Saturday, June 20, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய 


பெரிய பெரிய நிறுவனங்களில் ஏதாவது ஒரு வருடம் இலாபம் எதிர்பார்த்தபடி வரவில்லை அல்லது நட்டம் வந்து விட்டது என்றால், எப்படியும் நட்டம் வந்தது வந்து விட்டது, அது கொஞ்சமாக இருந்தால் என்ன, நிறைய இருந்தால் என்ன என்று இதுவரை கழித்துக் கட்டாத செலவினங்கள் அனைத்தையும் அந்த ஒரு வருடத்தில் காட்டி இனி வருடங்கள் நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். அதற்கு big bath என்று பெயர். வராத கடன்கள், வருமா வராதா என்ற கடன்கள், பழைய இயந்திரங்கள், என்று அனைத்தையும் செலவில் கழித்து இனி வரும் வருடங்கள் இலாபரமானதாக செய்து கொள்வார்கள்.

அவ்வளவு ஏன், வீட்டில் சேட்டை செய்யும் பையன் ஒருவன் இருந்தால், யார் என்ன தப்பு செய்தாலும் சந்தேகம் அவன் மேல் தான் வரும்.

அது போல, இராமன் மிக நல்லவன். நேர்மையானவன். ஏக பத்னி விரதன். அப்பா அம்மா சொல் கேட்க்கும் பிள்ளை. ஆனாலும், அவன் வாழ்விலும் ஒரு சின்ன நெருடல். அவன் சின்ன பிள்ளையாக இருக்கும் போது அம்பில் களி மண் உருண்டையை சொருகி கூனியின் கூன் முதுகில் அடித்து விளையாடி இருக்கிறான்.

சின்ன பிள்ளைதான். இருந்தும் ஒரு உடல் ஊனமுற்ற, வயதான , பெண் மேல் அம்பு எய்து விளையாடியது தவறு தானே.

அந்தத் தவறை செய்தவன் இராமன் என்றாலும், நம்மாழ்வார் அந்த குற்றத்தை இராமனின் மேல் ஏற்றாமல் கண்ணன் மேல் ஏற்றிக் கூறுகிறார்.  கூனி மேல்  உண்டை வில்லை அடித்த போது கண்ணன் பிறக்கவே இல்லை. அது அடுத்த  அவதாரம். இருந்தும், கண்ணன் மேல் நிறைய விளையாட்டான குற்றங்கள்  இருக்கின்றன, அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று   இராம அவதாரத்தில் நடந்த ஒன்றை கிருஷ்ணா அவதாரத்திற்கு மாற்றி விடுகிறார்.

பாடல்



மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே. 1.5.5

பொருள் 


மானேய்  = மான் போன்ற

நோக்கி = கண்ணினை உடைய

மடவாளை = பெண்ணை (திருமகளை)

மார்வில் = மார்பில்

கொண்டாய் = கொண்டாய்

மாதவா = மாதவா

கூனே சிதைய  = கூன் சிதையும் படி

உண்டைவில் = உண்டை வில்

நிறத்தில் தெறித்தாய் = அடித்தாய்

கோவிந்தா. = கோவிந்தா, கண்ணா

வானார் சோதி மணிவண்ணா. = வானவர்களுக்கு சோதி வடிவான மணிவண்ணனே

மதுசூதா = மது என்ற அரக்கனை கொன்றதால் மது சூதனன் என்ற பெயர் பெற்றவனே

நீ அருளாய் = நீ அருள் செய்வாய்

உன் = உன்னுடைய

தேனே மலரும் திருப்பாதம் = மலர் போன்ற திரு பாதங்கள்

சேருமாறு = வந்து அடையுமாறு

வினையேனே = வினை கொண்டவனான என்னை


கடவுளாகவே இருக்கட்டும், அவதாரமாகவே இருக்கட்டும், வயதான பெண், அதுவும் உடல் ஊனமுற்றவள் அவள் மேல் அம்பு விடுவது சரியான செயல்தானா.

இராசா வீட்டுப்  பிள்ளை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? அடக்கம் வேண்டாமா? குடிகளை காப்பது அவன் பொறுப்பு இல்லையா?

நாளை, இராமனே செய்தான் என்று மற்றவர்கள் செய்யத் தொடங்கினால் என்ன பதில் சொல்வது?

இராமன் தவறு செய்வானா?


