கம்ப இராமாயணம் - அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே
https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post_18.html
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு.
நமக்கு வரும் நன்மையும் தீமையும் நாமே தேடிக் கொள்வது அல்லாமல் பிறர் நமக்குச் செய்வது அல்ல.
ஆனால், நாம் நினைப்பது வேறு மாதிரி.
நன்மை வந்தால், எல்லாம் என் செயல் என்று இறுமாப்பு கொள்கிறோம். என் திறமை, என் அறிவு, என் ஆற்றலால் வந்தது என்று நினைக்கிறோம்.
துன்பம் வந்தால், விதி, மற்றவர்கள் செய்த சதி, பொறாமை பிடித்தவர்கள் செயல், காலம் சரி இல்லை, நாளும் கோளும் சரி இல்லை, தெய்வ குற்றம் என்று எல்லாவற்றின் மேலும் பழி போடுகிறோம்.
என்ன செய்வது. மனிதனின் பலவீனம்.
இராவணன் பேராற்றல் பெற்றவன். அவனை யாராலும் அழிக்க முடியாது.
முக்கோடி வாழ்நாள், முயன்று உடைய பெரும் தவம், எக்கோடி யாராலும் வெள்ளப்படாய் என்ற வரம் எல்லாம் உடையவன்.
அவனை அழிக்கும் ஆற்றல் ஒரே ஒரு சக்த்திக்குத்தான் உண்டு.
அதுதான் - அறம்.
அறம் பிறழ்ந்தால் அழிவு வரும். அது யாராக இருந்தாலும். எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், எவ்வளவு தவம் இருந்தாலும் , அறம் தப்பினால் அழிவு நிச்சயம்.
இராவணன் அழிவு, அவன் மாற்றான் மனைவியை அபகரித்து வந்தது.
"தான் கெட்டது மட்டும் அல்லாமல், இந்த மூன்று உலகங்களையும் அறம் தவறி நடக்க வைத்த பாவியான இராவணனின் உயிரைக் கொல்ல நடந்தது இது. பாம்பணையில் துயின்ற பரமன் இராமனே. இந்த சீதை அந்தக் கமலச் செல்வியே"
என்று அனுமன் நினைக்கிறான்.
பாடல்
'மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு
இதால்;
ஆவதே;அரவணைத் துயிலின் நீங்கிய
தேவனே அவன்;இவள் கமலச்செல்வியே.
பொருள்
'மூவகை = மூன்று வகைப்பட்ட
உலகையும்= உலகங்களையும்
முறையின் நீக்கிய = அறத்தில் இருந்து விலகிச் செல்லும் படி செய்த
பாவி = பாவியான இராவணன்
தன் உயிர்கொள்வான் = தன்னுடைய உயிரைப் போக்கிக் கொள்ள
இழைத்த பண்பு இதால்; = செய்த செயல் இது (சீதையைக் கடத்தி வந்தது)
ஆவதே = நடக்கப் போகிறது
அரவணைத் = பாம்பு அணையில்
துயிலின் நீங்கிய = உறக்கம் விட்டு நீங்கிய
தேவனே அவன் = கடவுளே அந்த இராமன்
இவள் = இந்த சீதை
கமலச்செல்வியே = தாமரையில் வசிக்கும் செல்வத்தின் திருமகளே
பணம் இருந்தால், அதிகாரம் இருந்தால், பக்தி செய்தால், தான தர்மம் செய்தால் செய்த பாவம் போய் விடும், சமாளித்துக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.
இராவணனிடம் இல்லாத செல்வமா, அவனிடம் இல்லாத வீரமா, அதிகாரமா, அவன் செய்யாத தவமா...என்ன இருந்தாலும் என்ன, அறம் பிழைத்தால் அழிவு வரும். யாரும் தப்ப முடியாது.
நம் இலக்கியம், வாழும் முறை, கலாச்சாரம், பண்பாடு, எல்லாமே அறம் அறம் என்று அறம் சார்ந்தே வந்திருக்கிறது.
அறம் தான் எல்லாவற்றிற்கும் அடி நாதம்.
No comments:
Post a Comment