம்" என்று. 


பாடல் 


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்


பொருள் 


புறந்தூய்மை = மனதுக்கு வெளியே உள்ள தூய்மை, அதாவது உடலின் தூய்மை 


நீரான் அமையும் = நீரில் குளிப்பதால் அமையும் 


அகந்தூய்மை = உள்ளுக்குள் இருக்கும் மனதின் தூய்மை 


வாய்மையால் காணப் படும் = வாய்மையால் அமையும் 


காணப்படும் என்று கூறியதன் காரணம், உறுதியாக, நிச்சயமாக நடக்கும் என்பதால் கட்டாயம் காணப்படும் என்று கூறினார். 


உடலை தூய்மைப் படுத்த நீரின்றி வேறு வழி இல்லை. 


அது போல மனதை தூய்மைப் படுத்த வாய்மை அன்றி வேறு வழி இல்லை. 


சரி, இந்த மனத்தூய்மை என்றால் என்ன?  


பரிமேலழகர் சொல்கிறார் "மனத் தூய்மை என்பது மெய்யுணர்தல்" என்று. 


மனம் தூய்மையாக இருந்தால்தான் உண்மையை அறிய முடியும். வாய்மை ஒன்றுதான் அதற்கு வழி. 




No comments:

Post a Comment