Thursday, March 2, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பாரித்து உரைக்கும் உரை

 

திருக்குறள் - பயனில சொல்லாமை - பாரித்து உரைக்கும் உரை 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


பயனற்ற சொற்களை பேசவே கூடாது. ஆனால், சிலர் பேசுவது மட்டும் அல்ல, அதை மிக விரிவாக, விலாவாரியாக விளக்கிக் கொண்டு இருப்பார்கள். 


தொலைக் காட்சியில், whatsapp போன்ற சமூக ஊடகங்களில், கைப் பேசியில், தேவையற்ற, பயனற்ற வார்த்தைகளை மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.


ஒருவன் பயனற்ற சொற்களை பேசுகிறான் என்றால் அவனைப் பற்றி நமக்கு என்ன எண்ணம் தோன்றும்?  


"சரியான அறுவை, இரம்பம், வந்துட்டான் கழுத்தை அறுக்க, வந்தான் விட ம் மாட்டானே..." என்று பயப்படுவோம் அல்லவா ?


அதே போல,


நாம் பயனற்ற சொற்களை பேசும் போது மற்றவர்களும் நம்மைப் பற்றி அப்படித்தானே நினைப்பார்கள். 


பேசும் முன் யோசிக்க வேண்டும். நான் இப்போது பேசப் போவதால் யாருக்கு என்ன பயன் என்று. 


"அவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் ஏதாவது நாலு நல்ல விடயம் கிடைக்கும்" என்று மக்கள் நினைக்கும் படி பேச வேண்டும். 


இல்லாவிட்டால் மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள். நாம் வேண்டுமானால் மனதுக்குள் நினைத்துக் கொள்ளலாம், நாம் பெரிய ஆள் என்றும், நாம் சொல்வதை கேட்க நாலு பேர் இருக்கிறார்கள் என்றும். 


யோசிக்க வேண்டும். உணமையிலேயே நாம் பேசியதால் (எழுதியதால்) யாருக்காவது ஏதாவது பலன் இருக்கிறதா என்று. 


பாடல் 


நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித்து உரைக்கும் உரை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


(please click the above link to continue reading)


நயனிலன்  = ஒருவன் நல்லவன் இல்லை  


என்பது = என்பதை 


சொல்லும்  = காட்டிக்  கொடுக்கும் 


பயனில = பயன் அற்ற சொற்களை 


பாரித்து = விரிவாக 


உரைக்கும் உரை = பேசும் பேச்சு 


நயனில என்பதற்கு பரிமேலழகர் "நீதி இல்லாதவன்"  என்று பொருள் கூறுகிறார். 


மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கிறோம். அது ஒரு நீதியற்ற செயல் என்ற பொருளில் இருக்கலாம். 



ஒரு சில சமயம் பயனற்ற சொற்களையும் பேச வேண்டி இருக்கும். அது இல்லறத்தில் தவிர்க்க முடியாது. 


முடிந்தவரை அதை தவிர்க்க வேண்டும். வேறு வழி இல்லை என்றால் சுருக்கமாக பேச வேண்டும். நீட்டி முழக்கிக் கொண்டு இருக்கக் கூடாது. 


"அப்புறம்...வேற என்ன விசேஷம்...சொல்லுங்க ..." என்று தேவையில்லாமல் பேச்சை வளர்த்துக் கொண்டே போகக் கூடாது. 


அரட்டை அடிக்கும் நேரத்தை குறைத்தால், அந்த நேரத்தை வேறு பயனுள்ள வழிகளில் செலவழிக்கலாம். நாம் மட்டும் அல்ல, நம் பேச்சை கேட்பவர்களும் அவர்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட முடியும். 





(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html



No comments:

Post a Comment