Monday, June 13, 2022

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவுநளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு


எப்பப் பார்த்தாலும் அறம், பக்தி, துறவு, நிலையாமை என்று படிக்காமல் இடையிடையே கொஞ்சம் ஜொள்ளு பாடல்களையும் அறிவோம். 


தமிழ் இலக்கியத்தில் ஜொள்ளுக்கு ஒரு குறைவில்லை. ஒரு எல்லை தாண்டாமல் மிக நளினமாக காதலை, அதன் நெருக்கத்தை, பிரிவை, சோகத்தை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். 


நள மன்னனுக்கும் தமயந்திக்கும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல். அன்னம் எல்லாம் தூதுவிட்டு முடிந்து விட்டது. நளன், தமயந்தி இருக்கும் மாளிகைக்கு வருகிறான். அது பெரிய கதை. அதை பின்னர் காண்போம். 


முதன் முதலாக இருவரும் சந்திக்கிறார்கள். 


அந்த இடத்தில ஒரு பாட்டு வைக்கணும் என்று புகழேந்தி நினைக்கிறார். 


முதன் முதலாக காதலர்கள் சந்திக்கிறார்கள். என்னென்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றையும் இலக்கியத்தில் வெளிப்படையாக சொல்லவும் முடியாது. சொல்லாவிட்டாலும் சுவை இருக்காது. கத்தி மேல் நடப்பது போன்ற இடம். கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடும் அபாயம். 


மிக அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார் புகழேந்தி. 


நள மன்னனை பார்த்ததும் அவள் இது நாள் வரை கட்டுப் படுத்தி, அடக்கி வைத்து இருந்த கற்பின் கதவு தாழ் திறந்தது என்கிறார். 


அவ்வளவுதான். மற்றவற்றை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறார். 


பாடல் 


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று

தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்

அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்

கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_13.html


(Pl click the above link to continue reading)




நீண்ட கமலத்தை  = நீண்ட தாமரை போன்ற முகம் கொண்ட நளனை 


நீலக் கடைசென்று = நீலோற்பலம் போன்ற கண்களை உடைய தமயந்தியின் கண்கள் 


தீண்டும் அளவில் = தீண்டிய அந்த நேரத்தில் 


திறந்ததே = திறந்து கொண்டதே  


பூண்டதோர் = பூட்டி வைக்கப்பட்ட 


அற்பின்தாழ = அன்பு மிக 


கூந்தலாள் = கூந்தலை உடைய தமயந்தியின் 


வேட்கை =  ஆசையை 


அகத்தடக்கிக் = உள்ளத்துள் அடக்கி 


கற்பின்தாழ் = கற்பு என்ற தாழ்பாள் 


வீழ்த்த கதவு. = வீழ, திறந்து கொண்ட கதவு 


என்ன ஒரு உவமை. 


அவளுடைய மனம் என்ற அறையில், அவளுடைய நிறை தன்மை என்ற கதவுக்கு, கற்பு என்ற தாழ்பாள் போட்டு வைத்து இருந்தாள். நளனை கண்டவுடன், அவன் மேல் கொண்ட காதலால் அந்த கற்பு என்ற தாழ்பாள் விலகி கதவு திறந்து கொண்டது என்கிறார்.


கவிதை ஓட்டத்தில் படித்தால் அதன் சுவை தெரியும். 


சுகமான, ஒரு தென்றல் தலை கலைத்து விட்டுப் போவது போன்ற ஒரு சுகம். 




Sunday, June 12, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார்

  

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


)


பிறன் மனைவியை காதலித்து வாழும் பேதைமை அறம் பொருள் கண்டாருள் இல்லை என்றார் முதல் குறளில். 


அடுத்த குறளில் அது எவ்வளவு பெரிய பேதைமை என்று சொல்கிறார். 


காமவயப்ட்டு எவ்வளவோ பேர் எவ்வளவோ தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் வகைப் படுத்தினால், இந்த பிறன் மனை நோக்கியவன் இருக்கிறானே அவன் எல்லோருளும் கடைசியாக இருப்பான் என்கிறான். அதாவது உள்ளதுக்குள் மோசமானவன் என்கிறார். 




பாடல் 


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


(pl click the above link to continue reading)


அறன்கடை = அறத்தின் எல்லையில், அதாவது வெளியில் 


நின்றாருள்  = நின்றவர்களுள் 


எல்லாம் = அனைவரிலும் 


பிறன்கடை = மற்றவன் வீட்டு வாசலில் 


நின்றாரின் = நின்றவனைப் போல 


பேதையார் இல் = பேதை வேறு யாரும் இருக்க மாட்டார்கள் 




அற நெறி விலகியவர்கள் ஏதோ பெரிய வரிசை (queue) நிற்பது போலவும், அதில் கடைசியாக நிற்பவன் இந்த பிறன் மனை விரும்பியவன் என்றும் கூறுகிறார். 


இன்னொருவன் மனைவி மேல் ஒருவன் ஏன் ஆசை கொள்கிறான்? அவளிடம் ஏதோ இன்பம் கிடைக்கும் என்பதால் தானே? சமுதாயம் சீரழியும் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீ தேடிய இன்பமும் உனக்குக் கிடைக்காது என்கிறார் வள்ளுவர். 