ஆழ்வார் தெரிந்து எடுத்து ஒரு சொல் போடுகிறார். அவன் தெரிந்து போட்டாரா அல்லது  அப்படி வந்து விழுந்ததா தெரியாது.

இராமன் கூனி மேல் பாணம் போட்டது நையாண்டி செய்ய அல்லவாம், அவள் கூன் சிதைந்து  அவள் நிமிர்ந்து எல்லோரையும் போல நடக்க வேண்டும் என்று  நினைத்து போட்டானாம்.

"கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய்"

என்கிறார்.

கூன் சிதைந்தால், முதுகு நேராகி விடும். அப்படி நினைத்து பாணம் போட்டான்  என்கிறார்.

இதெல்லாம் இலக்கிய நயம். படிக்க படிக்க மனம் விரியும்.

படிக்க படிக்க....


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_20.html

Wednesday, June 17, 2020

திருக்குறள் - ஆற்றில் பாய்பவரைப் போல

திருக்குறள் - ஆற்றில் பாய்பவரைப் போல 


ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. தெளிந்த நீர். சில் என்று இருக்கும். குதித்து குளிக்கலாம் ஆனால் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டால்?

அடித்துக் கொண்டு போகும் என்று தெரிந்தே நீரில் குதிக்கிறார்கள். ஏன் ?


சிலர் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதை பார்க்கிறோம்.

யார் அவர்கள்?

ஒன்று , நன்றாக நீச்சல் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது

நீரில் விழுந்தால் காப்பாற்ற யாரவது அருகில் இருக்க வேண்டும். அந்த தைரியத்தில் நீரில் பாய்ந்து நீந்துவார்கள்.

அவன் வெளியூர் சென்றுவிட்டு பல நாட்கள் கழித்து வருகிறான். அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனை பார்க்க வேண்டும், கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தவிக்கிறாள்.

இன்னொரு புறம், இப்படி தவிக்க விட்டு சென்ற அவன் மேல் கோபம். வரட்டும், இன்னிக்கு நல்லா சண்டை பிடிக்கணும் என்று நினைக்கிறாள்.

மனதுக்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது. எப்படி சண்டை போட வேண்டும் என்று. ஆனாலும், சீவி, சிங்காரித்து, பூ வாங்கி தலையில் வைத்து, நல்ல உடையாக  உடுத்திக் கொண்டு...அவளுக்கே அவளை நினைத்து சிரிப்பு வருகிறது.

இவ்வளவும் பண்ணிக்கிட்டு சண்டை போட போறேனாக்கும் ...போட்ட மாதிரிதான் என்று நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறாள்.

இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும் ஆற்றில் பாய்பவர்களைப் போல, என் காமமும் காதலும் என்னை இழுத்துக் கொண்டு போகும் என்று அறிந்தே  ஊடல் செய்ய நினைக்கிறேனே என்று அவள் மனம் சந்தோஷத்தில் தள்ளாடுகிறது.

ஏன் ஊடல் செய்ய நினைக்கிறாள்?

என்ன ஊடல் செய்தாலும், எப்படியும் கொஞ்ச நேரத்தில் தானே சமாதானம் ஆகிவிடுவோம் என்ற  நம்பிக்கை ஒரு புறம்.

இல்லை என்றால் என்ன, எவ்வளவு சண்டை போட்டாலும், என்னை கெஞ்சி, கொஞ்சி  அவன் சமாதானப் படுத்தி விடுவான் என்ற நம்பிக்கை.



பாடல்

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து

பொருள்

உய்த்தல் = அடித்துக் கொண்டு போதல்

அறிந்து = அறிந்தும்

புனல் = ஆற்றில்

பாய் பவரேபோல் = குதிப்பவர்களைப் போல

பொய்த்தல் = தான் செய்யப் போகும் ஊடல் பலன் இன்றி போகப் போகிறது என்று

அறிந்தென் புலந்து = அறிந்த பின் , எதற்காக ஊடல் செய்ய வேண்டும்? (புலத்து = ஊடி)

ஊடலின், கூடலின் நுணுக்கத்தை இதை விட அழகாக சொல்ல முடியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_17.html

Tuesday, June 16, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்


இறைவன் மேல் பக்தி கொண்டவர்களை, "வாழக்கையில் உங்கள் நோக்கம் என்ன" என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

"இறைவனை அடைவது"

"பரம பதம் அடைவது"

"சுவர்க்கம் போவது"

என்று இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்வார்கள்.

