Showing posts with label கந்தரனுபூதி. Show all posts
Showing posts with label கந்தரனுபூதி. Show all posts

Wednesday, November 2, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

         

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நீங்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்கள் என்று கேட்டால் "என் சொந்த ஊர் இன்னது" என்று சொல்லுவார்கள். 


சொந்த வீடு இருக்கலாம், சொந்த கார் இருக்கலாம், சொந்த ஊர்? ஊரை வாங்கி வாங்க முடியுமா? 


ஊரின் மேல் அவ்வளவு பற்று. அது சொந்த ஊராகி விடுகிறது. 


அது போல், என் மனைவி, என் கணவன், என் பிள்ளை, என் சுற்றம் என்று நாம் சொந்தம் கொண்டாடுகிறோம்.  அவை நமதா?  நம் சொல்படி கேட்குமா? நம் விருப்பப்படி நடக்குமா? பாதியில் வந்த உறவுகள். போகிற வழியில் விட்டு விட்டுப் போய் விடும். அதை எல்லாம் நம் சொந்தம், நமது என்று நாம் நினைத்து துன்பப் படுகிறோம். 


இவை எல்லாம் நமது என்று நினைப்பதற்கு காரணம் ஒரு பிரமை. ஒரு தோற்றம். அவ்வளவுதான். 


அதெப்படி பிரமை ஆகும்? என் பிள்ளை என் சொந்தம் இல்லையா? என் கணவன் என் உரிமை இல்லையா? என்று கேட்கத் தோன்றும். இல்லை, இவை உனது இல்லை என்று யார் சொன்னாலும் புரியாது.  அதற்கு இறை அருள் இருந்தால்தான் முடியும். 


அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த பிரமை விலகும்படி முருகன் அவருக்கு உபதேசம் செய்தான் என்று. 


"ஊர், உறவு, இந்த உடம்பு என்ற இவை என்னது என்ற பிரமை போயகல எனக்கு உண்மையை விளக்கியவன் முருகன். அவன் யார் தெரியுமா, மலை அரசனின் மகளான பார்வதியின் மகன். எதிரிகளை போரில் வென்றவன்"



பாடல் 


அமரும் பதிகேள் அகமாமெனுமிப் 

பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா  

குமரன் கிரிராச குமாரி மகன் 

சமரம் பொரு தானவ நாசகனே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


(pl click the above link to continue reading)



அமரும் பதி = இருக்கின்ற ஊர். 


கேள்  = உறவினர் 


அகமாமெனுமிப்  = அகம் ஆம் எனும் = இந்த உடல் என்ற இவை 


பிமரம் = பிரமை 


கெட = அழிய 


மெய்ப் பொருள் = உண்மையான,நிலையான பொருளை 


பேசியவா   = உபேதேசம் செய்தவன் 


குமரன் = இளைஞன் 


கிரி = மலை 


ராச = அரசன் 


குமாரி  = மகள் 


மகன்  = மகன் 


சமரம் = சண்டை, போர் 


பொரு = புரிந்து 


தானவ நாசகனே .  = தானவர்கள் என்றால் அசுரர்கள். அவர்களை நாசம் செய்தவன். 


விரிவுரை 


பதி = பதி என்றால் ஊர். "பதி எழு அறியா பழங்குடி" என்று பேசும் சிலப்பதிகாரம்.  மக்கள் இருக்கின்ற ஊரை விட்டு அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம் அங்கே நல்ல வேலை வாய்ப்பு, சம்பளம், நல்ல வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால். பூம்புகார் மக்கள் வேறு ஊருக்கு குடி பெயர்ந்து போக மாட்டார்களாம். காரணம், அந்த ஊர் அவ்வளவு சிறப்பான ஊர். 


கேள் = உறவினர். 


இராமன், குகனிடம் இருந்து விடை பெறும் போது சொல்லுவான், "அன்புள்ளவனே, இனி நாம் ஐவரானோம்" என்றான். 


இராமன் அதோடு நின்றிருந்தால் ஏதோ சமாதனம் சொல்கிறான் என்று ஆகி இருக்கும்.  இன்னும் ஒரு படி மேலே போகிறான். இந்த இலக்குவன் உனக்கு இளைய தம்பி என்கிறான். அது கூட பெரிய விடயம் இல்லை. 


"இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவு" என்கிறான். 


"நன்னுதல் அவள் நின் கேள்" - அழகான நெற்றியை உடைய இவள் உன் உறவுக் காரி என்கிறான். அந்த அளவுக்கு அந்த சகோதர வாஞ்சையை அழுத்தமாகச் சொல்கிறான் இராமன். 


‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;

முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 


அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்

என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்

நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்


மெய்ப் பொருள் = மெய் பொருள் என்றால் உண்மையான பொருள். நிலையான பொருள். என்றும் நிலைத்து இருக்கும் பொருள். அப்படி என்றால் இந்த ஊர், உறவு, உடம்பு என்பதெல்லாம் நிலையானவை அல்ல, உண்மையானவை அல்ல என்று புரிந்து கொள்ளல்லாம். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி 

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே"


என்பார் மணிவாசகர். 


இறைவன் தான் மெய் ஞானம். 


கிரிராச குமாரி மகன் = முருகன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை. பின் எப்படி கிரிராச குமாரி மகன் என்று சொல்கிறார். ஆண் எவ்வளவுதான் பலம் பொருந்தியவனாக இருந்தாலும், அவனை செயலாற்றும் சக்தி பெண்ணிடம்தான் உள்ளது என்பதை உணர்த்த பார்வதி மகன் என்றார். 


சமரம் பொரு தானவ நாசகனே = தானவர்கள் என்றால் அரக்கர்கள். 


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,

சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே

பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே


என்பார் அபிராமி பட்டர். 


"வானவர் தானவர்" என்றால் தேவர்களும், அசுரர்களும். 


அசுரர்களோடு சண்டை போட்டதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?  


நமக்குத் துன்பம் தரும் பல அசுரர்கள் உண்டு. எல்லாம் ஏதோ பெரிய உருவமாய், கறுப்பாய், மண்டை ஓட்டு மாலை அணிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். 


ஆணவம், பாசம், பற்று, பொறாமை, பேராசை, அதீத காமம், களவு, பொய் பேசுதல், என்று நமக்குள் ஆயிரம் அசுரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விடாமல் துன்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்லது செய்வது போலத் தெரியும். அந்த இனிப்பைச் சாப்பிடு, இந்த காப்பியைக் குடி, ஐந்து மணி நேரம் டிவி பார், மதியம் உறங்கு, அரட்டை அடி, என்று நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் அசுரர்கள் ஆயிரம். அவர்களோடு நாம் தனித்துப் போரிட முடியாது. 


அசுரர்களை அழித்தது ஒரு குறியீடு. 

 

நம் மன மாசுக்கள்தான் அசுரர்கள். நம் போர் அவற்றோடுதான். வெல்ல முடியாமல் தவிக்கிறோம். முருகா, அருள் புரி என்று வேண்டுகிறார். 


மேலும் சிந்திப்போம். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html




]




Wednesday, October 26, 2022

கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே

        

 கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


சும்மா சும்மா இறைவனைப் பற்றி "நீ யார், எவ்வளவு பெரிய ஆள், என்னவெல்லாம் செஞ்சிருக்க, எனக்கு அருள் செய்ய மாட்டாயா" என்று புலம்புவதில் யாருக்கு என்ன பயன். 


இறைவன் யார் என்று அவருக்குத் தெரியாதா? அவர் என்ன செய்தார் என்று அவருக்குத் தெரியாதா? சரி, அப்படியே தெரியாது என்று வைத்துக் கொண்டாலும், ஒரு தரம் சொன்னால் போதாதா? 


அருணகிரிநாதர் அதில் இருந்து பெரிதும் வேறுபடுகிறார். மனித நேயம், வாழ்வின் நோக்கம், அதை அடையும் வழி என்பன பற்றி பேசுவார். 


"தவறான வழியில் சென்று கெடும் என் மனமே, உனக்கு சில நல்ல வழிகளை  சொல்கிறேன் கேள். மறைக்காமல் கொடு. முருகனின் திருவடிகளை நினை. உன்னுடைய நீண்ட துன்பங்களை எரித்து சாம்பலாக்கு. வினைகளை விடு"


மேலோட்டமாக இதுதான் அவர் சொல்ல வந்த செய்தி. 



பாடல் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவா 

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் 

சுடுவாய் நெடுவே தனை தூள் படவே 

விடு வாய் விடுவாய் வினையா வையுமே 


சீர் பிரித்த பின் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவாது  

இடுவாய் வடிவேல்  இறை தாள் நினைவாய் 

சுடுவாய் நெடு வேதனை தூள் படவே 

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


(pl click the above link to continue reading)




கெடுவாய்  = கெட்டுப் போகும் 


மனனே  = என் மனமே 


கதி = கதி என்றால் வழி. நல்ல வழியை 


கேள்  = சொல்கிறேன், கேட்டுக் கொள் 


கரவாது   = மறைக்காமல் 


இடுவாய் = ஏழை எளியவர்களுக்கு கொடு 


வடிவேல் = வடிவான, அழகான வேலை உடைய 


இறை  = இறைவன், முருகன் 


தாள்  = திருவடிகளை 


நினைவாய்  = மனதில் நினை 


சுடுவாய்  = சுட்டு எரிப்பாய் 


நெடு வேதனை  = நீண்ட வேதனை 


தூள் படவே  = தூள் தூளாகும்படி, சாம்பலாகும்படி 


விடுவாய் விடுவாய் = விட்டு விடுவாய் 


வினை யாவையுமே  = எல்லா வினைகளையும் 


இனி விரிவான பொருள் பற்றி சிந்திப்போம். 


"கரவாது இடுவாய்" - யாரோ ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்கிறான். சில்லறை இல்லை, ஒண்ணும் இல்லை வேற இடம் பாரு என்று அவனை அனுப்பி விடுகிறோம். நம்மிடம் பணம் இல்லாமல் இல்லை. வைத்துக் கொண்டே இல்லை என்கிறோம். கொடுக்கும் மனம் இல்லை. மறைக்காமல் கொடு என்கிறார். 


இதையே ஔவையும் "இயல்வது கரவேல்" என்றாள். எது முடியுமோ அதைச் மறைக்காமல் கொடு/செய். 


பசி என்று ஒருவன் வருகிறான். ஒரு வேளை உணவு அவனுக்குத் தர முடியாதா? பசி எவ்வளவு கொடுமையானது என்று அனுபவித்தால்தான் தெரியும். 


ஏன் கொடுக்கும் மனம் வருவது இல்லை? 


நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது, இருக்குறதை எல்லாம் தானம் பண்ணிட்டு நான் என்ன பண்ணுவது என்ற பயம். 