அப்புறம் எதற்கு அதைச் செய்வானேன்? 


வள்ளுவர் "நின்றாருள் எல்லாம்" என்று சொல்லி விட்டார். நின்றவர்கள் எல்லாம் யார் யார் என்று சொல்லவில்லை. பரிமேலழகர் சொல்கிறார். 


காம வயப்பட்டவர்கள் பலவிதமான குற்றங்களைச் செய்வார்கள். அவை என்னென்ன என்று பரிமேலழகர் சொல்கிறார். 


காமவயப்படவன் 


பெண்வழிச் சேறல் 

வரைவின் மகளிரைச் சேறல் 

இழிகுல மகளிரைச் சேறல் 

பிறன்மனை சேறல் 


என்ற நான்கு விதமான குற்றங்களைச் செய்வார்கள் என்கிறார். 


அவை என்னென்ன என்று பார்ப்போம். 


சற்று நெருடலான விடயம்தான். என்ன செய்வது? 


பெண்வழிச் சேறல் என்றால் பெண்ணின் பேச்சைக் கேட்டு நடப்பது. "ஆஹா ஆணாதிக்க சிந்தனை, பெண்ணடிமை" என்று கொடி பிடிக்கும் முன் சற்று பொறுப்பது நல்லது. 


ஒரு பெண்ணிடம் காமவசப்பட்டு அவள் சொல்வதைக் கேட்டு வீட்டு மற்றும் நாட்டு நிர்வாகத்தை நடத்துவது குற்றம் என்கிறார். அன்போடு மனைவி சொல்கிறாள், அம்மா சொல்கிறாள் என்றால் அதைக் கேட்பதில் தவறில்லை.  காமவசதில்  ஒரு பெண் சொல்கிறாள் என்பதற்காக ஒரு நாட்டிலோ, நிர்வாகத்திலோ ஒருவன் ஒரு முடிவை எடுப்பான் என்றால் அது தவறு என்கிறார்.  


நாம் செய்தித் தாள்களில் பார்கிறோமே. பெரிய அதிகாரிகளை, இராணுவ இரகசியம் தெரிந்தவர்களை, அரசியல்வாதிகளை பெண்களை அனுப்பி மயக்கி, பின் அதைக் கொண்டு அவர்களை மிரட்டி தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  இதை ஆங்கிலத்தில் Honey Trap என்று சொல்லுவார்கள். 


அது முதல் குற்றம். 


இரண்டாவது  வரைவின் மகளிரைச் சேறல்.   இப்படிதான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை செய்து கொண்டு வாழ்வது ஒரு முறை. அப்படியெல்லாம் இல்லை, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பது இன்னொரு முறை. வரைவு இல்லாமல் வாழும் பெண்களை வரைவின் மகளிர் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு கூட்டம் இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. விலைமகளிர் என்று சொல்லுவார்களே. நாகரீகம் கருதி, மேலும் விவரிக்காமல் விட்டு விடுவோம். 


மூன்றாவது, இழிகுல மகளிர் என்கிறார். அதாவது தன்னை விட தாழ்ந்த, பொருத்தம் இல்லாத பெண்ணிடம் காமம் கொண்டு செல்வது. இதை எப்படி விவரிப்பது ? அப்படியே விட்டுவிடுகிறேன். இது குலம் பற்றியது அல்ல, பொருந்தா காமம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 


அடுத்ததாக பிறன் மனை நயத்தல். 


ஏன் இந்த பிறன் மனை நயத்தலை எல்லோரிலும் கீழாக வள்ளுவர் சொன்னார் என்றால்....


முதல் சொன்ன மூவர்க்கும் அறமும், பொருளும் நட்டப்படும். ஆனால் இன்பம் கிடைக்கும். 


ஆனால், பிறன் மனை நயந்தவனுக்கு இன்பமும் கிடைக்காது.  எப்போது அந்தப் பெண்ணின் கணவன் வந்து விடுவானோ, வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து தான் இன்பம் அனுபவிக்கப் போக முடியும். அப்படி ஒரு பயத்தில் இன்பம் அனுபவிக்க முடியுமா? 


அறமும் போய், பொருளும் போய், இன்பமும் கிடைக்காமல் போவதால் அவனை வடி கட்டின முட்டாள் என்கிறார் வள்ளுவர். 


எல்லாவற்றையும் இழந்து, ஒன்றும் கிடைக்காமல் நிற்பவனை என்ன என்று சொல்லுவது?


அது மட்டும் அல்ல, பழி, அவமானம், தலை குனிவு எல்லாம்வரும் அல்லவா?


என்னதான் கிடைக்கும் என்று இன்னொருவன் மனைவியை விரும்பி ஒருவன் போகிறான் என்று  வள்ளுவர் அவனை கண்டிக்கிறார். 


சற்று சங்கடமான குறள்தான். அறம் சொல்ல வந்துவிட்டால் எல்லாம் கூறித்தான் ஆகவேண்டும் என்று வள்ளுவர் அதையும் வெளிபாடையாக கூறினார். 
















Saturday, June 11, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே 


ஆன்மீகம் சிலசமயம் குழப்பமாகவும், தெளிவற்று மயக்கம் தருவதாகவும் தோன்றும். 


ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறும் கூட்டம். 