சரி. எப்படி போவது? அதற்கு என்ன வழி?

பூஜை செய்தால் போய் விடலாமா? தான தர்மம் செய்தால் போய் விடலாமா? நிறைய பாசுரங்கள் பாராயணம் பண்ணினால் போய்விடலாமா? ஆச்சாரமாக இருந்தால் போதுமா? மூணு வேளை குளிப்பது, நாளும் கிழமை என்றால் விரதம் இருப்பது, வெளியில் எங்கும் உண்ணாமல் இருப்பது, கடல் கடந்து போகாமல் இருப்பது என்று இருத்தால் போதுமா?

இதெல்லாம் வழி இல்லை என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார். பின் என்ன தான் வழி?

பாசுரத்தைப் பார்ப்போம்


பாடல்

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்  தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே”


பொருள்

மனத்திலோர் தூய்மை யில்லை  = மனதில் ஒரு தூய்மை இல்லை

வாயிலோர் இன்சொ லில்லை = வாயில் ஒரு இன் சொல் இல்லை

சினத்தினால் = கோபத்தால்

செற்றம்  நோக்கித்  = பகைவர்களை பார்த்து

தீவிளி விளிவன் = தீ போல விழிப்பேன். அதாவது கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவேன்

வாளா = வேலை வெட்டி இல்லாமல்

புனத்துழாய் மாலை யானே = துளசி மாலை அணிந்தவனே

பொன்னிசூழ் = பொன்னி நதி சூழ்ந்த

திருவ ரங்கா = திருவரங்கத்தில் இருப்பவனே

எனக்கினிக்  = எனக்கு இனி

கதியென்  = கதி (வழி) என்ன

சொல்லாய் = சொல்லுவாய்

என்னையா ளுடைய = என்னை ஆட்சி செய்யும்

கோவே = தலைவனே

பாசுரத்தின் அர்த்தம் புரிகிறது. இதில் இறைவனை அடைய வழி எங்கே சொல்லி இருக்கிறது?

இருக்கிது. மறைமுகமாக இருக்கிறது.

மனதில் தூய்மையும், வாயில் இன் சொல்லும், கண்ணில் கருணையும் இல்லாத எனக்கு  என்ன வழி என்று கேட்கிறார் ஆழ்வார்.

அப்படி என்றால், தூய்மையான மனமும், இனிமையான சொல்லும், கருணை கொண்ட  விழிகளும் இருந்தால் வழி திறந்து விட்டது என்று தானே அர்த்தம்.

இறைவனை அடைய  தடையாய் இருப்பது என்ன?

தூய்மை இல்லாத மனம், இனிமை இல்லாத சொல், கருணை இல்லாத கண்கள்.

இந்த அறிவு, செல்வம், பூஜை, புனஸ்காரம், ஆச்சாரம், அனுஷ்டானம் இதெல்லாம் இல்லாத எனக்கினி என் கதி என்று கேட்கவில்லை.

மனதை தூய்மை படுத்துவது கடினமான காரியம்.

மனம் தூய்மை ஆகாமல் கண்ணில் கருணை வராது.

இனிய சொல்? கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும், மற்றவற்றை விட எளிது.

முயன்று பார்ப்போமா?  எந்த கடினமான சொல்லையும் சொல்லுவதில்லை என்று  சங்கல்பம் செய்து கொள்வோம்.

யாரையும் வைவது இல்லை,  மட்டம் தட்டி பேசுவது இல்லை, கோபித்து  மனம் புண் படி பேசுவது இல்லை என்று முடிவு செய்து கொள்வோம்.

அடுத்தது, அன்பான சொல் பேசுவது, ஆறுதலான சொல் பேசுவது, மனதுக்கு சுகம்   தரும் சொற்களை பேசுவது என்று முடிவு செய்து கொள்வோம்.

எவ்வளவோ படிக்கிறோம். ஒன்றிரண்டை நடை முறை வாழ்க்கையில் செயல் படுத்திப் பார்த்தால் என்ன ?

