Saturday, September 19, 2026

திருக்குறள் - நோய்

 திருக்குறள் - நோய் 



துன்பமே இல்லாத வாழ்வை யார்தான் விரும்ப மாட்டார்கள்?  துன்பத்தைக் கண்டால் காத தூரம் ஓடுவோம் நாம். சின்ன தலைவலியில் இருந்து பெரிய துன்பங்கள் வரை, எதுவுமே நமக்கு உடன்பாடு இல்லை. 




நமக்கு ஏதாவது துன்பம் வந்து விட்டால், வருந்துவோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று நம் மேலேயே நாம் பரிதாபம் கொள்வோம். யாருக்கு நான் என்ன தீமை செய்தேன், எனக்கேன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று அங்கலாயித்துக் கொள்வோம். 


சரி, துன்பமே இல்லாத வாழ்க்கை சாத்தியமா?  துன்பமே வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும்?  உடலால், மனதால், பணத்தால், உறவால், இயற்கை சீற்றத்தால் என்று பல வகைகளில் வரும் துன்பத்தை எப்படி வராமல் தடுப்பது?


வந்த துன்பங்களுக்குக் காரணம், இனி துன்பம் வராமல் இருக்க வழி என்ற இரண்டையும் வள்ளுவர் ஒரே குறளில் சொல்லி முடிக்கிறார். ஏழே ஏழு வார்த்தைகளில் துன்பமில்லா வாழ்வுக்கு வழி காட்டுகிறார் ஐயன் வள்ளுவன். 







வள்ளுவர் சொல்கிறார், 


"உனக்கு துன்பம் வருகிறதா?  நீ யாருக்கோ எப்போதோ செய்த துன்பம் இப்போது உன்னிடம் வருகிறது என்று உணர். அது மட்டும் அல்ல, உனக்கு இனி துன்பமே வரக் கூடாது என்று விரும்புகிறாயா?  யாருக்கும் துன்பம் செய்யாதே. உனக்கு துன்பம் வராது"



பாடல் 


நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோய்இன்மை வேண்டு பவர்


பொருள் 


நோய்எல்லாம் = வருகின்ற துன்பம் எல்லாம் 


நோய்செய்தார் மேலவாம் = துன்பம் செய்பவர்களுக்கே வரும் 


நோய்செய்யார் = பிறருக்கு துன்பம் செய்ய மாட்டார்கள் 


நோய்இன்மை = தனக்கு துன்பம் இல்லாமையை 


வேண்டு பவர் = விரும்புகிறவர்கள் 


(நோய் = துன்பம்)


உனக்கு வரும் துன்பங்களுகுக் காரணம், நீ பிறருக்குச் செய்த துன்பம் 


நீ பிறருக்குத் துன்பம் செய்யாவிட்டால் உனக்கு துன்பம் வராது. 


நான் யாருக்கும் ஒரு துன்பமும் செய்யவில்லையே...பின் எனக்கு எப்படி இந்தத் துன்பம் வந்தது என்று கேட்டால், செய்து இருப்பீர்கள். மறந்திருக்கும். 


அல்லது அது துன்பம் என்று கூட உங்களுக்குத் தெரிந்து இருக்காது. 


நம் கணக்கு தவறாகலாம். இயற்கையின் கணக்கு தவறாது. 


எது எப்படியோ, இனி மேல் பிறருக்கு துன்பம் செய்யாமல் இருப்போம். அவர்கள் மேல் உள்ள கருணையால் அல்ல, நமக்கு துன்பம் வரக் கூடாது என்ற சுயநலத்தால். 





No comments:

Post a Comment