நான்மணிக் கடிகை - எதுக்கு எது வேண்டும் ?
கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்றால் நல்ல துணி உடுத்திப் போக வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என்றால் நல்ல புத்தங்கள் வேண்டும்.
இது போல வாழ்வில் எது ஒன்றையும் அடைவதற்கு வேறொன்றின் துணை தேவைப்படுகிறது.
ஒருவன் இழிவு அடையாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பேர் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
எப்போதும் கூடவே துணைக்கு ஒன்றும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?
எல்லோரையும் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
நான்மணிக் கடிகை விடை தருகிறது.
பாடல்
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.
பொருள்
இன்னாமை வேண்டின் = ஒருவன் பிறரால் இகழப் பட விரும்பினால்
இரவெழுக = பிச்சை எடுக்க வேண்டும்.
இந்நிலத்து = இந்தப் பூமியில்
மன்னுதல் வேண்டின் = நிலைத்து நிற்க வேண்டும் என்றால்
இசைநடுக = புகழ் தரும் வினைகளைச் செய்ய வேண்டும்
தன்னொடு = எப்போதும் தன்னோடு கூடவே
செல்வது வேண்டின் = ஒன்று இருக்க வேண்டும் என்றால்
அறஞ்செய்க = அறம் செய்க
வெல்வது வேண்டின் = எல்லோரையும் வெல்ல வேண்டும் என்றால்
வெகுளி விடல் = கோபத்தை விட்டு விட வேண்டும்
யாரிடமும், எதையும் இலவசமாகப் பெற நினைக்கக் கூடாது. அது இழிவைத் தரும். எனக்கு அந்த உதவி செய், இந்த உதவி செய், என்று நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தால், உன்னை ஒரு பிச்சைக்காரன் என்றே அவர்கள் நினைப்பார்கள்.
நல்ல காரியங்களைச் செய்தால் தனக்குப் பின்னும் பேர் நிலைத்து நிற்கும்.
ஒருவன் செய்யும் அறம் அவனோடு எப்போதும் கூடவே இருக்கும்.
கோபம் இல்லாதவன் மற்றவர்களை எளிதில் வென்று விட முடியும்.
No comments:
Post a Comment