செய்யலாம் தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_16.html


Saturday, June 13, 2020

திருக்குறள் - வற்றல் மரம்

திருக்குறள் - வற்றல் மரம் 


ஒரு மரம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நன்றாக வளர்ந்து, கிளை பிடித்து பெரிதாக இருக்க வேண்டும். அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வாழ வேண்டும். அதன் நிழலில் வெயிலின் கொடுமை தாங்காத உயிர்கள் வந்து இளைப்பாற வேண்டும். அந்த மரம் கனி தர வேண்டும். பூக்க வேண்டும். பூக்களைத் தேடி வண்டுகள் வர வேண்டும். அது பசியாற்ற வேண்டும். இப்படி பல விதங்களிலும் பயனோடு இருப்பதுதான் ஒரு நல்ல மரம்.

அதை விடுத்து, இலை, தளிர், பூ எதுவும் இல்லாமல், மொட்டையாக நின்றால் எப்படி இருக்கும்? அதை வெட்டி விறகுக்கு வேண்டுமானால் பயன் படுத்தலாம்.

வள்ளுவர் சொல்கிறார், மனதில் அன்பு இல்லாதவன் வாழ்க்கை பாலை நிலத்தில் மரம் துளிர் விட்டது போல என்கிறார். எப்படி பாலையில் மரம் துளிர் விடாதோ அது போல அவன் வாழ்வும் துளிர்க்காது என்பது கருத்து.

பாடல்


அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று


பொருள்

அன்பு = அன்பானது

அகத்து இல்லா  = உள்ளே இல்லாத ஒரு

உயிர்வாழ்க்கை  = உயிர் வாழ்க்கை என்பது

வன் = வல்லிய

 பாற்கண் = பாலையின் கண் அல்லது பாறையின் கண்

வற்றல் = காய்ந்து வற்றிப் போன

மரந் = மரம்

தளிர்த் தற்று = தளிர்தது போல

மரம் நன்றாக செழிக்க வேண்டுமென்றால் நிலம் நன்றாக இருக்க வேண்டும், நீர் வேண்டும், சூரிய ஒளி வேண்டும்.

அது போல ஒரு வாழ்வு செழித்து வளர வேண்டும் என்றால் அன்பு மனதில் இருக்க வேண்டும்.

அன்புதான் இல்லறம் என்ற மரம் வளர ஊற்ற வேண்டிய நீர். அன்பு செலுத்த செலுத்த  அந்த இல்லறமான மரம் நன்கு வளர்ந்து பயன் தரும், பலன் தரும்.

வீட்டிலே எதற்கு எடுத்தாலும் கோபம். எரிச்சல். மனத்தாங்கல் என்று இருந்தால், அன்பு எங்கே இருக்கும். அன்பு இல்லாத இல்லறம்செழிக்காது.

இல்லறத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர் மேல் அன்பு செலுத்த வேண்டும்.

கணவன், மனைவி , பிள்ளைகள் இவர்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்திக் கொண்டே இருத்தால் தான், அந்த இல்லற மரம் வளரும்.

இந்த வருடம் வேண்டாம், அடுத்த வருடம் இதற்கும் சேர்த்து நீர் வார்க்கிறேன் என்று சொன்னால், அதற்குள் மரம் பட்டுப் போய் விடும். தள்ளிப் போடவே கூடாது. அனுதினம் நீர் வார்க்க வேண்டும். இல்லை என்றால் வற்றல் மரமாகி விடும். மரம் பட்டுப் போனால் பின் எவ்வளவு நீர் வார்த்தாலும் அது துளிர் விடாது.

வேலை, தொழில், டிவி சீரியல், பக்கத்து வீட்டு அரட்டை, social மீடியா என்று நேரத்தை செலவழித்து விட்டு, ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தாமல் இருந்தால், நாளடைவில் இல்லறமான மரம் பட்டுப் போகும். அப்புறம் அம்மா என்றாலும் வராது, ஐயா என்றாலும் வராது.

அந்த மரம் பட்டுப் போகாமல் பாது காக்க வேண்டியது இல்லறத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு.

என்ன வேலை இருந்தாலும், எவ்வளவு படிக்க வேண்டி இருந்தாலும், எவ்வளவு சோர்வாக இருந்தாலும்,  குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்களோடு  கொஞ்ச நேரம் பேசுங்கள். கொஞ்சிப் பேசுங்கள்.

என்ன படிச்ச, அலுவலகத்தில் எப்படி இருந்தது, நீ சாப்பிட்டாயா என்று அக்கறையோடு  விசாரியுங்கள்.