இன்னொரு பக்கம் கடவுள் இருக்கிறார் ஆனால் எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்று கூறும் மதங்கள் ஆயிரம். என் கடவுள் முக்தி தருவார், என் கடவுள் இறுதித் தீர்ப்பு தருவார், என்று ஆளாளுக்கு தங்கள் மதம், கடவுள் பற்றிக் கூறுகிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி கொள்வது? 


நாம் பிறந்த ஒரே காரணத்தால் என் மதம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? 


சரி கடவுள் கூட ஒருவர்தான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவரை அடையும் வழி எது தெரிய மாட்டேன் என்கிறது. 


மதங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் ஒரு புறம் இருக்கட்டும்.  இந்து மதத்தின் உள்ளே கூட பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம்  என்று பலவிதமான மார்க்கங்கள் இருக்கின்றன. எதை கொள்வது. எதைத் தள்ளுவது என்று புரியாமல் குழப்பம் வரும். 


சரி ஏதோ ஒரு கடவுள், ஏதோ ஒரு மார்க்கம் என்று முடிவு செய்து விட்டால் கூட, அதில் போக எங்கே நேரம் இருக்கிறது?  வீடு, வேலை,  சம்பாத்யம்,  பொழுது போக்கு, உடல் ஆரோக்கியம் என்று ஒவ்வொரு நாளும் போய் விடுகிறது.  


இதில் எங்கே ஆன்மீகத்தில் ஈடுபட எங்கே நேரம் இருக்கிறது? 


இப்படி எல்லாம் குழப்பம் வரும் என்று மணிவாசகருக்குத்  தெரியும். 


" பக்தி செய்யும் பக்தர்களுக்குள் இன்றே வந்து சேராமல், மயக்கம் கொண்டவர்களே, பின்னாளில் நீங்கள் துன்பப்படும் போது உங்களை யார் மதிக்கப் போகிறார்கள்? உங்கள் குழப்பம் தெளிய வேண்டும் என்றால், ஒன்று செய்யுங்கள், சிவலோகத்து அதிபன், பாம்பணிந்த கைகளை கொண்டவனை அடையாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஐயோ, ஐயோ, ஐயோ "


என்று பதறுகிறார். 


பாடல் 


 புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர்,

மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்;

தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன்

அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_11.html


(please click the above link to continue reading)



 புரள்வார் = தரையில் கிடந்து புரள்வார் 


தொழுவார் = வணங்குவார் 


புகழ்வார் = போற்றுவார் 


 ஆய் = ஆகி 


இன்றே வந்து = இன்றே வந்து 


ஆள் ஆகாதீர், = ஆட்படாமல் 


மருள்வீர் = மயக்கம் கொள்வீர்கள் 


பின்னை = பின்னாளில் 


மதிப்பார் ஆர்? = உங்களை யார் மதிக்கப் போகிறார்கள் 


மதியுள் கலங்கி = புத்தி குழம்பி 


மயங்குவீர்; = மயக்கம் கொண்டு 


தெருள்வீர் ஆகில் =அதில் இருந்து தெளிவு அடைய விரும்பினால் 


இது செய்மின் = இதைச் செய்யுங்கள் 


சிவலோகக் கோன் = சிவலோகத்து அதிபன் 


திருப்புயங்கன் = பாம்பணிந்த கைகளை கொண்டவன் 


அருள் ஆர் பெறுவார் = அருளை வேறு யார் பெறுவார்கள் ?


அகல் இடத்தே? = வேறு இடத்தில் 


அந்தோ! அந்தோ! அந்தோவே! = ஐயோ, ஐயோ, ஐயோவே 


படித்துக் கொண்டே இருந்தால், சிந்தித்துக் கொண்டே இருந்தால் இருக்க வேண்டியதுதான்.  குழப்பம்தான் மிஞ்சும். 


அவனை அறிவு கொண்டு காண முடியாது. 


அறிவு ஏற ஏற புரளுதலும், தொழுதலும் நிகழ்வது கடினமாகிப் போகும். அறிவு தடுக்கும்.  "தரையில் கிடந்து புரள்வதா?" என்று அறிவு தடுக்கும். 


ஆனால், புரண்டும், தொழுதும், போற்றியும் எளிதாக இறைவனை அடையலாம்.  அதை விட்டு விட்டு, ஏதேதோ செய்து கொண்டிருகிரீர்களே, ஐயோ, ஐயோ, ஐயோ என்று  பச்சாதப் படுகிறார் மணிவாசகர். 


இதெல்லாம் செய்ய நாள் கிழமை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. 


"இன்றே இதைச் செய்மின்" என்கிறார். 


இந்தப் பாடலோடு யாத்திரைப் பத்தில் உள்ள பத்து பாடல்களையும் நாம் பார்த்து விட்டோம். 


வாசித்தமைக்கு நன்றி. 



Friday, June 10, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 1 - அறம் பொருள் கண்டார்

 

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 1 - அறம் பொருள் கண்டார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


)


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 


இன்னொருவன் மனைவியை விரும்பவதில் என்ன தவறு. அவளுக்கும் பிடித்து இருக்கிறது. அவனுக்கும் பிடித்து இருக்கிறது. இருவர் மனமும் ஒத்துப் போகிறது என்றால் அதில் என்ன தவறு? 