அருணகிரிநாதர் சொல்கிறார், நீ ஒண்ணும் பெரிதாக சேர்த்துவிடவில்லை. இதே நீ, உன் திறமை, அறிவு எல்லாம் இருந்தும், காலம் மாறினால் எல்லாம் மாறும். கம்பெனி மூடப்படலாம், நட்டத்தில் இயங்கலாம், வேலை போகலாம், வேறு நல்ல வேலை கிடைக்காமல் போகலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைப்பது தவறு. 


ஏதோ, இறை அருளால் எல்லாம் வந்தது. வந்ததில் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம் என்று நினைக்க வேண்டும். 


"வடிவேல்  இறை தாள் நினைவாய்"    - உனக்கு வந்த செல்வம், வாழ்வு எல்லாம் அவன் தந்தது என்று நினை. கொடுப்பது எளிதாகும். கொடுத்தால் இன்னும் அவன் தருவான் என்ற நம்பிக்கை பிறக்கும். 



"சுடுவாய் நெடு வேதனை தூள் படவே"  - எது நெடிய வேதனை? நமக்கு வரும் பெரும்பாலான வேதனைகள் சிறிது காலத்தில் போய் விடும் அல்லது நாம் அதற்கு பழகிக் கொள்வோம். தீராத வேதனை ஒன்று இருக்கிறது. பழகவும் முடியாது. அது இந்த பிறவியில் பிறந்து, இறந்து, ,பிறந்து உழல்வது. அது நீண்ட வேதனை.  அந்த வேதனையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அடுத்து சொல்கிறார். 


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே " வினை யாவையும் விடுவாய் என்கிறார். தீவினை, நல்வினை என்று இரண்டு இருக்கிறது.  அறம் பாவம் என்று சொல்கிறார்கள். 


தீவினையை விட்டு விடலாம். நல் வினையையும் விட வேண்டுமா?  அப்புறம் ஏன் "கரவாது இடுவாய்" என்று முதல் வரியில் சொன்னார்? அது நல்வினைதானே?


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே" என்பதில் விடுவாய் விடுவாய் என்று இரண்டு முறை கூறுகிறார்.  ஏன்?


தீவினைகளை விடுவாய். விட்டு விடு. செய்யாதே. 


நல்வினைகளை செய்யும் போது அதன் மேல் உள்ள பற்றினை, பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நல்லதைச் செய் ஆனால் அதற்கு உரிய பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நிஷ் காமிய கர்மம் என்று சொல்லுவார்கள். பலனை எதிர்பார்க்காத கர்மங்கள் நம்மைச் சேர்வது இல்லை. 


அதை எப்படிச் செய்வது ? 


இறைவன் இரு தாள் நினைத்து செய். பலன் அவனுக்குப் போகட்டும். எனக்கு வேண்டாம் என்று அதை விடுவாய். 


மறைக்காமல் கொடு 

அவன் தந்தது என்று நினைத்துக் கொடு 

தீ வினையை விட்டு ஒழி 

நல் வினையில் இருந்து வரும் பலனை எதிர்பார்க்காதே. 


இதுவே நற்கதி. கதி கேள். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


]




Thursday, October 20, 2022

கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும்

       

 கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பக்தி இலக்கியம் என்றால் ஏதோ இறைவன் புகழ் பாடுவதும், எனக்கு அதைத் தா, இதைத் தா என்று வேண்டுவதும் உன்னால் முடியாதா, நீ எவ்வளவு பெரிய ஆள் என்று இறைவனுக்கு ஐஸ் வைப்பதும் என்று எண்ணி விடக் கூடாது. 


காதல், குழைவு, அன்பு, பாசம், மெய்யியல் சிந்தனைகள், மனிதாபிமானம், உலகியல் சிந்தனைகள், மனோ தத்துவம், வாழ்க்கை நெறி முறை என்று எல்லாம் அதில் உண்டு. 



நமக்குத் தெரிந்து எத்தனை கணவன்மார் மனைவியின் கால் பிடித்து விடுவார்கள்?  மனைவியின் காலைப் பிடிப்பதா? நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


அவளும் ஒரு உயிர்தானே. நாளெல்லாம் ஓடி ஆடி வேலை செய்கிறாள். அவளுக்கும் கால் வலிக்கும்தானே. காலை மெல்ல பிடித்துவிட்டால் சுகமாக இருக்கும்தானே. அதெல்லாம் பெரும்பாலான கணவன்மார் நினைப்பதே இல்லை. 


முருகன் அப்படி அல்ல. நாளெல்லாம் தினைப்புனம் காக்க காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து சோர்ந்து இருப்பவளின் பாதங்களை முருகன் பிடித்து விடுவானாம். அது மட்டும் அல்ல, "வேற என்ன செய்யணும் சொல்லு" என்று பணிவோடு கேட்பானாம். 


வீட்டில் கணவன்மார் மனைவியிடம் கேட்பார்கள். அது கூட ஒரு அதிகாரத் தோரணையில் இருக்கும். "அப்புறம், வேற என்ன வாங்கணும் சொல்லு" என்று அதட்டுவது போல இருக்கும். மென்மை என்பதே கிடையாது. 


அதெல்லாம் எதனால்?  வள்ளியின் மேல் உள்ள தணியாத அன்பினால். அன்பு வந்துவிட்டால் ஆண் என்ன, பெண் என்ன, கணவன் என்ன, மனைவி என்ன, ஒரு பாகுபாடும் கிடையாது. மற்றவரின் இன்பம் மட்டுமே முக்கியம் என்று ஆகிவிடும். 


பாடல் 


திணியான மனோசிலை மீதுனதாள் 

அணியா ரரவிந்த மரும்புமதோ 

பணியா வென வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே . 



சீர் பிரித்த பின் 


திணியான மனோ சிலை மீது உனது தாள்  

அணியார் அரவிந்தம் அரும்புமதோ 

பணியாய் என வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

(pl click the above link to continue reading)



திணியான = திண்ணமான, கடினமான


மனோ சிலை = கல் போன்ற மனதின் 


மீது = மேல் 


உனது தாள்   = உனது திருவடிகள் 


அணியார் = அழகான 


அரவிந்தம் = தாமரை மலர் 


அரும்புமதோ  = முளைக்குமா, அரும்பு விடுமா 


பணியாய் = எனக்கு என்ன வேலை, என்ன பணி 


என = என்று 


வள்ளி  = வள்ளியின் 


பதம் பணியும்  = பாதங்களைப் பணியும் 


தணியா = தீராத 


அதி = மிக அதிகமான 


மோக == மோகம் கொண்ட 


தயாபரனே = தயை உள்ளவனே 



நீண்ட நாள் வராத ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால், "எங்க வீட்டுக்கு வர்ற உங்களுக்கு வழி தெரியுமா?...இப்பவாவது வந்தீங்களே " என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்து கூறுவோம் அல்லவா, அது போல அருணகிரிநாதர் சொல்கிறார் 


"கல் போன்ற என் மனத்திலும் எப்படி தாமரை மொட்டு போன்ற உன் திருவடிகள் முளைதனவோ" என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார். 


"அரும்புமதோ" என்றால் அரும்புமா என்ற சந்தேகக் கேள்வி அல்ல. எப்படி அரும்பியது என்று ஆச்சரியக் கேள்வி.


இந்தப் பாடலுக்கு ஆன்மீகமாக பல உரைகள் சொல்கிறார்கள். 


அதாவது, உயிர்கள் இறைவனைத் தேடுவதைப் போல, இறைவனும் பக்குவப்பட்ட ஆன்மாகளை தேடி அலைவானாம்.  அவார்கள் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பாம். அவர்களுக்காக பிரம்படி படுகிறான், கால் தேய ஓலை கொண்டு நடக்கிறான், வில்லால் அடி வாங்குகிறான்....என்ன வேண்டுமானாலும் செய்வானாம். 


பாதம் பணிவதுதானா பிரமாதம்? 


அதெல்லாம் ஏதோ வலிந்து திணிக்கும் உரை போலத் தோன்றுகிறது. 


அன்பால், வள்ளியின் பதம் பணிந்து அவள் சொல்வதைக் கேட்டான் என்பதில் ஒரு சுகம் இருக்கத்தான்செய்கிறது. 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html





]




Friday, October 14, 2022

கந்தரனுபூதி - நின்று தயங்குவதே

       

 கந்தரனுபூதி - நின்று தயங்குவதே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இந்தப் பாடலுக்குத்தான் அவ்வளவு பெரிய முன்னுரை. அந்த முன்னுரை இன்னும் வர இருக்கும் பாடல்களுக்கும் தேவைப்படும்.


இரண்டுவிதமான மாயைகள் பற்றி சிந்தித்தோம். ஏதோ வாசித்து விட்டதால் புரிந்து விட்டது என்றோ, அல்லது எழுதிய எனக்கு புரிந்து எழுதினேன் என்று கொள்ளக் கூடாது. 


புராணங்கள் சொல்கின்றன அந்த மாயை என்பது நாரதருக்கும் புரியவில்லை என்றும், அவர் அதை திருமாலிடம் கேட்டார் என்றும்.. அந்தக் கதை பற்றி பின்னொருநாள் சிந்திப்போம். 


ஒன்று சுத்த மாயை, இன்னொன்று அசுத்த மாயை.


இந்த சுத்தம், அசுத்தம் என்பதெலாம் ஏதோ அழுக்கு, குப்பை என்று நினைக்கக் கூடாது. சுத்தம் என்றால் துன்பக் கலப்பு இல்லாதது. அசுத்தம் என்றால் அதில் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும். 


இறைவன் இரண்டுவிதமான மாயைகளால் உயிர்கள் பாசத்தில் இருந்து விடுபட்டு தன்னைச் சேர வழி செய்வான். 


மகா மாயை, சுத்த மாயை, பிரகிருதி மாயை, சக மாயை என்றெல்லாம் அவற்றிற்கு பெயர் சொல்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் படித்தாலும் மனம் அதன் பாட்டுக்குப் போகிறதே தவிர படித்ததால் ஒரு பயனும் விளைவது இல்லை. 


நிறைய தூரம் போக வேண்டாம்....தினம் உடற் பயிற்சி செய்வது, கண்டதையும் உண்ணாமல் இருப்பது என்று எத்தனை தரம் முடிவு செய்து இருப்போம். செய்கிறோமா?  மனம் சோம்புகிறது, இனிப்பை நாடுகிறது. அறிவு வேலை செய்வது இல்லை. 


இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  படித்துக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை. 


உடற் பயிற்சி செய்வது எப்படி, அதனால் விளையும் நன்மைகள் பற்றி ஆயிரம் நூல் படித்து என்ன பலன், உடற் பயிற்சி செய்யாவிட்டால்? 


ஆஹா என்னமா சொல்லி இருக்கிறார்கள், என்ன ஒரு ஆராய்ச்சி என்று வியந்து மகிழலாமே தவிர ஒரு பலனும் இருக்காது. 


இதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். 


இந்தச் சிக்கல் நமக்கு மட்டும் அல்ல.