தள்ளிப் போடாதீர்கள். பட்டுப் போனால் பின் வராது.

வற்றல் மரம் தளிர்க்காது.

அதை  ஏன் வாட விட வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_13.html



Friday, June 12, 2020

கம்ப இராமாயணம் - கடலை கடத்தல்

கம்ப இராமாயணம் - கடலை கடத்தல் 


எதையாவது விட முடிகிறதா ?

நல்லதை விடுங்கள், கெட்ட பழக்கத்தைக் கூட விட முடிவதில்லை.

மருத்துவர் சொல்கிறார், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே என்று, சரி என்று நாமும் தலையை ஆட்டி விட்டு வருகிறோம்...சிறிது நாள் கழித்து எதை சாப்பிடக் கூடாது என்று சொன்னாரோ அதைக் கண்டால் உடனே சாப்பிட்டு விடுகிறோம்.

இந்த whatsapp , youtube , facebook, எதையாவது விட முடிகிறதா?

பிறந்தது முதல் சாப்பிடும் சில உணவு வகைகள்...அதை இன்றும் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறதா இல்லையா?

இன்னும் ஒரு படி மேலே போவோம்...உறவுகள். விட முடிகிறதா? சங்கிலி போல் கட்டிப் போடுகிறதா இல்லையா?

இன்னும் கொஞ்சம் மேலே போவோம்...பொதுவாகவே எந்த அனுபவத்தையும் நம்மால் விட முடிவதில்லை.

ஏன்?

எதையும் நாம் முழுவதுமாக அனுபவிப்பது கிடையாது. அரைகுறையாக அனுபவிக்கிறோம். அனுபவம் நிகழும் போது மனம் அங்கே இருப்பது இல்லை.

காப்பி குடிக்கும் போது செய்தித் தாள் வாசிப்பது; மனம் செய்தியில் போகிறது.

சிற்றுண்டி சாப்பிடும் போது , மனம் அலுவலகம், போக்குவரத்து நெரிச்சல் என்று  அலை பாய்கிறது.

அலுவகம் போனால், வீட்டு நினைப்பு.

மனமும், புத்தியும், உடம்பும் ஒன்றாக இருப்பதே இல்லை.

ஒன்றை முழுவதுமாக அனுபவித்து விட்டால், பின் மனம் அதற்காக ஏங்காது. பின்னும் கிடைத்தால்  அனுபவிக்கலாம். ஆனால், அது இல்லையே என்று மனம்  ஏங்காது. அதை எண்ணி அதிலியே மனம் செல்லாது.

இலயிக்க வேண்டும். மனம் ஒன்ற வேண்டும். அனுபவம் முழுமையாக வேண்டும்.

அப்படி நிகழ்ந்தால், அந்த அனுபவத்தை நாம் கடந்து மேலே போய் விடலாம். இல்லை என்றால், மீண்டும் மீண்டும் செக்கு மாடு போல அதையே சுற்றி சுற்றி வர வேண்டி இருக்கும்.

கம்பன் சொல்கிறான்,  தசரதன் அனுபவித்தே கடந்து விட்டான் என்று. அதைத் தாண்டி போய் விட்டான்.

எவற்றை தாண்டிப் போனான்?

"தானம் கொடுத்து கொடுத்தே தன்னிடம் உதவி என்று வந்தவர்களின் கூட்டத்தை கடந்தான். நாம் ஒரு உரூபாய் , அல்லது ஐந்து உரூபாய் பிச்சை போடுவோம். அது அவனுக்கு எத்தனை நாள் வரும்? மீண்டும் பிச்சை கேட்டு வருவான். தசரன் கொடுத்தால், அந்த பிச்சைக் காரனின் வறுமையே தீர்ந்து விடும். அவன் மீண்டும் உதவி கேட்டு வரமாட்டான். இப்படி தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து கொடுத்து இனி அப்படி ஒரு வர வழி இல்லாமல் செய்து விட்டான்....ஈகை என்ற கடலை தர்மம் செய்தே கடந்தான்.

அது மட்டும் அல்ல

எதைப் படித்தாலும் அரைகுறையாக குறையாக படிப்பது இல்லை. முழுவதுமாக, ஆராய்ந்து , அதன் ஆழம் வரை சென்று, இனி இதில் படிக்க மேலும் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு படிப்பான்.  அறிவு என்ற கடலை படித்தே கடந்து விட்டான்.