ஒரு  வேளை அந்தப் பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அது தவறு. அவளும் அதற்கு உடன் படுகிறாள் என்றால் என்ன தவறு என்று கேள்வி கேட்கும் காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.


இப்படி எல்லாம் கேட்பார்கள் என்று அன்றே வள்ளுவருக்குத் தெரிந்து இருக்கிறது. அதற்கும் பதில் சொல்லி இருக்கிறார். 


அதை வள்ளுவர் சொல்லி இருக்கும் விதம் இருக்கிறதே, அது மிக அருமை. எப்படி ஒரு மனிதனால் சிந்திக்க முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது. 


"இன்னொருவன் மனைவியை விரும்பும் பேதைமை (மடத்தனம் அறம் பொருள் கண்டவர்களிடம் இருக்காது" 


என்று இரத்தின சுருக்கமாகச் சொல்கிறார். 


பாடல் 



பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


(pl click the above link to continue reading)


பிறன் = மற்றவன் 


பொருளாள் = உடைமையான பெண்ணை, மனைவியை 


பெட்டொழுகும் = காதலித்து வாழும் 


பேதைமை = அறிவீனம் 


ஞாலத்து = உலகில் 


அறம் பொருள் = அறம் பொருள் 


கண்டார்கண் = கண்டவர்களிடம்


இல் = இல்லை 



இதில் என்ன அவ்வளவு பெரிய ஆழமான கருத்து இருக்கிறது என்று கேட்கிறீர்களா. 


பரிமேலழகர் உரை செய்கிறார். 


"அறம் பொருள் கண்டார்" என்றால் என்ன. அறத்தையும், பொருளையும் போய் பார்த்து விட்டு வருவதா? "நேற்று வங்கியில் ஒரு கோடி ரூபாய் இருப்பதைக் கண்டேன்" என்றால் பொருளை கண்டுவிட்டேன் என்று அர்த்தமா?


இல்லை. 


அறம் பொருள் கண்டார் என்றால் அற நூல்களையும், பொருள் நூல்களையும் படித்து அறிந்தவர்கள் என்று அர்த்தம். 


சரி. 


ஆனால், வாழ்க்கை என்பது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று கூறுகளை உடையது. வள்ளுவர் அறம், பொருள் மட்டும்தானே சொல்லி இருக்கிறார். ஏன் இன்பம் பற்றிச் சொல்லவில்லை? 


ஏன் என்றால், இன்ப நூல்களில் இன்பம் அனுபவிப்பது மட்டும் தான் இருக்கும். அது யாரிடம் என்றெல்லாம் இருக்காது. அறம், பொருள், இன்பம் கண்டார் கண் இல் என்று போட்டிருந்தால், நான் படித்த பாலுணர்வு சார்ந்த புத்தகத்தில் விரும்பும் எந்தப் பெண்ணையும் அனுபவிக்கலாம் என்று போட்டு இருக்கிறதே என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எனவே, வள்ளுவர் அறம் பொருள் கண்டார் இல் என்று இன்பத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். 


அவர் சொல்லாமல் விட்டதில் எவ்வளவு பொருள் இருக்கிறது பாருங்கள். 


இன்று பாலுணர்வு சார்ந்த (Pornography)  புத்தகங்கள், வீடியோக்கள், வலை தளங்கள் என்று எவ்வளவோ வந்துவிட்டன. அதில் அனைத்து வக்கிரங்களும் இருக்கின்றன. அதையெல்லாம் படித்து/பார்த்து விட்டு அதில் உள்ளது போல் நடக்கிறேன் என்று ஆரம்பித்து விடக் கூடாது. 


இன்னும் ஒரு படி மேலே போகிறார் பரிமேலழகர். 


"அறம் பொருள் கண்டார் கண் இல் " என்பதில், அற நூல்களையும், பொருள் நூல்களையும் அறிந்தவர்கள் என்று சொன்னார் அல்லவா. அதைப் படிக்காதவனுக்கு அறம் என்றால் என்ன என்று தெரியாது. பொருள் என்றால் என்ன என்று தெரியாது. அப்படிப்பட்டவனிடம் அறமும் பொருளும் நிற்காது. அறமும் பொருளும் நில்லாத இடத்தில் இன்பம் எப்படி நிற்கும்?


பிறன் மனை விழைந்து, அது எல்லோருக்கும் தெரிய வர, அவன் மனைவி அவனை வெறுத்து ஒதுக்குவாள். சட்ட சிக்கல்கள் பல வரும். பொருள் விரயம் ஆகும். வேலையை சரி வர செய்ய முடியாது. வருமான இழப்பு வரும். இருக்கின்ற சேமிப்பு குறையும். இறுதியில் துன்பம் வந்து சேரும். 


அறமும் பொருளும் இல்லாத இடத்தில் இன்பம் நில்லாது. இன்பம் வரலாம், ஆனால் அது எல்லாவற்றையும் கொண்டு போய் விடும். .


புகழ்,பொருள், உறவு, சுற்றம் என்று எதுவும் இருக்காது. .


ஒருவன் மற்றவனுடைய மனைவியை விரும்புகிறான் என்பது வெளியே தெரிய வந்தால், அவனை நம்பி யார் வீட்டினுள் விடுவார்கள். மற்றவன் மனைவியை விரும்பிய மாதிரி என் வீட்டு பெண்கள் மேலும் கை விட்டால் என்ன செய்வது என்று பயந்து அவனை சேர்க்க மாட்டார்கள். தனித்து விடப் படுவான். அவனுக்கு என்ன இன்பம் இருக்கும்? 