"மகா மாயையை களைந்திட வல்ல முருகன், தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும், இந்த உடல், ஆடை, பெண்கள் என்று இந்த உலக மாயையில் இருந்து வெளி வர முடியாமல் தயக்கம் அடைகிறேனே" என்கிறார் அருணகிரிநாதர். 


பாடல் 


மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகமாறு மொழிந்து மொழிந்திலனே 

அகமாடை மடந்தைய ரென்றயரும் 

சகமாயை யுணின்று தயங்குவதே



சீர் பிரித்த பின் 


மகமாயை களைந்திட வல்ல பிரான் 

முகம் ஆறும் மொழிந்தும்  ஒழிந்திலனே 

அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்  

சகமாயையுள் நின்று தயங்குவதே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)



மகமாயை = மகா மாயையை 


களைந்திட = விலக்க 


வல்ல பிரான்  = வலிமையுள்ள முருகன் 


முகம் ஆறும் = ஆறு முகங்களாலும் 


மொழிந்தும் = உததேசம் செய்தும் 


ஒழிந்திலனே  = விட முடியவில்லையே 


அகம் = உடம்பு 


ஆடை  = ஆடை, அணிகலன்கள் 


மடந்தையர் = பெண்கள் 


என்று அயரும்   = என்று அயரும், தளரும், தவிக்கும் 


சகமாயையுள் = இந்த உலக மாயையில் 


நின்று = மூழ்கி 


தயங்குவதே = தயங்கி நிற்கிறேனே 


விட வேண்டும் என்று தெரிகிறது. விடவும் மனம் வர மாட்டேன் என்கிறது. 


உபதேசம் அறிவுக்கு எட்டுகிறது. பாசம் மனதைப் பற்றிக் கொண்டு உலக பந்தங்களை விட முடியாமல் தவிக்கிறது. 


விட்டு விடலாமா என்று ஒரு என்னணம்.


இவ்வளவு இன்பத்தை எப்படி விடுவது என்று ஒரு தயக்கம். 


"சக மாயையுள் நின்று தயங்குவதே" என்கிறார். 


இறைவனே வந்து சொன்னாலும் மனித மனம் (பசு) பாசத்தில் இருந்து எளிதில் விடுபடுவது இல்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து உபதேசம் செய்தும், மணிவாசகர் புரிந்து கொள்ளவில்லை. 


கண்ணபிரான் நேரில் உபதேசம் செய்தும், அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை. 


இதுதான் மாயையின் வலை. 


உண்மையை மறைக்கும். பொய்யை, உண்மை போல் காட்டும். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி"


என்பார் மணிவாசகர். 


பொய்யை மெய் என்று நம்பி அதன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். 


நீண்ட, ஆழமான முயற்சி வேண்டும். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html




]




Wednesday, October 5, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7

      

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 

6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. மாயை 12 . புருடன் 


(இதில் மாயை என்ற தத்துவம் விடுபட்டு போய் விட்டது. மன்னிக்க.).


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்றும் அடுத்த 7  தத்துவங்கள் வித்யா தத்துவங்கள் என்றும்  அழைக்கப்படுகின்றன. 


 13  சித்தம்; 14 அகங்காரம் ; 15. புத்தி;  16  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

எனவே, 16  தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


இறைவன் இறங்கி வந்தாகிவிட்டது, உயிர்கள் செயல்பட தயார், அவை செயல்பட அந்தக் கரணங்கள் வந்து விட்டன. 


இன்னும் 2௦ தத்துவங்கள் பாக்கி இருக்கின்றன. 


உயிர்கள் செயல்பட தணு  - கரண - புவன - போகங்கள் வேண்டும் என்று பார்த்தோம். அதன் விரிவை இங்கே காண இருக்கிறோம்.



உயிர்கள் செயல் பட புவனம், அதாவது இடம் வேண்டும். இடம் என்றால் சூழ்நிலை. வெறும் தரை மட்டும் போதாது. 


எனவே இறைவன் ஐந்து பூதங்களைப் படைக்கிறான். அவை மாபூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


17. ஆகாயம்;  18. தீ;   19. நீர்  20. காற்று;  21 நிலம் 


என்று ஐந்து தத்துவங்களாகப் பிரிகின்றன. 


இந்த பூதங்கள இருந்தாலும், இந்தப் பூதங்களை உணரும் புலன்கள் வேண்டும் அல்லவா?


இந்த ஐந்து பூதங்களையும் அறிந்து கொள்ள ஐந்து புலன்களைத் படைக்கிறான் இறைவன். அவை ஞான இந்திரியங்கள் (ஞானேந்திரியம்) என்று அழைக்கப் படுகின்றன. 


22. மெய்   23  வாய்   24 மூக்கு   25 செவி   26 கண்   


ஐந்து பூதங்கள் ஒரு புறம்; ஐந்து புலன்கள் ஒரு புறம். இந்த இரண்டையும் எப்படி இணைப்பது? எது இணைக்கும்? 


அதற்கு அடுத்த பத்து தத்துவங்கள் வருகின்றன 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

(pl click the above link to continue reading)



27. சுவை  28. ஒளி  29 ஊறு  30 ஓசை  31 நாற்றம் 


என்ற இந்த ஐந்தும் தன்மாத்திரைகள் என்று அழைக்கப் படுகின்றன.  


இவை இருந்தால் மட்டும் போதாது, உடல் இருக்கிறது, அதில் அவயங்கள் இருக்கின்றன, அந்த அவயங்கள் (புலன்கள்) அறியும் அறிவு இருக்கிறது. இருந்தாலும் உயிர்கள் இயங்க முடியாது. 


வாய் இருக்கிறது. நீர் இருக்கிறது. அந்த நீர் எப்படி வாய்க்குள் போகும்? நீர் இங்கே வர வேண்டும் அல்லது உடம்பு அங்கே போக வேண்டும்.  நீர் வராது. உடம்புதான் போக வேண்டும். எப்படி போகும்? அது நடந்து போக வேண்டும்.  போனால் மட்டும் போதுமா? தண்ணீருக்கு அருகில் சென்றால் போதுமா? அதை எடுத்து வாயில் ஊற்ற வேண்டாமா?  சரி, ஊற்றினால் போதுமா? முதலில் ஊற்றிய நீர் வெளியேற வேண்டாமா? ஊற்றிக் கொண்டே இருக்க முடியுமா?


இந்த சிக்கலை விடுவிப்பது அடுத்து வரும் ஐந்து கன்மேந்திரியங்கள் 


அவை:


32 - கை, பற்றுதல், பாணி 


33 - கால், பதித்தல், பாதம் 


 34. பிறப்பு உறுப்புகள் - உபத்தம் 


35.  நாக்கு - பேசுதல் - பலுக்கல் - வாக்கு 


36. கழிவை வெளியேற்றும் உறுப்புகள் - கழித்தல், பாயு 


பாணி, பாதம், உபத்தம்,, வாக்கு, பாயு  என்பன. 


இனி, இவை ஒன்றோடு ஒன்று எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்று பார்ப்போம். 


உதாரணமாக 


பஞ்ச மாபூதங்களில் உள்ள - நீர் 


ஞானேந்திரியத்தில் - வாய் 


தன்மாதிரையில் - சுவை 


இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. 


சுவை அறிய வேண்டும் என்றால் நீர் வேண்டும். எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், வாயில் உமிழ் நீர் இல்லாவிட்டால் சுவை தெரியாது. 


நாலைந்து நாள் காய்ச்சலில் கிடந்து, நாக்கெல்லாம் உலர்ந்து போய் கிடக்கும் ஒருவனிடம் ஒரு இலட்டை கொடுத்துப் பாருங்கள்.  "வேண்டாம், வாயெல்லாம் கசக்குது" என்பான்.   ஏன், வாயில் நீர் இல்லை. உலர்ந்து போய் விட்டது. 


சுவை அறிய வேண்டும் என்றுதான் இறைவன் நாவை எந்நேரமும் ஈரமாக வைத்து இருக்கிறான். வாயில் போட்டது கரைய வேண்டும். 


அது போல, 


நிலம் - மூக்கு - நாற்றம் (மணம், வாசம்). 


ஐந்து பூதங்களில் நிலத்தைத் தவிர மற்றதற்கு வாசம் கிடையாது.  மண்ணுக்குத் தான் வாசம் உண்டு. மண் வாசனை என்று சொல்கிறோம் அல்லவா?


ஆகாயம் - செவி - ஓசை 


ஓசை வர வேண்டும் என்றால் வெளி வேண்டும்.பொருள்கள் அசைய வேண்டும். அதிர வேண்டும். பொருள்கள் அசையும் போது காற்று அசைந்து, அது காதில் வந்து மோதும் போது ஓசையாகக் கேட்கிறது. 


தீ - கண் - ஒளி 


கண் காண வேண்டும் என்றால் வெளிச்சம் வேண்டும். இருட்டுக்குள் ஒன்றும் தெரியாது. ஒளி என்றால் வெப்பம். தீ.  எந்த விளக்கைப் போட்டாலும் அது சூடு ஏறும். 


காற்று - மெய் - ஊறு (தொடு உணர்ச்சி). 


காற்று இருந்தால்தான் தோலில் தொடு உணர்ச்சி இருக்கும். 


சிவ தத்துவம் ஐந்து  (5)

வித்யா தத்துவம் ஆறு  (6, 5+6 = 11)

அந்தக் கரணங்கள் ஐந்து (5, 11+5 = 16)

பூதங்கள் ஐந்து  (5, 16 + 5 = 21)

தன்மாத்திரை ஐந்து  (5, 21 + 5 = 26)

ஞானேந்திரியங்கள் ஐந்து  (5, 26 + 5 = 31)

கன்மேந்திரியங்கள் ஐந்து (5, 31 + 5 = 36).


ஆக மொத்தம் 36 தத்துவங்கள். இது சைவ சமயத்தின் அடிப்படை. 


இந்த 36 தத்துவங்களும் இரண்டு விதமான மாயையில் இருந்து தோன்றுகின்றன. 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று இரண்டு பிரிவுகள். அதை முன்னமேயே பார்த்தோம் (குன்றி மணி,  வெளி ).


இந்த இரண்டு மாயைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இனி, கந்தர் அனுபூதிக்குள் செல்வோம். 






[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html



]




Tuesday, September 27, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6

     

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. புருடன் 


என்றும் சிந்தித்தோம் 


36 தத்துவங்களில் 11 தத்துவம் பற்றி சிந்தித்தோம்.இனி மீதி உள்ள 25 தத்துவங்களை பற்றிச் சிந்திப்போம். 


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இது இறைவன் உயிரை செயல்படுத்த தயாராகும் நிலை. 


அடுத்த 6 தத்துவங்கள் உயிர்கள் செயல்பட உண்டான தத்துவங்கள். இவை வித்யா தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


இறைவன் தயார், உயிர்கள் தயார். 


இனி இந்த உயிர்கள் செயல்பட வேண்டும். 


