திருக்குறள் - விளக்கு
நம் வீடுதான். எது எது எங்க இருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும்.
ஒரு நாள் சற்று தாமதமாக வீட்டுக்கு வருகிறோம். இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என்று வைத்துக் கொள்வோமே. மின்சாரம் இல்லை. நம் வீடுதானே என்று நம்மால் எளிதாக உள்ளே சென்று காரியங்கள் செய்ய முடியுமா? அங்கும் இங்கும் முட்டிக் கொள்வோம். கட்டில் ஒரு பக்கம் இடிக்கும். நாற்காலி இன்னொரு பக்கம். மேஜை மறுபக்கம்.
கை பேசி விளக்காவது வேண்டும் எது எது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ள. இடித்துக் கொள்ளாமல் செயல் பட. அடி பட்டுக் கொள்ளாமல் இருக்க. தவறி விழுந்துவிடாமல் இருக்க.
அது வீட்டுக்கு.
நம் வாழ்வை நாம் எப்படி நடத்திச் செல்வது ?
எது சரி, எது தவறு என்று எப்படி தெரியும்? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படித் தெரியும்.
மனம் பூராவும் அறியாமை என்று இருள் மண்டிக் கிடக்கிறது. இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வை செம்மையாக நடத்துவது ?
இந்த அறியாமை என்ற இருளைப் போக்கி வெளிச்சம் தருவது எது ?
வாய்மை என்ற விளக்கே மிகச் சிறந்த விளக்கு என்கிறார் வள்ளுவர்.
பாடல்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
பொருள்
எல்லா விளக்கும் = புற இருளை போக்கும் அனைத்து விளக்குகளும்
விளக்கல்ல = விளக்கு அல்ல
சான்றோர்க்குப் = சான்றோருக்கு
பொய்யா விளக்கே விளக்கு = பொய்யாமை என்ற விளக்கே விளக்கு ஆகும்.
மற்ற விளக்குகள் எல்லாம் சூரியன், சந்திரன், தீ, மற்றும் வீட்டில் ஏத்தும் குத்து விளக்கு, அகல் விளக்கு, மின்சார விளக்கு போன்றவை. இவை புற இருளை மட்டுமே போக்கும். எனவே அவை சிறந்தவை அல்ல.
அக இருளை நீக்கும் வாய்மை என்ற விளக்கே உண்மையான விளக்கு என்று சான்றோர் கொள்வர்.
Useful
ReplyDelete