Wednesday, March 1, 2023

திருப்பாட்டு - உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா?

 திருப்பாட்டு - உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா?


சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய பாடல்களை திருப்பாட்டு என்று கூறுவர். பொதுவாக நால்வர் பாடிய பாடல்களை தேவாரம் என்று கூறினாலும், மணிவாசகர் பாடியது திருவாசகம் என்றும், அப்பர் பாடியது தேவாரம் என்றும், சுந்தர மூர்த்தி நாயனார் பாடியது திருப்பாட்டு என்றும், திருஞான சம்பந்தர் அருளியது திருக்கடைக் காப்பு என்றும் அழைக்கப்படும். 


ஒரு முறை சுந்தரர் பாச்சிலாச்சிராமம் என்ற திருத் தலத்துக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சிவனடியார்களுக்கு உதவி செய்யும் பொருட்டு சிவனிடம் பொருள் வேண்டினார். சிவன், அவருடன் விளையாட நினைத்து பொருள் தர தாமதித்தார். 


சுந்தரருக்கு கோபம் வந்து விட்டது. 


"உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா" என்ற கோபம் தொனிக்கும் படி ஒரு பதிகம் பாடி அருளினார். இறைவன் பொற் கிழி கொடுத்தான் என்பது புராணக் கதை. 


"உனக்கே என் தலையும், நாவும், மனமும் வைத்தேன். உனக்கே அடிமை செய்தேன். அப்படி இருந்தும் நான் கேட்பதைத் தராமல் கையில் பாம்போடு, கோவணத்தை அணிந்து கொண்டு பித்தன் மாதிரி இருந்தால், உன்னை விட்டால் எனக்கு வேறு ஆள் இல்லையா என்ன"



பாடல் 


வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்

    நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி

உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை

    உரைத்தக்கால் உவமனே யொக்கும்

பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு

    பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்

பித்தரே யொத்தோர் நச்சில ராகில்

    இவரலா தில்லையோ பிரானார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post.html


(please click the above link to continue reading)



வைத்தனன் தனக்கே  = அவனுக்கு என்றே வைத்தேன் 


தலையும் = தலையும் 


என் நாவும் = என் நாவையும் 


நெஞ்சமும் = என் மனமும் 


வஞ்சமொன் றின்றி = ஒரு வஞ்சனையும் இல்லாமல் 


உய்த்தனன் தனக்கே = உரிமை பொருள் ஆக்கினேன் 


திருவடிக் கடிமை = அவன் திருவடிக்கே அடிமை செய்தேன் 


உரைத்தக்கால் = இதை நானே சொன்னால் 


 உவமனே யொக்கும் = மக்கள் ஏதோ பெருமைக்கு சொல்கிறேன் என்று நினைப்பார்கள் 


பைத்தபாம்  = படம் விரித்த பாம்பு 


பார்த்தோர் கோவணத் தோடு = பார்க்கும் படி ஒரு கோவணத்தை ஆடையாகக் கொண்டு 


பாச்சிலாச்சிராமத் = பாச்சிலாச்சிராமம் என்ற திருத் தலத்தில் 


தெம் பரமர் = எம் முன்னவார், உயர்ந்தவர், தலைவர் 


பித்தரே யொத்தோர் = சரியான பித்தனைப் போல் இருக்கிறார் 


நச்சில ராகில் = என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்தால் 


இவரலா தில்லையோ = இவர் அல்லாது இல்லையோ 


பிரானார் = வேறு கடவுள்கள் 


கடவுள் மேல் அத்தனை அன்பு. 


அன்பு உள்ள இடத்தில்தானே கோபிக்க முடியும்?


அது என்ன நான் கேட்டு நீ தராமல் இருப்பது என்ற உரிமை. 


மற்றவர்கள் இறைவனிடம் வேண்டுவார்கள், கெஞ்சுவார்கள், தரமாட்டாயா என்று ஏங்கிக் கிடப்பார்கள். 


சுந்தரர் அப்படி எல்லாம் இல்லை.


ஒரு பிள்ளை எப்படி தன் தாயிடமோ அல்லது தந்தையிடமோ எப்படி உரிமையாகக் கேட்குமோ, ஒரு காதலன் தன் காதலியிடம் எப்படி உரிமையுடன் கேட்பானோ அப்படி கேட்கிறார்.


"நீயும், உன் டிரஸ்ம், சரியான பைத்தியக்காரன் போல இருக்கு. என்னமோ உன்னை விட்டால் வேற ஆளே இல்லைன்னு நினைப்பா"  என்று செல்லமாக கொஞ்சுகிறார். 


இது இந்து மதத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று. 


மற்ற மதங்களில் இறைவனைக் கண்டு பக்தர்கள் பயப்படுவார்கள். 


இங்கே, இறைவன் தோள் மேல் கை போட்டுப் பேசலாம். 


அவ்வளவு அன்யோன்யம். 


 



No comments:

Post a Comment