எங்கே, எப்படி செயல்படும் என்பதைப் பற்றி விளக்குபவை  மீதி உள்ள 24 தத்துவங்களும். 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

(pl click the above link to continue reading)





உயிர்கள் செயல்பட ஒரு உடல் வேண்டும். உயிர் சூக்கும பொருள். அது நேரடியாக இயங்க முடியாது. மின்சாரம் சக்திதான். அது இயங்க பல்பு, டிவி, grinder, mixie என்ற கருவிகள் வேண்டி இருக்கிறது அல்லவா?  அது போல உயிர்கள் இயங்க இறைவன் நான்கு விடயங்களை படைக்கிறான்.  


அவை 


தனு, கரண, புவன,  போகம் என்று அழைக்கப்படுகின்றன. இவை தத்துவங்கள் அல்ல. 


தனு என்றால் உடம்பு. 

வெறும் உடம்பு செயல் பட முடியாது. அது செயல்பட அவயங்கள் வேண்டும். கை, கால் போன்ற கருவிகள் இருந்தால்தான் அது செயல்பட முடியும்.  அந்தக் கருவிகளுக்கு கரணங்கள் என்று பெயர். 


உடம்பு இருக்கிறது, கருவிகள் (கரணங்கள்) இருக்கின்றன. உடம்பு எங்கே இயங்கும்? அது இயங்க ஒரு இடம் வேண்டும். அதற்கு புவனம் என்று பெயர். 


சரி, உடம்பு இயங்க வேண்டும் என்றால் இடம் மட்டும் போதாது. அனுபவம் வேண்டும்.  உடம்பு இருக்கிறது, வயிறு இருக்கிறது, கை இருக்கிறது, சாப்பாடு இருக்கிறது. சாப்பிட முடியுமா?  பசி வேண்டாமா? பசிக்காமல் சாப்பிட முடியுமா? பசியும் இருக்கிறது. உணவில் ஒரே உப்பு, அல்லது அதீத காரம். சாப்பிட முடியுமா? உணவில் சுவை இருக்க வேண்டும். அந்த பசி, சுவை போன்றவைதான் அனுபவங்கள். அவற்றை போகங்கள் என்கிறார்கள். 


தனு, கரண, புவன, போகம் என்பது இதைத்தான். இவை தத்துவங்கள் அல்ல.இவற்றிற்கு உள்ளே இருக்கின்றன தத்துவங்கள். 


ஏ அப்பா, எவ்வளவு ஆழமாகப் போகிறது என்று நீங்கள் வியக்கலாம். சிந்தித்து இருக்கிறார்கள்.  


தத்துவங்களுக்கு போவதற்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு. 


நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்? உங்கள் உடன் பிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறீர்கள்? நேற்றுவரை கூடவே இருந்த பிள்ளை இன்று எங்கோ கடல் கடந்து போய் விட்டது. ஏன்?


அது அதற்கு விதித்த புவனம். இது உங்களுக்கு விதித்த புவனம். 


இந்த வேறுபாடுகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இனி தத்துவத்துக்குள் செல்வோம். 


உடல் செயல்பட உடலை ஏதாவது ஒன்று தூண்ட வேண்டும். போய் சாப்பிடு, அலுப்பாக இருக்கிறது போய் தூங்கு, சினிமாவுக்குப் போ, வேலைக்குப் போ என்று உடம்பை தூண்ட வேண்டும். 


முதலில் எண்ணம் வர வேண்டும். அது பின் உடல் மூலமாக செயலாக்கப்படும். இந்த எண்ணங்கள் பிறக்கும் இடத்துக்கு சித்தம் என்று பெயர். சித்தத்தில் இருந்துதான் எல்லாம் தொடங்குகிறது. 


 12 சித்தம். இது பன்னிரண்டாவது தத்துவம். 


சித்தம் ஓடி ஓடி களைத்துப் போகும்.அதை களைப்படையாமல் இருக்கச் செய்வது அகங்காரம் என்ற அடுத்த தத்துவம். 


13 அகங்காரம். நான் என்ற உணர்வு,எனது என்ற உணர்வு இருப்தால்தான் செயல்கள் இடை விடாமல் இருக்கின்றன. என் மனைவி, என் பிள்ளை, என் வீடு, என் வேலை என்ற எண்ணம் வரும் போதுதான் அதை காப்பாற்ற வேண்டும், அவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. இல்லை என்றால் யார் அல்லது எது எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்று இருந்து விடலாம் அல்லவா?


இந்த அகங்காரம் மூன்று விதமாக பிரிகிறது.  


இராஜசம், தாமசம், சாத்வீகம் என்று. 


அவற்றை விளக்காமல் மேலே போவோம் 


இந்த சாத்வீக அகங்காரத்தில் இருந்து புத்தி, மனம் என்ற அடுத்த இரண்டு தத்துவங்கள் பிரக்கின்ன்றன. 


14. புத்தி 


15  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


நமக்கு உள்ளே நிகழும் அனுபவம் ஏதோ மூளையில் நிகழ்வதாக நாம் நினைக்கிறோம்.  நம் சமய கோட்பாடுகள் அது நான்கு நிலைகளில் நிகழ்வதாகக் கூறுகிறது. 


சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்று ஒவ்வௌன்றுகும் ஒரு செயல்பாடு உண்டு, இவை ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவவை. அவற்றை விளக்க புகுந்தால் இன்னும் விரியும்.  மிக ஆழமான தத்துவங்கள் என்று புரிந்து கொள்வோம். ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலைத் தொடரலாம். 




உள்ளே இருப்பவை. உடம்பை பிரித்துப் பார்த்தாலும் தெரியாது. 


எனவே, 15 தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


மேலும் 21 இருக்கின்றன. 


அவற்றை அடுத்த பதிவில் சிந்திப்போம். 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html




]




Thursday, September 22, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 5

    

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 5


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


நாதம் , விந்து .  சதாக்கியம்,  ஈஸ்வரம்,  சுத்த வித்தை.


மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 


இனி உயிர்கள் இயங்க வேண்டும். இயங்க என்ன வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


(pl click the above link to continue reading)



நீங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு இடத்துக்கும் நடுவில் இடை வெளி வேண்டும். அப்போதுதான் நகர முடியும்.


அது எளிதாகப் புரிகிறது. 


ஆனால், நகர இன்னொன்றும் வேண்டும். அதுதான் "காலம்" .



நீங்கள் பிறந்த ஊரில் இருந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்து இருகிறீர்கள். அந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள  தூர வித்தியாசம் உங்களுக்குப் புரிகிறது. 



நீங்கள் பிறந்ததில் இருந்து இன்று வரை உள்ள காலம்? அது புரிவது இல்லை. ஏன் என்றால் அது ஒரு பருப் பொருள் அல்ல. தொட்டு உணர முடியாது. இருந்தும் காலம் வேண்டும் என்று புரிகிறது அல்லவா. 


எனவே, முதலில் இறைவன் அசுத்த மாயையில் இருந்து "காலம்" என்ற தத்துவத்தை தோற்றிவித்தான். 


காலம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?  தோற்றம் இல்லை, வளர்ச்சி இல்லை, மறைவு இல்லை, ஒன்றும் இருக்காது. எனவே முதல் தத்துவமாக கால தத்துவத்தை இறைவன் படைக்கிறான். 


காலம் தோன்றி விட்டது. 


காலத்துக்குள் உயிர்கள் இயங்க வேண்டும். 


எப்படி இயங்க வேண்டும்? 


அவைகள் முன் செய்த வினைகளின் படி இயங்கும். ஒரு பிறவியில் செய்த நன்மை தீமைகள், பாவ- புண்ணியங்களாகி, பின் இன்ப-துன்பமாக வந்து சேரும். 


ஒரு பிறவி, மறு பிறவி என்பது காலத்தின் அடிப்படையில் வருவது. 


இவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் நியமிக்கிறான். 


அதை "நியதி" தத்துவம் என்கிறார்கள். 


அது இரண்டாவது தத்துவம். நியமிக்கப்படுதல்.  உனக்கு இது தான் என்று நியமித்தல். இதை நாம் ஊழ் என்கிறோம், விதி என்கிறோம். 



அடுத்து என்ன?


உயிர்கள் இயங்கும் காலத்தையும், அவை செய்ய வேண்டிய கால அளவையும் நிர்ணயம் செய்தாகி விட்டது. இனி அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களை கொஞ்சம் எழுப்பி விட வேண்டும். அவற்றின் தூக்கத்தைக் கலைக்க வேண்டும். 


எனவே மூன்றாவது தத்துவம் "கலை" என்று அழைக்கப் படுகிறது. திருப்பள்ளி எழுச்சி அது. 


காலம்

நியதி

கலை 


உயிர்கள தூக்கம் கலைந்து எழுகின்றன. எழுந்தவுடன், நான் யார், எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்ற கேள்வி பிறக்கும். கேள்விக்கு விடை அறிய முற்பட்டும்.  அதை அறிவு அல்லது "வித்தை " என்கிறார்கள். உயிர்கள் எவ்வாறு ஞானம் அடைகின்றன என்பது பற்றிய தத்துவம் அது.  வித்யா தத்துவம். உயிர்கள் உண்மையை தேடி அலைகின்றனவா இல்லையா? 


காலம்,

நியதி,

கலை,

வித்தை 


அறிவு தேடலின் நடுவே, ஆசை பெருகும். அறிய அறிய ஆசை வரும். தெரியாத ஒன்றின் மேல் ஆசை வராது. தெரிய வரும் போது எனக்கும் அது போல ஒன்று வேண்டும் என்ற ஆசை வரும். அந்த ஆசை மேலும் கர்மத்தைத் தூண்டும். ஆசைக்கு "இராகம்" என்று பேர் சொல்கிறார்கள். 


காலம்

நியதி 

கலை

வித்தை 

இராகம் 


இந்த ஐந்தையும் கஞ்சுகம் (ஆடை) என்பார்கள்.  ஆன்மா அணிந்து கொள்ளும் ஆடை. ஏன் ஆடை என்றால், ஆன்மாவுக்கு வடிவு கிடையாது. இந்த ஐந்து குணங்களும் சேர்ந்த பின் ஆன்மா ஒரு வடிவு கொள்ளும். 


அப்படி ஒரு வடிவு கொண்ட ஆன்மாவுக்கு "புருடன்" என்று பெயர். 


குணம், காலம், அறிவு என்று ஒன்றும் இல்லாத ஆன்மா அறிவு, ஆசை, காலம் எல்லாம் பெற்று ஒரு வரையறைக்குள் செயல்படத் தொடங்க தயாராக இருக்கும். அப்படிப்பட்ட ஆன்மாவுக்கு புருடன் என்று பெயர். 


காலம்

நியதி

கலை

வித்தை 

இராகம்/அராகம் 

புருடன் 


இனியும் ஆன்மா இயங்காது. ஆன்மா இயங்க வேண்டும் என்றால் அது தன்னை தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும். 


என் பெற்றோர், என் மனைவி, கணவன், பிள்ளைகள், வீடு, வாசல், வேலை, என்று தன்னைச் சுற்றி ஒரு பின்னலை ஏற்படுத்திக் கொள்ளும், அதற்கு பிரகிருதி மாயை என்று பெயர். 