அது மட்டும் அல்ல, ஒழுக்கக் குறைவு ஏன் வருகிறது? கல்வி அறிவு இன்மையால். எது சரி, எது தவறு என்று அறியும் அறிவு இன்மையால். 


பரிமேலழகரில் இருந்து சற்று விலகி நாம் கொஞ்சம் வேறு கோணத்தில் சிந்திப்போம். 


"அறம் பொருள்" என்பதை அறத்தின் பொருளை என்று கொண்டால் வெறுமனே அற நூல்களை படித்தால் மட்டும் போதாது. அதன் பொருள் தெரிய வேண்டும். 


அப்படி உரை சொல்ல வழி இருக்கிறதா என்று கேட்டால்....


இன்று உலகில் தவறு செய்பவர்கள் பெரும்பாலானோர் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். படிக்காத பாமரன் "அது தவறு, பாவம்" என்று ஒதுங்கி ஒழுங்காக வாழ்கிறான். படித்தவன் எப்படி மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்வது என்று சிந்திக்கிறான். 


இராவணன் படிக்காத படிப்பா. "நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவை" உடையவன், பிறன் மனை விழைந்தான் அல்லவா? அற நூல்களை படித்து இருக்கிறான். திருப்பி அழகாக சொல்கிறான். ஆனால், அதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை. 


"அறம் என்று ஒன்று உண்டு, அது அமரர்க்கும் அறிய ஒண்ணாதது" என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். 


"ஈறில் அறம்" என்பான் கம்பன். எல்லை இல்லாது 


படித்தால் மட்டும் போதாது, அதன் பொருள் தெரிந்து நடக்க வேண்டும். 


"அறம் பொருள் கண்டார் கண் இல்" என்பதை அறத்தின் பொருளை கண்டவர்களிடம் இல்லை என்று கொள்ளல்லாம். 


இலக்கண முறைப்படி அது சரியா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். சரி இல்லை என்றால் விட்டுவிடலாம். 


மேலும் சிந்திப்போம். .





Thursday, June 9, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - இறுதிப் பாகம்

       

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - இறுதிப் பாகம் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


பாகம்  7: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


பாகம்  8: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


இரண்டாவது பாடலில் 


"அப்படிப்பட்ட சுக்ரீவனுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் வாலி. அவன் மிகுந்த பலம் பொருந்தியவன். இந்த இராவணன் இருக்கிறானே அவனை இந்த வாலி தன் வாலில் கட்டி எட்டுத் திசையும் பாய்ந்து செல்லும் வலிமை மிக்கவன். அது மட்டும் அல்ல தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவர்கள் அமுதம் கடைந்த போது அவர்களுக்கு உதவி செய்தவன்"

என்கிறான். 


இறுதியாக மூன்றாவது பாடலில் தான் யார் என்று சொல்ல வருகிறான். அது கூட எப்படி ?


"அவ்வளவு பலம் பொருந்திய வாலியை, உன் கணவன் இராமன் ஒரே அம்பில் வீழ்த்தி, சுக்ரீவனுக்கு அரசைத் தந்தான். அந்த சுக்ரீவனுக்கு நான் மந்திரியாக உள்ளேன்.  வாயு பகவானின் பிள்ளையான என் பெயர் அனுமன்"


என்று சொல்லி முடிக்கிறான். 





பாடல் 


அன்னவன் தன்னை உம்கோன்

    அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,

பின்னவற்கு அரசு நல்கித்

    துணை எனப் பிடித்தான்; எங்கள்

மன்னவன் தனக்கு நாயேன்

    மந்திரத்து உள்ளேன், வானின்

நல்நெடும் காலின் மைந்தன்,

    நாமமும் அநுமன் என்பேன்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_9.html


(pl click the above link to continue reading) 




அன்னவன் தன்னை = அப்படிப்பட்ட வாலியை 


உம்கோன் = உன் தலைவன்  (இராமன்) 


அம்பு ஒன்றால் = ஒரே ஒரு அம்பினால் 


ஆவி வாங்கிப், = உயிரைப் போக்கி 


பின்னவற்கு = சுக்ரீவனுக்கு 


அரசு நல்கித் =அரசைத் தந்து 


துணை எனப் பிடித்தான் = துணையாகக் கொண்டான் 


எங்கள்  மன்னவன் = எங்கள் மன்னவனான 


தனக்கு = சுக்ரீவனுக்கு 


நாயேன் = அடியவன் 



மந்திரத்து உள்ளேன் = ஆலோசனை செய்யும் தொழிலை செய்கிறேன். மந்திரியாக உள்ளேன் 


வானின் = வானுலகில் 


நல்நெடும் காலின் = நல்ல நெடிய காற்றின் 


மைந்தன், = மகன் 


நாமமும் அநுமன் என்பேன். = பெயரும் அனுமன் என்று சொல்லுவேன் 


என்று தன்னைப் பற்றி இறுதியில் சொல்லி முடிக்கிறான். 


நீ யார் என்று கேட்டதற்கு "என் பெயர் அனுமன்" என்று சொல்லி நிறுத்திக் கொண்டிருக்கலாம். 