அது மட்டும் அல்ல

பகைவர்கள் என்ற கடலை தன் வாளால் கடந்தான். என்ன அர்த்தம்? பகைவர்களே இல்லை. பகையை சுத்தமாக ஒழித்து விடுவான்.

அது மட்டும் அல்ல

பிறவி என்ற கடலை முழுவதும் அனுபவித்தே கடந்து விட்டான். ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை. ஒரு அனுபவமும் பாக்கி இல்லை.

"

பாடல்

ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்;எண்  இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்  அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை;     கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம்.


பொருள்

ஈய்ந்தே கடந்தான்  = கொடுத்தே கடந்தான்

இரப்போர் கடல் = உதவி என்று கடல் போல் வந்த கூட்டத்தை

எண்  இல் = கணக்கில் இல்லாத

நுண் நூல் = நுண்மையான நூல்களை

ஆய்ந்தே கடந்தான் = ஆராய்ச்சி செய்தே கடந்தான்

அறிவு என்னும் அளக்கர்; = அறிவு என்ற கடலை

வாளால் = வாளால்

காய்ந்தே  கடந்தான்  = சண்டை இட்டே கடந்தான்

பகை வேலை = பகைவர்கள் என்ற கடலை

கருத்து முற்றத் = மனம் முழுவதும்

தோய்ந்தே கடந்தான்  = தோய்ந்து அனுபவித்தே கடந்தான்

திருவின் = செல்வத்தின்

தொடர் போக பௌவம். = தொடர்ந்து வரும் பிறவி என்ற கடலை

அளக்கர் , வேலை, பௌவம் என்றால் கடல் என்று அர்த்தம்.

எதை எடுத்தாலும், அதன் உச்சி தொட்டு அதை தாண்டி போய் விட வேண்டும்.  சிக்கிக் கொண்டு உழன்று கொண்டே இருக்கக் கூடாது.

எல்லாவற்றையும் அனுபவித்து விட்டால், மரண பயம் ஏன் வருகிறது.

இதையெல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமே என்ற ஏக்கமும் பயமும் ஏன் வருகிறது. அனுபவம் இன்னும் மிச்சம் இருப்பதால்.

கணவனோ/மனைவியோ/ பிள்ளைகளோ/ உடன் பிறப்போ/ நட்போ...மூச்சு முட்ட   அன்பு செய்யுங்கள். நாளையே அவர்களை விட்டு விட்டு போவது என்றாலும்  ஒரு ஏக்கம் இருக்கக் கூடாது.

கிராமத்துப் பக்கம் இன்றும் சொல்வார்கள் "அவருக்கு என்ன மகராசன், ஆண்டு அனுபவிச்சிட்டு போய் சேர்ந்துட்டாருனு"

நாளைக்கு என்று மிச்சம் வைக்காமல் அனுபவிக்க வேண்டும்.

ஒவ்வொன்றை அனுபவிக்கும் போதும், இதுவே கடைசி என்று நினைத்து அனுபவித்துப் பாருங்கள். என்று ஒரு நாள் அது கடைசி அனுபவமாகத்தத்தான் போகிறது.

யோசியுங்கள்.

சரி அது ஒரு புறம் இருக்கட்டும்.

இன்னொன்றை கவனித்தீர்களா?


"எண்  இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்     அளக்கர்"

அளக்கர் என்றால் கடல்.

அது அல்ல நான் சொல்ல வந்தது.

கணக்கில் அடங்காத நுண்மையான  நூல்களை ஆய்ந்து கடந்தான் என்கிறான் கம்பன்.

என்ன அர்த்தம்.

தசரதன் காலத்திலேயே,  கணக்கில் அடங்காத நுண்மையான நூல்கள் இருந்திருக்கின்றன.  நுண்மையில்லாத நூல்கள் எத்தனையோ.

அதாவது, ஆராய்ச்சி செய்யத் தக்க நூல்கள் கணக்கில் அடங்காத அளவு இருந்ததாம்.

அவ்வளவு நூல்கள் இருந்தது என்றால், நம் முன்னவர்கள் அறிவின் முதிர்ச்சி  எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.

நுண் நூல் எழுதும் அளவுக்கு அறிவு இருந்தது என்றால், நம் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருந்திருக்க வேண்டும்?

மொழி தோன்றி, அறிவு தோன்றி, ஆராய்ச்சிகள் செய்து, நுண் நூல் எழுதி இருக்கிறார்கள்.

எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய பாரம்பரியத்தின் வாரிசுதாரர்கள் நாம்.

நடுவில் எங்கேயோ தடம் புரண்டு விட்டோம் .வழி கண்டு பிடித்து மீண்டும் வந்து சேர வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_12.html


Thursday, June 11, 2020

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை


நமக்கு முடி திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? முடி திருத்தும் இடத்துக்குப் போக வேண்டும்.

நீச்சல் அடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நீச்சல் குளமோ, அல்லது வேறு ஏதாவது நீர் நிலைக்கோ போக வேண்டும் அல்லவா?

வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு, நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?  வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டப் பழக முடியுமா?

அற்ப காரியங்களான முடி திருத்துவது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றிற்கே அந்தந்த இடத்துக்குப் போக வேண்டி இருக்கிறது.

நாம் வீட்டில் இருந்து கொண்டே இறைவனை அறிய வேண்டும், முக்தி , வீடு பேறு, பர லோகம், உண்மை, மறு பிறப்பு, ஆத்மா என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறோம்.

முடியுமா?

அததற்கு அங்கங்கே போனால் தானே முடியும்.

கொங்கு நாட்டில் வாணிபம் செய்வார்கள். அவர்கள் எப்படி செய்கிறார்கள், எப்படி பேரம் பேசுகிறார்கள், எப்படி கொள் முதல் செய்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்றால் அங்கே போனால்தான் முடியும். இங்கு இருந்து கொண்டே அதை அறிய முடியாது.

வெளிச்சம் என்றால் எப்படி இருக்கும் என்று இருளில் அமர்ந்து கொண்டு யோசித்தால், எவ்வளவு யோசித்தாலும் அது பிடிபடாது. ஆனால், நிலவு வந்துவிட்டால், அப்புறம் வெளிச்சம் என்றால் என்ன என்று யோசிக்க என்ன இருக்கிறது. அது தான் தெரிகிறதே. யோசனை என்ன வேண்டி இருக்கிறது. உண்மை அறியும் வரைதான் வாதம், பிரதிவாதம் எல்லாம். உண்மை தெரிந்து விட்டால்  பேச்சு நின்று விடும்.

ஞானிகள் இருக்கும் போய் விட்டால், ஞானம் தானே வந்து விடும். நிலவு இருக்கும் இடத்தில் இருள் இல்லாமல் போவது போல, ஞானிகள் இருக்கும் இடத்தில் அறியாமை இருக்காது.


பாடல்



கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்ததுஅங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமன்றே




பொருள்


கொங்கு = கொங்கு தேசம்

புக் காரொடு = அங்கு உள்ளவர்களோடு

வாணிபஞ் செய்தது = எப்படி வாணிபம் செய்வது என்று

அங்குபுக் காலன்றி  = அங்கு சென்று புகுந்தால் அன்றி

ஆய்ந்தறி வாரில்லை = இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஆராய்ந்து அறிய முடியாது

திங்கள்புக் கால் = நிலவு புகுந்து விட்டால்

இரு ளாவ தறிந்திலர் = இருள் என்றால் என்ன என்று தெரியாது

தங்குபுக் கார்சிலர் = தன்னுளே சென்ற சிலர்

தாபதர் தாமன்றே. = தாபதர் என்றால் முனிவர்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_11.html

Wednesday, June 10, 2020

திருக்குறள் - தூதொடு வந்த கனவினுக்கு

திருக்குறள் - தூதொடு வந்த கனவினுக்கு


அறத்துப் பால், பொருட்பால் இரண்டிலும் மிக ஆழமாக, நுண்ணியமாக எழுதிய வள்ளுவர் காமத்துப்பாலிலும் அதே அளவு நுணுக்கத்தோடு எழுதி இருக்கிறார் என்பதை பார்க்கும் போது நமக்கு வியப்பாக இருக்கிறது.

ஆண் பெண் உறவு, நட்பு, காதல், கூடல், ஊடல், பிரிவு, தவிப்பு, அவர்களை பற்றி ஊர் பேசுவது, என்று அனைத்தையும் எழுதி இருக்கிறார்.