நேற்றுவரை யாரோவாக இருந்த இரண்டு பேர் இன்று முதல் அவன் தான் என் உயிர், அவள் இல்லாமல் நான் இல்லை என்று சொல்ல வைப்பது இந்த மாயை. தந்தை, தாய், பிள்ளை என்பதெல்லாம் கற்பித்துக் கொண்டது. அந்தப் பிணைப்பு இருந்தால் தான் செயல் பட முடியும். 



காலம்

நியதி

கலை

வித்தை 

இராகம்/அராகம் 

புருடன் 

பிரகிருதி மாயை 


என்ற இந்த ஏழு தத்துவங்களை வித்யா தத்துவங்கள் என்று சொல்கிறார்கள். 


இதில் ஒவ்வொன்றும் இதற்கு முன் உள்ள சிவ தத்துவத்தில் இருந்து எப்படி வந்தன என்று விளக்கங்கள் இருக்கிறது. சொல்லின் விரியும். 


சிவ தத்துவம் 5, வித்யா தத்துவம் 7 ஆக பன்னிரண்டு தத்துவங்கள் பற்றி சிந்தித்தோம். 


இன்னும் 24 தத்துவங்கள் இருக்கின்றன. 


மேலும் சிந்திப்போம். 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html




]




Tuesday, September 20, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4

   

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


நாதம் 

விந்து 

சதாக்கியம் 

ஈஸ்வரம் 

சுத்த வித்தை.


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும்.  முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 



மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


(pl click the above link to continue reading)


இனி உயிர்கள் செயல்படத் தொடங்க வேண்டும். உயிர்கள் செயல்பட என்ன வேண்டும் என்று அறிந்து, அவற்றை இறைவன் உருவாக்குகிறான். 


ஒரு பெரிய வீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டைப் பார்த்து இரசிக்கிரோம். அடடா எவ்வளவு அழகாக இருக்கிறது. எவ்வளவு பெரிய வீடு என்று.


வீட்டினுள் சென்று பார்க்கிறோம். பெரிய முன் அறை, மூன்று படுக்கை அறை, பெரிய சமையல் அறை, மூன்று குளிப்பறை என்று நன்றாக இருக்கிறது. 


சற்று சிந்திப்போம். வீடு என்பது ஒரு பொருள் அல்ல. பல பொருள்களின் தொகுதி. அவ்வளவே. ஒவ்வொன்றாகச் சொல்ல முடியாது என்பதால் எல்லாவற்றையும் சேர்த்து வீடு என்று ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். .


உண்மையில் அது சிமென்ட், இரும்பு கம்பிகள், மணல், கல், கண்ணாடி, மரம், துணி என்பவற்றின் தொகுதி. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டால், அவ்வளவு பெரிய வீடு, ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். 


அதில் இன்னும் உள்ளே போவோம். 


அங்கே உள்ள மேஜை, நாற்காலி எல்லாம் பிரித்துப் போட்டால் மரம் மிஞ்சும். 


படுக்கை, தலையணை, போர்வை, படுதா இவற்றை பிரித்தால் துணியும் நூலும் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் நூல், சாயம் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் பஞ்சு மிஞ்சும். 


இப்படி உள்ளே போய் கொண்டே இருக்கலாம். 


தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், எந்த பெரிய பொருளும் ஏதோ நுண்ணிய பொருள்களின் தொகுதி என்று. 


மனிதன் என்றால் உறுப்புகள், அதற்கு கீழே தோல், எலும்பு, இதயம் என்று அங்கங்கள், அவற்றிக்கு உள்ளே திசுக்கள், அவற்றிற்கு உள்ளே செல்கள் என்று போய்க் கொண்டே இருக்கும். 


ஏதோ ஒரு நுண்ணிய பொருளில் இருந்து பெரிய பொருள்கள் உருவாகின்றன என்று புரிகிறது அல்லவா?


அந்த நுண்ணிய பொருளை பிரித்தால் உள்ளே இன்னும் போகும். 


இப்படி போய்க் கொண்டே இருந்தால், இறுதியில் ஒரு மிக மிக நுண்ணிய பொருள் ஒன்று இருக்கும். அதை கண்ணால் காண முடியாது, காதால் கேட்க முடியாது. புலன்களுக்கு பிடிபடாது. அவ்வளவு நுண்மை வாய்ந்தது 


அந்த நுண்மையான ஒன்றை மாயை என்று சொல்கிறார்கள். மிக மிக நுண்மையானது. அதை விட நுண்மையான ஒன்று இல்லை என்றால் அது எவ்வளவு நுண்மையானது என்று சிந்திக்க முடியும்.  



அந்த மாயையில் இருந்து இறைவன் உலகைப் படைத்தான். 


இந்த மாயையை இரண்டாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று. 


அப்படியானால் இரண்டு மாயை உண்டா என்றால் இல்லை. 


என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா?  


இது இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்கப்படுகிறது. 


குன்றிமணி என்று ஒரு விதை உண்டு. அது ஒரு புறம் கறுப்பாக இருக்கும், மறு புறம் சிவப்பாக இருக்கும். இந்தப் பக்கம் பார்பவர்கள் அதை கறுப்பு என்பார்கள். மறு புறம் பார்பவர்கள் அது சிவந்த நிறம் உடையது என்பார்கள். அது ஒன்றுதான், இரண்டும் தான். 


நம் காற்று மண்டலம் இருக்கிறதே, ,அது பூமிக்கு அருகில் மாசு உடையதாக இருக்கும். குப்பைகள், புகை, தூசி என்று. மேலே போகப் போக சுத்தமாக இருக்கும். ஒரே மண்டலம் தான் கீழே அசுத்தம், மேலே சுத்தம். அது போல 


ஒரே மாயை தான், இரண்டு பிரிவுகள். 


இந்த அசுத்த மாயையில் இருந்து இறைவன் ஏழு தத்துவங்களை தோற்றுவிக்கிறான். அவை இல்லாமல் இந்த உயிர்கள் செயல் பட முடியாது. உயிர் அசைய முதலில் அவை வேண்டும். 


அவை என்னென்ன என்று நாளை பார்ப்போமா?


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3


]https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html





Friday, September 16, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3

  

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


இனி மேலே செல்வோம், 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


(pl click the above link to continue reading)


இப்படித் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்ய இறைவன் அவற்றின் மேல் கருணை கொண்டு தன் நிலையில் இருந்து இறங்கி வருவான். 


ஏன் இறங்கி வர வேண்டும் ? அவன் நினைத்தால் அந்த உயிர்களை ஒரு நொடியில் பாசத்தில் இருந்து விடுவிக்க முடியாதா என்று என்னைப் போல ஒரு சிற்றறிவு உள்ளவன் கேட்கக் கூடும். .


செய்யலாம் செய்ய முடியும். ஆனால், ஏன் செய்ய வேண்டும்?  அப்படிச் செய்வதாக இருந்தால் இறைவனுக்கு ஒரு விருப்பு, வெறுப்பு இருக்க வேண்டும். ஒரு விருப்பும், வெறுப்பும் இல்லாதவன் எப்படிச் செய்வான். உயிர்கள் வெளிவருவதும், வெளி வரதாதும் அவற்றின் விருப்பம். ஆண்டவனுக்கு ஒரு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. 


எனவே, அவன் நேரடியாக செயலில் இறங்கி தனக்கு வேண்டியதை செய்து கொள்வது இல்லை.  மாறாக, உயிர்கள் செயல் படும் ஒரு சூழலை உருவாக்கித் தருவான். என்ன செய்வது என்பது உயிர்களின் பாடு.


ஒரு ஆசிரியர், பாடம் எடுப்பார், சந்தேகம் வந்தால் சொல்லிக் கொடுப்பார். அவரே பரிட்சையும் எழுதினால் என்ன என்று கேட்கக் கூடாது. அவருக்கு விடை தெரியும். அவர் பரீட்சை எழுதினால் மாணவனுக்கு அறிவு முதிர்ச்சி எப்படி வரும்?


எனவே, உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் இறங்கி வரும் படிகள் இருக்கின்றன. 


இந்த படிகளை மொத்தம் 36 படிகளாக பிரிக்கிறார்கள். இதை 90, 96 என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இப்போதைக்கு 36 என்ன என்பதைப் பார்ப்போம். 


இந்த 36 படிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த தத்துவம் 

அசுத்த தத்துவம் 

பிரகிருதி தத்துவம் 


என்று 


முதலில் சுத்த தத்துவத்தை எடுத்துக் கொள்வோம். 


இதில் மொத்தம் 5 படிகள். 


முதல் படி - நாதம். 


நாதம் என்றால் என்ன? இது அறிவின் பூர்ண வடிவம். அறிவே உருவானது. நம்மால் சிந்தித்து உணர முடியாதது. நனவிலி நிலை என்கிறார்கள். முயற்சி செய்யாதே. உன்னால் அதை அறிந்து கொள்ளவே முடியாது. இதை சைவ சித்தாந்தம் பரசிவம் என்பார்கள். நாம் பார்க்கும் வடிவங்கள் அல்ல. வடிவம் அற்ற ஒன்று அது. 


இரண்டாம் படி - விந்து 


விந்து என்றால் என்ன? இது அருள் சக்தி. ஏனைய தத்துவங்கள் பிறக்க வழி செய்யும் படி. இதை கிரியா சக்தி என்றும் சொல்லுவார்கள்.  இதுவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. 


மூன்றாவது படி - சதாக்கியம் அல்லது சதாசிவம் - அறிவும் செயலும் சேரும் இடம். ஏனைய தத்துவங்களை தூண்டும் இடம். சிவ சக்தி இணையும் இடம். 


நான்காவது படி - ஈஸ்வரம் 


ஈஸ்வரம் என்றால் என்ன ?


இந்த நிலையில் இறைவன் உயிர்களில் கலந்து நிற்பான். ஆனால், உயிர்கள் அதை அறிய மாட்டா. இதைத்தான் மறைத்தர் தொழில் என்பார்கள். மறைத்தல் என்றால் பிள்ளைகள் பொருளை மறைத்து வைத்து கண்டுபிடிக்கும் விளையாட்டுப் போல அல்ல. தான் உயிர்களில் கலந்து நிற்பதை உயிர்கள் அறியாமல் மறைப்பது. 


ஐந்தாவது தத்துவம் - சுத்த வித்தை.


சுத்த வித்தை என்றால் என்ன?  படைத்தல், காத்தல், அழிதல் என்ற முத்தொழில் தொடங்கும் இடம். இறை சக்தி முழுமையாக வெளிப்படும் இடம். இந்த இடத்தில் தான் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்று இறை சக்தி வெளிப்படும். இதை அறிந்து கொள்ளாமல், உருத்திரன் உயர்ந்த கடவுள், திருமால் உயர்ந்த கடவுள் என்று சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும். 


மிக மிக மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்.  ஆர்வம் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்க. 