அனுமன் சிந்திக்கிறான். எதைச் சொன்னநல் சீதையின் மனம் மகிழும், அவள் மனம் ஆறுதல் அடையும் என்று எண்ணி, அவளுக்கு நன்மை தரும் சொற்களைக் கூறுகிறான். 


அவன் சொன்னதில் உள்ள உட்பொருள் என்ன?


"நீ இந்த இராவணனைப் பற்றிக் கவலைப் படுகிறாய்.  கவலைப் படத் தேவையில்லை. இந்த இராவணனை ஒரு பூச்சி போல வாலில் கட்டி எட்டுத் திக்கும் பறந்தவன் வாலி. அப்பேற்பட்ட வாலியை ஒரே அம்பில் கொன்றவன் இராமன். அவனுக்கு இந்த இராவணன் எம்மாத்திரம். கவலையை விடு. அது மட்டும் அல்ல, சூரிய குமாரனான சுக்ரீவனும், வாயு குமாரனான நானும் இராமனுக்கு துணை இருக்கிறோம். எங்கள் குரங்கு கூட்டம் முழுவதும் இராமனின் பின்னால் நிற்கிறது"


என்று அவளுக்கு தெம்பு ஊட்டும் வகையில் கூறுகிறான். 


எவ்வளவு அழகாக, ஆழமாக, நுண்ணியமாகப் பேசுகிறான். கேட்பவர் மனம் அறிந்து பேச வேண்டும். அவர்கள் மனம் மகிழும் படி பேச வேண்டும். நம்பிக்கையை விதைக்கும் சொற்களை பேச வேண்டும். 


கம்ப இராமாயணத்தில் இது ஒரு அருமையான இடம். 


மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்க இடம். 


இதுவரை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. 


Wednesday, June 8, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - ஒரு முன்னுரை

 திருக்குறள் - பிறனில் விழையாமை - ஒரு முன்னுரை 


இல்லறம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 


இல்வாழ்க்கை - வாழ்க்கைத் துணைநலம் - புதல்வர்களைப் பெறுதல் - அன்புடைமை - விருந்தோம்பல் - இனியவை கூறல் -  செய்நன்றி அறிதல் - நடுவு நிலைமை - அடக்கமுடைமை - ஒழுக்கமுடைமை 


என்பது வரை ஒரு ஆற்றொழுக்காக சிந்தித்து வந்தோம்.


அடுத்த அதிகாரமாக 'பிறனில் விழையாமை' பற்றிக் கூறுகிறார். 


அதாவது ஒருவனுக்கு  சொந்தமான மனைவியை மற்றவன் விரும்பும் தீமை பற்றிக் கூறுகிறார். 


பிறனில் விழையாமை = பிறன் + இல் + விழையாமை. பிறருடைய இல்லத்தை விரும்பாமை. இல்லம் என்பது மனைவியை குறித்து நின்றது. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


(Pl click the above link to continue reading)


ஒரு சமுதாயம், ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் வீடு சிறக்க வேண்டும். வீடுதான் அடிப்படை. வீட்டைச் சிதைத்தால் நாடு சிதைந்து போகும். 


கணவன் மனனவி உறவு என்பது வீட்டுக்கு அடிப்படை. அது சிதியுமானால் வீடு பிளவு படும். வீடு பிளவு பட்டால் குழந்தைகள் தவிக்க விடப்படுவார்கள். இப்படி பல சிக்கல்கள் வந்து சேரும். 


கணவன் மனைவி உறவுக்குள் இன்னொரு சக்தி நுழையுமானால் அந்த உறவு பலவீனப்படும். 


இந்த உறவுக்குள் பல சக்திகள் உள்ளே நுழைய முற்படுகின்றன. 


முதலாவது பெரிய சக்தி, அரசாங்கம். குடும்பத்துக்குள் அரசாங்கம் நுழைந்தால் அது பலவீனப்படும். 


அது எப்படி ஒரு குடும்பத்துக்குள் அரசு நுழைய முடியும்? என்று கேட்டால் நேரடியாக நுழைய முடியாது. சட்டங்கள் மூலம் அரசு நுழையும். .


கணவன் மனைவிக்குள் ஏதோ சண்டை. பேச்சு முற்றிப் போய் கணவன் கோபத்தில் கை நீட்டி விடுகிறான். அது தவறுதான். மன்னிக்க முடியாத குற்றம்தான். அந்தத் தவறை உணர்ந்து, அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு, அவளை சமாதனப்படுத்த எவ்வளவு கீழே வர முடியுமோ அவ்வளவு வருவான். அதுதான் குடும்பம். இப்போது என்ன ஆகிறது என்றால், கணவன் அடித்து விட்டால் உடனே காவல் துறைக்கு தெரிவித்து, Domestic Violence, Human Rights Violence, Dowry Harassment, என்று பல சட்ட்டங்களில் அவனை கைது செய்து உள்ளே தள்ளி அவனை தண்டிக்க அரசு வழி செய்கிறது. பெண்களை பாதுகாக்க இப்படி பல வழிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்ன ஆகும். அவன் சிறை செல்வான். வெளியே வந்து ?


பெற்றோர் பிள்ளைகளை அடித்தால் பெற்றோரை சிறை செய்யும் சட்டங்கள் வந்து விட்டன.