காமத்துப் பால் எழுதுவது என்பது கத்திமேல் நடக்கும் வேலை. கொஞ்சம் எல்லை தாண்டினாலும் விரசமாகிவிடும் ஆபத்து உண்டு. எல்லை தாண்டாமல், சுவை குன்றாமல் செய்ய வேண்டும்.

செய்திருக்கிறார்.

பாடல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

பொருள்

காதலர் = காதலர்

தூதொடு  = தூதொடு

வந்த = வந்த

கனவினுக்கு = கனவினுக்கு

யாதுசெய் வேன் = என்ன செய்வேன்

கொல் = அசைச் சொல்

விருந்து = விருந்து


இதில் என்ன பெரிய நுணுக்கம், ஆழம் இருக்கிறது? எல்லாம் தான் கண் முன்னால் தெரிகிறதே.

சிந்திப்போம்.

தூதொடு வந்த கனவினுக்கு

தூதாக வந்த கனவினுக்கு என்று சொல்லி இருந்தால், அந்த கனவு தூதாக வந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். தூதோடு என்று சொன்னால்?
கனவோடு வேறு ஏதோ வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

அண்ணனோடு தம்பியும் வந்தான். அப்பாவோடு அம்மாவும் வந்தாள். ஓடு என்பது  துணையாக இன்னொன்றும் வந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

அங்குதான் வள்ளுவர் நிற்கிறார்.

காதலர் அனுப்பிய தூதாக கனவு வந்தது. அந்த கனவில் காதலரும் வந்து விட்டார்.  தூது அனுப்பிய காதலரை அந்த கனவு கொண்டு வந்து விட்டது.

வந்தது இரண்டு. கனவு + கனவில் உள்ள காதலர்.

இப்ப முதல் அடியை படித்துப் பாருங்கள்.


"காதலர் தூதொடு வந்த கனவினுக்கு"

காதலர்தான் கனவை தூதாக அனுப்பினார். ஆனால், அந்த கனவோ காதலரையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டது.

விருந்து என்றால் விருந்தினரை குறிக்கும். விருந்து படைக்கும் சாப்பாட்டையும் குறிக்கும். விருந்து தடபுடலாக இருந்தது என்கிறோம் அல்லவா.

பொண்ணும் மாப்பிள்ளையும் வந்து இருந்தார்கள். நல்லா விருந்து சமைச்சு போட்டு  அனுப்பி வைத்தேன் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?



"யாதுசெய் வேன்கொல் விருந்து"

என்ன விருந்து செய்வேன் ? என்று கேட்கிறாள்.

முதலாவது, அவனுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது. அதனால் என்ன விருந்து செய்வது  என்று தெரியவில்லை.

இரண்டாவது, விருந்து செய்யலாம் என்று எழுந்து பார்த்தால், அவனும் போய்விட்டான் , கனவும் போய் விட்டது. என்ன விருந்து செய்ய ? யாருக்குச் செய்ய  என்ற குழப்பம்.


மூன்றாவது, கனவு சும்மா வந்துட்டு போயிருக்கலாம். அவனையும் கூட்டிக் கொண்டு வந்ததில் அவளுக்கு ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தில் , அந்த  கனவுக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியாமல் திகைக்கிறாள். "ஐயோ, என் கனவே நீ எனக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறாய்...உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே ...என்ன செய்றதுன்னே தெரியலையே...கையும் ஓடலை காலும் ஓடலை " என்று தவிக்கிறாள்.

நான்காவது, அவர்களுக்குள் திருமணம் ஆகவில்லை. அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள். பேசுவார்கள். அன்பு முற்றி, காதல் மலர்ந்தது. திடீரென்று சொல்லாமல்  கொள்ளாமல், இராத்திரி நேரத்தில் வந்து நின்றால் , பாவம் அவள் என்ன செய்வாள். அந்தப் பக்கம் பெற்றோர் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வந்த காதலனுக்கு ஏதாவது செய்து தர வேண்டும் என்று ஆசை. முதல் முறையாக வீட்டுக்கு வந்து இருக்கிறான். பெரிய விருந்தே செய்து  போட வேண்டும். எப்படி முடியும் ?

நான் என்ன செய்வேன் என்று கையை பிசைகிறாள்.

"என் செய்வேன் கொல் விருந்து"

எவ்வளவு சுகமான குறள்.

படிக்க படிக்க மனதில் ஒரு இனிமை, சுகம் வந்து ஒட்டிக் கொள்கிறதா இல்லையா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_10.html