புரிந்து சொல்லவில்லை. தெரிந்ததை சொல்லி இருக்கிறேன். மிக ஆழமான விடயம். 


மொத்தமாக இவை என்ன என்று புரிந்து கொள்வோம். பின் அதற்கு உள்ளே செல்லலாம். 


முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 


மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html



]


Sunday, September 11, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2

 

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



உலகில் நிரந்தரமானவை, தோற்றமும், அழிவும் இல்லாதவை மூன்று என்று பார்த்தோம்.  (https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html)


அவை பதி,பசு, பாசம் என்பன. 


பதி - இறைவன். 

பசு - உயிர்கள் 

பாசம் - கயிறு 


ஆச்சரியமான விடயம் என்ன என்றால், உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்பதுதான். இறைவன் என்று உண்டோ, உயிர்களும் அன்றே உண்டு. 


"என்று நீ அன்று நான்" என்பார் தாயுமானவர். 


உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், பின் யார் படைத்தார்கள் என்றால், யாரும் படைக்கவில்லை என்பதுதான் பதில். அது என்றும் உள்ளது. சீரணிக்க சற்று கடினம்தான். இப்போதைக்கு அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

(pl click the above link to continue reading)


இந்த மூன்றில் பதியும், பசுவும் அறிவு உள்ளவை. பாசம் அறிவு இல்லாதது. 


இறைவன் - பேரறிவாளன்

உயிர்கள் - சிற்றறிவு உள்ளவை 


இதுவரை விளங்கி விட்டது அல்லவா? 


இனி அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம். 


இந்த உயிர்கள், நியாமாகப் பார்த்தால், இறைவனை நோக்கித்தான் நகர வேண்டும். அறிவு, அறிவோடு சேர்வதுதானே இயற்கை. 


மாறாக, இந்த உயிர்கள் இறைவனை விடுத்து பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன. ஆணவம் என்ற பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன.நான், எனது என்ற ஆணவத்தில் உயிர்கள் சிக்கி விடுகின்றன. 


சிக்கிவிட்டால் அவற்றால் அதில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறியாமை என்ற இருளில் மூழ்கிப் போய், திக்கு திசை தெரியாமல் மாட்டிக் கொள்கின்றன. சுற்றிலும் இருட்டு. பாதை எது என்று தெரியவில்லை. எந்தப் பக்கம் அடுத்த அடியை எடுத்து வைப்பது என்று தெரியாமல் திகைத்து உறைந்து போய் நிற்கின்றன. 


இப்படி கொஞ்ச காலம் போன பின்னால், இந்த அறியாமை இருளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. 


இந்த ஆசைதான் மூல கன்மம் (கர்மம்) என்கிறார்கள். 


கர்மா கொள்கையை படிப்பவர்கள், ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகிறது என்றால் முதன் முதலில் தோன்றிய கர்மம் எதனால் தோன்றியது என்று கேட்பார்கள். அதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மூல கன்மம் என்பது உயிர்களின் ஆசை. அறியாமையில் இருந்து வெளிப்பட்டு அறிவை அடைய வேண்டும் என்ற ஆசை. அதில் இருந்து வந்ததுதான் எல்லாம். அது ஏன் வந்தது என்று பார்த்தோம். 


சரி, உயிர்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஆசை மட்டும் போதுமா? எப்படி அதை அடைவது?


அவை தானே வெளிவர முடியாது. 


உயிர்களின் துன்பத்தைக் கண்டு இறைவன் அவற்றின் மேல் இரக்கம் கொண்டு உதவி செய்ய நினைக்கறான். 


அவன் அப்படி செய்ய நினைத்த உதவியின் வெளிப்பாடுதான் இந்த 36 தத்துவங்களும். 


நான் முன்பே சொன்னது போல, இது எல்லாம் நான் அறிந்து, புரிந்து, அனுபவத்தில் தெளிந்து சொல்லவில்லை.இது என்ன என்ற ஆர்வத்தில், நான் வாசித்ததை, ,கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இவை நான் கண்டு பிடித்ததோ அல்லது நான் புரிந்து கொண்டதோ அல்ல. 



உங்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். உங்கள் தேடலை தொடங்குங்கள். அதுதான் உண்மையான ஞானத்தின் அடிப்படை. 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


]


Wednesday, September 7, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1 


நவீன அறிவியல் எது அனைத்துக்கும் அடிப்படை என்று தேடத் தொடங்கியது. பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்று கண்டு கொண்டது. அணுக்கள் எதனால் ஆனது என்று ஆராய்ந்தபோது அவை ப்ரோடான் , நியுட்ரான், எலெக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்று அறிந்து கொண்டது. சரி, இந்த துகள்கள் எதனால் ஆனது என்று தேடிய போது பாசிட்றான், போசான், quark போன்ற துகள்களால் ஆனது என்று கண்டு கொண்டது. 


இப்போது நமக்கு இருக்கும் கருவிகளின் துணை கொண்டு இந்த அளவுக்குத்தான் போக முடிந்தது. இன்னும் பெரிய கருவிகள் வந்தால், இந்த தேடல் இன்னும் தொடரும். 


அறிவியல் எது அடிப்படை என்று ஆராய்ந்த போது, மெய்யியல் எது நிரந்தரமானது, அழிவற்றது என்று ஆராய முற்பட்டது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

(pl click the above link to continue reading)



பொருள்கள், உயிர்கள் எல்லாம் தோன்றுகின்றன, இருக்கின்றன, பின் மறைந்து விடுகின்றன.இப்படி அல்லாமல்,ஏதாவது ஒன்று தோன்றாமலும், அழியாமலும் இருக்குமா என்று கேள்வி கேட்டுக் கொண்டு அதைக் காண புறப்பட்டது. 


தோன்றியது எல்லாம் அழியும். அப்படி என்றால்,ஒன்று அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அது தோன்றவும் கூடாது. தோற்றம் இருந்தால் அழிவு இருக்கும். தோன்றாமல் எப்போதும் இருப்பது எது என்று ஆராய்ச்சியை தொடங்கியது. 


அப்படி ஆராய்ந்ததில் தோற்றம் இல்லாத பொருள்கள் மூன்று என்று கண்டு சொன்னது. 


அவற்றிற்கு தோற்றம் இல்லாததால், அவற்றிற்கு அழிவும் இல்லை என்று தெரிந்து கொண்டது. 


அவை எவை?


பதி, பசு, பாசம்.


இந்த மூன்றும் ஆதி அற்றவை.அ-ஆதி= அநாதி.


என்றும் உள்ள பொருள்கள் இந்த மூன்றும்.


அது என்ன பதி, பசு, பாசம் ? 


அவற்றிற்கு உள்ள தொடர்பு என்ன? இவை எப்படி செயல் படுகின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்து மொத்தம் 36 தத்துவங்களில் அவற்றை தொகுத்தார்கள். 


இதில் சிலவற்றை நாம் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.  சில தத்துவங்கள் சிந்தனைக்கும், சோதனைக்கும் அப்பாற்பட்டவை. 


இவை எல்லாம் சரி என்று நான் சொல்ல வரவில்லை. 


சரியோ, தவறோ, உண்மையோ, பொய்யோ, நம்புவதோ அல்லது நம்பாமல் விடுவதோ உங்கள் விருப்பம். 


அவை என்ன என்று சொல்லி விடுகிறேன்.  பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 


மேலும் 


இந்த மெய்யியல் என்பது மிக பரந்துபட்டது. ஒரு சில பதிவுகளில் அனைத்தையும் சொல்லி விட முடியாது. ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலை தொடரலாம்.


மூன்றாவது, இவற்றைச் சொல்வதன் மூலம், ஏதோ எனக்கு இதெல்லாம் தெரியும் என்று நான் சொல்லவரவில்லை. படித்ததை, கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவை நான் கண்டு பிடித்தவை அல்ல. எனக்கு இவை முழுவதுமாக புரியவும் இல்லை. 


ஒவ்வொரு தத்துவத்தையும் நீங்கள் வலை தளங்களில் மேலும் விரிவாக ஆராயலாம். படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். அவ்வளவு ஆழமும், அகலும், நுண்மையும் கொண்டவை. 


இனி இந்த மெய்யியலின் ஒரு பகுதியான 3 6 தத்துவங்களுள் நுழைவோம். 



Sunday, September 4, 2022

கந்தரனுபூதி - மெய்யியல்

        

 கந்தரனுபூதி -  மெய்யியல்


பக்தி இலக்கியம் என்றால் பொதுவாக இறை நம்பிக்கை, இறைவன் எப்படி இருப்பான், அவனுடைய தோற்றம் எப்படி இருக்கும், அவனுடைய ஆற்றல், அவன் செயல்பாடுகள், அவனை துதிப்பது, அவன் பக்தர்களோடு சேர்ந்து இருப்பது என்றுதான் பெரும்பாலும் அறியப் படுகிறது. 

இவற்றால் என்ன பயன்? கடவுள் என்ன மாதிரி உடை உடுப்பார், என்ன ஆயுதம் வைத்து இருப்பார், எதன் மேல் ஏறிப் போவார், அவரின் குடும்ப நிலை இதெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவை எல்லாம் முதலில் உண்மையா என்றே கூடத் தெரியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இதைத் தவிர சமயத்தில், பக்தி இலக்கியத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. 



மெய்யியல் என்ற மிகப் பெரிய பிரிவு இருக்கிறது. 



நாம் இன்று படிக்கும் அறிவியலுக்கு முந்தைய நிலை அது. 



மெய்யியல் என்பது உண்மைகள் கண்டு அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படி விளக்கி , அதை நிரூபணம் செய்வது. 



இறைவன் யார், உயிர்கள் எப்படி வந்தன, இறைவனுக்கும் உயிர்களுக்கும் என்ன சம்பந்தம், இந்த உலகம் எப்படி வந்தது, அது எதனால் ஆனது, அதை யார் உருவாக்கினார்கள், எப்படி உருவாக்கினார்கள், ஏன் இத்தனை கடவுள்கள், இதில் யார் உயர்ந்தவர், வாழ்வின் நோக்கம் என்ன, அறிவு என்றால் என்ன, நாம் எப்படி சிந்திக்கிறோம், நான் என்றால் என்ன, என்பது பற்றி மிக மிக ஆழமாக விவரிக்கும் இயல், மெய்யியல்.



(Pl click the above link to continue reading) 





மெய்யியலின் வெளிப்பாடு தத்துவங்கள் எனப்படும். தத்துவங்கள்  எல்லோருக்கும் பொதுவானவை. எல்லா காலத்துக்கும் பொதுவானது. 


நம் பக்தி இலக்கியத்தின் அடிப்படை இந்த மெய்யியல். மெய்யியலைப் படித்தால் அதன் வெளிப்பாடு நம் பக்தி இலக்கியத்தில் இருப்பதைக் காணலாம். 


பாவம், புண்ணியம், மறு பிறவி, வீடு பேறு, முக்தி என்பதெல்லாம் இந்த மெய்யியலில் இருந்து வருபவை. 