ஆசிரியர் பிள்ளைகளை தண்டித்தால் ஆசிரியரை கைது செய்ய சிறையில் தள்ளும் சட்டங்கள் வந்துவிட்டன. 


இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். வள்ளுவர் இதைப் பற்றி பேசவில்லை. 


வள்ளுவர் சொல்லுவது இன்னொரு தீமை பற்றி. 


ஒருவனின் மனைவியை இன்னொருவன் விரும்பும் தீய ஒழுக்கம் பற்றி இங்கே கூறுகிறார். 


ஒரு கணவன் அழகு இல்லாதவனாக இருக்கலாம், வீரம் இல்லாதவனாக இருக்கலாம், நிறைய சம்பாதிக்கும் திறன் இல்லாதவனாக இருக்கலாம், அல்லது அவனிடம் கோபம் போன்ற தீய குணங்கள் இருக்கலாம்...


அவற்றை சாக்காக வைத்துக் கொண்டு இன்னொருவன் அவனுடைய மனைவியை அடைய நினைப்பது தவறு என்று சொல்ல வருகிறார். 


ஒருவன் பலசாலியாக இருக்கிறன் என்பதற்காக பலவீனமாக உள்ள ஒருவனின் மனைவியை பறிக்க நினைத்தால் சமுதாயம் வலுவிழந்து போய்விடும். 


"உன் கணவன் சரியான முரடன். அன்பு செலுத்த தெரியாதவன், நீயும் பாவம் எத்தனை நாள் தான் அவனை சகித்துக் கொண்டு இருப்பாய் " என்று ஒரு பெண்ணின் மனதை மயக்கி அவளை அடைய நினைக்கும் தீய ஒழுக்கத்தை இந்த அதிகாரத்தில் கண்டிக்கிறார். .


ஒவ்வொரு ஆடவனும் மாற்றான் மனைவி மேல் ஆசை வைத்தால் ஒரு சமுதாயம், ஒரு நாடு என்ன ஆகும்? 


இது ஒரு மிகப் பெரிய தீமை என்பதால், அதற்காக ஒரு அதிகாரமே செய்கிறார் வள்ளுவர். 


தகாத காமம் ஒரு மனிதனை மிக எளிதாக தவறு செய்யத் தூண்டும். புத்தியை மயக்கும். காமம் சாம்ராஜியங்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. நாட்டை மண்ணோடு மண்ணாக்கி இருக்கிறது. குலத்தை வேரறுத்து இருக்கிறது. 


அப்படி காம வசப்பட்டு இன்னொருவன் மனைவியை விரும்பும் தீ ஒழுக்கம் பற்றி இந்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


என்ன என்று சிந்திப்போம். 




Tuesday, June 7, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 8

      

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 8


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


பாகம்  7: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


என்றான் என்ற செய்தியை முந்தைய பதிவில் சிந்தித்தோம். 


மேலும் அனுமன் தொடர்கிறான். 


இப்போதாவது "வீர நீ யார்" என்ற கேள்விக்கு தன்னைப் பற்றிக் கூறினானா ?


அனுமன் என்ன சொல்கிறான் என்று காண்போம்.


"அப்படிப்பட்ட சுக்ரீவனுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் வாலி. அவன் மிகுந்த பலம் பொருந்தியவன். இந்த இராவணன் இருக்கிறானே அவனை இந்த வாலி தன் வாலில் கட்டி எட்டுத் திசையும் பாய்ந்து செல்லும் வலிமை மிக்கவன். அது மட்டும் அல்ல தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவர்கள் அமுதம் கடைந்த போது அவர்களுக்கு உதவி செய்தவன்"

என்கிறான். 


நீ யார் என்று கேட்ட கேள்விக்கு முதலில் சுக்ரீவன் பற்றிச் சொன்னான். இப்போது வாலி பற்றிச் சொல்கிறான். 



பாடல் 


மற்றவன் முன்னோன் வாலி,

    இராவணன் வலி தன் வாலின்

இற்று உகக் கட்டி, எட்டுத்

    திசையினும் எழுந்து பாய்ந்த

வெற்றியன், தேவர் வேண்ட,

    வேலையை விலங்கல் மத்தில்

சுற்றிய நாகம் தேய

    அமுது எழக் கடைந்த தோளான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8.html


(pl click the above link to continue reading) 


மற்றவன் = மற்று + அவன் = சுக்ரீவன் 


முன்னோன் = முன் பிறந்தவன், அண்ணன், 


வாலி, = வாலி என்பவன் 


இராவணன் = இராவணனின் 


வலி = வலிமை எல்லாம் 


தன் வாலின் = தன்னுடைய (வாலியின் வாலில்) 


இற்று = நொறுங்கும் படி 


உகக் கட்டி = இறுகக் கட்டி 


எட்டுத்  திசையினும் = எட்டு திசையிலும் 


எழுந்து பாய்ந்த வெற்றியன் = எழுந்து, பாய்ந்து செல்லும் வெற்றி உடையவன் 


தேவர் வேண்ட = தேவர்கள் வேண்டிக் கொள்ள 


வேலையை = கடலை 


விலங்கல் = மலையை (மேரு மலையை) 


மத்தில்  = மத்தாக 


சுற்றிய நாகம் தேய = சுற்றய நாகம் வருந்த 


அமுது எழக் கடைந்த தோளான். = அமுது எழ கடைந்த தோள் வலிமை உடையவன் 


இங்கே இரண்டு வாலி பற்றிய  கதைகளை நாம் தெரிந்து கொள்வோம்.