சரி, அதற்கும், கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கிறதே. 


அடுத்த பாடலில், அருணகிரிநாதர் போகிற போக்கில் இரண்டு வார்த்தைகளை சொல்லி விட்டுப் போய் விட்டார். அது புரிய வேண்டும் என்றால், அடிப்படை மெய்யியல் தெரிந்து கொள்ள வேண்டும். 


இனி வரும் பாடல்களிலும் இந்த மெய்யியல் தத்துவங்கள் அடிக்கடி வரும். 


எனவே, இந்த இடத்தில் நிறுத்தி அதைப் புரிந்து கொள்வோம். 


மொத்தம் 36 தத்துவங்கள் இருக்கின்றன. 


எனக்கு என்ன சங்கடம் என்றால், இதை சொல்ல நினைத்தால் மிக நீண்டு விடுமோ என்ற பயம். யாரும் படிக்க மாட்டார்களோ என்ற  ஐயம் உண்டு. 


சும்மா, அப்படியே மேலோட்டமாக சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாமா என்றும் தோன்றுகிறது. 


இன்னொரு பக்கம், மெய்யியல் பற்றி ஒரு முன்னுரை தந்தால் ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடி படித்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. 


என்ன செய்யலாம்?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1, 2, & 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html



)


Monday, August 29, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 3

       

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 3


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


இந்தப் பாடலில் உள்ள "தளைபட்டு அழிய" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். 


தளை படுதல், அழிதல் என்று இரண்டு இருக்கிறது. 


பெரிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலைவர்கள் போன்றோரை சிறையில் அடைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள். 


சிறையில் இருந்து கொண்டு படிப்பார்கள், எழுதுவார்கள். எத்தனையோ பெரிய பெரிய புத்தகங்கள், சிந்தனைகள் சிறைச் சாலையில் பிறந்ததுதான். 


சிறை என்று நினைத்தால், அது சிறை. .


எழுதக் கிடைத்த வாய்ப்பு என்று நினைத்தால், அது வாய்ப்பு. 


நான்கு சுவர்களும், சில பல கம்பிகளும், சில காவல்காரர்களும் சிறையை உண்டாக்கி விடாது. 


வீட்டிற்குள் இருந்து கொண்டே சிறையில் இருப்பது போல தனிமையில் வாடுபவர்கள் பலர்.


குடும்பம் சிறை அல்ல. அது ஆன்மீக வளர்சிக்கு ஒரு படிக்கல். அது புரியாவிட்டால் அது சிறைதான்.


எப்படி என்று பார்ப்போம். 


ஒரு சிறுவன் இருக்கிறான். வீட்டில் அம்மா ஏதோ பலகாரம் செய்கிறாள்.  அவனுக்கு அது பிடிக்கும். எடுத்து உண்கிறான். தம்பி தங்கைகளுக்கு வேண்டுமே என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறான். 


சிறு பிள்ளை அப்படித்தான் நினைக்கும். 


வளர்ந்து பெரியவன் ஆகிறான். திருமணம் ஆகிறது. 


அதே பலகாரம் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுகிறான். "நல்லா இருக்கே...அவளுக்கு கொஞ்சம் வாங்கிக் கொண்டு போவோம்" என்று நினைக்கிறான். 


தன் மேல் மட்டும் இருந்த அன்பு, சற்று விரிந்து மனைவி மேலும் செல்கிறது. அவளுக்கு இந்த சேலை நன்றாக இருக்கும், அவளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்று அவளைப் பற்றி நினைக்கிறான். 


பின் சிறிது நாளில் பிள்ளை வருகிறது. 


பிள்ளை வளர்கிறது. 


அதே பலகாரம். ஒரே ஒரு துண்டுதான் இருக்கிறது. பிள்ளை ஓடி வருகிறான். "இங்க வாடா...இந்தா இதைச் சாப்பிட்டு பாரு" என்று தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பிள்ளைக்குக் கொடுக்கிறான். பிள்ளையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டு அவன் மகிழ்கிறான். 


அன்பு இன்னும் விரிகிறது. 


மனைவி, பிள்ளை, பேரப் பிள்ளை என்று அன்பு விரிந்து கொண்டே போகும். ஒரு காலகட்டத்தில், எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பிள்ளையை பார்ப்பது போலவே இருக்கும். எந்த சின்னப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பேரப் பிள்ளையை பார்ப்பது போல இருக்கும்.  தெருவில் ஒரு பிள்ளை கீழே விழுந்துவிட்டால் தன் பிள்ளை விழுந்தது போல ஒரு பதற்றம் வரும். 


அன்பு மேலும் விரிந்து குடும்பத்தைத் தாண்டி சமுதாயம் வரையில் பரவும். 


தனக்கு என்று இருந்ததை மனைவிக்கு, பிள்ளைக்கு, பேரப் பிள்ளைக்கு, மற்ற பிள்ளைகளுக்கு என்று கொடுக்கத் தோன்றும். அதில் இன்பமும் இருக்கும். 


துறவு என்றால் வேறு என்ன? துறப்பதில் இன்பம் காண முடியும். 


மனைவி மக்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்கினால் அது மேலும் மேலும் விரிந்து துறவு, வீடு பேறு, இறைவன் வரை கொண்டு சேர்க்கும். 


அன்பு இல்லாவிட்டால் அது தளை தான். விலங்குதான். சுமைதான். 


இந்த மனைவி மக்கள் என்பது எப்போது தளை ஆகும்? அன்பு இல்லாவிட்டால். அன்பு இல்லாவிட்டால் அருள் பிறக்காது. அருள் இல்லாவிட்ட்டால் துறவு நிகழாது. பற்று விடாவிட்டால் இறை அனுபவம் நிகழாது. 


இப்படியே நான் கிடந்து அழியத் தகுமோ என்று அருணகிரிநாதர் கேட்பது, அன்பில்லாமல் கிடந்து அழிவது சரியா என்று கேட்கிறார். 


தளைதான். ஆனால், அதனால் அழிய வேண்டியது இல்லை. அந்த அன்பு பெருக அவனருள் வேண்டும் என்று முருகனை வேண்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1 & 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


)


Wednesday, August 24, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 2

      

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html





)


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


நான் வாசித்தவரை, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் மேலே சொன்ன கருத்தை ஒட்டித்தான் எழுதி இருக்கிறார்கள். வேற்று கருத்துகள் இருப்பின் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம். 


அருணகிரிநாதர் அனுபூதி பெற்ற மகான். 


மனைவி மற்றும் மக்களை ஒரு தளை (விலங்கு) என்று  சொல்லுவாரா? அப்படி பொருள் கொண்டால் என்ன செய்ய வேண்டும் ?ஒன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது அல்லது திருமணம் ஏற்கனவே செய்திருந்தால் அதை விட்டு தப்பிக்க வேண்டும். 


திருமணம் ஆன ஆண்கள் எல்லோரும் அதை பின் பற்ற நினைத்தால் என்ன ஆகும்? 


அருணகிரியார் அப்படிச் சொல்லி இருப்பாரா? அதற்கு வேறு அர்த்தம் இருக்குமா என்று சிந்தித்தேன். 


முதலாவது, வளை பட்ட கை மாதொடு மக்கள் என்பது ஒரு ஆணின் பார்வையில் சொல்லப் பட்டது. அதையே ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தால் "கழல் பட்ட காலொடு மக்கள்" என்று சொல்லலாம். பெண்கள் தங்கள் கணவன்மாரை பிள்ளைகளை தளையாக நினைக்கலாம். அப்படி நினைத்து எல்லா பெண்களும் சன்யாசிகளாகி விட்டால் என்ன செய்வது? 


இரண்டாவது, பெண்கள் வேலைக்குப் போவது, பொருள் ஈட்டுவது என்பதெல்லாம் ஒரு நூற்றாண்டு கால சங்கதி. அதற்கு முன்னால் பெரும்பாலும் பெண்கள் வேலைக்குப் போவதில்லை. எனவே, அவர்கள் ஏதோ பாரம் போல ஒரு சித்திரம் தீட்டப் பட்டு இருக்கிறது. ஆண் தான் உழைக்கிறான், கஷ்டப்படுகிறான், பெண் சுகமாக வீட்டில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.   


அது சரி அல்ல. 


பெண் வேலைக்குப் போகவில்லை, யுத்தங்களில் ஈடு படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவர்களின் இழப்பு மிக அதிகமானது. காதோரம் முதன் முதலில் ஒரு நரை முடி தோன்றியவுடன் பதறாத ஆண்கள் யார்? ஒரு முடிதான். அதை வெட்டி தூரப் போட்டுவிட்டாலும் மனம் கிடந்து குழம்பியதா இல்லையா?  பின் வெட்டி முடிக்க முடியவில்லை என்றால் சாயம் பூசுவது. தலை முடி கொட்டி வழுக்கை விழும் போது எவ்வளவு சங்கடம் வருகிறது. 


அதுவும் ஐம்பது வயதுக்கு மேல். 


இருபது வயதில் இளநரை வந்த வாலிபனைக் கேளுங்கள். வாழ்வே முடிந்துவிட்டது என்று சொல்லுவான். 


ஆனால், பெண்கள், மிக இளம் வயதில், பிள்ளை பெறும் பொழுது உடலின் கட்டுக் கோப்பை, இளமையை எவ்வளவு இழக்கிறார்கள். உடம்பில் அத்தனை பிடிமானங்களும் தளரும். தோல் தன் தன்மையை இழக்கும். இடுப்பு எலும்பு பிடி தளரும். மார்பகங்கள் கட்டு குலையும். 


ஒரு நரை முடிக்கே அந்தப் பதற்றம் என்றால், பெண்ணின் இழப்பை என்னென்று சொல்லுவது? சரி, ஒரு குழந்தையோடு முடியுமா என்றால் இல்லை. குடும்பக் கட்டுப்பாடு எல்லாம் இப்போதுதானே. காலம் காலமாக பிள்ளை பெற்றுக் கொண்டே இருந்தார்கள். எவ்வளவு இழக்க வேண்டி இருந்திருக்கும்? 


பிள்ளைகள் ஒரு தளை (விலங்கு) என்று சொல்வதானால் ஆண்களை விட பெண்கள்தான் அதை சொல்ல அருகதை உள்ளவர்கள். 


ஒரு புறம் பிள்ளைகளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இன்னொரு புறம் ஆணின் நாட்டம் அவள் பால் குறைய அவளுக்கு மன அழுத்தம் மேலும் அதிகமாகும். 


படிக்க முடியாது. 

வேலை பார்த்து சம்பாதிக்க முடியாது.

சாதித்து பேர் வாங்க முடியாது.

உடலை பேணி பாதுக்காக முடியாது.

செய்த வேலையையே வாழ்நாள் பூராவும் செய்து கொண்டிருக்க வேண்டும்



அவ்வளவு தியாகம் செய்யும் பெண்களை "வளை பட்ட கை மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்லுவது சரிதானா?