முதலாவது, 


நாம் எல்லாம் இறைவனை எட்டு திக்கிலும் நோக்கித் தொழுவோம். வாலி அப்படி அல்ல, அவன் ஒவ்வொரு நாளும் எட்டு திசைக்கும் சென்று தொழுவான். ஒரு பாய்ச்சல் கிழக்கு. அங்கிருந்து ஒரு பாய்ச்சல் வட கிழக்குத் திசை. அங்கிருந்து ஒரு பாய்ச்சல் வட திசை என்று ஒவ்வொரு நாளும் எட்டு திசைக்கும் சென்று இறைவனை தொழுவான். அது கூட பெரிய காரியம் இல்லை. இப்படி எட்டு திசைக்கும் போய் கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் ஆகும். மத்த வேலைகளை யார் கவனிப்பது? எனவே அவன் என்ன செய்வான் என்றால், கிட்கிந்தாவில் இருந்து ஒரு தாவு, கிழக்கு திசை. பூசைகளை முடித்து விட்டு அங்கிருந்து ஒரு தாவல். கிட்கிந்தா. பின் வேறு ஒரு திசை. இப்படி ஒவ்வொரு திசைக்கும் செல்வானாம். அதற்கு நேரம் வேண்டாமா என்றால், யோசித்துக் கொள்ளுங்கள். எட்டு திசை என்றால் பதினாறு முறை பயணம் செய்ய வேண்டும். அப்புறம் பூஜை, அப்புறம் அரசை கவனிக்க வேண்டும். அப்படி என்றால் எவ்வளவு வேகமாக அவன் போய் இருக்க வேண்டும். ஒரு நொடியில் என்று செல்வோமே அது போல. அப்படி என்றால் எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும்.


அப்படி தாவி தாவிச் செல்லும் போது, தன் வாலில் இராவணனை கட்டிக் கொண்டு தாவுவானாம். இராவணனுக்கு எப்படி இருந்து இருக்கும். வாலில் கட்டிக் கொண்டு அவ்வளவு வேகமாக தாவும் போது இராவணன் என்ன பாடு பட்டிருப்பான். இராவணனே பெரிய பலம் வாய்ந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அந்த இராவணனை ஒரு பூச்சி மாதிரி வாலில் கட்டி வேடிக்கை காட்டும் வாலி எவ்வளவு பலசாலியாக இருக்க வேண்டும் 


அது மட்டும் அல்ல, 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாக, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு கடைந்தார்கள். அவர்கள் கடையும் போது, அந்த பாம்புக்கு உடல் வலி ஏற்பட்டு அது தளர்ந்து போனது. அதனால், மேரு மலை சரியத் தொடங்கிவிட்டது. சரியும் மலையை யார் தூக்கிப் பிடித்து நிறுத்துவது?  அவ்வளவு பலம் யாரிடம் இருக்கிறது? தேவர்கள் எல்லாம் சென்று வாலியிடம் வேண்டினார்கள். அனைத்து தேவர்களும், அனைத்து அசுரர்களும் சேர்ந்து செய்ய முடியாத ஒன்றை வாலி ஒருவனால் செய்ய முடியும் என்று அவனிடம் வேண்டினார்கள். 


அவன், "நீங்கள் எல்லாம் விலகுங்கள்" என்று அவர்களை விலக்கி விட்டு, தான் ஒருவனே அந்த மலையை நிலை நிறுத்தி, தான் ஒருவனே கடைந்து, அமுதை எடுத்து அவர்களுக்கு கொடுத்தானாம். அப்படி என்றால் அவன் வலிமை எவ்வளவு இருக்கும். 


இதை கம்பன் இன்னொரு இடத்திலும் சொல்லுவான். 


வாலி இறந்து கிடக்கிறான். அவன் மேல் அவன் மனைவி விழுந்து அழுகிறாள். 


"ஐயா நீ அமுதம் தந்ததால் நாங்கள் எல்லாம் உயிர் பிழைத்தோம் என்று நீ செய்த உதவியை நினைத்து நீ இன்று வானுலகம் போகும் போது அவர்கள் எல்லாம் உன்னை வரவேற்க அன்று பூத்த மலர்களைத் வாசலில் வந்து நின்றார்களா" என்று புலம்புவாள்


‘எந்தாய்! நீ அமிழ்து ஈய யாம் எலாம்

உய்ந்தாம் “ என்று உபகாரம் உன்னுவார்

நந்தா நாள் மலர் சிந்தி நண்பொடும்

வந்தாரோ எதிர்? வான் உளார் எலாம்."


இனி நாம் தொடங்கிய பாடலுக்குப் போவோம். 


கேட்ட கேள்வி என்ன?  "வீரனே நீ யார்" என்று 


சொன்ன பதில் - முதலில் சுக்ரீவன் பற்றி, அடுத்தது வாலி பற்றி. 


இன்னும் தன்னைப் பற்றி அனுமன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 


காரணம் என்ன? 


நாளையும் சிந்திப்போம்.