எப்படிப் பார்த்தாலும், அது சரியாக வரவில்லை. பின் அருணகிரியார் என்னதான் சொல்லி இருப்பார்?






இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

Tuesday, August 23, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை

     

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html



)



வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.



இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html


(Pl click the above link to continue reading) 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

Wednesday, August 17, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2

    

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html




)


எது நிரந்தரமானது, எது அடிப்படையானது எதில் இருந்து இந்த உலகம் தோன்றியது என்ற கேள்விகளுக்கு இங்கு விடை சொல்கிறார் அருணகிரிநாதர். 


இது தான் என்று விடை சொல்லிவிடலாம். இதைத் தவிர வேறு விடைகளும் இருக்கிறதா? இது பற்றி மற்றவர்கள் சிந்தித்து இருக்கிறார்களா? அவர்கள் சொன்ன முடிவு என்ன? என்பதையும் இங்கே கூறுகிறார்.


சமயவாதிகள் பலரைக் ஏதாவது கேட்டால் "அது எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...அதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது...அதெல்லாம் உனக்குப் புரியாது" என்று சொல்லிவிடுவார்கள். 


ஆனால், இந்து சமயத்தை உற்று நோக்கினால் புரியும். இந்த சமயம் முழுவதுமே கேள்வி கேட்பதுதான். தேடல்தான். 


கீதையை கண்ணனே சொல்கிறான். இருந்தும் விடாமல் அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில் கூட கண்ணன் "நான் சொல்கிறேன்...வாயைக் மூடிக் கொண்டு கேள்" என்று சொல்லவில்லை. கடைசி அத்யாயம் வரை கேள்வி தொடர்கிறது. 


உபநிடதங்களும் அப்படியே. குருவின் அருகில் இருந்து கேள்வி கேட்டு தெளிவு பெறுவது. கேள்வி கேட்காமல், கண் மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று இந்து சமயம் ஒரு இடத்திலும் கூறவில்லை.


இந்தப் பாடலில் எத்தனை கேள்விகள் என்று பார்ப்போம். 


பாடல் 


வானோ? புனல் பார் கனல் மாருதமோ?

ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?

யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்

தானோ? பொருளாவது சண்முகனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


(Pl click the above link to continue reading) 


ஏழு கேள்விகள் கேட்கிறார் அருணகிரியார். 


நாலு வரிக்குள் ஏழு கேள்விகள். கேள்வி கேட்காமல் "நம்பிக்கை நம்பிக்கை" என்று சொல்பவர்கள் கேள்வி கேட்கப் பழக வேண்டும். கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழக வேண்டும். 


எது பொருள் அதாவது நிரந்தரமான பொருள் எது என்ற கேள்வியை எழுப்புகிறார் அவர்.


இதுவா, அதுவா என்று அவரே சந்தேகத்தை எழுப்புகிறார். 


வானோ?  = வானமா? இந்த ஆகயமா? 


புனல் = நீரா ?


பார் = நிலமா? 


கனல் = நெருப்பா? 


மாருதமோ? = காற்றா? 


ஞானோ தயமோ? = ஞானம் உதயம் ஆன இடமா? 


நவில் நான் மறையோ? = பேசப்படும் நான்கு வேதங்களா? 


யானோ? = நானா? 


மனமோ? = என் மனமா ?


எனை ஆண்ட இடம் தானோ?  = எனை ஆண்ட இடம் தானோ? 


பொருளாவது சண்முகனே = ((நிரந்தர) பொருளாவது சண்முகனே. 


முருகா, நீயே சொல்.


இந்த பஞ்ச பூதங்களா?  வேதங்களா? ஞானமா? நானா? என் மனமா? என்னை ஆட்கொண்ட இடமா? எது பொருள் ? சொல் முருகா என்று முருகனை கேள்வி கேட்கிறார். 


சரி, அவர் கேள்வி கேட்டார். முருகன் பதில் சொன்னானா? என்ன பதில் என்று கேட்டால், இந்தப் பாட்டிலேயே அதையும் சொல்லி விட்டார் அருணகிரியார். 


இதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். 


"வானோ" - வானமா? என்று கேட்கிறார்.  சூனியத்துவம் என்று ஒரு தத்துவம் உண்டு. அந்தத் தத்துவத்தின் படி இந்த உலகிற்கு ஆதாரம் இந்த வெளிதான். எல்லாம் அதில் தோன்றி அதிலே முடிவடைத்து விடும் என்பது இந்த தத்துவத்தின் கொள்கை. இந்த பிரபஞ்சம் முழுவதும், எண்ணில் அடங்கா சூரியன்கள், சந்திரன்கள், கோள்கள், விண்மீன்கள், பால்வெளி, எல்லாம் இந்த சூன்யத்தில் இருந்து தோன்றி, அதில் ஒடுங்கும், எனவே அதுதான் நிரந்தரமானது என்று கூறும் தத்துவம். அப்படியானால் அதுதான் உண்மையா?   அல்லது...


"புனல் பார் கனல் மாருதமோ?


ஏனைய பஞ்ச பூதங்கள்தான் அடிப்படையா? சில சமய தத்துவங்கள் இந்த பிரபஞ்சம் நீரில் தொடங்கி நீரில் முடியும் என்று கூறும். ஊழிக் காலத்தில் இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்படும், எங்கள் இறைவன் ஆல் இலை மேல் மிதந்து வருவான் என்று சில சமய பிரிவுகள் கூறும். 


வேறு சில பிரிவுகள், இந்த உலகம் நெருப்பில் தோன்றி , நெருப்பில் மறையும். ஊழிப் பெரு நெருப்பு இந்த உலகம் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடும். அந்த சாம்பலை எங்கள் இறைவர் உடல் முழுவதும் பூசிக் கொள்வார். அந்த நெருப்பு வடிவானவர் எங்கள் கடவுள் என்று சில பிரிவுகள் கூறும். ஜோதி வடிவானவன் என்று பேசும். 


இப்படி ஐம்பெரும் பூதங்களும்தான் உலகின் தொடக்கம், நடு, முடிவு என்று வெவ்வேறு தத்துவங்கள் கூறுகின்றன. 


இதில் எது உண்மை? 


அருணகிரியார் மேலும் தொடர்கிறார் 



ஞானோ தயமோ?  =  இந்த உலகமே ஒரு மாயை. இது உண்மை அல்ல. ஆணவம், கன்மம், மதம், மாச்சரியம் போன்ற மலங்கள் நம்மை உண்மையான உலகை அறிய விடாமல் தடுக்கின்றன. மாயை விலகி ஞானம் பிறந்தால் உண்மை விளங்கும். எனவே, இந்த ஞானமா நிரந்தரமான பொருள்? 


நவில் நான் மறையோ? = அதெல்லாம் இல்லை. என்றும் நிரந்தரமானது உண்மை ஒன்றுதான். அந்த உண்மை வேதங்களில் பொதிந்து கிடக்கிறது. வேதம் என்று தோன்றியது என்று தெரியாது. உண்மையை உள்ளடக்கிய அந்த வேதமா நிரந்தரமான பொருள்?



யானோ?  = பொருள் என்று ஒன்று தனியே கிடையாது. பார்பவரின் புலன்களைப் பொறுத்துத் தான் உலகம். கண் பார்வை இல்லாதவருக்கு நிறம் என்ற ஒன்று இல்லை. அவரைப் பொறுத்தவரை இந்த உலகம் நிறம் என்ற ஒன்று இல்லாதது. அவருக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நிறம் தெரிகிறதே என்று நாம் கூறலாம். நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. அவருக்கு நான்கு புலன்கள் மட்டும்தான் இருக்கிறது. ஒரு வேளை ஆறாவது அல்லது ஏழாவது புலன் என்று ஒன்று இருந்தால்? நம்மிடம் இல்லை. நமக்கு அது புரியவே புரியாது. கண் இல்லாதவர்க்கு நிறம் புரியாதது போல ஐந்துக்கு மேல் உள்ள புலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதற்காக அவை இல்லை என்று நாம் எப்படி கூற முடியும் ? அப்படி என்றால் இங்கே நிரந்தரமான ஒன்று என்பது "நான்" என்று சொல்லப் படும் பொருளா?


மனமோ?  = நான் இருந்தால் மட்டும் போதாது. என் மனம் வேலை செய்ய வேண்டும். சிந்தனை ஓட வேண்டும். ஞாபகம் வேண்டும். புலன்கள் சொல்லும் செய்தியை நாம் அறிய வேண்டும். எனவே, இந்த மனமா நிரந்தரமானது? 


 எனை ஆண்ட இடம் தானோ?  = இதெல்லாம் இல்லை. நீ என்னை ஆட்கொண்டாய் அல்லவா அந்த நிகழ்வுதான் நிரந்தரமான ஒன்று என்கிறார். 


நம் நண்பர் நம்மிடம் கேட்கிறார் "நான் நேற்று ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். அங்க யாரைப் பார்த்தேன் சொல்லு பார்க்கலாம்" என்று நம்மைக் கேட்கிறார். 


நாமும் 


"இராமனா?"  என்கிறோம். 


"இல்லை" என்கிறான். 


"கிருஷ்ணனா" என்று கேட்கிறோம்.


"ம்ஹும்ம்" என்று தலையாட்டி மறுக்கிறான். 


இப்படி ஒவ்வொரு பேராக சொல்லிக் கொண்டே போகிறோம். இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். 


கடைசியில் 


"கண்டு பிடிச்சுட்டேன்...நம்ம பழைய நண்பன் முருகன் தான " என்கிறோம். 


ஆம் என்று தலை அசைக்கிறான். 


அதற்குப் பிறகு நாம் மேலும் பேர் சொல்லிக் கொண்டே இருப்போமா? எப்போது சரியான விடை வந்து விட்டதோ, அதற்குப் பிறகு பேச்சு இல்லை. 


வானோ, புனலோ என்று கேட்டுக் கொண்டே வந்த அருணகிரியார் 


"எனை ஆண்ட இடம் தானோ/" என்று இறுதியாக கேட்டு நிறுத்துகிறார். 


அதற்கு பின்  ஒன்றும் கேட்கவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அதுதான் விடை என்று அர்த்தம். 


இந்த உயிர் இறைவனோடு கலப்பது ஒன்றுதான் நிரந்தரமான ஒன்று. 


பசு, பாசம் என்ற கயிறை அறுத்துக் கொண்டுபதியோடு இணைவதுதான் இறுதியான ஒன்று. 


இந்த ஆன்மா உலகில் பிறந்து, பல அனுபவங்களைப் பெற்று, மீண்டும் இறைவனோடு இணைவது ...இதுதான் எப்போதும் விடாமல் நிகழ்ந்து கொண்டிருப்பது. 


அலை, கடலோடு சேர்வது போல. 


மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாடலின் ஆழம் விளங்கும். 


இப்படி ஐம்பது பாடல்கள் இருக்கின்றன.  என்று அனைத்தையும் படித்து தெளிவது? 


பொருளாவது சண்முகனே.